Search This Blog

Tuesday, April 26, 2011

கவியரசர் மறைந்த போது காவியக் கவிஞர் வாலி அவர்கள் வரைந்த கவிதாஞ்சலி...

கண்ணதாசனே ! - என்
அன்பு நேசனே !

நீ தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு மூன்று தாரமிருப்பினும் - உன்
மூலாதாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள் உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால் பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !

நீ ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கை நழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில் உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச் சித்தர்களுக்கும்
நீ ஒருவனே உடம்பாக இருந்தாய் !

நீ பட்டணத்தில் வாழ்ந்த பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !

நீ தந்தையாக இருந்தும்
தாய் போல் தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும் உன்
படப் பாடல்கள் பதிவாகியிருக்கின்றன !

உன் மரணத்தால் ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

- கவிஞர் வாலி.

No comments:

Post a Comment