Search This Blog

Friday, August 19, 2016

நீலக் குறிஞ்சி


மலையெல்லாம் நீலக்குறிஞ்சிகள்
பூத்த வருடம் நான் பிறந்ததாக
பாட்டி சொன்னாள்

இளமை தளிர் கொண்ட காலத்தில்
மலைவெளியில் அப்பூக்கள்
மீண்டும் பூத்த போது மழையின் நிறம் நீலம்
எனக் கண்டுணர்ந்தேன்

குறிச்சிப் பூக்களின் நீலவெளிச்சம்
தொடுவானில் பிரதிபலிப்பதை தரிசிக்கையில்
காத்திருப்பின் கனியும் அந்நிறத்தில்
தான் இருந்தது

கித்தார் மரத்து பூக்களின் வாசனை
கண்டடையாத காதலனின் உருவத்தை
ஆழ் மனதில் வரையத் துவங்கியது

வரையாடுகளின் சினைப்பருவ காலத்தை
வனாந்தரம் மறைத்து வைப்பது போலவே
தளிருடலை மறைத்து வைக்கத் துவங்கினேன்

நீர்கடம்ப மரத்தின் தாகத்தை
சிற்றோடைகள் அறியும் சமயம்
வேர்கள் சர்ப்பநடனமிடும்
காட்டுவாசியின் இசை
வெறுமையின் துல்லிய உண்டியலில்
சேர்க்ப்படுவதை அறிவேன்

பூம்பாறைப் பூக்களின் ஆகிருதியை
தாங்கயிலாது மனம்
பனிப் பாறைகளில் சறுக்கும்

காத்திருப்பு தனிமையில் இடறுவது
பள்ளத்தாக்கிலிருந்து குறிஞ்சிப் பூஞ்சருகுகள் வீழ்வது

நீலத்தின் நிவறுதல் நிலைமொழியாய்
வானத்திற்கு ஏகியதும் இங்கணமே

காட்டில் தான் நீலக்குறிஞ்சி பூக்கும்
காத்திருந்து காதலனோடு தரிசிக்கவும்
நாம் இங்கிருந்து வாழ்ந்து போன பிறகும்

--தேன்மொழி தாஸ்
19.8.2016

No comments:

Post a Comment