Search This Blog

Wednesday, April 15, 2020

இரவுப் பாடகன் P .B .ஸ்ரீநிவாஸ்

P .B .ஸ்ரீநிவாஸ் 1947இல் மிஸ்.மாலினியில் தன் முதல் பாடலைப் பாடிய போது நான் பிறந்திருக்கவில்லை. சிறு வயதில் அவர் என் விருப்பத்துக்குரிய பாடகருமல்ல.
அந்தப் பருவத்தில் என் ஆர்வம் வீர, தீர,சாகஸப் படங்களில் மையம் கொண்டிருந்தது. குறிப்பிட்ட வயது வரை எம்.ஜி.ஆர்.தான் என் ஆதர்ஸ நாயகன். டி .எம் .சௌந்தரராஜனை மிஞ்சிய பாடகன் எவருமில்லை .1961 இல் நான் பார்த்த முதலாவது எம்.ஜி.ஆர். படமான 'அரசிளங்குமரி'யில் வரும் 'சின்னப் பயலே,சின்னப் பயலே சேதி கேளடா !' என்ற பாடல் மூலம் மனதில் அழுத்தமாகப் பதிந்து விட்டவர் அவர்.
'நான் ஆணையிட்டால்' என்று சவுக்கை சொடுக்கிய போதும், 'அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்' எனக் கப்பல் கம்பத்தில் தொங்கிய படி கை வீசிய போதும் கதாநாயகனையும் பாடகனையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. 'குரல் வழி நடிகனான ' சொந்தரராஜனின் உரத்த தொனியும், தெளிவான உச்சரிப்பும் ,பாவமும் உற்சாகத்தைத் தூண்டிய காலம் அது. மீசை அரும்பி ,எம்.ஜி.ஆரின். 'குகை'யிலிருந்து நான் வெளியேறத் தொடங்கிய காலத்தில் இரண்டு குரல்களைப் 'புற்கள் மறைத்த பூக்கள் ' போல் கண்டு கொண்டேன் .
இனிமையும்,குளிர்மையும்,மென்மையும் ,குழைவும் கொண்ட ஏ.எம்.ராஜா, P .B .ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் அந்த இரண்டு குரல்களும் ஒரு காலத்து என் ஆதர்ஸ நாயகன் எம்.ஜி.ஆருக்கு அவ்வளவு பொருந்தி வராதவை . நடிப்பில் உரத்த தொனியை வெளிப் படுத்திக் கொண்டிருந்த சிவாஜிக்கும் கூட இந்த இருவரும் சரிவரப் பொருந்தவில்லை.
இந்த இருவருடைய குரல்களும் பெரும்பாலும் ஜெமினிக்கு அளவெடுத்துத் தைத்த சட்டைகள் போன்ற பிரமையைத் தந்தன .
இரைச்சல் என்பதைத் தன்னியல்பாகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் மிகையுணர்ச்சி நடிப்பை மட்டுப் படுத்தி ,தணிவான நடிப்பை வெளிப்படுத்திய ஜெமினி கணேசனும் , மென்மையான குரல்களைக் கொண்ட ஏ.எம்.ராஜாவும் , P .B .ஸ்ரீநிவாசும் ஒரு கோட்டில் இணைந்து கொண்டமையில் வியப்பில்லை. ரசிகர்களும் அதை வரவேற்றார்கள் .
டி.ஏ.மோதி (காணா இன்பம் கனிந்ததேனோ - சபாஷ் மீனா / 'இதை யாரோடும் எவரோடும் நீ சொல்லக் கூடாது -அம்மா / 'ஓ மோஹனச் செந்தாமரை-மகுடம் காத்த மங்கை' ) ,ரகுநாத் பாணிக்ரஹி ('நான் தேடும்போது நீ ஓடலாமோ'-அவள் யார் ) ,புருஷோத்தமன் (தென்றலே நீ செல்வாய் -மந்திரவாதி ) போன்றே பி.பி.ஶ்ரீனிவாஸுடையதும் மிகவும் மிருதுவான குரல் . ரசிகனை அவர் பட்டுப் பாதையின் வழியாக அழைத்துச் செல்கிறார். ‘டிங்கிரி டிங்காலே’, ‘அடி என்னடி ராக்கம்மா ‘ போன்ற உரத்த துள்ளல்களை அவரிடம் எதிர் பார்க்க முடியாது . ஆனால் அவரிடமிருந்து அபூர்வமாக வெளிப்பட்ட ‘பதுமைதானா’ , ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ ,’நல்லவன் எனக்கு நானே நல்லவன் ‘ போன்ற உற்சாகப் பாடல்களிலும் நிதானம் கெடாத ஓர் அழகிருக்கும். அவருடைய சோகப் பாடல்களும் மாரிலடித்துக் கொண்டு எழும் ஒப்பாரி ரகங்கள் அல்ல. ரசிகனின் மனதில் மெல்லெனப் பரவும் மௌனமான சோகம் அது. அந்த நுட்பத்தை அறிய ‘நிலவே என்னிடம் நெருங்காதே ‘ ,‘உடலுக்கு உயிர் காவல்’ , ‘மயக்கமா கலக்கமா’ ,’நெஞ்சம் மறப்பதில்லை ‘, போன்ற பாடல்களைக் கேட்க வேண்டும்.
P .B .ஸ்ரீநிவாஸ் அவர்கள் பல வகைப் பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் என் கணிப்பில் அவர் தன் குரலில் காதலைக் கசிய விட்ட ஓர் 'இரவுப் பாடகர்'. காதல்தான் அவருடைய பெரும் பாலான பாடல்களின் மையம். சோகம் ,ஆற்றாமை, தன்னம்பிக்கை , உயிர்த்தெழல் என்ற கிளை நதிகள் அங்கிருந்து ஊற்றெடுத்துத்தான் அவருடைய பாடல்களில் பரவிச் செல்லுகின்றன.
மென்மையான சோகத்தைப் பரவ விடும் அவருடைய பாடல்கள் பலவற்றைக் கேட்ட படி நான் தூங்கிய நாட்கள் இருக்கின்றன.
ஊரடங்கிய இந்த நாட்களிலும் அவர்தான் இரவென்ற ஆற்றைக் கடக்க வைக்கும் படகோட்டி. அவர் பாட ஆரம்பித்ததும் நான் ஆகாயத்தை அண்ணாந்து பார்க்க ஆரம்பிக்கிறேன் . மேகங்களுக்குள் ஒளிந்த நிலவை அவர் மீட்டெடுக்கிறார் . நட்சத்திரங்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன .இரவு ஆற்றில் படகு நகர்ந்து கொண்டிருக்கிறது . .
(எனக்குப் பிடித்த அவருடைய பாடல்கள் சிலவற்றைக் கீழே தருகின்றேன்.)
1958- நெஞ்சம் அலை மோதுதே (மணமாலை )
1959- மலரோடு விளையாடும் (தெய்வபலம்)
1959- பதுமைதானா (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை)
1959- கனிந்த காதல் இன்பம் (அழகர் மலைக் கள்ளன்)
1959- அழகே...அமுதே – (ராஜா மலையசிம்மன்)
1960- பண்ணோடு பிறந்தது (விடிவெள்ளி)
1960- மாலையில் மலர் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- சிட்டுக் குருவி பாடுது (பாதை தெரியுது பார் )
1960- இன்ப எல்லை காணும் (இவன் அவனேதான்)
1960- கண்ணாலே பேசிக் (அடுத்த வீட்டுப் பெண் )
1960- தேடிடுதே (உத்தமி பெற்ற ரத்தினம்)
1960- அன்பு மனம் கனிந்த (ஆளுக்கொரு வீடு )
1960- ஏன் சிரித்தாய் ( பொன்னித் திருநாள் )
1960- நீயா நானா (மன்னாதி மன்னன்)
1961- என்றும் சொந்தமில்லை (புனர் ஜென்மம்)
1961- காற்று வெளியிடை (கப்பலோட்டிய தமிழன்)
1961- ஒரே கேள்வி – (பனித்திரை )
1961- என்னருகே நீ இருந்தால் (திருடாதே )
1961- காலங்களில் அவள் வசந்தம் (பாவமன்னிப்பு)
1961- பார்த்துப் பார்த்து நின்றதிலே- (மணப்பந்தல்)
1961- உடலுக்கு உயிர் காவல் (மணப்பந்தல் )
1981- யார் யார் யார் (பாசமலர்)
1962- சின்னச் சின்ன ரோஜா(அழகு நிலா )
1962- என்னைப் பார்த்தா (செங்கமலத் தீவு)
1962- ஒருத்தி ஒருவனை (சாரதா)
1962- அழகிய மிதிலை (அன்னை )
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம்)
1962- இந்த மன்றத்தில் (போலீஸ் காரன் மகள் )
1962- பொன்னென்பேன் (போலீஸ் காரன் மகள் )
1962- நிலவுக்கு என் மேல் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆண்டொன்று போனால் (போலீஸ் காரன் மகள் )
1962- ஆதி மனிதன் (பலே பாண்டியா )
1962- அத்திக்காய் காய் (பலே பாண்டியா
1962- அழகான மலரே (தென்றல் வீசும்)
1962- காற்று வந்தால் (காத்திருந்த கண்கள்)
1962- துள்ளித் திரிந்த (காத்திருந்த கண்கள் )
1962- வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
1962- கண் படுமே பிறர் (காத்திருந்த கண்கள்)
1962- கவலைகள் கிடக்கட்டும் (பந்த பாசம்)
1962- மாலையும் இரவும் (பாசம்)
1962- பால் வண்ணம் (பாசம்)
1962- மயக்கமா ,கலக்கமா (சுமைதாங்கி)
1962- மனிதன் என்பவன் (சுமைதாங்கி)
1962- எந்தன் பருவத்தின் கேள்விக்கு (சுமைதாங்கி)
1962- நினைப்பதெல்லாம் (நெஞ்சில் ஓர் ஆலயம் )
1962- ரோஜா மலரே (வீரத்திருமகன் )
1962- பாடாத பாட்டெல்லாம் ( வீரத்திருமகன் )
1962- பொன்னொன்று (படித்தால் மட்டும் போதுமா)
1962- பூஜைக்கு வந்த (பாத காணிக்கை]
1963- எந்த ஊர் என்றவளே (காட்டு ரோஜா)
1963- நினைப்பதற்கு - (நினைப்பதற்கு நேரமில்லை )
1963- அவள் பறந்து (பார் மகளே பார்)
1963- மதுரா நகரில் (பார் மகளே பார்)
1963- என்னைத் தொட்டு (பார் மகளே பார் )
1963- நெஞ்சம் மறப்பதில்லை (நெஞ்சம் மறப்பதில்லை)
1963- அழகுக்கும் மலருக்கும் (நெஞ்சம் மறப்பதில்லை )
1963- பூ வரையும் பூங் கொடியே (இதயத்தில் நீ )
1963- யார் சிரித்தால் என்ன (இதயத்தில் நீ )
1964- நாளாம் நாளாம் (காதலிக்க நேரமில்லை )
1964- அனுபவம் புதுமை (காதலிக்க நேரமில்லை )
1964- போகப் போகத் தெரியும்- ( சர்வர் சுந்தரம் )
1964- கண்ணிரண்டும் மின்ன (பச்சை விளக்கு )
1964- நான் பாடிய பாடலை (வாழ்க்கை வாழ்வதற்கே )
1965- நீ போகுமிடமெல்லாம் (இதயக்கமலம்)
1965- தோள் கண்டேன். (இதயக்கமலம்)
1965- இரவு முடிந்து விடும் (அன்புக்கரங்கள்)
1965- செந்தூர் முருகன் கோயிலிலே (சாந்தி)
1965- சித்திரமே சொல்லடி – (வெண்ணிற ஆடை)
1965- காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- இளமைக் கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் )
1965- மையேந்தும் விழியாட [பூஜைக்கு வந்த மலர்]
1965- நேற்று வரை நீ யாரோ- [வாழ்க்கைப் படகு]
1965- சின்னச் சின்னக் கண்ணனுக்கு- (வாழ்க்கைப் படகு)
1965- பூத்திருக்கும் விழி எடுத்து(கல்யாண மண்டபம்)
1965- பார்த்தேன் சிரித்தேன் (வீர அபிமன்யூ )
1965- போவோம் புது உலகம் (வீர அபிமன்யூ )
1965- இரவின் மடியில் (சரசா B A )
1966- நீயே சொல்லு [குமரிப்பெண் ]
1966- காத்திருந்த கண்களே (மோட்டோர் சுந்தரம்பிள்ளை )
1966- மௌனமே பார்வையால் ( கொடிமலர் )
1966- நிலவே என்னிடம் [ராமு]
1967- கனவில் நடந்ததோ (அனுபவம் புதுமை )
1968- உன் அழகை கண்டு கொண்டால் (பூவும் பொட்டும்)
1968- தாமரைக் கன்னங்கள் ( எதிர் நீச்சல் )
1969- எங்கேயோ பார்த்த முகம் (நில் கவனி காதலி)
1969- ஆசை வைத்தால் அது மோசம்
1969- தேவி ஸ்ரீதேவி (தேவி)
-உமா வரதராஜன்


Tuesday, April 14, 2020

ஆசியாவின் முதலாவது வானொலி இலங்கை வானொலி


இலங்கை வானொலி சேவையை தொடங்கிய நாள் டிசம்பர் 16 ,1925
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட சேவை.



ஆரம்பம்
1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார்.
இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது.
இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931,மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா இன்னும் பலர்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை
1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார்.
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது.
பின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது.
இசைத் தட்டுகள்
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன.

சிற்றி எப்எம், தென்றல், ஆங்கில சேவை என்பன 2009ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் செய்திமதி தொழில்நுட்பத்தில் ஒலிபரப்பப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

Thanks Batti Express

டாக்டர்.ஆபிரகாம் கோவூரின் சவால்கள்:

ஏப்ரல் 10, 1898 -ஆபிரகாம் கோவூர் என அழைக்கப்பட்ட பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல பரிமாணங்கள் கொண்ட டாக்டர் கோவூர் பிறந்த நாள்.
ஆழ் மனதில் பதியப்படும் நம்பிக்கைகள் ஒரு மனிதனை அவற்றின் பால் கட்டிப் போட்டு ஆட்டிப் படைக்கவல்லவை!
பேய் பிசாசு பில்லி சூனியம் என சில மனிதர்கள் நம்பும் மூட நம்பிக்கைகளால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்க்கப்பட பலவீனமான சிந்தனைகளுக்கு மனிதன் அடிமையாகி மடமைச் சிந்தனை, சொல் செயல் வடிவம் கொள்கின்றான்!
எதை நம்புகிறோமோ அதுவாகவே நாம் மாற எம் ஆழ் மனதின் ஆற்றல்கள் காரணமாகின்றன!
இதையே அறிவியலில் வைத்தியர் கோவூர் நிரூபித்தார்.
பலரை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்டுக் காத்தார்!

இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார்.
இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார்.
கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் அவற்றின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கி இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.

தான் கடவுளின் அவதாரம், அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார்.
அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர்.
ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும். அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும்.
அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார்.
இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார்.
தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை.
டாக்டர்.கோவூரின் சவால்கள்:
முத்திரையிடப்பட்டுள்ள உறையின் உள்ளே ஒரு கரன்சி நோட்டின் வரிசை எண்ணைப் படித்துக் காட்டுக.
ஒரு கரன்சி நோட்டினைப் போன்று மற்றொரு கரன்சி நோட்டினை உண்டாக்கிக் காட்டுக.
கடவுள் துணையால் பாதத்தில் எவ்விதப் புண்ணோ, கொப்பளமோ ஏற்படாமல் அரை நிமிட நேரம் எரியும் தணலில் அசையாமல் நின்று காட்டுக.
நான் கேட்கும் ஒரு பொருளை ஒன்றுமில்லாமல் (சூனியத்தில்-வெற்றிடத்தில்) இருந்து உண்டாக்கிக் காட்டுக.
மனோபலத்தைப் பயன்படுத்தி ஒரு திடப் பொருளை அசைத்தோ, வளைத்தோ காட்டுக.
தொலைவில் உணர்தல் ஆற்றலைப் பயன்படுத்தி மற்றொருவன் நினைப்பதை வெளியில் எடுத்துக்கூறுக.
பிரார்த்தனை, ஆத்மபலம், புனித தீர்த்தம், விபூதி, ஆசீர் வாதம் இவை போன்றவற்றின் மூலம் துண்டிக்கப்பட்ட ஒர் உடல் உறுப்பை ஓர் அங்குல நீளம் வளரச் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஆகாயத்தில் எழுப்பிக் காட்டுதல் அல்லது மிதப்பது போல் செய்து காட்டுக.
யோக சக்தியால் ஐந்தே மணித்துளி ஐந்து நிமிடம் இதயத் துடிப்பை நிறுத்திக் காட்டுக.
நீரில் நடந்து காட்டுக.
உன் உடலை ஓர் இடத்தில் இருக்க வைத்துவிட்டு வேறு ஓர் இடத்தில் இவ்வுடலை உருவாக்கிக் காட்டுக.
யோக சக்தியால் அரை மணி நேரம் சுவாசிப்பதை நிறுத்திக் காட்டுக.
ஆழ்நிலை தியானத்தாலோ, வேறு எவ்வகை தியானத்தாலே
படைப்பாற்றல் மிக்க நுண்ணறிவையோ, பேரறிவையோ பெருக்கிக் காட்டுக.
நிழற்படம் பிடிப்பதற்காக ஓர் ஆவி அல்லது ஒர் பேயினை நேரில் தோன்றச் செய்க.
நிழற்படம் பிடிக்கும்போது படத்தாளில் பதிவாகாதவாறு உன்னை மறைத்துக் காட்டுக.
மறுபிறவியின் விளைவாலோ, நல்ல அல்லது கெட்ட ஆவிபிடித்து இருப்பதாலோ உனக்குத் தெரியாத மொழியினைப் பேசிக்காட்டுக.
பூட்டப்பட்ட அறையிலிருந்து தெய்வீக ஆற்றலால் வெளியே வந்து காட்டுக.
மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளைக் கண்டுபிடித்துக் காட்டுக.
வெறும் நீரை பெட்ரோலாகவோ, ஒயினாகவோ மாற்றிக் காட்டுக.
ஒயினை ரத்தமாக மாற்றிக் காட்டுக.
எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.
கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.
அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.

Saturday, April 11, 2020

சங்கடஹர சதுர்த்தி.


விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.
விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது மஹா சங்கடஹர சதுர்த்தி. இந்த விரதம் இருந்தால் ஆனந்தத்தை அடைவதோடு சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும்.

விரதம் இருக்கும் முறை

மஹா சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு.
ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனை தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலை சொல்லி வழிபடலாம். 

விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சனியின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

படித்துப் பாருங்கள் உருசிக்கும் சின்னஞ் சிறுகதை !

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”
தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.
“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”
”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”
காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.
“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.
“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”
அவர் சொல்லத் தயங்கினார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”
“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.
கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”
அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…
“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”
”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான்தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”
”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.
”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.
அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.
கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”
”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"
“இல்லப்பா… அவன் என் முன்னாலதான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”
விமலா குறுக்கிட்டாள்…
”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”
”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான்தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத்தானே இருந்தேன்.”
”ஒரு தடவை தொலைத்தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.
”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”
”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மாதானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”
கதிரேசன் குறுக்கிட்டான்.
“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”
“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”
”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.
“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”
”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”
”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”
பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.
”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”
ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”
இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.
சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.
கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.
”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.
” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான். தப்பில்ல..
ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி, குழந்தைகள்..
நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳
நான் வர்றேன் மாப்பிள்ளே,
வர்றேன் சம்பந்தி.
காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.
”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.
”என்னம்மா?”
“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”
இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...
கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்..
Thanks 
Abdul Majeed

Friday, April 10, 2020

The Source (LA SOURCE DES FEMMES) பிரஞ்ச், அரபி மொழிப்படம்

The Source (LA SOURCE DES FEMMES) என்ற பிரஞ்ச், அரபி மொழிப்படம். இது வட ஆப்பரிக்கா மத்தியகிழக்க நாடுகளின் எல்லையில் உள்ள ஒரு இஸ்லாமிய மலை கிராமம் பற்றிய படம். நாட்டுப்புற மலைவாழ் இஸ்லாமிய வாழ்க்கையை அருமையாக காட்சிப்படுத்திய படம். தண்ணீர் எடுக்க மலை உச்சிக்கு செல்லும் அக்கிராம பெண்கள், வரும் வழியிலேயே பல இடர்கள், அபார்ஷன்களுக்கு ஆளாகும் கொடுமைக்கு முடிவு கட்ட, ஆண்களை தண்ணீர் எடுக்க வைக்க ஒரு நூதனப் போராட்டத்தில் இறங்குவார்கள். அதற்கு பெயர் காதல்-போராட்டம். அதாவது பெண்கள் தங்கள் கணவனுடன் படுப்பதில்லை, ஒத்துழைப்பதில்லை என்பதே. அது உருவாக்கும் மதச்சிக்கல் எனத் துவங்கி, அரசு, அதன் புறக்கணிப்பு, மதங்களின் ஆண்மேலாண்மை, அடக்குமுறை என விரிகிறது திரைப்படம். முழுக்க பெண்ணோக்கு நிலையில் (பிமேல் கேஸில்) எடுக்கப்பட்ட படம். இடையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஊருக்குள் நழைந்து புர்கா போடச் சொல்வது என பல நுட்பமான இன்றைய காலத்தை பிரதிபலிக்கும் திரைப்படம். அவர்களை அவனது தாயே விரட்டுகிறார். இஸ்லாமிய புர்கா வழக்கம் எப்படி பெண் அடிமைகளை வேறுபடுத்த உருவாக்கப்பட்ட ஒரு உயர்வர்க்க நடைமுறை என்பதை சொல்கிறார். வழக்கமான இஸ்லாம் குறித்து உள்ள செல்வந்த பிம்பங்களை உடைக்கும் வறுமையில் வாடும் குடும்பங்கள் பற்றிய படம். கடைசியில் பெண்கள் தங்கள் காதல்-காம ஒத்துழையாமை வழியாக ஆண்களை வென்று ஊருக்குள் தண்ணீர் கொண்டு வந்துவிடுகிறார்கள். (தமிழ் டபப்பிங்கி் தமிழ் ராக்கர்ஸில் உள்ளது ஆர்வம் உள்ளவர்க்ள தரவிறக்கி பார்க்கலாம். தமிழ் வசகங்களில் சமசரங்கள் உள்ளதை ஆங்கில சப்டைட்டில் வழியாக நிறைவு செய்துகொள்ளலாம்.)
மதங்கள் என்பதை நாம் முதலாளிய காலகட்டத்திற்கு முந்தைய கற்பனையில் பார்க்க முடியாது. பார்க்ககூடாது. மதம் முழுக்க முழுக்க முதலாளிய உற்பத்திமுறையில் நவீன போதைப்பொருளாக மாறியுள்ளது என்பதையும், இனி பெண்கள்தான் மதங்களையும், இந்த அதிகாரத்தையும் எதிர்த்து போரிடுவதற்கான புரட்சிகர சக்திகளாக மாறியுள்ளனர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் மதவழிபாட்டில் நிறைவதற்கும், ஆண்கள் சரக்கு (டாஸ்மாக்) வழிபாட்டில் நிறைவதற்கும் உள்ள ஒற்றுமைகளை ஆய்வது அவசியம்.

Thanks Jamalan Tamil

டிரான்ஸ் (மலையாளம்) - விமர்சனம் - Trance (2020) Malayalam Movie Review



சிறு வயதிலேயே வாழ்வில் இக்கட்டான தருணங்களை சந்தித்து விட்டு அற்புதம் நிகழ காத்திருப்பவர் விஜு பிரசாத். இளம் வயதில் தாயை இழக்கும் விஜு தன் தம்பியுடன் கன்னியாக்குமரியின் கடலோர பகுதியில் வாழ்ந்து வருகிறார். ஓட்டலில் சர்வராக பணிபுரிந்து கொண்டே பகுதி நேர பேச்சாளராகவும் இருக்கிறார்.
எதிர்பாராமல் நடக்கும் ஒரு சோக சம்பவம் விஜுவின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் இருக்கும் விஜுவுக்கு சாலமன் மற்றும் ஐசக் என்ற இருவரின் மூலம் புது வாழ்க்கை கிடைக்கிறது. சாதாரண பேச்சாளராக இருந்த விஜு மிகப்பெரிய மதபோதகராக மாறுகிறார். தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணிக்கும் விஜுவின் வாழ்வில் திடீர் திருப்பம் ஒன்று நிகழ்கிறது. இதனால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார். அந்த திடீர் சறுக்கலிலிருந்து விஜுவால் மீள முடிந்ததா? என்பதே ‘ட்ரான்ஸ்’ படத்தின் மீதிக் கதை.

விமர்சனம் 1 ( Jamalan Tamil)
டிரான்ஸ் -மதங்களை பண்டமாக மாற்றும் கார்ப்பரேட்டுகள் பற்றிய கதை. அதில் குறிப்பாக கிறித்துவத்தின் சில பிரிவை யதார்த்தம் என்ற பாணியில் காட்டியுள்ளார்கள். மதம் என்பது 17-ஆம் நூற்றாண்டு முதலாளியத்திற்கு முந்தைய கருத்தாக்கம். இப்போ நம்மிடம் இருப்பது மதங்கள் அல்ல முலாளியத்திற்கு ஏற்ப உருமாறிய மானிட மயக்க போதை மருந்துகள். மார்க்ஸ் சொன்ன அபினி. கடவுள் சந்தை என்ற மீரா நந்தாவின் நூலையும், ஆனந்த் டெல்டும்டேவின் சாதியின் குடியரசு நூலையும் வாசித்தால் இந்தியாவில் தாராளவாத முதலாளியம் எப்படி இந்துமதத்தை சந்தைப் பண்டமாக மாற்றியது என்பதை புரிந்து கொள்ளலாம். கிறித்துவம் அமேரிக்காவில் உருவாக்கப்பட்ட Fundamentalls என்கிற கோடட்பாட்டோடு முற்றிலும் ஒரு முதலாளிய சேவை மடமாகி, உலகின் அனைத்து மதங்களும் அதை பின்பற்றி முதலாளிய சேவை மடங்களாக மாறிவிட்டது. பணமே கடவுள். பங்குசந்தையே கோவில், அதன் சந்தையே வழிபாட்டு தலம். இத்திரைப்படம் வழக்கமான வணிகப்படம் என்றாலும், கார்ப்பரெட் கடவுள் சந்தை விரிவாக்கத்தை எப்படி நிகழ்த்துகிறது என்பதை காட்சிப்படுத்துகிறது. ஆனாலும் இந்துத்துவ மதவாத சக்திகள் இதை பயன்படுத்தவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
விமர்சனம் 2 (Barathi Thambi)
.டிரான்ஸ்… மிகுந்த பாசாங்கும், போலித்தனமும் நிறைந்த சினிமா.

இப்படி சிலர் நிறுவனம் போல பாதிரிமார்களை உருவாக்கி பயிற்சி கொடுத்து பணம் பறிக்கிறார்கள் என்பதே அபத்தம். இந்து சாமியார்களை இப்படி யாராவது நிறுவனம் போல நடத்தி உருவாக்குகிறார்களா என்ன? அப்படி உருவாக்குவது தனிநபர்கள் நடத்தும் நிறுவனம் அல்ல; மதம் என்ற நிறுவனம். அதை கேள்விக்கு உட்படுத்தாமல், தனி நபர்களை வில்லன்களாக்கி, ஒரு அப்பாவியின் கையில் அரிவாளைக் கொடுத்து கழுத்தை அறுத்து முடித்துக்கொள்கிறது படம்.
ஏற்கெனவே கிறிஸ்டியானிட்டி மீது பொது மனதில் இருக்கும் எதிர்மறை சித்திரத்தின் மீது ஒரு காட்சித் தொகுப்பை அடுக்கியிருக்கிறார் இயக்குனர். அப்படி பொத்தாம் பொதுவாக கிறிஸ்தவத்தின் மீது விமர்சனம் செய்ய வேண்டுமாயின், அதன் நேர்மறை பகுதிகளையும் இணைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படம் இந்து கூட்டு மனசாட்சியின் சிறுபான்மை எதிர்ப்பு எண்ணவோட்டத்தை நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது. இதை எடுப்பதற்கு துணிச்சல் தேவை இல்லை. அய்யப்பன் கோயில் பின்னணியில் இப்படி ஒரு படம் எடுக்கத்தான் துணிச்சல் தேவை.
சில காலம் முன்பு நாகர்கோயிலை சேர்ந்த ஒரு பாதிரியார், கிறிஸ்டியானிட்டியை கிண்டல் செய்து பேசிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. சுய விமர்சனமாக அவர் பேசிய அம்சங்களில் ஓர் அடிப்படை நேர்மை இருந்தது. இந்தப் படத்தில் அது இல்லை. மாறாக, இது ‘இந்த கிறிஸ்டினே இப்படித்தான் எஜமான்’ என்ற கருந்து கொண்டோரை இலக்கு வைக்கிறது.
கிறிஸ்டியானிட்டியில் திளைத்த பாதிரிமார்கள் மக்களை அரசியல் ரீதியாக காயடிக்கிறார்கள். ஒக்கி புயல் சமயத்தில் நாகர்கோயில் பகுதி கிறிஸ்தவ கிராமங்களில் சில நாட்கள் சுற்றியபோது, பாதிரிமார்களின் செல்வாக்கை கண்டும், மக்கள் அவர்களின் சொல்லுக்கு எவ்வளவு தூரம் அஞ்சி கட்டுப்படுகிறார்கள் என்பது கண்டும் ஆச்சர்யம் அடைந்தேன். புயலில் சாகும் மக்களுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லையே என்று மக்கள் ஆத்திரப்படும் வேலையில் எல்லாம் ஒரு திருப்பலி கூட்டத்தை நடத்தி, மெழுகுவர்த்தி ஊர்வலம் விட்டு, அதை சாந்தப்படுத்தினார்கள்.
மற்றபடி காணிக்கை எல்லாம் அவர்கள் கேட்கவே வேண்டாம். அதற்குரிய மனநிலையை தயார் செய்துவிட்டால், மக்களாகவே அள்ளிக்கொண்டுபோய் கொட்டுவார்கள். சமூக நிலையில் வைத்துப் பார்த்தால், மக்களை பொதுத்தன்மை அற்றவர்களாக மாற்றுவதே கிறிஸ்தவ பாதிரிமார்கள் செய்யும் முதன்மை சமூகக் கேடு.
கத்தோலிக்கம், சி.எஸ்.ஐ., பெந்தகொஸ்தே என இருக்கும் பல்வேறு கிறிஸ்தவ மதங்களில் இந்தப் படம் பெரும்பான்மையாக பெந்தகொஸ்தேவை குறிவைக்கிறது. சில இடங்களில் ரோமன் கத்தோலிக் அடையாளங்களும் குழப்பமாக கையாளப்பட்டுள்ளன. பொதுவில் இதைப் பார்க்கும் ஒரு கிறிஸ்தவர் அவர் சி.எஸ்.ஐ.-ஆக இருந்தால், ‘நம்மளை சொல்லலை.. பெந்தகொஸ்தே காரங்களைதான் சொல்லியிருக்காங்க’ என்று போய்விடுவார். பெந்தகொஸ்தே குரூப்போ, சினிமாவே பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும் ‘இந்த கெட்ட ஆவிகளை ஏசு பார்த்துக்குவார்’ என்று போய்விடுவார்கள்.
இதே படத்தை ஒரு ஆர்.சி. பேக்ரவுண்டில், அல்லது சி.எஸ்.ஐ. பேக்ரவுண்டில் எடுத்திருந்தால் இவ்வளவு அமைதியுடன் இப்படம் எதிர்கொள்ளப் பட்டிருக்காது. பெந்தகொஸ்தே என்பது கிறிஸ்டியானிட்டியிலேயே ஒரு கோமாளி கும்பல் என்பதுடன், இதர கிறிஸ்தவர்களே அவர்களை ஏளனத்துடன் பார்க்கிறார்கள். பலவீனமான டார்கெட். ஏற்கெனவே ஊரில் லூஸாக சுத்தும் ஒருவனை திரும்பவும் ஒருமுறை லூஸு என்று சொல்வதற்கு பெரிய துணிச்சல் எல்லாம் தேவை இல்லை.
அப்புறம், நாயகன் மேடையில் பிரசங்கம் செய்வதற்கு அவருக்கு போதை மாத்திரை எல்லாம் தருகிறார்கள். இங்கு போதை என்பது மதம்தான். அதை சொல்வதற்கு பதிலாக, மதத்தில் இருந்து மாத்திரைக்குத் தாவுகிறார் இயக்குனர்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழாவில் அதன் தயாரிப்பாளரோ யாரோ, ஏதோ கிறிஸ்தவ வார்த்தை ஒன்றை உச்சரித்தார் என்பதற்காக அவரை கலாய்த்தார்கள். தமிழ் சினிமா பூஜையில் இருந்து ரிலீஸ் வரைக்கும் அனைத்தும் இந்து மத பூஜை வழிபாட்டின்படிதான் நடக்கிறது. நடிகர், இயக்குனர் என முக்கியமான கலைஞர்கள் இதர மதத்தினராக இருந்தாலும் இந்து மத பூஜை செய்துதான் தொடங்கப்படுகிறது. அது நம் கண்களை உறுத்தாமல் ஒரே ஒருமுறை ஒருவர் கிறிஸ்துவ வார்த்தை ஒன்றை சொல்லிவிட்டார் என்று அவரை கலாய்க்கிறோம் என்றால், அதே மனதுதான் இப்போது டிரான்ஸ் படத்தையும் கொண்டாட வைக்கிறது.
டிரான்ஸ் படம் ஆபத்தானது இல்லை. ஆனால், அது பார்வையாளர்களுடன் வினையாற்றும்போது, ஏற்கெனவே அவர்களின் மனதில் இருக்கும் சிறுபான்மை எதிர்ப்புணர்வுடன் வினைபுரிந்து ஆபத்தானதாக மாற்றம் கொள்கிறது.



நாகபூஷணியம்மை

செம்பதும வல்லியும் வெண்கமல நங்கையும்
சேவித் திறைஞ்சி நிற்ப
அம்பொனுல கங்களின் உம்பர்மற் றோரெலாம்
ஆவல்கொண் டேத்தி சைப்ப
நம்பிணிகள் தீர்க்கமணி பல்லவத் தேவதந்த
நாகபூ ஷணி யம்மையை
நம்பிமிகு நாண்மலர் தூவிச் சரண்புகின்
நாடுவினை ஓடி விடுமே..

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு Audit Service Commission


அரசியலமைப்பின் XVII ஆம் அமைப்பின் பிரகாரம் 153 A(1) இன் பிரகாரம் உருவாக்கப்பட்ட கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 153 A(1) இன் பிரகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவர்களினாலும் அரசியலமைப்பு சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்படும் கீழ் குறிப்பிடப்படும் அங்கத்தினரை உள்ளடக்கியதாக ஆணைக்குழு அமையப்பெற்றுள்ளது.
பிரதி கணக்காய்வாளர் அல்லது அதற்கு மேல் பதவி வகுக்கும் கணக்காய்வு திணைக்களத்தின் ஓய்வு பெற்ற இரு உத்தியோகத்தர்கள்
இலங்கை உயர்நீதி மன்றத்தின் அல்லது மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற இரண்டு நீதிபதிகள்
இலங்கை நிருவாக சேவையில் ஓய்வு பெற்ற முதலாம் தர உத்தியோகத்தர் ஒருவர்
அரசியலமைப்பின் 153H பிரிவிற்கமைய கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு வருடத்திற்கொருமுறை பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் கடமைகளும், பொறுப்புகளும்
அரசியலமைப்பின் 153 C(1)இன் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை அரச கணக்காய்வு சேவைக்கு உறுப்பினர்களை நியமித்தல், பதவியுயர்வு, இடமாற்றம், ஒழுக்க நிருவாகம் மற்றும் பணி நீக்கம் சம்பந்தமான பொறுப்பு கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவிற்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக 153(A)இன்(2) (A)வின் ஏற்பாடுகளுக்கமைய அமைச்சரவையினால் தீர்மானிக்கப்படும் கொள்கைகளுக்கு அமைய இலங்கை அரச கணக்காய்வு சேவைக்குறிய உறுப்பினர்களை சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான முறைமை, நியமனம், இடமாற்றம்,பதவியுயர்வு, ஒழுக்க விதி,மற்றும் அங்கத்தவர்களை பணி நீக்கம் தொடர்பிலான சட்ட திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழு வசம் காணப்படுகிறது .
இன்னும் சட்டத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கணக்காய்வு காரியாலயத்தின் வருடாந்த கணிப்பு தயாரித்தல் மற்றும் சட்டத்தினால் அமுல் செய்யப்படும் வேறு கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
Thanks, Ziyarathul Feros

தேசிய பொலிஸ் ஆணைக்குழு,


19 ஆவது திருத்தத்தின் மூலம் எமக்கு வழங்கப்பட்ட அதிகாரம்
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,


– பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமித்தல், பதவி உயர்வு வழங்கல், இடமாற்றம் செய்தல், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பதவி நீக்கம் செய்தல்,
– பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் மற்றும் பொலிஸ் சேவைக்கும் எதிராக முன்வைக்கப்படும் பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பொறுப்பேற்று அவற்றினை விசாரணை செய்து சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள சலுகைகளை வழங்குதல் மற்றும்,
– பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் பதவியுயர்வு வழங்கும் மற்றும் இடமாற்றம் செய்யும் நடைமுறைகளைத் தயாரித்தல், பொலிஸ் சேவையின் வினைத்திறன் மற்றும் சுயாதீன தன்மை என்பவற்றினை விருத்தி செய்தல் மற்றும் ஒழுக்க விழுமியங்களுக்குரிய கட்டமைப்புக்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் என்பவற்றினை நடைமுறைப்படுத்தல் என்பன மேற்கொள்ளப்படும்.​The National Police Commission

பொதுவான அழைப்புக்கள்
(+94) 11 2166500
(+94) 11 2166555
info@npc.gov.lk
தேசிய பொலிஸ் ஆணைக்குழு,
இல. 09 கட்டிடம்,
BMICH,
பௌத்தாலோக்க மாவத்தை,
கொழும்பு 07.

Statutory Powers and Functions of the Commission
Powers and functions of the Commission are enumerated in Article 155 of the Constitution.
The mandate was given by the 19th Amendment
The National Police Commission,

Appoint, promote, transfer, disciplinary control and dismiss police officers, in consultation with Inspector -General of Police;
Entertain and investigate public complaints against police officers and the Police Services and provide redress provided by law; and,
Formulate schemes of recruitment, promotion & transfer for police officers, improve efficiency and independence of the Police Service; and implement codes of conduct and disciplinary procedure.
Thanks, Ziyarathul Feros

What's the difference between a bacteria and a virus?

Both bacteria and viruses are so small that they can only be seen through a microscope, and both have the ability to cause infection, but that’s where the similarities end.

Bacteria

Bacteria are one-celled organisms that can be found naturally throughout our bodies and in our environment. Most are harmless and do not cause infection. Bacteria in our bodies help us to digest food, protect us against other bacteria or microbes, and provide nutrients for our body. Seen under a microscope they look like rods, balls, or spirals, and they can multiply quickly under the right conditions. Less than one per cent of bacteria actually make us sick. Infections caused by bacteria include strep throat, tuberculosis, and urinary tract infections (UTI).
Antibiotics are available to treat most bacterial infections; however, it is often best to let your body’s own immune system fight them if it is able to.

Viruses

Viruses on the other hand, cannot live without a host, or another living creature to help them multiply. Viruses are smaller than bacteria and they attach themselves to another living cell and use that cells' genetic material to reproduce themselves. Most viruses cause disease. Examples of diseases caused by viruses include the common cold, herpes, shingles, measles, chickenpox, COVID-19 and AIDS.
Antibiotics will not treat a viral infection. Viral infections require either vaccinations to prevent them in the first place or antiviral drugs to inhibit their development.


Viruses are tinier than bacteria. In fact, the largest virus is smaller than the smallest bacterium. All viruses have is a protein coat and a core of genetic material, either RNA or DNA. Unlike bacteria, viruses can't survive without a host. They can only reproduce by attaching themselves to cells. In most cases, they reprogram the cells to make new viruses until the cells burst and die. In other cases, they turn normal cells into malignant or cancerous cells.
Also unlike bacteria, most viruses do cause disease, and they're quite specific about the cells they attack. For example, certain viruses attack cells in the liver, respiratory system, or blood. In some cases, viruses target bacteria.