Search This Blog

Wednesday, August 10, 2016

காடுபடு திரவியமாய் உனது விரல்கள்



துரோகங்களினால்
துடைத்துக் காலிசெய்யப்பட்டிருந்த
ஆன்மாவின் பாத்திரத்தில்
ஒரு துளியாய் விழுகிறது
உனது அன்பு

காற்றை விதைத்து
பூவைப் பறிப்பதென
உனது சொற்கள்

தன்னந் தனியே அலையும்
தனுராகக் காட்டுக் கழுதை தான்
எனது மனம்

சிறுத்தையின் வாயில் அகப்பட்ட
கலைமானின் கழுத்தாய்
எனது வாழ்வு சிதைந்ததையும்

அறிவின் சுடர் எரிய
மாடம் அற்றுப்போனதையும்

முயலின் சதைருசியில்
பலரின் விழியில் எனது உடல்
விழுவதையும் தாங்கயியலாமல்

உனது மனம் பலிபீடமாவதை
உணர்கிறேன்

உனக்கு நான் சொல்ல விரும்புவது
காட்டு அழுகன்னி செடியின் தன்மையில்
எனது உடலை மாற்றி
காலங்கள் ஆகிவிட்டது என்பதையே

காடுபடு திரவியங்களாய்
உனது விரல்கள்
எனை தழுவுகையில்
அதை நீ உணர்ந்திருப்பாய்

உனக்குள் ஊரும் கண்ணீர்
தனிச் சொல்
அதன் ருசியை நானறிவேன்

அடவியின் தருக்கள்
அசையும் என் விழிகளைப்
பத்திரப்படுத்துவாய்

- தேன்மொழி தாஸ்

No comments:

Post a Comment