Search This Blog

Tuesday, September 13, 2011

கௌரவம்


கௌரவம்

Posted by: என். சொக்கன் 
ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.
சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.
அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.
இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம்.
அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது.
இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள்.
டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது.
அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.
அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’
‘ஏன்? கார் அங்கே போகாதா?’
‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர்.
***
என். சொக்கன் …

No comments:

Post a Comment