Search This Blog

Sunday, September 11, 2011

கடவுள் இருப்பதற்கு இதோ ஆதாரம். இந்து மத வரலாற்று தொடர்



இந்து மத வரலாற்று தொடர்...தொடருகிறது.
 குருஜியின் அருளாசியுடன்...

 
கடவுள் இருப்பது உண்மை என்பதை உலகத்தை வைத்து சைவ சித்தாந்திகள்  நிருபிக்க முயன்றிருக்கிறார்கள் .  பானை ஒன்று இருக்கிறது என்றால் அதை செய்தவனும் இருக்க வேண்டும் அதே போன்று உலகம் இருக்கிறது. என்றால் அதைபடைத்தவனும் இருந்தே ஆகவேண்டும். ஒரு பானைஎப்படி தன்னைத் தானே உருவாக்கி கொள்ள முடியாதோ அதேபோலவே உலகமும்,  தன்னைத் தானே படைத்துக் கொள்ள முடியாது.  

உலகம் தன்னைத்தான் உருவாக்கி கொள்ளவில்லை என்றாலும்,  அது என்றோ ஒருநாள் உருவானது அல்ல. என்றுமே காலகாலமாக அது இருந்து வருகிறது.  என்றும் வாதிக்க முடியாது.  காரணம் என்னவென்றால் உலகம் என்பது பல பகுதிகளால் ஆனது.  பல கூறுகள் உடைய எந்த பொருளும்.  தானாகவே சேர்ந்து கொள்ள முடியாது.  அப்படி சேரும் என்பதற்கே எந்த அனுபவ சான்றுகளும் இல்லை. பல பகுதிகளாக கிடப்பதை ஒன்று சேர்க்க ஒரு ஆள் வேண்டும்.  

உதாரணமாக ஒரு குடையில் துணிஇரும்புமரம்என்று பகுதிகள் பல உண்டுஇவற்றை ஒருவன் தனது அறிவை பயன்படுத்தி சேர்த்தால் தான் அது குடையாகும். அதே போன்றுதான் உலகமும் பலபல பகுதிகளாக கிடக்கிறது.  அதை ஒன்றுபடுத்தி உருவாக்க ஒரு சக்திவேண்டும். அந்த சக்திதான்  இறைவனாகும்.  என்று சைவ சித்தாந்திகள் இறைவனின் இருப்பை நிலைநிறுத்த முயன்றிருக்கிறார்கள்.


உலகம் எப்போதுமே இருந்து வரும் பொருள் என்று கொண்டால் அதற்கு அழிவு என்பது இல்லை என்பதாக கருத வேண்டும்.  ஆனால் நாம் அப்படி அழியாத் தன்மையோடு உலகை பார்க்கவில்லை.  .பூமியில் உள்ள ஒவ்வொரு துளியும்அணுவும் ஒவ்வொருவிநாடியில் மாறிக்கொண்டேயும் அழிந்துகொண்டேயும் புதிதாக உருவாகிகொண்டேயும்வருகிறது. அழிந்தும் தோன்றியும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் ஒரு பொருள் என்றும் நிலைத்திருந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.  எனவும் சைவசித்தாந்திகள் கருதினர். 

அதே நேரம் வேறொரு உதாரணத்தையும்,  அவர்கள் காட்டி கடவுளை நிருபிக்கமுயன்றார்கள்.  ஆத்மாக்கள் பிறப்பதும். சுக துக்கங்களை அனுபவிப்பதும் அவரவரின் கர்மாவே ஆகும்.  என்பதை எல்லா இந்துக்களும் ஒப்புக் கொள்கிறார்கள்.அதுமட்டுமல்ல கடவுளே இல்லை என்று வாதிடும் ஜைனர்களும்,  பவுத்தர்களும் கர்மாவை உண்மையென்றெ நம்புகிறார்கள்.  அப்படிப்பட்ட கர்மா ஆத்மாவை தானக தேடி அடைய முடியாது.  கர்மாவிற்கு தானாக முடிவு எடுக்கும் அறிவு உண்டு என்றால் பலவிதமான சிக்கல்கள் மிகுந்ததாகி குழப்பங்களே மிஞ்சும்,  அதனால் இந்த ஆத்மாவின் கர்மாவை இதனோடு இணைக்கவேண்டும். என்று முடிவெடுப்பதற்கு ஒருவன் தேவை.  அவனே இறைவன்.  

ஆகவே உலகை
  படைப்பதற்கும்கர்மாவை நெறிப்படுத்துவதற்கும் தானாக எதுவும் ஆகாது.  அதற்கு ஆண்டவன் என்பவன் நிச்சயம் தேவை என்று சைவ சித்தாந்தம் வாதிடுகிறது. 

 ஒரு பானையை பார்த்தவுடன் அதை செய்தவன் கண்முன்னே இல்லாவிடட்டாலும் அப்படிஒருவன் இருக்கவேண்டும் என்று நம்மனம் நம்பிக்கை கொள்கிறது.  இதே போலவேகாட்சிக்கு புலனாகாமல் கடவுள் இருந்தாலும் அவரை இருப்பவர் என்றுஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்று சைவ சித்தாந்திகள் கூற்றின்அடிப்படையாகும். இதற்கு மாறுபாடான கருத்துக்களும்இருக்கிறது.  அவற்றையும் தெரிந்து கொண்டால் தான் நமது ஞானம் என்பது பூர்த்தியானதாக இருக்கும். உலகம் என்பது உண்மையாக இருக்கிறது என்றால்தான் அந்த உலகை படைத்தவனும்,  இருக்க வேண்டும் என்று நம்பவேண்டியது இருக்கிறது.  உலகம் என்பதேஇல்லையென்றால் அதை படைத்தவன் தேவையே இல்லையல்லவா?
ஆனால் உலகம் இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம்   இருக்கிறது.  நமதுகண்களுக்கே தெரிகிறது என்பது மட்டும்தானே ஆதாரம்.  ஆனால் நமது கண்கள்காட்டும் காட்சிகள் அனைத்துமே உண்மையானதுதானா?  சத்தியமானதுதானா?  என்றுபார்த்தால் பல நேரங்களில் நமது கண்கள் இருப்பதை இல்லாமலும்,  இல்லாததைஇருப்பதாகவும் காட்டி பொய்யான பல சித்திரங்களை உருவாக்குகிறது. இப்படிபுலன்கள் உருவாக்கும் பொய்சித்திரங்களை நம்பி பலமுறை நாம் ஏமாந்துஇருக்கிறறோம்.  இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத புலன் உலகம் இருக்கிறது என்று காட்டுவதை எப்படி நம்ப இயலும்? ஆகவே புலக்காட்சிசந்தேகம் எனும்போது உலகத்தின் இருப்பும் சந்தேகமாகி விடுகிறது.  சந்தேகமான ஒரு பொருளை உருவாக்க கடவுள் எதற்குஎனவே கடவுள் என்பது தேவையில்லாத பொருள்,  என சிலர் கருதுகிறார்கள்.  இக்கருத்தை மேலோட்டாமாக பார்க்கும் போது அதில் உண்மை இருப்பது போல் நமக்கு தோன்றும்.  ஆனால் நமது அறிவை உள்முகமாக திருப்பி சிந்தனை செய்தால் எது உண்மை என்பது நன்கு புலப்படும்.

 புலன்கள் எல்லா நேரமும் உள்ளதை உள்ளபடிகாட்டவில்லை என்பது உண்மைதான்.  என்பதற்காக உலகமே பொய் என்று வாதிடுவது அறிவுடைமை ஆகாது. உலகத்தை மாயை என்று கூறும் சங்கர வேதாந்திகள் கூட அது ஆகாயத்தாமரை போலவோ மலடி மகன் போலவோ முற்றிலுமாக இல்லாதது அல்ல என்பதைஒப்புக்கொள்கிறார்கள்.  புலன்கள் நம்பகத்தன்மை அற்றது என வாதிடும் இம்மானுவேல் காண்ட் போன்றமேலைநாட்டு தத்துவஞானிகள் கூட அவைகள் எதையோகாட்டுகின்றன என்பதை மறுக்கவில்லை. எனவே உலகத்தை ஒரு மாயா தோற்றம் என்றுவைத்துக்கொண்டால் கூட அந்த தோற்றத்தை தோற்றுவிக்க ஒருவன் வேண்டும்.  ஆகையால் எந்த வகையில் பார்த்தாலும்.  இறைவன் ஒருவன் இருப்பது தெளிவாகும்.   

சரி உலகம் உண்மையென்றும்கடவுள் இருக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். அப்படி வைத்துக் கொண்டால் கடவுள் ஏன் இந்த உலகத்தை படைத்தார்.  அதனால் அவருக்கு என்ன லாபம்?  என்ற கேள்வி அடுத்ததாக எழும்புவது இயற்கை.  இதற்கு சைவ சித்தாந்திகள் நல்ல பதிலை தருகிறார்கள். உலகம் படைக்கப்பட்டு ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடுகிறது.  இதேபோன்று ஆத்மாகள் படைக்கப்பட்டு,  முற்றிலுமாக இல்லாத வகையில் அழிக்கப்படுவது இல்லை. காலகாலமாக இறைவனைப் போல் நித்தியமாக இருக்கின்ற ஆத்மாக்கள் ஜனனமரணம் எடுத்து தனது நிலையை சுத்திகரித்து இறைவனோடு கலப்பதற்கு உலகம் என்பது நிச்சயம் தேவை.  எனவே உயிர்கள் பிறவி பெருங்கடலை கடப்பதற்கு கடவுள்உலகத்தை படைத்துள்ளார்.  என்பது சித்தாந்திகளின் அறிவார்ந்த பதில்களாகும்.

உயிர்களை கரையேற்றுவதற்கு இறைவன் உலகத்தை படைத்திருக்கிறான் என்றால் அப்படிப்பட்ட இறைவனின் இயல்புகள் என்னவாக இருக்கும் என்பது நமக்குள் எழும்அடுத்த கேள்வியாகும்.  அதற்கு சைவம் இறைவன் என்பவன் சத்சித் ஆனந்தம் என்ற மூன்று இயல்பாக இருக்கிறான் என்ற பதிலை தருகிறது.  சத் என்றால் உண்மையான பொருள்என்று அர்த்தம் சித் என்றால் தானே இயங்குதல் என்பது பொருளாகும்.  ஆனந்தம் என்றால் உண்மையே வடிவாய் தானே இயங்கி தன்னையும்,  மற்ற அனைத்தையும்,  இன்பமாக வைத்துக் கொள்ளுதல் என்பது பொருளாகும். 

ஆகவே இறைவன் இந்த மூன்று இயல்பாக இருக்கிறான் என்பது சித்தாந்தம் கூறுவதை அனுபவ 
 அறிவு நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும்.   
 சைவ சித்தாந்தத்தின் கடவுள் கருத்தை இதுவரை சுருக்கமாக பார்த்தோம்.  இந்து மதத்தை தவிர உலகில் உள்ள வேறு எந்த மதத்திலும் இத்தகைய வினாக்கள் எழுப்பி அறிவு பூர்வமான பதில்களை கொடுக்கும் வழக்கமில்லை.  ஏன்சில மதங்களில்கேள்விகள் கேட்பதற்கே அனுமதி இல்லை. அறிவுக்கு பொருந்தி வரக்கூடிய சகல விஷயங்களையும்  இந்து மதம் தனக்குள் கொண்டிருந்தாலும்.  அது தன்னைவிளம்பர படுத்திக் கொள்ள விரும்வில்லை என்பதனால் அரைகுறையாக மற்ற மதங்கள் தாங்களே அறிவின் சிகரம் என்று குதியாட்டம் போடுகிறது.  


 நாம் நம்மை அலங்காரப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றாலும் கூட சுத்தமாக இருப்பது தவறு என்று யாரும்சொல்லிவிட முடியாது.  மற்றவர்கள் நம்மை முட்டாள்கள்என்றே பட்டம் கட்டாமல் இருப்பதற்காகவது நமது அறிவு விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும். சைவ சமயத்தில் இன்னும் பல பிரிவுகள் இருக்கிறதென்று ஆரம்பத்திலேயேபார்த்தோம். அந்த பிரிவுகளின் அனைத்து சிந்தனைகளையும் வரும் அத்தியாயங்களில் ஆழமாக சிந்திப்போம்.  அப்படி செய்தால்தான் இந்து மதத்தின் உண்மை வடிவை முழுமையாக தரிசிக்கலாம். 
மேலும் பயணிப்போம் நண்பர்களே.....இந்து மத வரலாற்றை தொடர்ந்து....அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment