Search This Blog

Friday, September 16, 2011

பாரிசவாதமும் பரிகாரமும்





பாரிசவாதம் - Stroke (Cerebro Vascular Accident)



மூளை உடலின் தலையாய உறுப்பாகும். உடலின் அனைத்துத் தொழிற்பாடுகளையும் ஆரம்பித்து சீராக இயக்குவது நமது மூளையே. இம் மூளையில் உருவாகும் முதன்மையான பாதிப்பு அல்லது நோய் பக்கவாதம் என்றழைக்கப்படும் பாரிசவாதம்.

பாரிசவாதம் என்றால் என்ன?
உடலின் குறிப்பிட்ட பாகங்கள் செயலிழந்து போதலே பாரிசவாதமாகும். உதாரணமாக உடலின் ஒருபக்கக் கைகால்கள் செயலிழத்தல் அல்லது கால்கள் செயலிழத்தல் அல்லது எல்லாக் கைகால்களும் செயலிழத்தல். சிலரின் முகத்தில் ஒரு பகுதியும் பாதிக்கப்படலாம். அவ்வாறனவர்களால் பேசுவதற்கும் விழுங்குவதற்கும் கூட முடியாமல் போகலாம்.

பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகிறது?
மூளை சரியாகத் தொழிற்படுவதற்கு அதற்குப் பிராணவாயுவும் (Oxygen) ஊட்டச்சத்துக்களும் (Nutreents) தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும். இவை குருதியின் மூலமே வழங்கப்படுகின்றன.
மூளைக்குத்  தேவையான குருதியைக் கொண்டு செல்லும் குருதிக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலமும் அல்லது அவை வெடிப்பதனாலும் மூ்ளைக்குத் தேவையான குருதி கிடைக்காமல் போகின்றது. ஆகவே குருதி கிடைக்காத மூளையின் பாகங்கள் பழுதடைகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட இக் குறித்த மூ்ளையின் பாகத்தால் இயக்கப்படும் உடலின் பகுதிகள் தமது செயற்பாட்டை இழந்து போகின்றன. இதுவே பாரிசவாதமாகும். மூ்ளையின் எப்பாகம் பாதிக்கப்படுகின்றதோ. அத்தோடு எவ்வளவு மூளைப்பாகம் பாதிக்கப்படுகின்றதோ அதற்கேற்ப உடலில் பாதிப்பு ஏற்படும்.

 குருதிக் குழாய்கள் எவ்வாறு அடைபடுகின்றன?

குருதியில் கட்டிகள் உண்டாதல் (Thrombosis), இக்கட்டிகள் குருதிக் குழாய்களை அடைப்பதால் மூளையில் பக்கவாதமும், இதயத்தில் மாரடைப்பும் (Heart attack-Ischaemic Disease) உண்டாகின்றது.
இக்கட்டிகள் உண்டாக என்ன காரணம்?
புகையிலைப் பாவனை, சிகரெட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் புகைத்தல் (Smoking), புகையிலை சப்புதல் (வெற்றிலையுடன்), மூக்குப்பொடி பாவனை
கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உள்கொள்ளல் (High Cholesterol)
நீரிழிவு நோய் - Diabetes Mellitus - குருதியில் குளுக்கோஸின் அளவு கட்டுப்பாடின்றி அதிகரித்தல்
உயர் குருதியமுக்கம் - High blood pressure (Hipertension)
இதய நோய்கள்
மதுபாவனை - Alcohol abuse
உடற்பயிற்சியின்மை -  Lack of Exercise (Sedenteric life style)
மன உளைச்சல் (Stress)
குடும்பத்தில் அல்லது பரம்பரையில் இதே பாதிப்பு உள்ளமை
அதிக உடற்பருமன் (Obesity)


குருதிக்குழாய்கள் ஏன் வெடிக்கின்றன?

▪  உயர் குருதியமுக்கத்தைத் தாங்கமுடியமல்

▪  தலையில் உண்டாகும் தாக்கம் - விபத்து மூலமாகவோ அல்லது விழுந்து தலை அடிபடுவதன் மூலம்

▪  குருதிக் குழாய்களில் அதாவது நாடிகளில் உருவாகும் வீக்கம் வெடிப்பதால் (Aneurysm)

இதனைக் குணப்படுத்த முடியாதா?

இந்நோய் குணப்படுத்த முடியாத ஒன்றாகினும் சரியான பராமரிப்பி்ன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை சீராக வைத்திருக்கலாம்.  இந்நோயாளர்களில் 20% ஒருமாதத்திலும், 10% ஒருவருடத்துக்குள்ளாகவும் இறக்க வாய்ப்புண்டு.  முகம், கண், வாய் பாதிக்கப்பட்டவர்களும், உடலின் அரைப்பாகத்துக்கு மேல் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களும் குறுகிய காலத்தினுள்ளேயே இறக்கும் வாய்ப்புண்டு. ஆகவே இந்நோய் வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பதே சாலச் சிறந்ததாகும்.

இந்நோயாளரைப் பராமரிப்பது எவ்வாறு?

▪முகம் பாதிக்கப்படாதிருப்பின் சாதாரணமாக உணவு உட்கொள்ளலாம்.  முகம்பாதிப்பு இருப்பின் மூக்கினூடாக செலுத்தப்படும் குழாய்மூலம் (naso Gastric tube) மருத்துவ ஆலோசனைப்படி சத்துள்ள நிறையுணவைத் திரவமாகக் கொடுக்கலாம்.

▪உடற்பயிற்சி (Physiotherapy)
தகுதிபெற்ற  Physiotherapist மூலம் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.  இதன் மூலம் மேலதிக பாதிப்புகள் வராது தடுப்பதோடு காலப்போக்கில் சிறிதளவு முன்நேற்றத்தையும் எதிர்பாக்கலாம்.

▪மருத்துவ அறிவுரையின்படி, Blood Pressure  மற்றும் Diabetes ஐ கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.

▪படுக்கைப்புண்கள் ((Bed Sores) வராது பாதுகாத்தல் - இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை திருப்பிப்புரண்டு படுக்கவைத்தல்.  தற்போது விசேடவகை மெத்தைகள் கடைகளில் கிடைக்கின்றன.  வசதிக்கேற்ப, காற்றடைக்கக்கூடிய மெத்தைகளையோ அல்லது நீரடைக்கப்பட்ட மெத்தைகளையோ வாங்கிப் பாவிக்கலாம்.  இவற்றின் மூலம் ஒரே விதமாகப் படுப்பதால் உருவாகும் படுக்கைப்புண்கள் வராது தடுக்கலாம்.  ஒருவேளை படுக்கைப் புண்கள் ஏற்படின் தகுந்த மருத்துவரிடம் காட்டி புண்ணைச் சுத்தப்படுத்தி (Wound toilet) சரியான மருந்துகளைப் பாவித்தல்.

▪மாதமொரு தடவையேனும் மருத்துவசோதனை செய்தல்

இந்நோய் ஏற்படாது தடுப்பது எவ்வாறு?

▪புகையிலைப் பாவனையை உடன் நிறுத்துதல். புகையிலையை எவ்வடிவில் பாவித்தாலும் அது எமது உடலாரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும் (சிகரெட், பீடி, சுறுட்டு, பைப், புகையிலை சப்புதல் மற்றும் மூக்குப்பொடி பாவனை).
புகையிலையிலுள்ள Nicotin குருதி அமுக்கத்தைக் கூட்டி மூளைக்கு கிடைக்கும் பிராணவாயுவைக் குறைத்து குருதிக்குழாய்களில் கொழுப்புப் படிவதைக் கூட்டும்

புகைப்பதால் பாரிசவாதம் மட்டுமன்றி மாரடைப்பு,  நுரையீரல் தொண்டை மற்றும் வாய்ப்புற்றுநோய்கள், தொய்வு (Asthma),  போன்ற   நோய்களும் உண்டாகலாம்.

மேலும் புகைப்பவர் தன்னை மட்டுமன்றி தன்னைச் சுற்றியிருப்போரையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றார் (Passive Smoking) ஆதலால் புகைத்தலை உடன் நிறுத்துவதன் மூலம் தன்னை மட்டுமன்றி தன் சுற்றத்தவரின் ஆரோக்கியத்தையும் பேணலாம்.

மேலும், பலர் மூக்குப்பொடியை, அவை புகையிலைத்தூள் என்று அறியாமல் பீரங்கிக்கு மருந்து அடைவது போல் தமது மூக்கினுள் அடைத்துக் கொள்கின்றனர். பாவம்! அவர்களுக்குத் தெரியவில்லை புகைத்தலால் உண்டாகும் அதே பாதிப்பு இதனிலும் உண்டு என்று.  ஆகவே இப்பழக்கத்தையும் உடன் நிறுத்துதல் சாலச் சிறந்தது.

▪கொழுப்புச்சத்து (Cholesterol) நிறைந்த உணவுகளைத் தவிர்த்தல்.  குருதியில் கொழுப்புகள் காணப்படுகின்றன. இது குறித்த அளவுக்குள் காணப்பட வேண்டும்.

Total Cheleserol 240mg/dl  க்கு அதிகமாகவோ
LDL Cholesterol >130mg/dl   க்கு அதிகமாகவோ (bad Cholestrol)
HDL Cholesterol <40mg/dl  க்கு குறைவாகவோ  (Good Cholestrol)

காணப்படின் இவை விரைவில் குருதிக்குழாய்களில் படிந்து குருதியோட்டத்தை தடை செய்யும்.  இதனால் பாரிசவாதம், மாரடைப்பு போன்ற நோய்கள் உண்டாகும்.

இதனைத் தவிர்பதற்கு உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் குருதியின் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.  இவற்றாலும் கட்டுப்படாவிடின் தகுந்த வில்லைகள் பாவிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

உணவில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம்:

▪ முடிந்தவரை மிருகக் கொழுப்பைத் தவிர்த்தல்

▪ பொரித்த உணவுகளைத் தவிர்த்தல்

▪ நெய்,  தேங்காய்ப்பால், சிவப்பு இறைச்சி, உலர்ந்த பழங்கள், ஊறுகாய், அச்சாறு, முட்டை மஞ்சள்கரு, ஈரல், மூளை,  Cheese, Butter, Margarine, Ice Cream ஆகியவற்றைத் தவிர்த்தல்.

▪ ஆடை நீக்கிய பால்மா (Non Fat) பாவித்தல்

▪ கூடியவரை நார்த்தன்மையுள்ள இலைக்கறிவகைகள், பழங்கள், அவரையினப் பருப்புகள், கோவா தானியங்களை உணவில் சேர்த்தல்.

. மீன் உண்ணலாம். ஆனால் இறால், நண்டு, கணவாய் போன்றவற்றைத் தவிர்க்கவும்.

▪  நீரழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
மருத்துவர் ஆலோசனைப்படி உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் பாவித்தல்.

▪  குருதி அமுக்கத்தைச் சீராக வைத்திருத்தல்.
உணவில் உப்பைக் குறைத்தல்; உணவில் எண்ணெய், கொழுப்பை தவிர்த்தல்; மது, புகைத்தலை நிறுத்தல்; தகுந்த உடற்பயிற்சி செய்தல்; மருத்துவ ஆலோசனைப்படி வில்லைகளைப் பாவித்தல் போன்றன மூலம் குருதியமுக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.  குருதியமுக்கத்திற்குரிய வில்லைகளை வாழ்நாள் முழுதும் தொடர்ச்சியாக பாவிக்க வேண்டியது மிகமிக முக்கியமாகும். வில்லைகள் ஒத்துவராவிடின் மருத்துவ ஆலோசனையுடன் வேறு வில்லைகளைப் பாவிக்கலாம்.

▪  மதுபானம் தவிர்த்தல்

▪  உடற்பயிற்சி
ஒழுங்காக வாரத்தில் 5-6 நாட்கள் உடற்பயிற்சி செய்வதால் உயர் குருதியமுக்கத்தக் குறைக்கலாம்,.  குருதியிலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம், குருதிக்குழாய்களில் கொழுப்பு படிந்து குழாய்கள் அடைபடுவதைத் தடுக்கலாம்.

▪  நீங்கள் முத்ன்முதலாக உடற்பயிற்சி செய்பவராயின்:
ஆரம்பத்தில் 10-15 நிமிடங்கள் வேகமாக நடக்கவும்.
இதனை வாரத்தி 2-3 தடவைகள் மட்டும் ஆரம்பத்தில் செய்யவும்
பின் படிப்படியாக நேரத்தை 20-25-30  நிமிடங்களாக கூட்டவும். பின்பு
செய்யும் தடவைகளை வாரத்திற்கு 3-4-5-6 எனக் கூட்டவும்.

உடற்பயிற்சியின் மூலம்:
குருதியிலுள்ள கொழுப்பு குறையும்
எலும்புகள் வன்மைபெறும்
இதயம், சுவாசப்பை வலிமையடையும்
உடலும் மனமும் வலிமை பெறும்
உடலில் ஊளைச்சதை போடுதல் தடுக்கப்படும்

▪  மன உளைச்சலில்லிருந்து (stress) விடுபடல்
மனதை ஓய்வாகவும் இலகுவாகவும் வைத்திருப்பதற்கு யோகாசனம், தியானம் (Meditation) போன்றவற்றை மேற்கொள்ளலாம். உணர்ச்சிவசப்படுதலையும், கோபப்படுதலையும் தவிர்த்தல் நலம்.

▪  உடல் பருமனைக் குறைத்தல்
உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்வதால் உடல் பருமனை சீராக வைத்திருத்தல்.

சாரம்:
பாரிசவாதமானது முற்றிலும் வராது தவிர்க்கக்கூடிய ஒரு நோயாகும். வந்தபின் வருந்துவதைவிட வருமுன் காத்தலே சிறந்ததாகவும்,  முப்பத்தைந்து வயதானபின் கிரமமாக மருத்துவ சோதனை செய்து, ஆலோசனைப்படி தகுந்த உடற்பயிற்சி  உணவுப்பழக்க வழக்க மாற்றம், மற்றும் சரியான வாழ்கை முறை மூலம் பெரும்பாலான நோய்களிலிருந்து விடுபட்டு குறையற்ற வாழ்வை வாழ்வோம்

நன்றி: Dr. ஏகாம்பரம்  குகதீபன்
 Engr.Sulthan

No comments:

Post a Comment