ஆகமங்கள் என்பது என்ன? இந்துமதம்கேள்விகள் 1000 !!! வளையவும்மாட்டேன், மாறவும்மாட்டேன்...!
ஆகமங்கள் என்பது என்ன? இந்து மதம் கேள்விகள் 1000 !!!
வளையவும் மாட்டேன் மாறவும் மாட்டேன்...!
ஆகமங்கள் என்ற வார்த்தையை மத நூல்களும் மத பெரியவர்களும் பல முறை பயன் படுத்துகிறார்கள். நம்மில் பலருக்கு அதன் அர்த்தம் விளங்குவது இல்லை. மத கொள்கைகளை எளிமையாக விளக்குவதற்கும், வழிபாட்டு முறைகளை விரிவாக சொல்வதற்கும் எழுந்த நூல்களே ஆகமங்களாகும். இந்து மதத்தில் உள்ள வைஷ்ணவம், சாக்தம், சைவம் ஆகிய முப்பெரும் பிரிவுகளுக்கு ஆகமங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.
சிவனை வழிபடுவோர்கள் இருபத்தியெட்டு ஆகமங்களை ஏற்று கொள்கிறார்கள். அவைகளில் காமிகாகமம் என்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டு சைவ முறையாகிய சைவ சித்தாந்தமும், பிரத்திய பிஞ்சா முறையாகிய காஷ்மீர சைவமும் வேதங்களுக்கு கொடுக்கும் மரியாதையை ஆகமங்களுக்கும் கொடுக்கின்றன. சக்தி வழிபாட்டு முறைமைக்கு தந்திரங்கள் என்று சொல்லபடும் இருபத்தியேழு ஆகமங்கள் உள்ளன. சாக்த மதத்தினர் அன்னை பராசக்தியை உலக தாயாக கருதுகிறார்கள். அத்தோடு அறிவுக்கு எட்டாத புலனுக்கு அகப்படாத சில வழிமுறைகளையும் போதிக்கிறார்கள். அந்த வழிமுறைகள் மந்திரம் சார்ந்ததாகவும், ஞானம் முக்தி, போன்றவற்றை தருவதாகவும் உள்ளன. இன்று சக்தி வழிபாடானது சிவ வழிபாட்டோடு கலந்து விட்டதனால் தந்திர ஆகமங்களுக்கும், சைவ ஆகமங்களுக்கும் தனித்தனியான வேற்றுமைகளை யாரும் கூறுவதில்லை.
வைஷ்ணவர்கள் பாஞ்ச ராத்திர ஆகமங்களை பிரமாணா நூல்களாக கொண்டிருக்கிறார்கள். இந்த ஆகமங்களை முழுமுதற் கடவுளான நாரயணனே நேரில் அருளியதாக நம்புகிறார்கள். பொதுவாக ஆகமங்கள் சமய கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் சொல்வதோடு அல்லாமல் ஆலய நிர்மானம், சமய சின்னங்கள், பக்தனின் லட்சணம் போன்றவைகளையும் விரிவாக பேசுகிறது. இன்றைய காலக் கட்டத்தில் ஆகம கொள்கைகள் மாற்றம் இல்லாமல் கடைபிடிக்கப் படுகிறது என சொல்லிவிட முடியாது. காலந்தோறும் பல மாறுதல்கள் ஆகம கருத்துக்களில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்.
நமது இந்து மதம் ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அழிவு சக்திகள் ஆக்ரோஷோத்தோடு மோதினாலும் நிலையாக நிலைத்து நிற்ப்பதற்கு அதன் மாறும் தன்மையே முக்கிய காரணம் ஆகும். வளைய மாட்டேன் மாற மாட்டேன் என்று புயல் காற்றோடு மோதி நின்றால் மரம் எப்படி ஒடிந்து விழுந்து விடுமோ அப்படியே நம் மதமும் என்றோ காணாமல் போயிருக்கும். அப்படி எதுவும் நிகழாமல் தாங்கி பிடித்து நிலை நிறுத்த ஆகமங்கள் எப்போதுமே துணை நிற்கிறது.
No comments:
Post a Comment