Search This Blog

Sunday, September 4, 2011

தங்கபஸ்பம் என்னும் சொர்ண பற்பம்





தங்கபஸ்பம் பற்றி.......





       தாதுபுஷ்டியைத் தொடர்ந்து தங்கபஸ்பத்தைப் பற்றி கேள்வி ஏற்படும்.
                சில உரைகளின்போதும் தனிப்படவும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:


1. தங்க பஸ்பம் என்று ஒன்று இருக்கிறதா? அல்லது சித்தரியலில் கண்ட உருவகமா?


2. தங்க பஸ்பத்தில் உண்மைலேயே தங்கம் சேர்கிறதா?


3. இதைச் சாப்பிடுவதால் இளமை திரும்புமா?


4. இது விஷத்தன்மை படைத்ததா?


                தங்கபஸ்பம் என்பது ஆயுர்வேத மருந்துகளில் ஒன்று. 
                அதனைச்செய்யுமுறைகள் வேறுபடும். தற்சமயத்தில் மூன்று முறைகளைப் பயன்படுத்துவார்கள்.

 

தங்க ரேக்கை முள்ளுக்கீரை சாற்றில் 3-நாள் ஊறவைத்து ரவியிற் (இரவில்) காயவைத்து கல்வத்திலிட்டு சித்திரப்பாலாடை சாற்றில் மைபோல அரைத்து வில்லை தட்டிக் காயவைத்து அதற்கு கடம்பிலையை அரைத்து கவசஞ்செய்து அகலில்வைத்து ஏழுசீலை மண்செய்து நூறெருவிற் புடம் போடப் பற்பமாகும். சவுரியிலைச்சாறு படி-8, சிறுக சிறுக ஒரு சட்டியிலிட்டுக் காயவைத்துத் திரட்டி நிறுத்தி அந்தவிடை ஆடாதொடையிலையும், 1-பலம் புனுகும் 2-கழஞ்சு மேற்படி பற்பமும் சேர்த்து மெழுகுபோலரைத்து நெல்லிக்காய்போலுருட்டி எள்ளெண்ணெயில் போட்டு அந்தி சந்தி ஒவ்வொரு உருண்டை வீதம் 6 மாதம் சாப்பிட்டு மேற்படி எண்ணெயை வாரத்துகிரண்டுமுறை ஸ்நானஞ்செய்து சையோகமும் கரப்பன் பதார்த்தமும் தள்ளிவைக்க வெண்குட்ட முதலான சகல குட்டமும் தீரும்.

கிராம்பை மயானமாய்ப் பொடித்து ஆவின்நெய்யில் மத்தித்து அதிற் பண்வெடை தங்கபற்பம் வைத்து சாப்பிட்டு பாலும் அன்னமும் பொசித்து வர விந்தூரும் தாதுகட்டும் தேகம் பலக்கும்.
                தங்க ரேக்குதான் மூலப்பொருள். தங்கரேக்கு என்பது சுத்தமான தங்கத்தை மெல்லிய தகடாக அடித்துச்செய்யப்படுகிறது. தாளைவிட மெல்லியதாக இருக்கும்.
                தங்கரேக்கை எடுத்து தனலில் வைத்து பழுக்கக் காய்ச்சுவார்கள். பின்னர் அதனை அப்படியே நல்லெண்ணெயில் முக்கி எடுப்பார்கள்.
                இதுபோன்று ஏழு தடவைகள் செய்வார்கள்.
                அதே மாதிரி, பழுக்கக்காய்ச்சி புளித்த மோரில் ஏழு முறை இட்டு எடுப்பார்கள். பின்னர் பசுவின் மூத்திரத்தில் அவ்வாறு செய்யப்படும். இறுதியாக கொள்ளு தானியத்தின் கொதிக்க வைத்த வடி தண்ணீரில் விட்டு எடுப்பார்கள்.
                'ரச கர்ப்பூரம்' என்று ஒன்று இருக்கிறது. 'Mercuric Chloride' என்னும் ரசாயனப் பொருள் அது. நவபாஷாணத்தில் ஒன்றாகும்.
                'நவ பாஷாணம் நவ பாஷாணம் என்று சொல்கிறார்களே, அது என்ன?' என்று கேட்கும் முன்னர் சொல்லிவிடுகிறேன்.
                சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரஸகர்ப்பூரம், வெள்ளைப்பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை.
                ரஸகர்ப்பூரத்தை எலுமிச்சம் சாற்றுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வார்கள்.
                இதனை எடுத்துத் தங்க ரேக்கின் மீது அப்பிவிடுவார்கள்.
                அடுத்தபடியாக மண்சிமிழில் கந்தகத்துடன் சேர்த்து வைத்து வாய்ச்சீலை யிட்டு மண்பூசி மூடிவிடுவார்கள். அது காய்ந்தவுடன் புடம் போடுவார்கள்.
                எட்டு முறையாவது புடம் போடுவார்கள். எட்டு முறையும் ரசகர்ப்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்வார்கள்.  பஸ்பத்தின் தன்மையைப் பொறுத்து இன்னும் அதிகமாகவும் புடம் போட நேரிடலாம்.
                இன்னொரு முறையும் இருக்கிறது. 'மஞ்சள் கடம்பு' என்னும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து ஒருவகையான உப்பு தயாரிப்பார்கள். ஒரு வகைக் கள்ளியின் பாலுடன் இதனைச் சேர்த்து கலவையொன்றைச் செய்வார்கள். இந்தக் கலவையுடன் தங்க ரேக்கைச் சேர்த்து அரைப்பார்கள். அதனைக் காயவைத்த பின்னர், 'கபில நிறம்' போன்ற வண்ணத்தைக்
கொண்டதொரு பஸ்பம் கிடைக்கும்வரை இரு முறையோ அல்லது அதற்கும் மேலாகவோ அதனைப் புடம் போடுவார்கள்.


                வேறொரு முறையில் தங்கரேக்கின் மீது எலுமிச்சஞ்சாற்றுடன் கலந்த ரச கர்ப்பூரத்தை அப்பிப் பழுக்கக் காய்ச்சி, அதனை முள்ளுக்கீரையின் பொடியுடன் கலந்து புடம் போடுவார்கள்.


                இதனை சிறிய அளவில் உட்கொள்ளவேண்டும்.
                அமுக்குராக் கிழங்கு, பூனைக்காலி, கஸ்தூரி ஆகியவற்றுடன் சேர்த்து அதனைச் சாப்பிடவேண்டும். அந்த மூன்றையும் 'அனுபானம்' என்று சொல்வார்கள்.
                முதுமை ஏற்படமாட்டாது. தாது புஷ்டியைத் தோற்றுவிக்கும். பாலுணர்வை அதிகரிக்கும். வீரியத்தையும் ஏற்படுத்தும்.


                மேலே கண்ட விபரத்தின் மூலம் முதல் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகிவிட்டது.
                அடுத்து,  'இது விஷத்தன்மை படைத்ததா? '


                விஷத்தன்மை படைத்தது என்று சொல்வதற்கில்லை.
                அதைத் தயாரிக்கும்போது ரச கர்ப்பூரம் சேர்கிறது. இது ஒரு விஷம். நவபாஷாணத்தைச் சேர்ந்தது. கந்தகம் போன்றவையும் வேறு சில மூலிகைகளும் சம்பந்தப்படுகின்றன.
                செய்முறையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் 'ஹோகயா' - 'HOgayaa'-தானுங்களே? இல்லீங்களா?






               

                'தங்க பஸ்பம்' என்பது ஒரு முக்கியமான மருந்து. இது தமிழர்களிடையே புழக்கத்தில் இருந்தது. 'தெரிந்த பெயர், தெரியாத விஷயம்' என்று சொல்வார்கள்.

                ஆகவே இதைப் பற்றி என்னிடம் இருந்த சில நூல்கள், நான் கேள்விப்பட்ட விஷயங்கள் முதலியவற்றை வைத்து சுருக்கமாகத் 'தங்கபஸ்பத்தை' எழுதி வெளியிட்டேன்.



                இதன் தொடர்பாகக் காயகல்பம், Rejuvenation, Longevity, அதிபலம், அதிவேகம்,

அதிபோகம், அதிபுத்தி, புலன்களின் தீட்சண்யம் போன்றவற்றைப் பற்றிய கேள்விகள், டிஸ்ஷன் போன்றவை இருந்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்.



                நான்தான் அந்தக் கட்டுரையின் முடிவிலேயே, 'சரியான முறை இல்லாமல் போனால் 'ஹோகயா' என்று எழுதிவிட்டேனே.



                தங்கபஸ்பம் மட்டுமில்லை..... எந்த மருந்துமே - உங்கள் Aspirin-இலிருந்துZopiclone வரைக்கும் எல்லாவற்றுக்குமே டாக்ஸிஸிட்டி உண்டு.



                ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு படம். 'மிஸ் மாலினி'. ஹீரோயின் புஷ்பலதா. அவருடைய வேலைக்காரி சுந்தரிபாய்.

                சுந்தரிபாய் ஒரு பாட்டுப் பாடுவார்......



"பலே ஜோர்... பலே ஜோர்.... பட்டனவாசம்

நான் பாத்துப்பிட்டேன் பாத்துப்பிட்டேன், பணத்துக்கு நாசம்"



என்ற பாட்டு.



                அதில் வரும் அடிகள்,

"தலவலிக்கொரு மாத்திரெ, தடுமனுக்கொரு மாத்திரெ

தவறிப்போயி போட்டுக்கிட்டா தர்மலோக யாத்திரெ"



என்று இருக்கும்.



                இதேதான் எல்லா மருந்துக்கும். அமுதம்கூட விஷமாகும்.

                தங்க பஸ்பம் இதற்கு விதிவிலக்கல்ல.

                இந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள் தங்கபஸ்பத்தைப் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர்.

                தங்க பஸ்பத்தால் கெடுதல் மட்டுமே உண்டு என்றிருந்தால் இத்தனை ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி வந்திருப்பார்களா?

                அரசர்களில் பலர் தங்கபஸ்பம் சாப்பிட்டவர்கள்தாம். அவர்களுக்கு அந்த மருந்து ஊறு செய்திருந்தால், அதைக் கொடுத்த வைத்தியர்களைத் தோலை உரித்திருப்பார்கள், அல்லது போனால் போகட்டும் என்று கழுவில் ஏற்றியிருப்பார்கள்.

                தங்கபஸ்பம் என்னும் உருப்படியே இண்டியன் ·பார்மக்கோப்பியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கும்.

                அதற்குப் பதில் 'விஷ சாஸ்திர சிந்தாமணி'யில் இடம் பெற்றிருக்கும்.

                அந்தக் காலத்தில் Slow Poison வகையறாவுக்கு மிகவும் கிராக்கி இருந்தது.

Posted by JayBee

No comments:

Post a Comment