Search This Blog

Monday, March 10, 2014

நான் மட்டுமா விபச்சாரி!

கலைமகளடா நான்!
பால்யத்தில் விற்றுவிட்டார்
பாலியலில் சிக்கிவிட்டேன்.

அருவருப்பை அங்கமெங்கும்
அணிந்த பின் தான்
ஆடைகளை அவிழ்க்கின்றேன்!

என் கண்களுக்கு என்றும்
நான் நிர்வாணம் ஆனதில்லை!

விரும்பியும் ஏற்கவில்லை
வெறுத்தாலும் எவரும் விடுவதில்லை!

குழந்தைகளைப்போல்
என் முத்தமும்
காமத்தில் சேர்ந்ததில்லை!

காதலித்து ஏமாற்றியதில்லை
கள்ளக்காதலும் இங்கில்லை
எங்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும்
கற்பழிப்பும் குறைந்ததில்லை.

மனிதாக வாழ்ந்துவிட ஆசைதான்
ஆறறிவு மிருகங்கள் விடுவதில்லை.

மாதமொருமுறை ஜீரணம் ஆகிவிடுவதால்
கருப்பையும் எங்களுக்கோர் இரண்டாம்
இரைப்பை தான்!

நான் குடும்பம் நடத்துவதே
சம்சாரிகளோடுதான்.
நான் மட்டுமா விபச்சாரி!

விலைமகள் இல்லையடா
ஞானிகளும் தோற்றுவிட்ட ஆத்மாவை
மேனியிலிருந்து பிரித்தெடுத்த
கலைமகளடா நான்!

சதைவிகிதமாய் பார்க்கப்படும்வரை
முப்பத்துமூன்று சதவிகிதமும் வெறும்
மூடநம்பிக்கை தான்!

No comments:

Post a Comment