Search This Blog

Sunday, July 23, 2017

கமலஹாசன்தன் வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பகிர்ந்துகொண்ட பேட்டி

பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடனுக்கு கமலஹாசன் மிக நீண்ட பேட்டி ஒன்றை அளித்தார். தன் வாழ்க்கையை பட்டவர்த்தனமாக பகிர்ந்துகொண்ட அந்தப் பேட்டியிலிருந்து சில கேள்வி பதில்கள்...
“பொதுவாகவே நீங்க ரொம்ப கால்குலேட்டிவ், எதையும் குள்ளநரித் தனத்தோட செய்யற Opportunist-ன்னு சினிமா ஃபீல்டிலே ஒரு பெயர் உண்டே...?”
“அப்படிப் பார்த்தால் யார் சந்தர்ப்பவாதி இல்லை? பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நான், நீங்கள்... யார்தான் ஒவ்வொரு விதத்தில் சந்தர்ப்பவாதி இல்லை? எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி அடைய, பிரச்னைகளைச் சமாளிக்க யோசனை செய்கிறார்கள்... திட்டம் போடுகிறார்கள்... நான் சற்று அதிகமாக யோசிப்பேன்... திட்டமிடுவேன்... சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பேன்... அது குள்ளநரித்தனமா? எனக்குக் குள்ளநரித்தனமிருந்தா, 1986-ல் பணச்சிக்கல் வந்திருக்காது. இன்னிக்கும்கூட வருமானம் தரக்கூடிய சொத்துக்களோ, வருமானமோ எனக்குக் கிடையாது. வீடு கூட இப்பதான் கட்டி முடிச்சேன். என் பர்சனல் லைஃப்ல எனக்குச் சிக்கல் வந்தப்ப எனக்கு நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னே தெரியலை. In Fact ஒருத்தர்கிட்ட நான் போன் பண்ணியே கேட்டேன். ‘ப்ளீஸ்... நீங்க எனக்கு ஃப்ரெண்டா, எதிரியான்னு சொல்லிடுங்க. நண்பனா இருந்தா மன்னிச்சுடறேன். எதிரியா இருந்தா என்னை நான் பாதுகாத்துப்பேன்’னு வெளிப்படையாவே கேட்டேன்!”
“உங்க ஆரம்ப நாட்கள்ல, உங்களுக்கு ஒரு ‘ப்ளே பாய்’ இமேஜ் இருந்தது. உங்களுடைய பேட்டிகளும் பகிரங்கமா இருக்கும். இதெல்லாம் திட்டமிட்டு நீங்களே ஏற்படுத்திக்கிட்ட 'இமேஜ்'தானே?”
“அதைக்கூட 'திட்டமிட்டு'ன்னு சொல்ல மாட்டேன். ஒருவித காம்ப்ளெக்ஸ்ல பண்ணினதுன்னுகூடச் சொல்லலாம். அப்ப நான் பரதநாட்டியம் கத்துக்கிட்டவன். என்னுடைய நடன அரங்கேற்றம் ஆர்.ஆர். சபாவில நடந்தது. விழாவுக்கு டி.கே. சண்முகம் வந்திருந்தார். அவர் பேசும்போது ‘ஆண், நாட்டியம் கத்துக்கும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். பெண்மைக்குண்டான நளினம் உடம்பில தங்கிடற வாய்ப்புண்டு’ன்னு சொன்னார். நான் சினிமாவில ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சப்போ, டான்ஸ் தெரியும்கிறதனால ‘பொட்டை’ மாதிரி இருக்கான்னு சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காக, பெரிய மீசை, நிறைய தலைமுடி வெச்சுக்கிட்டேன். நிறைய பெண்களோடு தொடர்பு இருக்கிற மாதிரி நானே நிறைய சத்தம் போட்டேன். என்னுடைய அபரிமிதமான கற்பனைக்கு நானே நிஜ உருவம் கொடுக்க ஆரம்பிச்சேன். நான் ஏற்படுத்திக்கிட்ட ‘காஸனோவா’ இமேஜ்படி பார்த்தா, நான் தாசி வீடே கதின்னு இருந்திருக்கணும். ஆனால், இதுவரை அந்த மாதிரி போனதில்லை. நானும் எல்லாவித சலனங்களுக்கும் உட்பட்ட, தவறுகள் செய்த சராசரி மனிதன்தான். என் நண்பர் ஒருவர்கூட எங்கிட்ட கேட்டார். ‘கமல், உங்களுக்கு செக்ஸுங்கிறது பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டிபன், டின்னர் மாதிரிதானே?’ன்னார். நடக்கிற காரியமா இது?
“இன்னமும் நீங்க, நாத்திகர்தானா?”
“கோயிலை இடிக்கணும்னு சொல்ற நாஸ்திகனுமில்லே... எல்லாத்துக்கும் கடவுளை இழுக்கிற ஆஸ்திகனுமில்லே. என்னால பக்தி விஷயத்துல உடன்பட முடியலே. அதுக்காக மத்தவங்க சென்டிமெண்ட்ஸ்ல நான் தலையிடறதும் இல்லே...”
“உங்க குழந்தையுடைய பர்த் சர்டிபிகேட்ல மதம்கிற இடத்தில ‘Nil’னு போட்டதாகச் சொல்லியிருந்த ஞாபகம்...”
“ஆமாம்! நான் இந்தியன். அவ்வளவுதான். I don't believe in religion. என் இரண்டாவது மகளுக்கும் அப்படித்தான். எந்தக் காலகட்டத்திலேயும் என் குழந்தைகள் இந்த மதம்தான்னு சொல்லி குறுக்க மாட்டேன்.”
“நீங்கள் நிறைய படிக்கிறீர்கள்... ஆகவே இந்தக் கேள்வி... யாருமில்லாத தீவில் ஒரு மாதம் கழிக்க வேண்டுமென்றால், உங்களுடன் என்ன புத்தகங்கள் எடுத்துச் செல்வீர்கள்?”
“மார்க்ஸின் Das Kapital புத்தகம் வாங்கிப் பல வருஷங்கள் ஆகின்றன. தீவிலேயாவது படிக்கலாமென்று எடுத்துச் செல்வேன்.
ரசிகர் மன்றங்கள் பற்றிப் பேச்சு திரும்பியது.
“இப்போது என் பெயரில் ரசிகர் மன்றங்கள் கிடையாது. அவை நற்பணி இயக்கங்கள்தான். 1973-லிருந்து 1980 வரை நானும் ரசிகர் மன்றங்கள் இல்லாமத்தான் இருந்தேன். ஆனால், நாம வேண்டாம்னாலும் என் ரசிகர்கள் ரிலீஸ் அன்னிக்கு தியேட்டர் வாசல்ல போய், தோரணங்கள் கட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அவன் சொந்தக் காசைப் போட்டு தியேட்டர்ல கொடி கட்டப் போகும்போது, மற்ற நடிகர்களுடைய மன்றங்களோட மோதல்! நாம அவங்களை அங்கீகரிக்காட்டாலும் கமல் ரசிகர்கள் கலாட்டான்னுதான் பெயர் வரும். அதை ஒழுங்குபடுத்தத்தான் ரசிகர் மன்றங்களுக்கு ஆதரவு கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்களோட நெருங்கிப் பழக ஆரம்பிச்சேன். எவ்வளவு Man power வேஸ்டா போகுதுன்னு உணர முடிஞ்சுது. ஆனால், அந்த மன்றங்களும் முதல் நாள் டிக்கெட் பிளாக்ல விக்கற அளவுக்குத்தான் இருந்தது. மேலும் ஒரு ஸ்டேஜுக்கு மேல, அதுக்குத் தலைமை தாங்கறவங்க அதை ‘மிஸ்யூஸ்’ பண்ண ஆரம்பிச்சாங்க. என்னையே பிளாக் மெயில் பண்ற அளவுக்கு வளர்ந்தது. ‘நாங்க கைதட்டி, விசில் அடிக்கலைன்னா உங்க படம் ஓடிடுமா?’ன்னு என்னையே கேக்க ஆரம்பிச்சாங்க. அப்படிப் பார்த்தா என்னுடைய எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்டாயிருக்கணுமே! இந்த பிளாக்மெயிலுக்கெல்லாம் பணியக்கூடாதுன்னு மன்றங்களைக் கலைச்சேன்.
அதே சமயம், அந்த இளைஞர்களுடைய பலத்தைச் சரியா பயன்படுத்த நினைச்சேன். நானே தலைமை ஏற்று, நற்பணி இயக்கங்கள் ஆரம்பிச்சேன். இதுக்கு சினிமா கலர் மட்டும் இருக்கக்கூடாதுன்னு பல அறிஞர்களை எங்கள் விழாவுக்குக் கூப்பிட ஆரம்பிச்சோம். முதல்ல சினிமா ரசிகர்கள் கூட்டம்னா வர்றத்துக்கே தயக்கம் காட்ட ஆரம்பிச்சவங்க, இப்ப எங்களுடைய பணிகளைப் பாத்து புரிஞ்சுக்கிட்டு வர ஆரம்பிச்சிருக்காங்க. ரத்த தானம், கண் தானமெல்லாம் பண்றோம். இதுவரைக்கும் பதினைந்தாயிரம் பேர் கண்தானம் பண்ணியிருக்காங்க. அதேமாதிரி ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலேயும் லைப்ரரி ஆரம்பிக்கப் போறோம்.”
“நீங்கள் செயல்படுத்தும் விதம் ஆக்கப்பூர்வமா இருக்கலாம். ஆனால், ரசிகர் மன்றங்கள் ஆரோக்கியமான விஷயமா?”
“தமிழ்நாட்டுல அது தவிர்க்க முடியாத விஷயமாயிட்டுது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலேருந்து இது தொடருது. அதுவும் இதன் மூலமா எம்.ஜி.ஆர். முதலமைச்சராவே ஆயிட்டார். அதனால ஒவ்வொரு நடிகருக்கும் இந்த மன்றங்கள் கூட்டத்தைப் பார்த்தவுடனே, உள்ளுக்குள்ளே நாமும் கோட்டையில போய் உட்கார மாட்டோமான்னு ஒரு ஆசை இருக்கு! கூட்டத்துக்குப் போனா ‘வருங்கால முதல்வரே’ன்னாங்க. 'தலைவரே'ன்னாங்க. அதெல்லாம் பார்த்தபோது, எனக்கேகூட ஆரம்பத்துல ஒரு ஒண்ணரை மாசம் அந்த மயக்கம் இருந்தது உண்மை! அதை எளிதில் தவிர்க்க முடியாது...”
“அப்ப எதிர்காலத்துல இந்த ரசிகர் மன்றங்களுடைய நிலைமை?”
“அதுக்கு முதல்ல, நடிகர்களைப் பார்த்து ‘தலைவா’ன்னு சொல்றது போகணும். இந்த ‘தலைவா’ கலாசாரம் அரசியல்லேருந்து வந்தது. எம்.ஜி.ஆரை, சிவாஜியை அப்படிச் சொன்னதுக்குக் காரணம் - அவங்களுக்குப் பலத்த அரசியல் பின்னணி இருந்தது. சிவாஜி சார் தி.மு.க-வுக்கு நிதி சேர்க்கத் தெரு முனையில நின்னு ‘பராசக்தி’ வசனம் பேசினாரு. அப்புறம் பகுத்தறிவோட உடன்படாம ஒதுங்கி, திருப்பதிக்குப் போயிட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் தீவிரக் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தாரு. அவங்களை மாதிரியே நாமும் என்று நினைச்சுக்கிட்டிருக்கற Myth போகணும்...”
“இந்த இளைஞர் சக்தியை வைத்துக்கொண்டு நீங்கள் அரசியலில் இறங்கலாமே?”
“நிச்சயமா என்னால முடியாது. ‘அரசியலுக்குப் போனா நான் கொலைகாரனா ஆயிடுவேன்'னு ரஜினி சொன்னது ரொம்பவும் உண்மை. அவர் சொன்னதுக்குக் காரணம், அவர் Temperament! எனக்கும் அதே மனநிலைதான். இறங்கினா ‘மெஷின் கன்’னை எடுத்துக்கிட்டுப் போய், எல்லாரையும் சுடற எண்ணம் வந்தா ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம்! நான் ஒரு False Messiah-வாகத்தான் இருப்பேன். என்னால முடியாது...”
- விகடன் .

No comments:

Post a Comment