Search This Blog

Friday, February 15, 2013

புற்றுநோய் குணப்படுத்த முடியுமா?



புற்றுநோய் குணப்படுத்த முடியுமா?: மருத்துவர் சுதாகரனுடன் நேர்காணல்!,
உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நோய்க்கான மருந்தின்மை, போதிய சிகிட்சையின்மை போன்ற காரணங்களுடன் புற்றுநோய்க் குறித்த விழிப்புணர்வின்மையினால் தவறான உணவு பழக்கத்துடன் கூடிய மக்களின் வாழ்க்கை முறையும் இதற்குக் காரணமாகிறது.
பொதுவாக புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், கதிர்வீச்சு, பிளாஸ்டிக் முதலான ரசாயனப் பொருட்களின் பயன்பாடு, புகையிலை போன்றவை பெரும்பாலான புற்றுநோய்கள் வருவதற்கான காரணிகளாகும். புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறுதிகட்டத்தை அடைந்தவர்களைப் பூரணமாக குணமாக்குவதற்கான மருந்து இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் இதனை உயிர்கொல்லி நோய்களின் வரிசையில் சேர்த்துள்ளனர்.

இதன் காரணமாக, மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை அதிகரிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பிப்ரவரி 4 ஆம் தேதியினை உலகப் புற்றுநோய் ஒழிப்பு தினமாக அறிவித்துள்ளனர். இதற்காகவே, 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 420 அமைப்புகள் இணைந்து உலகப் புற்றுநோய் ஒழிப்பு அமைப்பினை நிறுவி உலகம் முழுவதும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

சாதாரண மக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக அது குறித்த விவரங்களைப் பெற, கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் அமைந்திருக்கும் சர்வதேச புற்றுநோய் மையத்தின் Director in Charge மருத்துவர் சத்யா அவர்களைத் தொடர்பு கொண்டோம். இம்மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவின் Head of the Department மருத்துவர் சுதாகரன் (Sudhakaran), மற்றும் Medical Officer மருத்துவர் ஹோஷியா (Hoshea) ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றுக் கொள்ள ஒப்புதல் வழங்கினார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் மருத்துவக் கல்லூரியில் துறைத் தலைவராக (Head of the Department) பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் சுதாகரன் 2006 ஆம் ஆண்டு முதல் நெய்யூர் சர்வதேச புற்றுநோய் மையத்தில் பணியாற்றி வருகிறார்.

மருத்துவர் சுதாகரன் மற்றும் மருத்துவர் ஹோஷியா ஆகியோர் இந்நேரம்.காம் - க்காக வழங்கிய சிறப்புப் பேட்டி கீழே:

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

புகைப்பிடித்தல் காரணமாக நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது. புகையிலை உபயோகித்தல் காரணமாக வாயில் புற்றுநோய் ஏற்படுகிறது. குடிப்பழக்கம் காரணமாக வயிற்றில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதுவன்றி, கதிர்வீச்சு மற்றும் ரசாயனப்பொருட்களின்(கெமிக்கல்ஸ்) உபயோகத்தினாலும் புற்றுநோய் வரும்.

புற்றுநோயினைக் குணமாக்குவது எத்தனை சதவீதம் சாத்தியம்?


நோயின் ஆரம்பக்கட்டத்திலேயே மருத்துவம் பார்த்தால் முழுமையாக குணமாக 50 சதவீதம் சாத்தியம் உள்ளது.

நோயின் ஆரம்பக்கட்டம் என்று எதைச் சொல்கிறீர்கள்? அதை எப்படி அறிந்து கொள்வது? ஏதாவது ஒரு வகை புற்றுநோயை உதாரணமாக கூறி விளக்குங்களேன்.

உதாரணமாக கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியில் வரும் புற்றுநோயை எடுத்துக் கொள்வோம். இதன் ஆரம்பக்கட்டம் என்பது சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். சிலர் நீர் போக்கு என்று மருத்துவரை அணுகுவர். புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர் சந்தேகம் கொண்டால், அதற்கான சோதனைகளை மேற்கொள்வார். உறுதிபடும் வேளையில், தொடர் சிகிட்சை மேற்கொண்டால் 50 சதவீதம் நோயாளிகளைப் பூரணமாக குணமாக்கி விட முடியும்.

இவ்வாறு ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஆரம்பக்கட்டத்தில் சில அறிகுறிகள் வெளியே தெரியலாம். அப்போதே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொண்டால், அவை புற்றுநோயின் ஆரம்பக்கட்டமா இல்லையா என்பதை மருத்துவர் கண்டறிந்து உடனடி சிகிட்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்நோயைப் பூரணமாக குணமாக்க இயலும்.

ஆங்கில மருத்துவத்தைவிட, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சுவாசப்பயிற்சி முதலானவை மூலம் இந்நோய் வராமல் பாதுகாப்பதோடு, வந்தாலும் முழுமையாக குணமாக்கிவிடலாம் என்று ஆங்கில மருத்துவமல்லா பிற மருத்துவங்களில் கூறப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அதற்கு சாத்தியம் உள்ளதா?

ஆங்கில மருத்துவம் தான் புற்றுநோய் வந்தால் அதனைக் குணமாக்குவதற்கான சரியான மருத்துவ முறை. இது மட்டும் தான் ஒரே தீர்வு. அறுவைசிகிட்சை, கீமோ தெரபி, கதிர்வீச்சு முறை போன்ற முறைகளின் மூலம் நோயைக் குணமாக்கும் மருத்துவத்தை ஆங்கில மருத்துவம் தான் தருகிறது. மற்ற மருத்துவங்கள் கூறும் வழிமுறைகள், நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கப் பயன்படலாம்.

அது மட்டுமன்றி, பிற மருத்துவங்கள் கூறும் இத்தகைய வழிமுறைகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையன்று.

புற்றுநோய் வராமல் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்ன?

தினசரி நாம் உண்ணும் உணவில் அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகக் கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்தல், புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடல் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது கேன்சர் பாதிப்பு அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? கடந்த ஆண்டைக் கணக்கிடும்போது இந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை என்ன?
ICC நெய்யூரில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்துக் கூறினால், புற்று நோயின் தாக்கம் கூடி உள்ளது. 2012 ஆம் ஆண்டு கணக்குப்படி, 4500 புற்றுநோய் நோயாளிகள் இம்மருத்துவமனையில் சிகிட்சைக்காக வந்துள்ளனர். இதில் தென் தமிழகம், குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்துள்ளவர்களே அதிகம். ஆண்டு தோறும் இங்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையினைக் கணக்கிட்டால் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோய் தாக்குதல் அதிகரித்தே வருகிறது. தலை, கழுத்தில் தாக்கும் புற்று நோய், மார்பக புற்று நோய், கர்ப்பப்பையின் வாயில் ஏற்படும் புற்று நோய், குடல், நுரையீரலில் தாக்கும் புற்று நோய் ஆகியவையே பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவத்துக்கான அதிகப்பட்ச செலவு என்ன? ஏழைகளுக்கு எவ்வகையில் மருத்துவ உதவிகள் செய்யப்படுகிறது?

பொதுவாக புற்று நோய்க்கான சிகிட்சை முறைகள் விலை உயர்ந்தது. புற்று நோய்க்கான மருந்துகள் விலை அதிகம் என்பதே அதற்கான முக்கிய காரணம். கூடுதல் கதிர் வீச்சு மூலம் கொடுக்கப்படும் சிகிட்சை முறையும் விலை உயர்ந்தது.

கீமோ ஊசியின் விலை ரூ. 15,000 - ரூ. 20,000 வரை ஆகக்கூடியது. இது ஒரு தவணைக்கானது. சாதாரணமாக நோயின் தன்மையினைப் பொறுத்து 5 முதல் 6 தவணை வரை கீமோ கொடுக்க வேண்டியிருக்கும்.
கதிர்வீச்சு மூலம் கொடுக்கப்படும் சிகிட்சைக்கு ரூ. 50,000 வரை ஆகும். பிற மருத்துவமனை / சென்டர்களில் ஆகும் செலவைவிட இங்கு மிகக் குறைவு தான்.
நமது புற்று நோய் நிலையம் தமிழக அரசின் இலவச சிகிட்சை பிரிவுடன் தொடர்பு உடையது. இதன் கீழ் தினசரி வருமானத்தின் அடிப்படையில் ஏழை நோயாளிகளுக்கு இலவச சிகிட்சை கொடுக்கப்படுகிறது. மற்றும் பள்ளத்தாக்கின் லீலி என்ற NGO கிறிஸ்துவ அமைப்பும் சில நோயாளிகளின் சிகிட்சைக்கு உதவி செய்து வருகின்றனர்.
நோயாளிகளின் வறுமை நிலையைப் பொறுத்து நாங்களே அரசுக்குப் பரிந்துரை செய்வதன் மூலமும் சில NGO க்களை அணுகியும் இயன்றவரை இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ சிகிட்சை வழங்கி வருகிறோம்.

இந்த நோய்க்கு அடிப்படை காரணமாக இரு ஜீன்கள்தான் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜீன் அடிப்படையிலான ஆராய்ச்சிகள் ஏதும் இம்மருத்துவமனையில் நடக்கின்றனவா?

ஒரு சில புற்று நோய்கள் நம் உடலில் உள்ள ஜீன்களுடன் தொடர்புடையது. குறிப்பாக இரத்த புற்று நோய். எங்கள் புற்று நோய் நிலையத்தில் இதற்கான ஆராய்ச்சி மையம் இல்லை. திருவனந்தபுரம், வேலூர் போன்ற இடங்களிலுள்ள ஆராய்ச்சி மையங்களில் இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

தமிழக/இந்திய அரசுகள் கேன்சர் விழிப்புணர்வுக்காகவும் நோயாளிகளுக்குச் சிகிட்சை அளிக்கவும் எவ்வகையிலெல்லாம் இம்மருத்துவமனைக்கு உதவுகிறது?

எங்கள் புற்று நோய் நிலையத்தில் உள்ள நோயாளிகள் தமிழக அரசின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவச சிகிட்சை உதவியைப் பெற்று வருகிறார்கள். இது அவர்களது வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. பள்ளத்தாக்கின் லீலி என்ற NGO கிறிஸ்தவ அமைப்பும் பொது மக்களிடமிருந்து பெறும் நன்கொடைகளின்மூலம், தகுதியானவர்களைத் தேர்வு செய்து இலவச சிகிட்சை வழங்க உதவிவருகிறது.

மத்திய அரசின் "தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(NCCP)" என்ற திட்டத்தின் மூலம் நேரடியாக மாநில அரசுகளின் வழி, மாவட்டம் தோறும் மாவட்ட புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்(DCCP) ஏற்படுத்தி உதவி வருகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த 2-3 ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வரும் காப்பீட்டுத்திட்டம் மகத்தானது. இதன் மூலம் சுமார் 95 சதவீத நோயாளிகள் நேரடியாக மருத்துவமனை மூலம் பயன் பெற்று வருகின்றனர். ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ளவர்களுக்கு இந்த இலவச காப்பீட்டுத் திட்டத்தை அரசு வழங்கி வருகிறது. அரசின் இந்த இலவசக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் கூட, தங்களின் கிராம அலுவலரிடமிருந்து வருமானச் சான்றிதழ் பெற்று சமர்பிக்கும் பட்சத்தில், ரேசன் அட்டை முதலான பிற ஆவணங்களுடன் நம் மருத்துவமனையே நேரடியாக மாநில அரசை அணுகி இலவசமாக சிகிட்சை வழங்க ஏற்பாடு செய்கிறது. நோயின் தன்மைக்கேற்ப, அதிகப்பட்சம் 1 லட்சம் ரூபாய் வரை மாநில அரசு இந்த இலவசக் காப்பீட்டுத் திட்டம் மூலம் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவச சிகிட்சை வழங்க உதவி செய்துள்ளது.

இதுவரை இம்மருத்துவமனையில் புற்றுநோய் சிகிட்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?

இதுவரை பூரண குணமானவர்களின் சரியான எண்ணிக்கையினைக் கூறுவதற்கு முடியவில்லை. ஆரம்ப ஆவணங்களிலிருந்து பார்வையிடவேண்டி வரும். அது சற்று சிரமமானது. பொதுவாக எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் அதன் ஆரம்ப நிலையிலேயே இம்மருத்துவமனையில் சிகிட்சைக்காக அனுமதிக்கப்பட்டால் 98 சதவீதம் பூரண குணமாக்க இயலும். அதற்கான எல்லாவகை சிகிட்சைகளும் இங்குள்ளன. ஆனால், துரதிஷ்டவசமாக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வின்மையால், நோயின் இறுதி கட்டத்திலேயே பெரும்பாலான நோயாளிகள் இங்கு வருகின்றனர். அத்தகைய நோயாளிகளுக்குப் பூரண நோய் நிவாரணம் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு.

புற்றுநோய் பாதித்தால் எத்தனை காலத்துக்கு மருந்து உட்கொள்ள வேண்டும்?

வாழ்நாள் முழுக்க மருந்து உட்கொள்ள வேண்டிய நோயாளிகள் மிக அபூர்வமாகவே இருப்பர். பொதுவாக, கீமோ தெரபி, கதிர்வீச்சு சிகிட்சை, அறுவை சிகிட்சை போன்றவற்றுக்கு அதிகப்பட்சம் 6மாதக்காலம் மட்டும் சிகிட்சை எடுத்துக் கொண்டாலே போதும். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் பதிவு செக்கப் மட்டும் செய்து கொண்டால் போதுமானது. மருந்து எதுவும் உட்கொள்ளவேண்டிய தேவையில்லை!

புற்றுநோய்ப் பாதிப்பைச் சாதாரண பாமர மக்கள் அறிந்து கொள்ள வழியுண்டா? பொதுவான அறிகுறிகள் என்னென்ன? புற்றுநோய் சோதனை செய்வதற்கு எவ்வளவு செலவாகும்?

சாதாரணமாக புற்றுநோய்ப் பாதிப்பை உடனடியாக எல்லோராலும் அறிந்து கொள்ள முடியாது. சில அறிகுறிகளை வைத்து சந்தேகம் ஏற்பட்டால், அதற்குரிய சோதனைகள் செய்து கொள்வதன் மூலமே புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய முடியும்.

பொதுவாக, சாதாரண ஏழை மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பாதிப்பில்லாத அறிகுறிகளைப் பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. வலி போன்ற தாங்க முடியாத நிலைமை ஏற்படும் போதே அவர்கள் மருத்துவர்களை நாடுகின்றனர். மார்பகப்புற்றுநோய் போன்ற ஒரு சிலவற்றுக்குத் தயக்கத்தின் காரணமாக பிறரிடம் சொல்லாமல் மறைப்பவர்களும் உள்ளனர்.

அறிகுறிகள் என்று பார்த்தோமானால், மார்பகப் புற்றுநோயின் அறிகுறி மார்பில் சிறு கட்டிகள் ஏற்படுவதுதான். வலியில்லாமல் நீண்ட நாட்கள் இருக்கும் கட்டி போன்ற வீக்கங்களை உடனடியாக சோதனை செய்து கொள்வது நல்லது. கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறி, அதிக வெள்ளைப்படுதல், இரத்தம் வெளியேறுதல் போன்றவை. மருந்துகள் மூலம் நிற்காத நிலையில், உடனடியாக புற்றுநோய் சோதனை மேற்கொள்ளவேண்டும்.

பொதுவாக புற்றுநோய் என அறியப்படும் இரத்தப் புற்றுநோயைக் கண்டறிவது தான் சற்று சிரமமானது. தீராத தொடர் காய்ச்சல், நாள்பட்ட உடல் அசதி போன்றவை இரத்தப் புற்றுநோயின் அறிகுறிகள்.

இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக இரத்தத்தினைப் புற்றுநோய் ஆரம்பச் சோதனைக்குக் கொடுக்கவேண்டும். அதில் சந்தேகம் உறுதி செய்தால் அடுத்தக்கட்ட சோதனைக்கு எடுத்துச் செல்வர். சாதாரணமாக ஆரம்பச் சோதனைக்கு 500 லிருந்து 1000 ரூபாய் வரை செலவாகலாம்.

இந்தப் புற்றுநோய் மையத்தின் துவக்கம் மற்றும் இங்குள்ள வசதிகள் குறித்து கூறுங்களேன்.

இம்மருத்துவமனையில் சர்வதேச புற்று நோய் மையம் (ICC) 1964 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட துவங்கியது. எனினும் இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட 1838 ஆம் ஆண்டிலிருந்து அதற்கான பூர்வாங்க வேலைகளும் சிறு அளவிலான செயல்பாடும் ஆரம்பமாகி விட்டன. முழு அளவிலான செயல்பாடு 1964 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது. வேலூர் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்படும் இம்மையத்தில், புற்றுநோய்க்கான ஆரம்பக்கட்ட சோதனைக்கான ஆய்வுகூடத்திலிருந்து சிகிட்சை அளிப்பதற்கான கூடங்கள் வரை அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

ஒரே சமயத்தில் 50 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிட்சை பெறுவதற்கு வசதியாக படுக்கை வசதிகளுடன், ஆண் மற்றும் பெண்களுக்கென்று தனித் தனியே வார்டுகள் உள்ளன. இங்கு கதிர்வீச்சு சிகிட்சை முறைகள் (லீனியர் ஆக்சிலேட்டர்) மற்றும் கர்ப்பப் பையினுள் கொடுக்கப்படும் கதிர் வீச்சு சிகிட்சை முறையும் உண்டு. மையத்தின் உள்ளேயே, புற்றுநோய்தான் பாதித்துள்ளது என்பதை உறுதி செய்வதற்கான திசு பரிசோதனைக் கூடமும் மருந்தகமும் செயல்படுகிறது. மேலும், காலையில் வந்து சிகிட்சை பெற்று மாலையிலேயே வீடு திரும்பும்படியான கீமோதெரபி சிகிட்சை கூடமும் இங்கு செயல்படுகிறது. Regional Cancer Center திருவனந்தபுரத்தில் உள்ளதால், இம்மருத்துவமனையில் வரும் நோயாளிகளில் சுமார் 20 சதவிகிதம்பேர் அங்கு செல்கின்றனர். இதனைக் குறைப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் இம்மையத்திலேயே தற்போது ஏற்படுத்தியுள்ளோம்.

புற்றுநோயின் ஆரம்பத்தைப் பரிசோதித்து அறிவதிலிருந்து அதன் முழுமையான சிகிட்சை வரைக்குமான அனைத்துவித வசதிகளும் இம்மையத்திலேயே அமையப்பெற்றுள்ளன.

எந்த வயதிலுள்ளவர்களை இந்நோய் அதிகமாக தாக்குகிறது? எந்தக் கெட்டப்பழக்கமும் இன்றி சிலருக்குப் புற்றுநோய் வருகிறதே. காரணம் என்ன?

பொதுவாக அனைத்து வயதினருக்கும் இந்நோய் வந்தாலும் அதிகமாக 40-60 வயதுக்கு இடைப்பட்டவர்களிடமே மிக அதிக அளவில் இந்நோய் பாதிப்பினை உண்டாக்குகிறது. அதிலும் புகையிலை, புகைப்பிடித்தல் போன்றவற்றால் வரும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் வாய்ப் புற்றுநோய் குடிப்பழக்கத்தால் ஏற்படும் வயிற்றுப் புற்றுநோய் ஆண்களிடத்திலும் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் பெண்களிடத்திலும் அதிகமாக தாக்குகிறது. முக்கியமாக, புகைப்பிடித்தல், தவறான பழக்கவழக்கங்களால் ஏற்படும் புற்றுநோயே மிக அதிகம். இதுவன்றி பாரம்பரிய ஜீன் பிரச்சனைகளால் ஏற்படும் புற்றுநோய் மிகக் குறைவே.

எவ்வகையிலான கெட்டப்பழக்கமும் இன்றியும் புற்று நோய் ஏற்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயினைக் குறிப்பிடலாம். இதனை TRUE CANCER என்று கூறுவர். மிக அபூர்வமாக ஏற்படும் இந்தப் புற்றுநோய்க்கான காரணம் என்ன என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்துகின்றீர்களா? மக்களுக்கு நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

மருத்துவமனைக்கு வெளியே இதுவரையில் அது போன்று எந்த நிகழ்ச்சியும் நடத்தவில்லை. அதற்குப் போதுமான மனிதவளம் நமக்குக் குறைவு. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் நிலையில், நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே அதனை அறிந்து கொள்வதற்கும் இந்நோய் வராமல் காப்பதற்குமுரிய வழிமுறைகளைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட சமூக தன்னார்வ அமைப்புகளும் தனிநபர்களும் அதிகமதிகம் முன்வரவேண்டும். என்றாலே, நீங்கள் கேட்பது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும். எனினும் சிறு கையேடுகள், துண்டு அறிக்கைகள் மூலம் சில தன்னார்வர் தொண்டு அமைப்புகள் அவ்வபோது சிறுவகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அது அதிகரிக்கவேண்டும்.

புற்றுநோய் குறித்து மக்களுக்குக் கூறும் அறிவுரை ஒன்று தான். முன்னரே உங்கள் அருகிலுள்ள மருத்துவரை அணுகுங்கள். நோய் வந்து முற்றிய நிலையில் வருவதால் இழப்பு உங்களுக்குத் தான். பொதுவாக, புற்றுநோயின் ஆரம்பத்திலேயே 90 சதவீதம் நோயாளிகளால் அறிகுறிகளை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், அசட்டைக் காரணமாகவோ அல்லது தயக்கம் காரணமாகவோ மருத்துவரை அணுகாமல் காலம் தள்ளிவிடுகின்றனர். இது அவர்களுக்குத்தான் ஆபத்து.

தமிழக அரசைப் பொறுத்தவரை மிக ஆக்கப்பூர்வமான உதவிகளை ஏழை நோயாளிகளுக்குச் செய்து கொடுக்கிறது. அதனை அவர்கள் முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோயின் ஆரம்பத்திலேயே அருகிலுள்ள மருத்துவரிடம் காண்பித்து மருத்துவத்தை ஆரம்பித்து விட்டால், மிக எளிதில் பூரணமாக இதனைக் குணமாக்கிவிட இயலும்.
- நேர்காணல் : முனோ & வெண்ணிலா

No comments:

Post a Comment