Search This Blog

Monday, November 4, 2013

ஃப்ரன்ஸ் காஃப்கா (1883 - 1924)





இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய படைப்பாளி காஃப்கா. பகட்டுகளற்ற, ஆனால் புதிர்கள் நிறைந்த மொழி இவருடையது.

1883- ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி செக்கோஸ்லோவாகியா நாட்டின் தலைநகரான ப்ராகில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். யூதர், தாய்மொழி ஜெர்மன். அவருடைய மொழி செக் நாட்டவரிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தியது. அவரின் இனமும் மதமும் ஜெர்மானியர்களிடமிருந்து அவரைத் தனிமைப்படுத்தின. 'தனிமை', அவருடைய
படைப்புலக ஆதாரங்களில் ஒன்று.

ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி, தனிமை, காதல் என தன் வாழ்வில் அனுபவித்த பிரத்யேக நிலைகளினூடாகவே தம் படைப்புலகை உருவாக்குகிறார். அதன் மூலம் தம் கால மனித வாழ்வில், அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களைப் படைப்பில் உறைய வைக்கிறார். இந்த முகங்களில் தெரியும்
தன்னுடைய சாயல்களை, அவருடைய படைப்புலகோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாய் உணர்கிறான்.

1917-ஆம் ஆண்டு அவரை பீடித்த எலும்புருக்கி நோய் காரணமாக, 1924 - ஜூன் 3-இல் இறந்தார். அவருடைய வாழ்நாளில் சிறிய படைப்புகள் மட்டுமே வெளிவந்திருந்தன. முற்றுப் பெறாத மூன்று நாவல்களும் அவரின் மரணத்திற்குப் பின்னரே வெளிவந்தன.

'தீர்ப்பு' - காஃப்காவின் முழுமையான முதல் படைப்பு. இக்கதையை, 1912-ஆம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை ஒரே மூச்சி எழுதி முடித்தார். இது, அவருடைய படைப்புலகின் அடிப்படை அம்சங்களனைத்தும் ஒன்று திரண்டு அடர்த்தியாக உருக்கொண்ட கதை. மேலும் இக்கதையில் அவரின் படைப்புலகப் பிரச்சனைகளில் ஒன்றான "தந்தை - மகன் போராட்டம்' அதன் ஆழத்தைத் தொட்டிருக்கிறது.

காஃப்காவுக்கும் அவரின் தந்தைக்கும் இடையேயான நிஜ உலக உறவின் தன்மைகள் இப்புனைவில் இலக்கிய முகம் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, காஃப்காவுக்கு மிகவும் பிடித்த கதை இது.

காஃப்காவின் மற்றொரு கதையான 'கிராம மருத்துவர்', நனவுலகும் கனவுலகும் முயங்கி முகிழ்த்த பிரத்யேகமான காஃப்கா உலகக் கதை. 1919-ஆண்டு எழுதப்பட்டது.

- சி.மோகன்

நூல்: கதையின் திசைகள் (10 உலகச் சிறுகதைகள்) - தமிழில் சி.மோகன்
நன்றி: தாவரம்

No comments:

Post a Comment