Search This Blog

Sunday, August 28, 2016

வெறிபாடிய காமக்கணியார், ஒரு பெண் அறிந்திருக்கிறாள், " உடல் மனம் மொழி"

Sakthi Jothi
அது ஒரு பயிற்சி வகுப்பு.
பேராசிரியர் பணியிலிருக்கும் பெண்களுக்கான மொழியியல் சார்ந்த பயிற்சிப் பட்டறை. இறுக்கமாகவும், நேர நிர்ணயத்துடனும் தொழில்முறை சார்ந்த தேர்ந்த நிபுணர்களால் பாடங்கள் நடத்தப்பட்டன . வழக்கமான பயிற்சி வகுப்புக்களைப் போலவே விடுமுறை நாளொன்றில் மலைப்பிரதேசம் ஒன்றிற்கு அனைவரும் சுற்றுலா சென்றனர்.
அதிகாலையிலேயே தொடங்கிய பயணத்தில், முதல் அரைமணிநேரம் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு பேராசிரியர் எழுந்து, "என்னப்பா, எல்லோரும் இவ்வளோ அமைதியா வருகிறீர்கள்? ஒரு பாட்டு, ஒரு ஆட்டம் என ஒன்றுமில்லாமல் என்ன ஒரு சுற்றுலா" என்று கேட்டார். அப்போது வேறு ஒரு பேராசிரியர் , எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு 'அட்டன்டன்ஸ்'போட்டுட்டு இருக்கிறோம்' என்றார்.
கல்லூரிச் சொல்லான 'அட்டன்டன்ஸ்' குடும்பத்தின் சொல்லாக அங்கே சொல்லப் பட்டது. செய்கிற பணியிலிருந்து வீட்டிற்கும், வாழும் சூழலிலிருந்து கல்லூரிக்கும் சொற்களைப் பரிமாற்றிக்கொள்வதுதானே இயல்பு. எல்லா பெண்களும் அவரவர் வீடுகளுக்குப் பேசி முடித்தவுடன் 'பாட்டுக்குப் பாட்டு' தொடங்கியது. எழுபது, எண்பதுகளின் பாடல்களில் இளையராஜா முழுமை பெற்றிருந்தார். தற்கால பாடல்களில் தனுஷ், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என நடிகர்களைச் சொல்லி பாடல்கள் அடையாளப்படுத்தபட்டன.
இளையராஜாவின், "நிலா அது வானத்து மேலே... ' பாடலுக்கு எழுந்து பலரும் ஆடத் தொடங்கினார்கள். அதன் பின்பு கைவசமிருந்த 'பென்டிரைவ்' ஒன்றிலிருந்த புதிய பாடல்களை ஒலிபரப்பி, ஆடல் களைகட்டியது. ஆட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தபடியுமான கொண்டாட்ட மனநிலையில் பயணம் தொடர்ந்தது. பயணத்தின் முடிவில் அவர்கள் சென்ற இடம், கண்களுக்கெட்டிய தூரம் வரையில் மலையின் பசுமை, பச்சை நிறத்தின் மீது அசைந்தாடும் பஞ்சு மேகங்கள், மேகங்கனிந்து தூறும் பூஞ்சாரல் என ஏகாந்த நிலமதில் காலடி வைத்தனர்.
அந்தக் குளிரை, அந்தச் சாரலை, அந்தப் பசுமையை, அந்த ஏகாந்தத்தை அங்கு வந்திருந்த பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்தபடியிருந்தனர். உடலின்மேல் வந்து தவழுகிற மஞ்சு மேகத்தில் சிலிர்த்த ஒரு பெண் கூறுகிறார் , அச்சச்சோ, நான் மாபெரும் தப்புப் பண்ணிட்டேன், என் அத்தானோடு இங்கே வந்திருக்கணும்." அவர் அப்படி வாய்விட்டு சொன்னவுடன் அடுத்தடுத்த பெண்களும் தங்கள் கணவர்களைப் பற்றி ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். ஒருவர் , "அடடா ,நான் மட்டும் என் வீட்டுக்காரரோடு வந்திருந்தேனென்றால், அப்படியே அவர் கைக்குள் என் கை கோர்த்து இந்த மலை முழுக்கச் சுற்றி வந்திருப்பேன்" என்று கூற, அடுத்தவர், "திருமணம் ஆனவுடன் கணவரைப் பிரிந்து, தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காகப் படிக்கச் சென்று விட்டதாகவும், கணவரும் வெளிநாட்டில் பணிபுரியச் சென்று விட்டதாகவும், ஏழு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இருவரும் ஒன்றாக வாழ வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், இந்தச் சூழலில் தற்சமயம் ஏற்பட்டுள்ள இந்தச் சிறிய பிரிவைக்கூட தாங்க முடியவில்லை" என்று கூறினார். ஆட்டம் பாட்டு கொண்டாட்டம் என்றிருந்த அவர்கள், அதன் பின்பு அவரவர்களுக்கான அந்தரங்க நினைவுகளுக்குள் பயணிக்கத் தொடங்கியிருந்தனர் .
இவ்விதமான இவர்களின் நினைவுகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் கணவன்மார்களுடன் ஒன்றாக பயணிக்கும் பல்வேறு தருணங்கள் இனிமையானதாக மட்டுமே இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. ஒருவரோடு ஒருவர் முகம்திருப்பிக்கொண்டதும், சண்டையிட்டுக் கொண்டதுமான முன்நிகழ்வுகளும் இருந்திருக்கலாம்.
கணவன் மனைவி மட்டுமே செல்கிற சுற்றுலாக்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மிகக்குறைவு. நடுத்தர வயதிலோ,முதிர் காலத்திலோ அமைகிற பயணங்கள் குழந்தைகள், உறவினர்களால் சூழப்பட்டது . அப்போதும் கூட ஒருவரிடம் மற்றவர் முகம் திருப்பிக்கொண்டும், சற்று நேரத்தில் சமாதானம் செய்தபடியாகவும் பயணம் அமைந்திருக்கும் . அதே பயணத்தில், யாருமறியாத மிகச்சிறிய உரசலில் ஒருவரின் உடலிருக்கும் வெதுவெதுப்பை மற்றவருக்கு இடம்மாற்றியிருப்பர் . கணவனும் மனைவியும் இணையாகப் பயணிக்கையில் அவர்களை வந்தடைகிற பறவைகளின் குரலில், குரங்குகளில் தொந்தரவில், பூக்களின் வாசனையில் தங்களைக் கரைத்துக் கொள்வார்கள். நாடோடியாகத் திரிகிற துணையற்ற மனிதர்களைக் கண்டு ஆச்சர்யப்படுவார்கள். இளம்காதலர்களுக்குள் தங்களை அடையாளம் காணுகையில் இரகசியமான மொழியில் தங்களைப் பரிமாறிக்கொள்வார்கள். வயோதிகம் அடைந்த பின்பும் இணையாக கைப்பற்றி நடக்கிற தம்பதியர் எவரையேனும் பார்த்தால் தங்களுடைய முதுமைக்காலம் இவ்விதமாக இருக்கவேண்டும் எனச் சொல்லிக்கொள்வார்கள். பல்வேறு இனத்தவரும்,பல வயதினரும் வந்து செல்கிற ஒரு சுற்றுலாத்தளம் என்பது நடுவயதில் இருக்கும் கணவன், மனைவிக்கிடையே அவர்களின் இளமைக்கும் முதுமைக்கும் பின்னலிடும் அன்னியோனியத்தைக் கொண்டுவந்து சேர்த்திருக்கும்.
திருமணம் ஆனபின்பு கணவனைப் பிரிந்து அம்மா வீட்டிற்குச் செல்வதற்கே கூட பொதுவாகப் பெண்கள் பிரியப்படுவதில்லை. நம்முடைய நிலத்தில் பெண்கள் தனித்துச் செல்கிற சுற்றுலாப்பயணங்கள் இல்லையென்று சொல்லுமளவுக்கு மிகமிகக் குறைவு. பெண்களின் பணி சார்ந்த பயற்சிகளுக்குச் செல்வதன் மூலமாக மட்டுமே இது போன்ற பயணங்கள் சாத்தியமாகின்றன. தங்களுடைய அம்மா, அப்பாவையோ அல்லது குழந்தைகளையோ அழைத்து வர இயலவில்லை என வந்திருந்த பெண்களில் யாரும் வருந்தவில்லை.
நிலமும் காலமும் சூழலும் எப்பொழுதுமே மனதிற்குள் மாயம் நிகழ்த்தியபடியே இருக்கும். வீட்டிலிருக்கும் பொழுது தினந்தோறும் பார்க்கிற கணவன்தான், அவன் மீது ஓயாத குறைபடுதல் மனைவிக்கு இருந்துகொண்டே இருக்கும். என்றபோதிலும் இயற்கையின் செழுமை கலையாதிருக்கும் நிலவெளியில் அவர்கள் தங்கள் மனதையும் உடலையும் உணர்ந்துகொண்டே இருப்பார்கள்.
அனாரின் கவிதையொன்று ,
"காலைப்பனியில்
ஈரமணலில்
வெள்ளை மல்லிகைகள் சொரிந்து கிடக்கின்றன
ஆயத்தி மலையின் விற்பதற்காகக்
கூவிச் செல்கிறாள் நெற்றியில் விபூதியும்
வாயில் வெற்றிலையும் இட்ட கிராமப்பெண்
தேனும் மாட்டுச்சாணமுமாய்
கிறவல் ஒழுங்கையின் மொச்சை வீச்சம்
மரச்சுள்ளி மிலாறுகளை தூக்கக்கலக்கத்துடன்
பொறுக்கிக் கட்டுகிறாள்
வயிறுபிதுங்கிய பரட்டைத் தலைச்சிறுமி
ஓட்டைவிழுந்த கறுப்புக்குடையை
ஒரு கை விரித்தவண்ணம்
ஆசாக் மறு கை ஊன்றியபடி
மிடுக்காகப் பார்த்து நிற்கிறார்
கண்ணாடி போட்ட வயோதிபர்
ஆட்டுப்பட்டியை இடையன் பக்குவமாக
மேய்த்துச் செல்கிறான்
அவை ஒரே நேரத்தில் 'மே' என்று கத்துகின்றன
'காவுத் தடியைத்' தூக்கி
முதுகு வளைய நடந்து
மீன்களின் பெயரைக் கூவுகிறான் மீன் வியாபாரி
ஓலைகளால் வேய்ந்த களிமண் குடில்களின் முன்
முக்காடு போட்ட பெண்கள்
காற்றுக்குள்ளிருந்து எதையோ அள்ளுவதும்
விரல்களுக்கு வெளியே ஊற்றுவதுமான லாவகங்களோடு
நிறச்சாயமூட்டிய பாய்கள் பின்னுகிறார்கள்
ஒருவன் சிறிய மீன்வலையைப் புல்வெளியில் உலர்த்த
நாலைந்து வெட்டுக்கிளிகள் சிக்கிக்கொள்கின்றன
பிடிபட்டு வளையில் திமிரும் உடும்பை
கம்பினில் கட்டி .. தீயிலிட்டு ....
அதன் வெந்த இறைச்சியை மலைத் தேனில் தொட்டு
கணவன்மார்களுக்குப் பரிமாறுகிறாள் குறத்தி
தும்பிச்சிறகடிக்கும் கண்கள் விரித்து
இரவுச்சுரங்கத்தின் கறுப்புத் தங்கமென எழும்
தலைவியை மரியாதை செய்கின்றனர்
மலைத்தேன் அருந்தியவாறு இருப்பவளைப்
புணர்ச்சிக்கு அழைத்தவன் கூறுகின்றான்
'போர் தேவதையின் கண்களாக உருண்ட
உன் முலைகளால்
குறிஞ்சி மலையையே அச்சுறுத்துகின்றாய்'
அவளது குரல்.. மலைகளில் சிதறி ஒலிக்கின்றது
'பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்'
காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச் செய்பவன்
இன்றென்னைத் தீண்டலாம்."
வானம் திறந்து பொழிகிற மழையிலும், நிலம் திரண்டு உயர்ந்திருக்கும் மலைகளிலும், ஒளிபுகத் தவித்துத் தோற்கும் காடுகளிலும், துளிர்த்துப் பொங்கிப் பெருகிச் சரிகிற அருவிகளிலும், விரிந்து பரவுகிற நதிகளிலும், ஈரம் கசிய பூத்திருக்கும் நிலத்திலும்,பரந்து விரிந்திருக்கிற கடலிலும், எழும்பித் திமிறுகிற அலைகளிலும், உப்புப்படிந்திருக்கும் காற்றிலும், காட்டில் உறைந்திருக்கும் சிறுநெருப்பிலும் பெண் தன்னை உணர்வது என்பது எல்லோருக்கும் நிகழ்வது அல்ல. கடலின் நீலமும், வானின் நீலமும் அவளுக்குள் நீலப்பூ ஒன்றின் எண்ணிலி இதழ்களை விரித்து வாசம் நிகழ்த்தும். பஞ்சபூதங்களாகத் தன்னை உணர்கிற ஒரு பெண் 'பெண் உடல் பூண்ட முழு இயற்கை நான்' என்று சொல்வதுதானே இயற்கை. அனார் அதை உணர்ந்திருக்கிறார் . அவள் பூத்திருப்பதை உணர்கிறவனே அவளைத் தீண்டமுடியும்.
ஒரு பெண்ணை அத்தனை எளிதில் மலர்த்திவிட எல்லா ஆண்களாலும் இயலவே இயலாது.கணவனே என்றாலும்கூட எல்லாப் பொழுதிலும் அவளை, அவன் மலர்த்திவிட இயலாது. அவள் மலரும் தருணத்தை அவளே தேர்கிறாள். அவனுக்கென அவள் மலர்ந்து காத்திருக்கையில் ,அவன் அருகிலில்லை என்கிற சூழல் ஏற்படும் பொழுது அவள் நோய்மை அடைகிறாள். அவளின் அந்த நோய்மையை அவன் வந்தே தீர்க்க முடியும்.
கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்கப்
பெண்கவிஞர் சாப்போ, 'வட்டார மொழியின்
தன்னுணர்ச்சிப் பாடல்களைப் பாடிய பெண் கவிஞராக ஹோமருக்கு இணையாகக் கொண்டாடப் பட்டவர்.
"சில கப்பல்களும், போர்க்குதிரைகளும், போர் வீரர்களும் கவர்ச்சியுடையன என சிலர் கூறுவார்கள்;ஆனால் எனக்கு எல்லாமே காதல் தான்" என்று சொல்லும் சாப்போவின் புகழ்பெற்ற வரிகள் , "காற்றால் அமைந்த சொற்களைக் கொண்டு நான் தொடங்குகிறேன். ஆனால் அவை செவிக்கு இனியன"
காதல் என்பது மூர்க்கமும், பால்வேறுபாடு அற்றதும் என்பதற்கு இலக்கியத்தில் முதல் சொல் எடுத்தவள் சாப்போ. தன்னுடைய இடரிலும் தளர்விலும் அவள் நாடுகிற காதல் தேவதை 'அப்ரோதிதே'. சாப்போவின் காதல் மறுதலிக்கப்பட்ட ஒரு பொழுதில் ,'அப்ரோதிதேவிற்கு( To Aprodite)'என்கிற கவிதை எழுதியுள்ளார் .
"வண்ணங்கள் பலவும் மிளிரும் பீடத்தில்
எழுந்தருளிய தேவியே,
அப்ரோதிதே,ஜூஸின் குழந்தையே,
குறும்புக்காரியே,
உன்னிடம் நான் வேண்டுவது இதுதான்,
தலைவியே,
என் உள்ளத்தைக்
கொடுந்துயரினாலும் சித்திரவதையாலும் உடைத்துவிடாதே."
தன்னுடைய வேண்டுதலை வெளியிட்டுத் தொடங்கும் நீண்ட பாடலின் ஒரு பகுதி இது. இதற்கு முன்பாக எவ்வாறெல்லாம் இவளின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன என காதல் தேவதையைப் புகழ்ந்து, நன்றி தெரிவித்து, தற்சமயம் தனக்கு ஏற்பட்டுள்ள நலிவை நீக்க சாப்போ வேண்டுகிறாள்.
இறைவனை நோக்கிய சடங்குகள் மனதின் ஆழத்திற்குள் மாயாவித்தை நிகழ்த்துகிறது . கடவுள் எழுந்து வருவதாகவும், தன்னுடைய குரலைக் கேட்பதாகவும், தன்னுடன் பேசுவதாகவும் நம்புகிற அகத்தெழுச்சி மிக்க நிலையை பிராத்தனைகள் அடையச் செய்கின்றன. மாயத்தை நிகழ்த்துகிற இறைச்சடங்குகள், காதலில் அந்தப் பெண்ணை ஆற்றுபடுத்த இயலாது தோல்வியடையவே செல்கின்றன.
கிரேக்க இலக்கியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நீரோடைகள், ஊற்றுக்கள், மரங்கள், பூக்கள் போன்றவற்றின் மூலம் மனதின் நுட்பத்தைக் காட்சிப்படுத்த நம்மைப் போலவே கிரேக்கர்களுக்கும் முடிந்திருக்கிறது. மதம் சார்ந்த கோட்பாடுகள் தீவிரமடையாதிருந்த காலம் அது. அந்தக்கால கட்டத்தில், கடவுள் என்பவர் காதலர்களை இணைத்து வைப்பவர்களாகவும், இயற்கையின் அங்கமாகவும் இருந்திருக்கிறார்கள். காதலின் நலிவை கடவுள் நம்பிக்கை கொண்டு ஆற்றுபடுத்த கிரேக்க இலக்கியமும் தமிழும் முயலுகின்றன.
சங்கத்தில் "வெறியாட்டு" என்றொரு துறையே இருக்கிறது. தான் விரும்புகிறவரின் நெஞ்சத்தில் காதலைத் தூண்ட 'அப்ரோதிதே'வை வேண்டுவது போல 'வெறியாட்டு' நிகழ்த்தி சங்கமகளின் நெஞ்சத்தில் பதிந்திருக்கும் காதலை வெளியே கொண்டுவர அம்மா முயலுகிறாள். அம்மாவும் அந்தப் பருவம் கடந்து வந்தவள்தான். மகளின் உடல் மாறுபாட்டிற்கும், உள்ள நலிவிற்கும் எது காரணமாக இருக்ககூடும் என்பதை உணர்ந்தே இருப்பாள். ஆனாலும் அம்மா அறியாமையில் இருக்கிறவளாகவே மகள்களால் உணரப்படுகிறாள்.
அம்மா என்றால் அறியாமை என்றும் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் நினைத்துக் கொள்கிறார்கள். 'உனக்கெல்லாம் புரியாதும்மா', 'கொஞ்சம் நீ அமைதியா இருக்கியாம்மா', 'உனக்கு ஏம்மா இதெல்லாம்', 'நாங்க வேற ஜெனரேசன்' போன்ற சொல்லாடல்களில் அம்மாகளைக் கடந்து செல்கிற இளம்மகள்கள் எப்போதுமே இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் எளிதாக எடுத்துக்கொண்டு, மறுபடியும் மகளின் நலனுக்கான பிராத்தனைகளையும், வேண்டுதல்களையும் அம்மாக்கள் செய்து கொண்டிருப்பார்கள்.
அம்மாவின் இம்மாதிரியான வேண்டுதல்களை நகுதலோடு கடந்து செல்கிற மகள் பற்றி வெறிபாடிய காமக்கணியாரின் அகநானூற்றுப் பாடல்,
“அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை
நெடுவேட பேணத் தணிகுவாள் இவள்'என,
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வளநகர் சிலம்பப்பாடி, பலிகொடுத்து,
உருவச் செந்தினைக் குருதியோடு தூஉய்,
முருகு ஆற்றுப்படுத்த உருக்கெழு நடுநாள்,
ஆரம் நாற, அருவிடர்த் ததைந்த
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
நல் மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத்
தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
நோய்தணி காதலர் வர, ஈண்டு
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே ?"
தோழியிடம் தலைவி சொல்வதாக உணரப்படுகிற பாடல் இது. விரைவில் வந்து திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி, களவில் கலந்த தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். அவனைத் தழுவி மகிழ்ந்திருந்த தலைவி இப்போது தனித்திருக்கிறாள். உடல் வேறுபட்டு பசலையடைகிறது.மகளின் நிலையினைக் கண்ட தாய் வருந்தி, சூரபதுமனை வென்ற முருகனை வணங்கினால் மகளின் துன்பம் தீரும் என நினைக்கிறாள். வெறியாட்டு நிகழ்த்துகிற முதுபெண்டிரிடம் கூறுகிறாள். நிகழ்வுக்கான களம் அமைக்கப்பட்டது. வேலினை ஊன்றினர். கடம்ப மாலையைச் சூடினர்.வேலனின் புகழ் பாடினர். பலிக்கொடையும் வழங்கினர். பலிக்குருதியை செந்தினையில் கலந்து தூவினர். முருகன் வெறியாட்டு நிகழ்ந்து முடிகிறது. நிகழ்வின் முடிவில் தலைவி சொல்கிறாள், 'யானையை வேட்டையாடத் திட்டமிடும் புலி பதுங்கிச் செல்வது போல இரவுப் பொழுதின் காவலர்கள் அறியாதவாறு நம்முடைய வீட்டிற்கு பதுங்கி வந்த தலைவன் என்னைத் தழுவிகொண்டான் . அவனை விரும்புகிற என்னுடைய விருப்பம் நிறைவுற என் இன்னுயிர் குழைய என்னைத் தழுவி முயங்கியவன் அவன். அவனை நினைத்து நோயுற்றிருக்கும் என்னுடைய நிலையை உணராத அம்மா, முருகனுக்கு வெறியாட்டு எடுத்த அவளின் அறியாமையை எண்ணி நகைக்கிறேன்" என்று கூறுகிறாள் .
மகள்களின் அறியாமையை அம்மாக்கள் தான் முழுமையாக அறிந்திருக்கிறார்கள். உயிர் மலர தழுவியவன் தீர்க்க வேண்டிய நோய்மை இதுவென மகள் தன்னை வெளிப்படுத்த இயலாமல் தவிப்பதை உணர்ந்தே அவளறிந்த வழிகளில் ஆற்றுப்படுத்த முயலுகிறாள். அம்மா அறிந்த இரகசியம் மகள் அறிந்துகொள்ளும் பொழுது அம்மாவை அவள் தேடுவதில்லை. அம்மாவை உணர்ந்து விடுகிறாள்.
அறியப்படாத சுவை என்கிற என்னுடைய கவிதை ஒன்று,
"அம்மாவிற்கு நன்றாக சமைக்கத் தெரியும்
பரிமாறவும் தெரியும்
அம்மாவிற்கு அன்புகாட்டத் தெரியும்
அவளுக்கு தெரியாததெல்லாம் வெறுப்பு
அவள் சமைத்துப் போட்டுக் கொண்டேயிருப்பாள்
அவள் விரல்களில் எதைத்தான் வைத்திருப்பாள்
எவருக்கும் தெரியாது
ரசம் வைப்பாள் வித விதமாய்
சாம்பார் வாசனையால் தெரு மணக்கும்
உணவு வகைகளை சலிக்காமல் செய்வாள்
உப்புப் போட அவள் மறந்ததேயில்லை
ஒருவேளை
அது சற்று கூடியிருந்தாலும் ருசியாகத்தானிருக்கும்
இந்த அம்மாவுக்குத் தெரியாததெல்லாம் ஒன்றுதான்
அம்மாவின் சமையல் சுவையாய்
அவனைப் பிடித்திருந்தது
அவனைப் பிடிக்கும் என்பது நான் அறியாத சுவை
என்பது அம்மா அறியாதது
அவள் அறிந்ததும் நான் அறியாததுதான்."
*********************************************************************************
வெறிபாடிய காமக்கணியார்:
காமக்கண்ணி என்பது எல்லோரும் விரும்புகிற கண்களை உடையவள் எனவும் அதுவே காமாட்சி எனவும் பெயர் பெற்றது. வெறியாட்டு பற்றியே இவர் அதிகமாக எழுதியுள்ளதால் இந்தப் பெயர் பெற்றிருக்கிறார்.
அகநானூறு: 22,98நற்றிணை : 268 புறநானூறு: 271மொத்தம் 5
************************************************
சாப்போ:
கிரேக்க இலக்கிய வரலாறு, ஹோமரின் இலியட்(Illiad), ஒடிசி(Odyssees) காலத்திலிருந்து தொடங்குகிறது. ஹோமருக்கு இணையாக சாப்போ சொல்லப்படுகிறார். சாக்கரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் உட்பட பலரும் இன்று வரையில் 'சாப்போ' கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார். சங்கப்பெண்பாற் புலவர் ஔவையையும் சாப்போவையும் ஒப்பிட்டு "அவள் சாப்போவைப் போலப் பாடியுள்ளாள், காதலைப் பற்றி அல்ல, ஒழுக்கத்தைப் பற்றி "என திருத்தந்தை.எச். பௌர் (Rev.Fr.H,Bower)குறிப்பிட்டுள்ளார். இதனை இலங்கைத் தமிழ் ஆய்வாளர் திரு. சைமன் காசிச்செட்டி(1807-1852) காலத்தில் வெளியான "Tamil Plutarch" என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment