Search This Blog

Saturday, April 16, 2011

சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: ஓர் ஆணின் புலம்பல்!

பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!

பேரனின் குழந்தைக்குப்
பெயர் வைக்கும் விழாவைப்
பார்க்கும்
பேறு
உங்களுக்கு தான் வாய்த்திருக்கிறது!
எங்கே போனாலும்
லேடீஸ் பஸ்ட் என்கிறார்கள்...

ரேஷன் கடையைத்
தவிர
உங்களுக்கான
வரிசைகள் எல்லா இடங்களிலும்
குட்டையாகத் தான்
இருக்கின்றன..

நீங்கள் ஏறும் போது
பேருந்துகள்
அவசரமாக நகர்வதில்லை..

உங்களுக்கான
இருக்கைகள்
முன் பக்கத்திலேயே இருக்கின்றன
பின் சீட்டுப் பயணத்தின்
முதுகு வலிகள் உங்களுக்கு இல்லை..

வெளியூருக்குப்
போகும் போதோ
வேலைக்கு முதன் முதலில் போகும் போதோ
அப்பாவோ
அண்ணனோ
கணவனோ
கூட வருவார்கள்..

கூட்டம் நிறைந்த
மளிகைக் கடைக்குப் போனாலும்
'மேடம் நிக்கறாங்க பாரு
மொதல்ல கொடுத்து அனுப்பு"!

கப்பல்
கவிழ்ந்தாலும்
உங்களைத்தான் முதலில்
படகுகளில் ஏற்றுகிறார்கள்..

டைப் ரைட்டிங்கோ
கார் ட்ரைவிங்கோ
உங்களுக்கு ஒரு
சிநேகம் கலந்த மரியாதையுடன்
சொல்லித் தருவார்கள்..

பாரம்பரியமிக்க
கோவில்களில்
நுழையும் போது
மேல்சட்டை
துறக்க வேண்டிய
அவசியம் இல்லை..

நீங்கள் கைகாட்டும் நபரை
அடித்துப் போட
பொது ஜனமும்
மகளிர் காவல் நிலையங்களும்
தயாராக இருக்கின்றன..

அலுவலகம் கிளம்பும்
அவசரத்தில்
ரேசர்
கன்னத்தைக் கிழிக்கும்
அவஸ்தைகள் உங்களுக்கு இல்லை..

பெண்ணாகப்
பிறந்து விட்டோம் என்று
வெறுமனே
பொய்யாகப்
புலம்பாதீர்கள்!


சமுத்ரா

No comments:

Post a Comment