Search This Blog

Sunday, September 9, 2018

*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.*


*ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி,வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.*
*திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.*
*திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.*
*காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு,மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.*
*திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.*
*திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசி சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.*
*கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர்.உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.*
*ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது.இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.*
*கேரளம்,திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர்.இந்த பால் வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கிறது.*
*நவகிரக,சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.*
*மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும், நிவேதனம் செய்யப்படுகின்றன.*
*கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு,மிளகு, திப்பிலி,ஏலம்,லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.*
*நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.*
*கேரளம்,குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.*
*திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.*
*கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.*
*குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு,மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால்,அவருக்கு தலைவலியும், ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.*
*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றி தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.*
*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும்,சர்க்கரை பொங்கலும் நிவேதனம் செய்வர்.துவரம்பருப்பு, அரிசி,காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விடப்பட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.*
*சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.*

No comments:

Post a Comment