Search This Blog

Tuesday, June 14, 2011

பழந்தமிழர் விழாக்கள்!

பழந்தமிழர் விழாக்கள்!
-முனைவர் சி. சேதுராமன்.
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய விழாக்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. அவற்றுள் சில சமயம் தொடர்பானவை. வேறு சில சமூகம் தொடர்பானவை. நகரங்கள் சில, ‘விழவு மேம்பட்ட பழவிரல் மூதூர்’ என்று பாராட்டப்பட்டுள்ளன. விழாக்களில் ஆடலும், பாடலும் இடம்பெற்றன. பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் விழாக்களில் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தனர்.
விழாக்கள்
மக்களின் வாழ்வில் சோர்வினைப் போக்கி இன்பமும் மலர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஊட்டுவன விழாக்கள். மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் முக்கிய நோக்கமாகும். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி மறுமலர்ச்சி ஆகியவற்றை அச்சமுதாயம் காலங்காலமாகப் போற்றிக் கொண்டாடும் விழாக்களின் வழியாக அறியலாம் சங்க காலத்தில் விழாக்கள் சிற்றூரிலும், பேரூரிலும் கொண்டாடப்பட்டதை இலக்கியங்கள் கூறுகின்றன.
விழா மரபுகள்
விழாக்களை வளர்பிறை மற்றும் மதி நிறைந்த நாட்களில் தொடங்கியதை அகநானூறு கூறகிறது (அகம்., பா.எ. , 141.) விழாவில் காணப்படும் செயல்முறைகளை ஆற்றுவோரை விழாவாற்றுவோர்; என்பர். வெறியாட்டில் வேலன் விழாவாற்றுவோனாகச் சுட்டப்படுகிறான். சங்ககாலத்தில் குயவர்கள் விழாக்களில் முக்கியப் பங்கு வகித்தனர்; என்பதை,
‘‘மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடி
புலிக்களார் கைப்பார் முது குயவன்
இடுபலி நுவலும் அகன்றலைமன்றத்து
விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்’’ (நற்றிணை, பா.எ. , 293)
என்று தெரிவிக்கிறது. இக்குயவர்கள் இன்றும் சிறுகோயில்களில் பூசாரிகளாகச் செயல்படும் நிலை உள்ளது. இதனைப் பண்டைய மரபின் தாக்கம் எனக் கருதலாம். விழாவை அறிவிப்பவராக குயவர் இருந்ததையும் நற்றிணை உணர்த்துகிறது.
கார்த்திகை விழா
சங்க காலத் தமிழர்கள் கொண்டாடிய சமய விழாக்களில் குறிப்பிடத்தகுந்தது கார்த்திகைத் திருவிழாவாகும். கார்த்திகை விண்மீனை, ‘அறுமீன்’ என்று நற்றிணைச் செய்யுள் ஒன்று குறிக்கின்றது. அஃது அறஞ்செய்யத்தக்க சிறப்புடையது. எனவே கார்த்திகைத் திங்களை ‘‘அறஞ்செய் திங்கள்’’ என்றும் நற்றிணை குறிப்பிடுகின்றது (நற்றிணை, பா.எ. , 185). கார்த்திகை விழாக்களின் போது வீடுகளும், தெருக்களும் ஒளிவிளக்குகளால் அழகுறுத்தப் பெற்றமையை,
‘‘மழைக்கால் நீங்கிய மாசறு விசும்பின்
குறுமுயல் மறுநிறம் கிளர் மதிநிறைந்து
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப்
பழவிறல் மூதூர்;ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர’’ (அகம். , பா.எ. , 141).
என்ற அகநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது.
இலவ மரத்தில் நெருக்கமாக மலர்ந்துள்ள பூக்கள் பெரு விழாவில் ஏற்றப்பட்ட விளக்குப் போல் தோன்றியதாக,
‘‘அருவி யான்ற உயர்;சிமை மருங்கில்
பெருவிழா விளக்கம் போலப் பலவுடன்
இலையில்மலர்;ந்த இலவமொடு
நிலையுயர்; பிறங்கல்மலையிறந்தோரே’’ (அகம். ,பா.எ. , 185)
என்ற செய்யுள் பேசுகின்றது.
திருவோணம்
திருமாலோடு தொடர்புடைய விண்மீன் திருவோணமாகும். இந்நாளில் கொண்டாடிய விழா ஓண விழாவாகும். இதனை,
‘‘கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்’’ (மதுரைக். , 590-591-வது வரிகள்).
என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. இந்த நாளில் வீரர்கள் நீலக்கச்சையணிந்து விருந்துண்டு களித்தனர். இவ்விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது. இவ்வோணம் பின்னாளில் கேரள மாநிலத்தில் வசிக்கும் மக்கள் மட்டும் கொண்டாடும் விழாவா இன்று மாறிவிட்டது நோக்கத்தக்கது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்கள் இதுபற்றிக் குறிப்பிடுகின்றனர். கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சைவம் புத்துயிர் பெற்றபோது ஆதிரை நாள் சிறப்பிடம் பெற்றது.
பொங்கல்
இது தைத்திங்களில் கொண்டாடும் விழாவாகும். முதற்கண் அறுவடை விழாவாகத் தொடங்கி பின்னர் வளத்தைக் குறித்த விழாவாக மாறியது. ஆனால் பொங்கல் விழாவினைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை. தைத்திங்களில் நோன்பு நோற்பதுண்டு என்று மட்டும் அறிகிறோம். தைத்திங்களில் நோன்பு இயற்றுவார் அமர்ந்திருப்பது போல் குரங்குகள் மழையில் நனைந்து அமரந்திருப்பதாக,
‘‘வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்;
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்’’ (நற்றிணை, பா.எ., 22).
என்ற நற்றிணைச் செய்யுள் குறிப்பிடுகின்றது.
தை நீராட்டு
தைத் திங்களில் மகளிர் ஆறு, குளங்களில் நீராடுவது சில செய்யுட்களில் குறிப்பு காணப்படுகின்றது. பின்னால் இதனையே மார்கழி நீராட்டு என்றனர்.
‘‘தையில் நீராடிய தவந்தலைப் படுவளோ’’ (கலித்தொகை, பா.எ., 13).
மகளிர் கூட்டமாக நீராடுவர் என்பதனை,
‘‘நறுவீ ஐம்பால் மகளிர்; ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணும் நின்பரத்தை மார்பே’’ (ஐங்குறுநூறு, பா.எ., 84.)
‘‘தைஇத்திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்’’ (நற்றிணை, பா.எ., 80).
என்னும் குறிப்புகளால் அறியலாம். தமக்கு வாய்க்கும் கணவன்மார் நற்பண்புடையவராதல் வேண்டும் என வேண்டிப் பெண்கள் எடுத்த இந்நோன்பு பிற்காலத்தில் சமயத் தொடர்பு பெற்றதை ஆண்டாள், மாணிக்கவாசகர் பாடல்களால் அறிகின்றோம். அம்பாவாடல் என்று பரிபாடல் இதனைக் குறிப்பிடும்.
இளவேனில் விழா
இளவேனில் காலம் காமவேளுக்குரியதாகக் கொள்ளப்படும். வில்லவன் விழாவென்பது காமனை வேண்டிச் செய்யும் விழாவாகும். தலைவி ஊரில் காமவேள் விழா நடப்பதைக் கண்டால் கலங்குவாள் எனக் கருதித் தலைவன் திண்டேரேறி வந்தாகத் தோழி குறிப்பிடுகின்றாள். இதனை,
‘‘காமவேள் விழாவயின் கலங்குவள் பெரிதென
ஏமுறு கடுந்திண்டேர் கடவி
நாம் அமர் காதலர் துணைதந்தார் விரைந்தே’’ (கலித்தொகை, பா.எ., 27).
எனக் கலித்தொகை குறிப்பிகின்றது.
காமவேள் விழாவின்போது காதலர்கள் களித்து விளையாடுவர்.
‘‘மல்கிய குருத்தியுள் மகிழ்துணைப் புணர்ந்தவர்;
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ’’                  (கலித்தொகை, பா.எ., 35).
காமவேள் விழாவின்போது கணவனைப் பிரிந்த மகளிர் வருந்துவர். சில ஆடவர்கள் பரத்தையருடன் கூடியாடுவர்.
‘‘உறலியாம் ஒளிவாட உயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யாவரோடு விளையாடுவான் மன்றே’’ (கலித்தொகை, பா.எ., 30).
இந்திர விழா
இந்திரனைப் பற்றிய சில குறிப்புகளே சங்கச் செய்யுட்களில் கிடைக்கின்றன. வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள் முரசம் முழங்குதலைப் புறநானூறு குறிப்பிடுகின்றது (புறம்., பா.எ., 141). ‘இந்திரவிழவிற் பூவின் அன்ன’ என்று உவமையாகப் பயன்படும் அளவுக்கு இந்திர விழா சிறப்புற்றிருந்தது (ஐங்குநுறூறு, பா.எ., 62). சிலம்பு, மணிமேகலை காலத்தில் இந்திரவிழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக் கொடியேற்றப்பட்டது. பல தெய்வங்கட்கும் பூசையிடப்பட்டது. இசையும், கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. நகரம் முழுவதும் அணி செய்யப்பட்டதை மணிமேகலை விழாவறைகாதை தெளிவாக்குகிறது.
அறிஞர்கள் குழுமியிருந்து பட்டிமண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலாமும் செய்யாது ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். தூங்கெயிலெறிந்த தொடிதோட்செம்பியன் இதனைத் தொடங்கினான் என்று அறிகின்றோம். இவ்விழா புகாரோடு தொடர்புடையதாக விருந்தாலும் மதுரையிலும் கொண்டாடப்பட்டதாகச் சின்னமனூர்ச் செப்பேட்டாலறிகின்றோம்.
நீர் விழா
பரிபாடலின் வழியே வைகையில் வெள்ளம் வந்த போது மக்கள் நீராடி மகிழ்ந்ததை அறிகின்றோம் (பரி., 16-வது பாடல், 11-15-வது வரிகள்). மலர்களும் பொன்மீன்களும் கொண்டு வைகையாற்றுக்கு மக்கள் நீராடச் சென்றனர். முற்காலத்தில் மன்னர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்; என்பதற்கு அகநானூற்றுப் பாடல்கள் சான்றாக அமைகின்றன (அகம்., பா.எ., 222, 376). சிலப்பதிகாரத்து ஆற்றுவரிப் பாடல்கள் வெள்ளத்தைக் கண்டு மக்கள் மகிழ்ந்து கொண்டாடியதைத தெரிவிக்கும்.
திருப்பரங்குன்றத்து விழா
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டதை மணவிழாவாகக் கொண்டாடினர். (பரி., 19-வது பாடல்). பாண்டிய மன்னன் தன் பரிவரத்தோடு இவ்விழாவிற் கலந்து கொண்டான்.
திருப்தியில் விழா
நெடியோன் குன்றாகிய திருவேங்கடம், ‘‘விழவுடை விழுச்சீர் வேங்கட’’மெனப் பாராட்டப்பட்டது (அகம்., பா.எ., 61.)  திருமாலின் நின்ற கோலம் இப்பதியின் சிறப்பு ஆகும்.
பிறந்தநாள் விழா
சங்க காலத்தில் மன்னர்கள் தம் பிறந்த நாளைக் கொண்டாடியதை உணர முடிகிறது. தொல்காப்பியர்; இதனை,
‘‘பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்’’
(தொல்.பொருளதிகாரம், நூற்பா எண், 88: 8-வது வரி).
என்று குறிக்கிறார்;. நன்னனின் பிறந்தநாளை அவனது மக்கள் கொண்டாடியதை மதுரைக்காஞ்சி குறிக்கிறது.

No comments:

Post a Comment