Search This Blog

Wednesday, September 29, 2021

மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள்

 

இந்த வருடம் (06/10/2021) புதன்கிழமை புரட்டாதி மகாளய அமாவாசையன்று நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உங்கள் முன்னோர்களான பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்....

மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து அவர்களுக்குரிய நன்றியுணர்வாக வழிபட வேண்டிய மிக முக்கியமான திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசணி, வாழைத்தண்டு தவிர்க்கவும்)
யை தானமாக கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள்.
சிலருக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய பேர் மட்டும் தெரிந்தால் போதும்.
சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.
தை அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.
குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் நாளை தை அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.
12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்.
மஹாளய அமாவாசை. இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
என்ன செய்ய வேண்டும்?
அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.
(1) புனித நதிகளில் நீராட வேண்டும்.
(2) பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
(3) மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.
(4) தானங்கள் கொடுக்க வேண்டும்.
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறைசொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.
இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.....
தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.
நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.
அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.
அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.
மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.
ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.
ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது.
இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.
உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.
சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.
சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.
நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சியின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.
சொல்லுக சொல்லைப் பிரிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.
நன்றிகள்
- சித்தர்களின் குரல். shiva shangar

ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?

 

Rajarednam Neminathan

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால்; ஆட்களைக் கொன்றுதான் அழிக்கவேண்டும் என்றில்லை. அந்த இனத்திற்கான மொழியை அழித்துவிட்டால் சரி.

அப்படியாயின் மொழியை அழிக்கவேண்டும் என்றால் என்னசெய்யலாம்?
அந்த மொழியின் இலக்கியம், இலக்கணங்களை அழித்துவிடவேண்டும்.
ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?
ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களை, வாக்கியங்களை எழுத்துக்களை எழுத்தின் உறுப்புக்களை எப்படிப் பாவித்தாலும் சரி, விளங்கினால் சரிதான், தொடர்பாடல்தான் முக்கியம், மொழி என்பதே தொடர்பாடலின் கருவிதான் என்று சுருக்கிவிட்டால் சரி.
இப்படியான ஒரு தோற்றமாயையை ஏற்படுத்தினால் ஒரு விடயத்தை பலரும் பல விதமாகப் பயன்படுத்த இடமளிக்கும். இதனால் சொற்களில், இலக்கணத்தில், எழுத்தமைப்பில் ஒரு குழப்பம் தோன்றும் அந்தக் குழப்பத்தை மூலதனமாக்கி கிளைமொழிகள் உருவாகும். கிளைமொழிகள் உருவாகினால் மூலமொழி அழியும்.
மொழி என்பது இயற்கையின் அங்கமாகும். மனித மனத்தின் செயலாற்றலாகவும் உள்ளுணர்வாகவும் சக்தியாகவும், ஒருவரின் மனச்சாட்சியாகவும் மொழி இருக்கிறது. அப்படியென்றால், மொழி மனித மனத்தின் ஒட்டுமொத்த அறிதல் என்றாகிறது. அறிதல் வளரவளர, மொழியும் வளருகிறது. மொழி தொடர்பாடும் ஊடகம் மட்டுமே என்பது வீட்டில் மாட்டிவைத்திருக்கும் சுவாமி படங்கள்தான் கடவுள் என்று சொல்வதற்கு ஒப்பானது.
மொழியின் செயற்பாடு வெறுமனே தொடர்பாடல் மாத்திரந்தான் என்று நினைப்பது மொழியறிவின் முதற்கட்டமான குழந்தைநிலை. உதாரணமாக நான் உங்கள் ஊரைக்குறிப்பிட்டு திட்டுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் புவியியல் ரீதியான ஒரு இடமாக மட்டும் உங்கள் ஊரை வைத்திருந்தால் பேசாமல் போய்விடுவீர்கள். ஆனால் உங்களது ஊர், உங்களது ஆழ்மனதுடன், நினைவுகளுடன், நம்பிக்கைகளுடன், உணர்வுகளுடன், அறிவு, மனப்பாங்கு போன்ற பல விடயங்களுடன் தொடர்பட்டிருப்பதால் உங்களுக்கு ஊரைத் திட்டியதும் கோபம் வருகிறது. மொழியின் பங்களிப்பு தொடர்பாடல் மட்டும்தான் என்று சொல்வது. ஒரு தட்டையான கருத்தாகும். ஊர் என்பது உங்கள் வசிப்பிடம் அமைந்திருக்கும் ஒரு இடந்தானே அதைத் திட்டினால் உங்களுக்கேன் கோபம் வரவேண்டும். மொழி என்பதும் அதைப்போலத்தான் அதன் நோக்கம் தொடர்பாடல் மட்டுந்தான் என்றால்; நீங்கள் உலக வரலாறு அறியாதவர்தான். மொழியினால் எத்தனை போர்கள் நடந்திருக்கின்றன.
பிரித்தானியா என்றால் ஆங்கிலேயர்களின் நாடு என்றுதான் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் ஆனால் அங்கு வேல்ஸ் மொழி, ஐரிஸ் மொழி என்று பிறமொழிகள் உள்ளன என்பதை அறிவீர்களா? அவர்களிடமிருந்து மொழி என்பது தொடர்பாடல் செய்யும் கருவி மட்டுல்ல என்பதை அவர்களுடன் நீண்டகாலமாகப் பழகி நிதானமாக அறிந்துகொண்டேன். மொழி வெறுமனே தொடர்பாடற் கருவிதான் என்போரைப் பார்க்கும்போது எனது வேல்ஸ் நண்பர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள்.
Say the Colour with "U" ஆங்கிலேய நண்பர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது அமெரிக்க ஆங்கிலத்திடம் இருந்து பிரிட்டிஷாரின் ஆங்கிலத்தை பாதுகாக்க அவர்கள் திடமாக இருப்பதைத்தான் இந்த சொல்லாடல் உணர்த்தும். பிரித்தானியர் வர்ணத்தை colour என்று எழுதுவர். அமெரிக்கர்கள் color என்று எழுதுவார்கள்.
உச்சரிக்கும் போது இருவரும் ஒரேவிதமாகத்தான் உச்சரிப்பர். ஆனால் "U" சேர்த்து உச்சரிக்கவேண்டும் என்று பிரித்தானியர்கள் சொல்வது அமெரிக்க ஊடுருவலில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். உண்மையில் உச்சரிக்கும்போது "U" இனை உச்சரிக்கமுடியாது ஆனால் அவர்கள் அப்படிச்சொல்வது அமெரிக்க ஆங்கிலத்தில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்கத்தான்.
இரண்டும் ஆங்கிலந்தானே பிறகு ஏன் பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இரண்டும் ஆங்கிலந்தான் ஆனால் ஒரே மொழியில் தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இணையத்தையும் சமூக ஊடகங்களையும் நேற்றுக்கண்ட நாமே எழுதுவது மற்றவருக்கு விளங்கினால் சரி தொடர்பாடல்தானே? என்று குறிப்பிட்டால் மொழியை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தொடர்பாடல் மட்டுந்தான் மொழியின் நோக்கம் என்றால் உலகின் எல்லோரும் விளங்கிக்கொள்ளக்கூடிய சைகை மொழியை நாம் பொதுமொழியாக்கிவிடலாமே?
பேச்சுமொழி உரையாடலில், பேசாமல் முக அறிகுறிகளாலும், சைகைகளாலும் கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமும், வழிகளும் உண்டு. அத்துடன் உடனுக்குடன், விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் இந்தவசதி, எழுதும் மொழியில் பொதுவாக் கிடைப்பதில்லை. இதன் காரணமாகச் எழுத்துவடிவத்தில் சில கூடுதல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கடுமையான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
அதிலும் மொழிகளின் தனித்துவம் காரணமாக ஒவ்வொரு மொழியின் அடிப்படையில் வெவ்வேறு சைகைமொழிகள் உள்ளன. உதாரணமாக ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டமைந்த சைகைமொழி கற்றவருக்கு, தமிழ் சைகை மொழி விளங்காது.
உலகின் எந்த மூலையிலும் தமிழ்மொழிக்கென்று ஒரு நாடு இல்லை. அரசியல் அதிகாரத்தில் இல்லாத ஒரு மொழி எவ்வாறு அழியாமல் நிலைத்திருக்கிறது என்றால் அதற்குரிய காரணம் தமிழர் இலக்கியங்களும் இலக்கண நூல்களுந்தான்.
பொருள்பொதிந்த மொழியை உருவாக்கச் சொற்கள் விதிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சொல்லின் அமைப்பு ஒரு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி பொருத்தமான பொருளை உருவாக்குவதாகும். இந்த விதிகளும் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்டதாகும். இருப்பினும், அந்த விதிகள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரந்தரத் தன்மை கொண்டவை. ஆகையால், ஒலிக்குறியீட்டின் அடிப்படையில் எழுந்த விதிகளால் உருவான மொழியின் மூலமாகத்தான் மனிதர்கள் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இந்த விதித்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப் பட்டதாகும்.
உதாரணமாக எனது அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஆலயத்தில் ஓரு சிவனடியார் கொஞ்சம் நகைச்சுவையாப் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரது பக்கத்தில் போய் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது கையில் இருந்த கற்பூரப் பெட்டியை அவர் கவனித்துவிட்டார். "இது என்ன" என்று கேட்டார். நானும் "கற்பூரம்" என்றேன். அது தவறு என்றார். கருப்பூரந்தான் சரி என்றார். "அப்படியானால் இந்தப் பெட்டியில் எழுதியிருப்பது தவறு என்கிறீர்களா?" என்று நான் கேட்டேன்.
"நீ நாச்சியாரைப் பிழை சொல்கிறாயா? என்றார்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
என்னும் பாடலிலே கருப்பூரம் என்றுதான் சொல்லியிருக்கிறாள்." என்றார் பிறகெப்படி கருப்பூரம் கற்பூரமாக மாறும் என்றார்.
இனிமேல் கருப்பூரம் என்றுதான் பாவிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு சொல்லுக்கே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கும்போது உரைநடை ஐரோப்பியர் காலத்தின் பின்னர்தான் தோன்றியது எனினும் அதையும் கடந்து நிற்பதாகவே எமது மொழியின் இலக்கணம் உள்ளது சிறப்பு.
எல்லாக் காலத்திற்கும் ஏற்றவகையில் இலக்கணம் எழுத இந்த நன்னூலார், தொல்காப்பியர் போன்றவர்களுக்கு எவ்வாறு முடிந்தது? எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களுக்கு எல்லாம் வழிவிட்டு அதற்கு தீர்வும் வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள்.
இன்றைய காலத்தின் நவீன தொடர்பாடல் முறைகளும் சாதனங்களும் எமது மொழிக்கு சவாலான விடயந்தான் எனினும் நாம் புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. நமது எழுத்துக்களை- எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதினாலே போதும்.
முடிந்தவரை பிழையின்றி எழுதுவதற்கு முயற்சியுங்கள், சரியாக எழுதமுடியாவிட்டால் கற்றுக்கொள்வோம்.

Thursday, September 16, 2021

குண்டலினி சக்தி என்றால் என்ன?

குண்டலினி என்பது மனிதன் இறை நிலையை அடைவதற்காக 20000 ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் பூலோகத்திற்கு வந்து சீடர்களுக்கு கற்பித்ததாக கூறப்படுகிறது.
குண்டலினி சக்திநிலையை அடைந்த மனிதர்களுக்கு குண்டலினியை
எழுப்ப உதவுவதால் ஆழ்நிலை தியானம்,
அறிவொளி,பேரின்ப நிலை எளிதில் விளைகிறது.
குண்டலினி சக்தி நிலையை அடைவதற்கு பல கட்டுபாடுகள் உண்டு. அவை பெண் மேல் மோகம் இருத்தல் கூடாது. எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட கூடாது. ஆண்கள் இந்நிலையை அடைய தவ வாழ்கை மேற்கொள்ள வேண்டும்.
குண்டலினி சக்தியானது நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன? உள்ளது என்று பார்த்தால் வெண்பாஸ்பரஸ் என்ற தனிமமே உள்ளது!
இந்த வெண்பாஸ்பரஸ் தனிமம் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உளநாக்கிற்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு செல்லும்போது,
வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது.
சுவாதிஷ்தானத்தில் உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மூலாதாரத்திலிருந்து
மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது. இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது.
மணிபூரகத்தில் உள்ள வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும். எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது. அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை.
அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் நைட்ரஜன் என்ற தனிமத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும், அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது
என்றும், சொல்லப்படுகிறது.
எனவே ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை.
அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த்து என்னை
பரம் ஆக்கிடுவான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல் திறத்தலே வெற்றிட பூஜ்ஜிய பிரம
நிலையாகும்.
பிரமநிலைக்கு மணிபூரக சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்திநிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம் விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானம் விழிப்படைதலும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம் விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின் மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும்.
அந்த அமிர்தமும் விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது விசுத்திதான் உறைவிடம் (உறையும் இடம்).
குண்டலினி எழும்பிய பின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ்
உள்ளமூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில் நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால்
ஒரு பிறைவடிவ "U" நாமத்தடம் விழும்.
இத்தடமானது இப்பூமியில் உடல் விடும் வரை இருக்கும். கை விரலால் தடவி பார்த்து
நெற்றியில் இந்நாமத் தடத்தினையும்,
கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடம் இருப்பதையும் உணரலாம்.
சகஸ்ரஹாரத்தில் இருந்து நெருப்பாற்று தடத்தின் வழியாக அமிர்தமானது
பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன் வழி புருவமத்தி உட்வாசலான
குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழியாக விசுத்தி சென்று உறைவிடமாய் கொள்கிறது.
மேலும் பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும் வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும், மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு உறுத்தல் ஏற்படும்.
41 மணி நேரத்தில் குண்டலினயை ஏற்றும் மந்திரம்! ஒன்று உள்ளதாக தந்திர நூல்கள் சொல்கிறது.
குண்டலினி பல முறைகளில் ஏற்றப்படுகிறது.
அவை பிராணயாமம், ஆசனம் மற்றும் மந்திரம் இவை மூலம் குண்டலினியை
எழுப்ப செய்யலாம்.
குண்டலினியை எழுப்ப செய்யும் மந்திரம்:
"ஓம் ஏம் ஹிரம் ஹிரம் ஹரம் ஹிரீம் ஹிரம் ஹரா: குல்-குண்டலினி ஜகன்மத் சித்திம் தேஹி தேஹி சுவாஹா"
மந்திரம்சொல்லும் முறை:
தினமும் அதிகாலை 4:30-6:00 மணி நேரத்திற்குள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் 48நிமிடங்கள் மனதிற்குள் மந்திர ஜெபம் செய்யுங்கள். தொடர்ந்து 41 நாட்களில் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மந்திர ஜெபம் செய்யுங்கள்.
இந்த 41நாட்களும் சமநிலையில் இருங்கள்.
அதே நேரத்தில் தினமும் குண்டலினி மந்திரசக்தியால் உங்கள் முதுகில் அதிர்வுகளை உணர்வீர்கள். குண்டலினி சக்தியை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.
குண்டலினி முத்திரை:
இந்த முத்திரை குண்டலினி முத்திரை(அல்லது) ஆண்மை அதிகரிக்கும்
முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பலத்தை பெருக்கும் முத்திரை. ஆண்மையை பெருக்க இது தான் சிறந்தவழி.
உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசனவாய் சுருங்கும் இடத்தில் வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெருகுகிறது.
இனிமையான தாம்பத்தியத்திற்கான இரண்டாவது முக்கியமான முத்திரை இது. தந்திராவில் முக்கியமாக கருதப்படுவது
செக்ஸ் மூலம் தியானம் ஆகும். புத்தமதத்
தந்திராவில் வஜ்ராயனத்தில் பெரிதும் இதைப் போற்றுகின்றனர்.
ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதை சக்தி-சிவத்தின் இணைப்பாகவே தந்திர யோகம் உருவகப்படுத்துகிறது.
குண்டலினி முத்திரை செய்யும் முறை:
இரண்டு கைகளையும் தளர்வாக மூடுங்கள். இடதுகை முஷ்டி
கீழாக இருக்க, அதன் மேல் வலதுகை முஷ்டியை வையுங்கள். இடது ஆள்காட்டி விரலை நீட்டி, வலது கைவிரல்களின் உள்ளே விடுங்கள்.
வலதுகை விரல்களால் இடதுகை ஆள்காட்டி விரலை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை இடதுகை ஆள்காட்டி விரலின் நுனியில் மெதுவாகப்பதியச் செய்யுங்கள்.
இதுவே குண்டலினி முத்திரை ஆகும்.
அமரும் முறை:
பத்மாசனம் (அல்லது) வஜ்ராசனத்தில் அமர்ந்து குண்டலினி முத்திரையை செய்யலாம். முடியாதவர்கள் கால்கள் இரண்டையும் சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம். அல்லது நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். சுவாசம் சீராக இருப்பது அவசியம்.
நேரம் 15-45 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
குண்டலினி சக்தி தூண்டப்படும்.
பாலியல் உணர்வு அதிகரிக்கும். உடலில் புதிய உற்சாகம் பெருகும். உயிர் சக்தி பலமடையும்.
ஆன்மிக வளர்ச்சி உண்டாகும். மதனநீர் சுரப்பு குறைதல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

Saturday, September 11, 2021

குயில் பாட்டு


Mubeen Sadhika

குயில் பாட்டு மற்ற இலக்கியங்களிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. மெடாபிக்ஷன் எனப்படும் பின்நவீனத்துவ பாணியைப் பின்பற்றி ஆசிரியரே கதை மாந்தராகும் உத்தி இதில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சுயவரலாறு போல் சொல்லப்பட்ட காவியமாக இது இருக்கிறது. இதனை நெட்டைக்கனவு என்று இந்த இலக்கியம் சொன்னாலும் இறுதியில் இதில் வேதாந்தம் இருப்பது போல் கோடி காட்டுவது கவிதை சொல்லியின் தன்னிலையிலிருந்து சொல்லப்பட்ட ஒரு வாசகமாக இருக்கிறது. கவிதைச் சொல்லி என்ற பாத்திரமேற்பு வேதாந்தம், தத்துவம் கொண்டு இதுவரைப் பார்க்கப்பட்டது. ஆனால் இதில் மற்றொரு பொருளுறைவும் இருக்கிறது. இந்த இலக்கியத்தின் உத்தி காப்பியங்களின் முற்பிறவி கூறும் உத்தி போல் ஒரு ப்ளாஷ்பேக் போல் பயன்படுத்தப்படுகிறது. குயில் என்ற பெண் பாத்திரம் தன் முற்பிறவியைக் கூறுவதிலிருந்துதான் கவிதைத் தன்னிலை வெறும் கவிதை சொல்லி மட்டுமல்ல சேர இளவரசனுடைய மறுபிறவி என்பது தெரிய வருகிறது. ஆனால் இதில் மற்றொரு புள்ளியைக் கவனிக்கவேண்டும். இந்த இலக்கியம் முழுவதுமே முரண் இரட்டைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல்/சாதல், ஒளி/இருள், நாதம்/சேதம், பண்/மண், தாளம்/கூளம், புகழ்/இகழ் என்பதான இரட்டைகளால் வாழ்வு விளக்கப்படுகிறது. அதே போல் பாத்திரங்களும் முற்பிறவி/இப்பிறவி என்ற இரட்டைகளைக் கொண்டிருக்கின்றன. கவிதைச் சொல்லி/இளவரசன் என்பதாக இதனைப் பார்த்தால் இளவரசனின் கதை இது என்பதாக வாசித்துவிடலாம். அல்லது கவிஞரின் சுயசரிதை இது என்பதாகவும் வாசிக்கலாம். ஒரு வகையில் இது ‘உண்மை கதை’ என்பது போலவும் மற்றொரு வகையில் ‘வெறும் புனைவு’ என்பது போலவும் இரு வேறு பட்ட தளங்களில் வாசகரைப் பயணிக்க வைக்கிறது இந்த இலக்கியம். உண்மையா புனைவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதுதான் இந்த வகைமையிலான இலக்கியங்களின் குணாம்சம்.
கவிதை சொல்லி தன் நண்பர்கள் நடந்ததை விளக்குமாறு கேட்கும் போது குயில் என்ற பாத்திரத்திடம் பேசாமல் அதைச் சொல்ல முடியாது என்று கூறுவதும், கதை முடிந்தவுடன் கவிதை சொல்லி தன் இடத்தில் இருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல், பழம் பாய் போன்ற பொருட்களின் மூலம் இது வரை நடந்த கதை வெறும் கனவு என்பது போல் காட்ட முனைவதும் புனைவுக்கும்/எதார்த்ததிற்கும் இடையில் கதை நகர்வதைக் காட்டுகிறது. கவிதை சொல்லிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவாக இந்த கதையாடலைக் கொண்டுவிடக்கூடாது என்பதற்காக இதனை நெட்டைக் கனவு என்று சொல்லி திசைமாற்றம் செய்வது போலவும் இதனை வாசித்துக் கொள்ளலாம். ஏனெனில் இலக்கியத்திற்குள் வந்த கவிதை சொல்லிக்கும் இதனை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞருக்கும் இடையில் உறவும்/உறவின்மையையும் வாசகர் உருவாக்குவதான இடுகுறித் தன்மையுடன் இருக்கிறது. இதுதான் மெடாஃபிக்ஷன் எனப்படும் பாணியாகக் கருதப்படுகிறது.

விநாயக சதுர்த்தி தகவல்கள்!


21 பத்திரங்கள் / இலைகள்
------------------------------------------------
01. அருகம்புல்
02. முல்லை
03. கரிசலாங்கண்ணி
04. வில்வம்
05. இலந்தை
06. வன்னி
07. ஊமத்தை
08. கண்டங்கத்திரி
09. செவ்வரளி
10. எருக்க
11. மருத
12. மாதுளை
13. விஷ்ணுகிராந்தி
14. அகத்திக்கீரை
15. தவனம்
16. தேவதாரு
17. மரிக்கொழுந்து
18. ஜாதிமல்லி
19. நாயுருவி
20. அரச
21. தாழை
21 புஷ்பங்கள்
-------------------------
01. புண்ணை
02. மந்தாரை
03. மகிழம்பூ
04. பாதிரி
05. தும்பை
06. முல்லை
07. ஊமத்தை
08. கண்டங்கத்திரி
09. செவ்வரளி
10. எருக்க
11. செங்கழநீர்
12. மாதுளை
13. வில்வம் பூ
14. குருந்தை
15. சம்மங்கி
16. பவழமல்லி
17. செண்பகம்
18. ஜாதிமல்லி
19. மாம்பூ
20. கொன்றை
21. தாழை
விநாயகர் அர்ச்சனைக்கு உகந்த இலைகள்
-----------------------------------------------------------------------------
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை இந்த மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.
முல்லை,
ஜாதி மல்லிகை,
அரளி,
எருக்கம்பூ,
அகத்தி பூ
மற்ற புஷ்பங்கள்
எருக்கு இலை,
கரிசலாங்கண்ணி,
மருத இலை,
வில்வம்,
விஷ்ணு கிரந்தி,
ஊமத்தை,
மாதுளை,
இலந்தை,
தேவதாரு,
வெள்ளை அருகம்புல்,
மருவு,
வன்னி,
அரசு,
நாயுருவி,
கண்டங்கத்தரி,
அகத்தி
- இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.
பிள்ளையார் சதுர்த்திக்கு 21 நைவேத்தியங்கள்
------------------------------------------------------------------------------------
சாதம்,
நெய் மிளகுப் பொங்கல்,
சர்க்கரைப் பொங்கல்,
கற்கண்டு பொங்கல்,
பால்பொங்கல்,
பால்சாதம்,
அக்கார வடிசில்,
சம்பா சாதம்,
தயிர்சாதம்,
புளிசாதம்,
எலுமிச்சை சாதம்,
தேங்காய் சாதம்,
தானியப்பொடி சாதம்,
மருந்துக்குழம்பு சாதம்,
சாம்பார் சாதம்,
நாரத்தங்காய் சாதம்,
மாங்காய்சாதம்,
துவையல் சாதம்,
அரிசி உப்புமா,
ரவா உப்புமா,
மாவுக்கனி
மற்றும், கொழக்கட்டை வகையறாக்கள், வடை, அப்பம், சுண்டல்.
பழங்கள். நாவல் பழம், விளாம்பழம், பிரப்பம்பழம், கரும்பு, கொய்யா பழம், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் இதர பழங்கள்.
தாம்பூலம், கற்பூரம், சாம்பிராணி வகையறாக்கள்.
ஆகிய 21 வகை நைவேத்தியங்களை விநாயகருக்குப் படைத்து வழிபடலாம்.
விநாயகரின் துதி பாடலில் சித்தர்கள் சொன்ன மூலிகைகளின் காயகல்ப ரகசியம் - Vinayagar Song Kayakalpa
secret
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது
பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
இது யோகத்தின் தலைவி தமிழ் மூதாட்டி ஔவையார் அருளிய விநாயகர் துதிப் பாடல் ஆகும். இப் பாடல் வரிகளை சாதாரணமாய் காணும் போது விநாயகப் பெருமானை தினமும் துதித்து, அவர் பாதம் சரணடைபவர்க்கு நல்ல வாக்கு வன்மையும், திடமான மனோ பலமும், மகா லட்சுமி கடாட்சமும், உடல் பலமும் கிட்டும் என்ற பொருள் விளக்கம் தோன்றும்.
ஆனால்...
இந்த பாடலின் உண்மை விளக்கம் அதுவல்ல, இப்பாடலை வடித்த ஔவையார் நரை, திரை, மூப்பு என்ற மூன்றும் உடலில் தோன்ற விடாமல் காக்கும் காயகல்ப மருந்து முறை இரகசியத்தை சூட்சுமமாய் வடித்துள்ளார். அந்த ரகசியத்தை சித்தர்களின் குரல் வாயிலாக பகிர்கிறேன்.....
சித்தர் பாடல்களில் உள்ள பரிபஷைகளின் விளக்கம் அறிந்தவர்களுக்கு இப்பாடலில் உள்ள சூட்சுமம் மிக எளிதாய் புரியும்.
மேற்கண்ட பாடல் வரிகளில்:-
(1) மாமலராள் பூக்கொண்டு என்பது -
தாமரைப்பூ
(2) மேனி என்பது - குப்பைமேனி
(3) திருமேனி என்பது - வல்லாரை
(4) தும்பி என்பது - தும்பை
(5) கையான் என்பது - கையான்தகரை
[கரிசலாங்கண்ணி]
(6) பாதம் என்பது - செருப்படை....
மொத்தத்தில்,
தாமரைப் பூவில் - செம்புச் சத்து
குப்பைமேனியில் - தங்கச் சத்து
வல்லாரையில் - இரும்புச் சத்து
தும்பையில் - நாகச் சத்து
கரிசலாங்கண்ணியில் - இரும்புச் சத்து
செருப்படையில் - ஈயச் சத்து
உடலுக்கு மிகவும் அவசியத் தேவையான இந்த ஆறுவித உலோகச்சத்துக்கள் இந்த மூலிகைகளில் அடங்கியுள்ளன. இந்த
மூலிகை உலோகச் சத்துக்களினால் உடல் மிகவும் ஆரோக்கியமாகவும்,தேக
பலத்துடனும், நோயெதிர்ப்பு சக்தியுடன்
என்பது முற்றிலும் உண்மை.
இறை வழிபாடும், உடல் நலமும் இரண்டும் ஒன்றாய் அமைந்த அற்புத பாடல் இது.....
செயல்முறை விளக்கம்:-
-----------------------------------------
தாமரைப்பூ, குப்பைமேனி, வல்லாரை, தும்பை, கரிசலாங்கண்ணி, செருப்படை இந்த ஆறு வகை மூலிகைகளையும் சேகரித்து மேற்கண்ட....
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்" என்ற பாடல் வரிகளால் விநாயகப்பெருமானை அர்ச்சனை செய்து பூஜித்து பின்பு எடுத்து இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து நன்கு காய்ந்தவுடன் இடித்து தூள் செய்யவும். [ஆறு மூலிகையும் சம அளவு ]அல்லது மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
இது ஒரு காயகல்ப மூலிகை சூரணமாகும். இதனை காலை,மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200-மிலி பசும்பாலில் கலந்து பனங்கற்கண்டு சிறிது சேர்த்து அருந்தவும்.
ஒரு மண்டலம் தொடர்ந்து உண்ண உடலில் உள்ள அனைத்து நோய்களும்
நீங்கும். ஆரோக்கியம் மிளிரும், தேகம்
திடப்படும், மேலும் மேற்கண்ட பாடலில் உள்ள அனைத்து நற்பலன்களும் கிட்டும்.
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
- சித்தர்களின் குரல்.