Search This Blog

Friday, January 29, 2021

டொமினிக் ஜீவா எனும் பேராளுமை

டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந்து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியானார்.

அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியிருந்தார்



"ஈழத்து இலக்கிய உலகின் எழுத்துப் போராளியாய் இறுதி மூச்சு வரை சமரசமில்லா முற்போக்கு முகம் கொண்ட மல்லிகை மன்னனாய் எல்லோராலும் கொண்டாடப் பட்ட மல்லிகை ஜீவா தன் வாழ்வுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்ற செய்தி துயரத்தை சுமந்து நிற்கிறது.
யாருக்கும் தலை வணங்கா எங்கும் தன் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்த சமத்துவ சகோதரன் அவர்.
1977ஆம் ஆண்டு யாழ் பல்கலைக் கழகத்தில் ஒரு புத்தகப் பையோடு சந்தித்த அதே ஜீவாவை நான் அதே கோலத்திலெயே கடைசியாகவும் சந்தித்தேன் தன்னிலை மாறா கொள்கையாளன் 
ஈழத்து இலக்கிய உலகம் இனி இவர் போல் ஒருவரை காண முடியுமா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே சரியான பதில்.ஓர்மம் மிக்க படைப்பாளி.
யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு முறைப்படி இலக்கிய கலாநிதி பட்டம் கொடுத்திருக்க வேண்டும் அப்படி இருக்க பேருக்கு ஏதோ ஒரு உப்புச் சப்பு இல்லாத பட்டத்தை கொடுக்கப்  பரிந்துரைத்த போது அதனை மிகத் துணிச்சலுடன் நிராகரித்து தன் மதிப்பை மேலும் உயர்த்திக் கொண்டு சரித்திரத்தில் இடம் பிடித்த சமூக நீதிக் குரலாய் ஒலித்த சோசலிச யதார்த்தவாதி ஜீவா.
ஜீவா எனும் பெயரை ஈழத்து நவீன தமிழ் இலக்கியத்திலிருந்து நீக்கிப் பார்த்தால் அது வறுமைப் பட்டுப் போகும் .
மல்லிகை அவர் நடமாடும் வரை நடமாடிய இலக்கியத் தொடர் அது ஒரு முற்போக்கு சுடர் அணையாத சுடர் வருங்காலம் முழுவதுக்குமான வரலாறாய் நம்முள்.
என்றும் வாழும் ஜீவா
என் செவ்வணக்கத்துடனான அஞ்சலிகள்" Balasingam Sugumar

No comments:

Post a Comment