Search This Blog

Wednesday, April 15, 2020

இரவுப் பாடகன் P .B .ஸ்ரீநிவாஸ்

P .B .ஸ்ரீநிவாஸ் 1947இல் மிஸ்.மாலினியில் தன் முதல் பாடலைப் பாடிய போது நான் பிறந்திருக்கவில்லை. சிறு வயதில் அவர் என் விருப்பத்துக்குரிய பாடகருமல்ல.
அந்தப் பருவத்தில் என் ஆர்வம் வீர, தீர,சாகஸப் படங்களில் மையம் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வயது வரை எம்.ஜி.ஆர்.தான் என் ஆதர்ஸ நாயகன். டி .எம் .சௌந்தரராஜனை மிஞ்சிய பாடகன் எவருமில்லை .1961 இல் நான் பார்த்த முதலாவது எம்.ஜி.ஆர். படமான 'அரசிளங்குமரி'யில் வரும் 'சின்னப் பயலே,சின்னப் பயலே சேதி கேளடா !' என்ற பாடல் மூலம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டவர் அவர்.
'நான் ஆணையிட்டால்' என்று சவுக்கை சொடுக்கிய போதும், 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனக் கப்பல் கம்பத்தில் தொங்கிய படி கை வீசிய போதும் கதாநாயகனையும் பாடகனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 'குரல் வழி நடிகனான ' சொந்தரராஜனின் உரத்த தொனியும், தெளிவான உச்சரிப்பும் ,பாவமும் உற்சாகத்தைத் தூண்டிய காலம் அது. மீசை அரும்பி ,எம்.ஜி.ஆரின். 'குகை'யிலிருந்து நான் வெளியேறத் தொடங்கிய காலத்தில் இரண்டு குரல்களைப் 'புற்கள் மறைத்த பூக்கள் ' போல் கண்டு கொண்டேன் .
இனிமையும்,குளிர்மையும்,மென்மையும் ,குழைவும் கொண்ட ஏ.எம்.ராஜா, P .B .ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் அந்த இரண்டு குரல்களும் ஒரு காலத்து என் ஆதர்ஸ நாயகன் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு பொருந்தி வராதவை . நடிப்பில் உரத்த தொனியை வெளிப் படுத்திக் கொண்டிருந்த சிவாஜிக்கும் கூட இந்த இருவரும் சரிவரப் பொருந்தவில்லை.
இந்த இருவருடைய குரல்களும் பெரும்பாலும் ஜெமினிக்கு அளவெடுத்துத் தைத்த சட்டைகள் போன்ற பிரமையைத் தந்தன .
இரைச்சல் என்பதைத் தன்னியல்பாகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் மிகையுணர்ச்சி நடிப்பை மட்டுப் படுத்தி ,தணிவான நடிப்பை வெளிப்படுத்திய ஜெமினி கணேசனும் , மென்மையான குரல்களைக் கொண்ட ஏ.எம்.ராஜாவும் , P .B .ஸ்ரீநிவாசும் ஒரு கோட்டில் இணைந்து கொண்டமையில் வியப்பில்லை. ரசிகர்களும் அதை வரவேற்றார்கள் .
டி.ஏ.மோதி (காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா / 'இதை யாரோடும் எவரோடும் நீ சொல்லக் கூடாது -அம்மா / 'ஓ மோஹனச் செந்தாமரை-மகுடம் காத்த மங்கை' ) ,ரகுநாத் பாணிக்ரஹி ('நான் தேடும்போது நீ ஓடலாமோ'-அவள் யார் ) ,புருஷோத்தமன் (தென்றலே நீ செல்வாய் -மந்திரவாதி ) போன்றே பி.பி.ஶ்ரீனிவாஸுடையதும் மிகவும் மிருதுவான குரல் . ரசிகனை அவர் பட்டுப் பாதையின் வழியாக அழைத்துச் செல்கிறார். ‘டிங்கிரி டிங்காலே’, ‘அடி என்னடி ராக்கம்மா ‘ போன்ற உரத்த துள்ளல்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது . ஆனால் அவரிடமிருந்து அபூர்வமாக வெளிப்பட்ட ‘பதுமைதானா’ , ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ ,’நல்லவன் எனக்கு நானே நல்லவன் ‘ போன்ற உற்சாகப் பாடல்களிலும் நிதானம் கெடாத ஓர் அழகிருக்கும். அவருடைய சோகப் பாடல்களும் மாரிலடித்துக் கொண்டு எழும் ஒப்பாரி ரகங்கள் அல்ல. ரசிகனின் மனதில் மெல்லெனப் பரவும் மௌனமான சோகம் அது. அந்த நுட்பத்தை அறிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘ ,‘உடலுக்கு உயிர் காவல்’ , ‘மயக்கமா கலக்கமா’ ,’நெஞ்சம் மறப்பதில்லை ‘, போன்ற பாடல்களைக் கேட்க வேண்டும்.
P .B .ஸ்ரீநிவாஸ் அவர்கள் பல வகைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் என் கணிப்பில் அவர் தன் குரலில் காதலைக் கசிய விட்ட ஓர் 'இரவுப் பாடகர்'. காதல்தான் அவருடைய பெரும் பாலான பாடல்களின் மையம். சோகம் ,ஆற்றாமை, தன்னம்பிக்கை , உயிர்த்தெழல் என்ற கிளை நதிகள் அங்கிருந்து ஊற்றெடுத்துத்தான் அவருடைய பாடல்களில் பரவிச் செல்லுகின்றன.
மென்மையான சோகத்தைப் பரவ விடும் அவருடைய பாடல்கள் பலவற்றைக் கேட்ட படி நான் தூங்கிய நாட்கள் இருக்கின்றன.
ஊரடங்கிய இந்த நாட்களிலும் அவர்தான் இரவென்ற ஆற்றைக் கடக்க வைக்கும் படகோட்டி. அவர் பாட ஆரம்பித்ததும் நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பிக்கிறேன் . மேகங்களுக்குள் ஒளிந்த நிலவை அவர் மீட்டெடுக்கிறார் . நட்சத்திரங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன .இரவு ஆற்றில் படகு நகர்ந்து கொண்டிருக்கிறது . .
(எனக்குப் பிடித்த அவருடைய பாடல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.)
1958- நெஞ்சம் அலை மோதுதே (மணமாலை )
1959- மலரோடு விளையாடும் (தெய்வபலம்)
1959- பதுமைதானா (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை)
1959- கனிந்த காதல் இன்பம் (அழகர் மலைக் கள்ளன்)
1959- அழகே...அமுதே – (ராஜா மலையசிம்மன்)
1960- பண்ணோடு பிறந்தது (விடிவெள்ளி)
1960- மாலையில் மலர் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- சிட்டுக் குருவி பாடுது (பாதை தெரியுது பார் )
1960- இன்ப எல்லை காணும் (இவன் அவனேதான்)
1960- கண்ணாலே பேசிக் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- தேடிடுதே (உத்தமி பெற்ற ரத்தினம்)
1960- அன்பு மனம் கனிந்த (ஆளுக்கொரு வீடு )
1960- ஏன் சிரித்தாய் ( பொன்னித் திருநாள் )
1960- நீயா நானா (மன்னாதி மன்னன்)
1961- என்றும் சொந்தமில்லை (புனர் ஜென்மம்)
1961- காற்று வெளியிடை (கப்பலோட்டிய தமிழன்)
1961- ஒரே கேள்வி – (பனித்திரை )
1961- என்னருகே நீ இருந்தால் (திருடாதே )
1961- காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு)
1961- பார்த்துப் பார்த்து நின்றதிலே- (மணப்பந்தல்)
1961- உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல் )
1981- யார் யார் யார் (பாசமலர்)
1962- சின்னச் சின்ன ரோஜா(அழகு நிலா )
1962- என்னைப் பார்த்தா (செங்கமலத் தீவு)
1962- ஒருத்தி ஒருவனை (சாரதா)
1962- அழகிய மிதிலை (அன்னை )
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம்)
1962- இந்த மன்றத்தில் (போலீஸ் காரன் மகள் )
1962- பொன்னென்பேன் (போலீஸ் காரன் மகள் )
1962- நிலவுக்கு என் மேல் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆண்டொன்று போனால் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆதி மனிதன் (பலே பாண்டியா )
1962- அத்திக்காய் காய் (பலே பாண்டியா
1962- அழகான மலரே (தென்றல் வீசும்)
1962- காற்று வந்தால் (காத்திருந்த கண்கள்)
1962- துள்ளித் திரிந்த (காத்திருந்த கண்கள் )
1962- வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
1962- கண் படுமே பிறர் (காத்திருந்த கண்கள்)
1962- கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
1962- மாலையும் இரவும் (பாசம்)
1962- பால் வண்ணம் (பாசம்)
1962- மயக்கமா ,கலக்கமா (சுமைதாங்கி)
1962- மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
1962- எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம் )
1962- ரோஜா மலரே (வீரத்திருமகன் )
1962- பாடாத பாட்டெல்லாம் ( வீரத்திருமகன் )
1962- பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
1962- பூஜைக்கு வந்த (பாத காணிக்கை]
1963- எந்த ஊர் என்றவளே (காட்டு ரோஜா)
1963- நினைப்பதற்கு - (நினைப்பதற்கு நேரமில்லை )
1963- அவள் பறந்து (பார் மகளே பார்)
1963- மதுரா நகரில் (பார் மகளே பார்)
1963- என்னைத் தொட்டு (பார் மகளே பார் )
1963- நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
1963- அழகுக்கும் மலருக்கும் (நெஞ்சம் மறப்பதில்லை )
1963- பூ வரையும் பூங் கொடியே (இதயத்தில் நீ )
1963- யார் சிரித்தால் என்ன (இதயத்தில் நீ )
1964- நாளாம் நாளாம் (காதலிக்க நேரமில்லை )
1964- அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை )
1964- போகப் போகத் தெரியும்- ( சர்வர் சுந்தரம் )
1964- கண்ணிரண்டும் மின்ன (பச்சை விளக்கு )
1964- நான் பாடிய பாடலை (வாழ்க்கை வாழ்வதற்கே )
1965- நீ போகுமிடமெல்லாம் (இதயக்கமலம்)
1965- தோள் கண்டேன். (இதயக்கமலம்)
1965- இரவு முடிந்து விடும் (அன்புக்கரங்கள்)
1965- செந்தூர் முருகன் கோயிலிலே (சாந்தி)
1965- சித்திரமே சொல்லடி – (வெண்ணிற ஆடை)
1965- காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- இளமைக் கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- மையேந்தும் விழியாட [பூஜைக்கு வந்த மலர்]
1965- நேற்று வரை நீ யாரோ- [வாழ்க்கைப் படகு]
1965- சின்னச் சின்னக் கண்ணனுக்கு- (வாழ்க்கைப் படகு)
1965- பூத்திருக்கும் விழி எடுத்து(கல்யாண மண்டபம்)
1965- பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யூ )
1965- போவோம் புது உலகம் (வீர அபிமன்யூ )
1965- இரவின் மடியில் (சரசா B A )
1966- நீயே சொல்லு [குமரிப்பெண் ]
1966- காத்திருந்த கண்களே (மோட்டோர் சுந்தரம்பிள்ளை )
1966- மௌனமே பார்வையால் ( கொடிமலர் )
1966- நிலவே என்னிடம் [ராமு]
1967- கனவில் நடந்ததோ (அனுபவம் புதுமை )
1968- உன் அழகை கண்டு கொண்டால் (பூவும் பொட்டும்)
1968- தாமரைக் கன்னங்கள் ( எதிர் நீச்சல் )
1969- எங்கேயோ பார்த்த முகம் (நில் கவனி காதலி)
1969- ஆசை வைத்தால் அது மோசம்
1969- தேவி ஸ்ரீதேவி (தேவி)
-உமா வரதராஜன்


No comments:

Post a Comment