Search This Blog

Wednesday, August 15, 2012

பொது நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளல்



1986ல் இந்தியாவில் நடந்த சம்பவமொன்று இது. ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணொருவர் தனது தன்னை தலாக் (விவாகரத்து) செய்த கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் கோரி வழக்குத் தொடுத்தார். இஸ்லாமிய சட்டத்தில் தாபரிப்புப் பணம் பெறுவதற்கான அங்கீகாரம் இல்லலையாதலால் , ஷாபானு இந';தியாவின் சிவில் சட்டத்தின் கீழ் தனது வழக்கைத் தாக்கல் செய்தார். அவருடைய கணவரின் வழக்கறிஞர் உடனேயே ஒரு பூகம்பத்தைக் கிளப்பி விட்டார். ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியச் சட்டத்தை மட்டும்தான் உபயோகிக்கலாம், அவர் எப்படி இந்தியவின் பொதுச் சட்டத்தை நாடலாம் என்னும் வாதமே இந்தப் பூகம்பமாகும். இந்த வாதம், முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தினைப் பாவிக்காது விட்டால் இஸ்லாமிய மக்களின் கலாசார உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்கின்ற ரீதியில் பூதாகாரமாக உருவெடுக்கலாயிற்று. இதற்கு ஆதரவாக முழு முஸ்லிம் ஆண் சமூகமும் ஒன்று திரண்டது. அவர்கள் அறிக்கைகள் விட்டார்கள், தெருக்களில் போராட்ட ஊர்வலம் நடத்தினார்கள். அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியிடம் முறையிட்டார்கள். ராஜீவ் சாந்தியும், முஸ்லிம் சமூகத்தினர் முழுமையாக இஸ்லாமிய சட்டத்தின்கீழ்தான் வரவேண்டும் என்றும், அவர்கள் (இந்திய பிரஜைகளாக இருந்தும்கூட) இந்திய சிவில் சட்டத்தை உபயோகிக்க முடியாதென்றும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்.
இந்தியாவில் இருந்த பெண்கள் அமைப்புக்களும் சளைக்கவில்லை. ஷாபானுவுக்கு ஆதரவாகக் கூடினார்கள். ஒரு நிர்க்கதியாக விடப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே முக்கிய விடயமாகையால், இந்திய பொதுச் சட்டத்தை அவள் நாடலாம் என்பதே அவர்கள் வாதம். அவர்களும் ராஜீவ் காந்தியிடம் ஓடோடிச் சென்று சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டாமென்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு ராஜீவ் காந்தி என்ன சொன்னார் தெரியுமா?
'ஆம், இச்சட்டத் திருத்தம் அநீதியானது என்பதை நானறிவேன். ஆனால் இஸ்லாமியத் தலைவர்கள் சனத்திரளை வீதிக்குக் கொண்டுவந்து இறக்கக்கூடியவர்கள்.  அதை வாக்குகளாகவும் மாற்றிக் காட்டக்கூடியவர்கள். உங்களுக்கு அது முடியுமா? முடியாதென்பதால் நான் அவர்கள் பக்கம்தான் சாய்வேன்..'
பெண்களோ வாயடைத்துப்போய்த் திரும்பினார்கள்.
ஆம். எங்கும் மக்கள் திரளின் சக்தியினால்தான் நல்ல மாற்றங்கள் என்றாலும் தீய மாற்றங்கள் என்றாலும்; நிகழுகின்றன. ஏந்த சக்தி வாய்ந்த தலைவரும் இறுதியில் மக்களின் ஆதரவினால்தான் அரசாளுகின்றார். அது இல்லாவிட்டால் அவர் ஒரு கணமேனும் தனது பதவியில் இருக்க முடியாது. ஏப்படி இருக்கமுடியும்? அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்களும் நாம் மக்களல்லவா? தட்டத் தனியாக அவர் இயங்க முடியாதல்லவா? எனவே மக்கள் ஒன்று கூடினால், முடியாதது ஒன்றுமில்லை.
மக்கள் ஒன்றுகூடி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான இன்னுமொரு கதையைப் பார்ப்போம். இலங்கையில் பெண்களின் நிலையை மாற்றுவதற்கு இங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் பலகாலமாக முயன்று வந்திருக்கின்றன. 1989ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் பெண்கள் அமைச்சினை உருவாக்கினார். இந்த அமைச்சினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதன் தலைமையின்கீழ் சிங்கள முஸ்லிம் தமிழ் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து ஒரு பெண்கள் பட்டயத்தை (றுழஅநn'ள ஊhயசவநச) 1993ம் ஆண்டு உருவாக்கின. சமவாயம் என்பது அடிப்படை மனித உரிமைகளைக் கோடு காட்டி உருவாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய விடயங்களின் தொகுப்பாகும். எனவே, இந்தப் பெண்களின் பட்டயமானது பெண்கள் குறித்த பல பிரச்சினைகளைப் பேசியது. இது ஒரு அரசு நிறுவனத்தின்கீழ் செய்யப்பட்டதால் அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.
இப்பட்டயத்தில் குடும்ப வன்முறைக்கு எதிராகப் பெண்கள் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசப்பட்டது. தொழிலிடங்களில் பெண்கள் பாலியல் இம்சைக்குள்ளாவதைத் தடுக்க வழிகோரப்பட்டது. நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான எங்கள் பாலியல் கற்றச் சட்டம் புதுப்பிக்கப்படவேண்டுமென்று கோரியது. இதைத் தவிர, வெளிநாட்டவர்களை மணக்கும் பெண்களின் கணவர்களுக்கு குடியுரிமை கொடுக்காத சட்டம் மாற்றப்பட்டு ஆண்களைப் போலவே பெண்களின் வெளிநாட்டுத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டுமென்று பரிந்துரைத்தது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அடுத்த வருடங்களில் கடுமையான பிரச்சாரம் இந்த அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2005ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப வன்முறைக்கெதிரான சட்டமும், தொழிற்தலங்களில் பாலியல் இம்சைகளுக்கெதிரான சட்டமும் செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏங்களுடைய கிராமங்களில் வாழும்  பெண்களைக் கேட்டுப் பாருங்கள். குடும்ப வன்முறைக்கெதிரான சட்டம் இருக்கின்றது என்று தெரிந்த ஆண்கள் மனைவியை அடிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது என்று தங்கள் கதைகளைக் கூறுகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வெளிநாட்டவரை மணந்த நூற்றுக்கணக்கான பெண்கள், இதுவரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தக்கு ஓடி  அலைந்தவர்கள், இப்பொழுது ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். பார்த்தீர்களா? ஏங்கோ எல்லோரும் இணைந்து செய் சமூகப் பணி எப்படி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் விடிவைத் தந்திருக்கின்றது என்று. மக்கள் ஒன்று கூடி செயலாற்றுவதனால் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை விளக்க இம்மாதிரியான ஏராளமான கதைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மக்கள் அணிதிரளவேண்டும் என்பது தெளிவாகின்றது.
 மக்களை அணிதிரட்டுதல்
மக்கள் அணிதிரளுவது தன்பாட்டிலேயே சும்மா நிகழும் ஒரு நிகழ்வல்ல. தற்கு சில முன்னிபந்தனைகள் இருக்கின்றன.
1) தனித்தனியே தங்கள் வீடுகளுக்குள்ளிருக்கும் மக்கள், பொது நோக்கத்துக்காக ஒன்று சேரும் பண்பாட்டினை உருவாக்க வேண்டும்.
நாங்கள் எங்களுக்குத்தான் இருக்கின்றது என்று நினைக்கும் பிரச்சினைகள் யாவும் பிறருடன் ஒன்று சேரும்போதுதான் அது பொதுவில் இருக்கின்ற பிரச்சினை என்று உணர்ந்து எங்களுக்கள் ஒற்றுமையை வளர்க்க முயலுவோம். இதற்காக அடிக்கடி ஒன்று கூடி மக்கள் தங்களுக்குள் உறவு வளர்க்கப் பழக வேண்டும். புதிய மனிதர்களைச் சந்திக்கும்போது எப்போதும் பல புதிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். உண்மையான உலகத்திலிருந்து உலக நடப்புக்கள் பற்றிக் கற்றுக் கொண்டு அறிவில் முதிர்ச்சி அடையலாம். இதை விட்டு, தொலைக்காட்சி நாடகங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களில் நாம் மூழ்கி விடுவதனால் முதலாவது ஒன்று சேரும் பண்பினை இழக்கின்றோம், அடுத்தது உலகத்தைப் படிக்காமல் தொலைக்காட்சியின் மாய உலகத்தில் நடக்கத் தொடங்குகின்றோம். இதனால்தான் வெறுமனே தொலைக்காட்சியே கதியென்றிராமல் நாலு மனிதர்களைச் சந்தித்து சமூகம் தொடர்பாக நாம் முதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது.
2) ஒரு விடயத்தை அல்லது பிரச்சினை பற்றிய தெளிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
ஆம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க மக்கள் ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அப்பிரச்சினையின் ஆழங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? இந்த அறிவு பல முறைகளில் நம்மை வந்தடைகின்றது. ஒன்று எமது சொந்த அனுபவங்களினூடாக அதை ஏற்படுத்துகின்றோம். இரண்டு பிறர் சொல்லக் கேட்டுப் பயனடைகின்றோம். மூன்றாவது வாசித்து, வேறு தகவல்களைத் திரட்டி அறிந்து கொள்கின்றோம். அடுத்து, பிறருடன் கலந்துரையாடித் தெளிகின்றோம். இவையெல்லாவற்றுக்கும் நாங்கள் கூடிக் கதைக்க வேண்டும் இல்லையா?
3) ஒரு பிரச்சினை பொதுப் பிரச்சினை என்பதை அறிவதும், அதனைக் கூடிக் கலந்துரையாடித் தெளிவதும் போதாது. இதை தீர்க்கலாம் என்கின்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கு பொது நிகழ்வுகள் உதவுகின்றன. பொது நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்கின்ற படியினாலே, அங்கிருப்போர் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கின்றது. நாம் மட்டும் தனியாக இதில் ஈடுபடவில்லை, எம்மைப்போல் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றார்கள் என்கின்ற தெம்பும் தைரியமும் உருவாக அங்குள்ள எல்லோருமே மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராகி விடுகிறார்கள். பிறகென்ன, மாற்றங்கள் வந்தது போலத்தான். ஆத்துடன், ஏராளமான மக்கள் கருத்து இங்கு ஒருமித்திருக்கின்றது என்று கண்டவுடனேயே அதிகாரத்திலுள்ளவர்களும் தீர்மானம் எடுப்பவர்களும் உஷாராகி மக்கள் வழிக்கு வந்து விடுவார்கள். ராஜீவ் காந்தியின் கதையில் பார்த்தீர்கள்தானே
மேலே கூறியவற்றைப் படித்துப் பார்த்து யோசியுங்கள். அவ்வளவு தகைமைகளையும் கூட்டச் சந்திப்புக்களும் பொது நிகழ்வுகளுமே எங்களுக்குத் தருகின்றன.
கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் நாம் பொதுவாகக் கலந்து கொள்ளும் முறைகள்
மக்கள் மத்தியில் கூட்டுறவினை உருவாக்குவதற்காகவே அனேகமாக சகல அமைப்புக்களும் சிறு கூட்டங்களையும் பொது நிகழ்வுகளையும் தொடர்ந்து ஏற்பாடு செய்தவண்ணம் இருக்கின்றன. இவற்றில் நாம் எப்படிக் கலந்து கொள்கின்றோம்? இந்த இடத்தில் வாசிப்பை நிறுத்தி விட்டு உங்கள் குழுவில் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து வாசியுங்கள்.
கூட்டங்களுக்கு அங்கத்தவர்கள் சமுகமளிப்பதில்லையென்பது பரவலான குற்றச்சாட்டாகும். புல இடங்களில் குழுக் கூட்டங்களுக்கு வருவதற்கும் போக்குவரத்துச் செலவுகளைக் கேட்பதுமுண்டு. கூட்டம் நடக்கின்ற நேரத்தில் சித்தி அண்ணாமலை என்று தொலைக்காட்சித் தொடர்கள் நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். யாரும் வரமாட்டார்கள். பொது நிகழ்வுகள் என்றால் நிச்சயமாக போக்குவரத்துக்கு வானோ பஸ்ஸோ ஒழுங்கு பண்ணா விட்டால் யாரும் வரமாட்டார்கள். போதாக்குறைக்கு வந்தவர்களை உபசரித்து சிற்றுண்டி உணவுகளையும் வழங்க வேண்டியதாக இருக்கின்றது.
இதை நீங்கள் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்தால் உண்மையில் வெட்கப்படவேண்டும். உங்கள் தேவைகளுக்குப் போகும்போது நீங்கள் யாரிடமாவது போக்குவரத்தச் செலவுகளைக் கேட்பீர்களா? சிற்றுண்டி கேட்பீர்களா? உதாரணமாகக் கதிர்காமத்துக்கு தல யாத்திரை போகவேண்டுமென்றால் உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை அல்லவா? ஏனெனில் உங்களுக்கு ஒன்று உண்மையாகத் தேவைப்பட்டால் அதைச் செய்து முடிப்பீர்கள் இல்லையா?
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு பொதுப்பிரச்சினையை எங்கள் சொந்தத் தேவைகளாக நாம் கருதுவது மிகக் குறைவாகவே இருக்கின்றது. குடும்பவன்முறைக்கெதிராகச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு பொது நிகழ்வொன்றை நடத்தினால் அதில் வரும் பெண்களுக்கு போக்குவரத்து தொடக்கம் எல்லா வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அது கடைசியில் சட்டமாக அமுலுக்கு வந்தால்...?.... அதனால் நன்மை அடைபவர்களும் அந்தப் போக்குவரத்து இத்தியாதிகளைக் கேட்ட பெண்களும் அவர்கள் மகள்மார்களும்தானே. இன்று விழுது அமைப்பு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமென்று போராடுகின்றது. இது நிறைவேறினால், இதனால் நன்மை அடைந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகார பூர்வமாக நுழையப்போகின்றவர்கள் யார்? சகல பெண்களும் அல்லவா? விழுது உத்தியோகத்தர்கள் அல்லவே.
இது மிக எளிமையான, ஆனால் அனேகம் பலரும் உணராத உண்மையாகும். இதை நாமெல்லோரும் மனதார உணரும்போதுதான் சமூகப் பொறுப்புடன் நடக்கும் உண்மையான நாட்டுப்பிரசைகளாக வளருவோம். இல்லாவிட்டால், ஐயோ அவன் அப்பிடிச் செய்யிறான், இவன் இப்பிடிச் செய்யிறான் நாங்கள் என்ன செய்ய என்று கையைப் பிசைந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமாகத்தான் நிற்போம்.
ஒரு கூட்டம் அல்லது பொது நிகழ்வு நடக்கப்போகின்றது என்றால் நாங்களே அதற்குச் செல்லுவதற்கான ஊக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். அதில் எங்கள் சமூகப்பொறுப்பினை அடையாளம் காணவேண்டும். இதனால் எங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிந்திருத்தல் வேண்டும். அறிந்து தெரிந்து நாங்களே எங்கள் வாழ்ககையின் போக்கினைத் தீர்மானம் செய்கின்ற செயலாளர்களாக வரவேண்டும். ஒரு நிகழ்வுக்குப் போக போக்குவரத்து வசதி உங்கள் ஊரில் இல்லையா, நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி நிதியைத் திரட்டி போக்குவரத்து ஏற்பாடு செய்ய முடியாதா? ஒரு கூட்டம் நீண்ட நேரம் போகும் சாத்தியக்கூறு இருக்கின்றதா, உங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிற்றுண்டிகள் செய்து எடுத்துவர முடியாதா? யோசித்துப் பாருங்கள்.
 நிகழ்வுகளில் பங்குகொள்ளத் தயங்குவதற்கான நியாயங்கள்
கூட்டங்களில் கலந்து கொள்ள மக்கள் பஞ்சிப்படுவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. ஒரு வித குறித்த நோக்கங்களுமின்றி, பங்குகொள்ளும் மக்களின் நேரத்தை வீணாக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்னும் பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. அரச நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் தங்கள் நிதிகளை வெறுமனே முடித்து அறிக்கை எழுதுவதற்காக அவசர அவசரமாக இந்த மாதிரியான கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்கின்றனதான். அது உண்மைதான். ஆனால் அதற்காக எல்லாக் கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்க முடியாது. குறித்த முக்கியமான நோக்கங்களுக்காகவும் பொது நிகழ்வுகளும் போராட்டக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. அவற்றை அக்கறையுடன் இனம்பிரித்துப் பார்த்து அடையாளம் கண்டு பங்குபற்றவேண்டும்.
ஒரு நிறுவனம் ஒழுங்காகக் கூட்டங்களை எற்பாடு செய்யாவிட்டால், துணிந்து அதிலுள்ள குறைகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். ஏனெனில், அக்கூட்டங்கள் ஒழுங்காக நடந்தால் உங்களுக்குத்தான் நன்மை தருமேயொழிய அவர்களுக்கல்ல. வேண்டுமானால், அக்கூட்டங்களை எப்படி நடத்தலாம் என்று நீங்களே அவர்களுக்கு சிபாரிசுகளை வையுங்கள். எந்த விடயம் கதைக்கப்படவேண்டும், எதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை நீங்களே சொல்லி விடுங்களேன். அவர்கள் திருந்தாமலா போகிறார்கள்? உங்கள் தேவைகளை அறிந்து உங்களுக்கு சேவை செய்யத்தான் இந்த நிறுவனங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1) உங்கள் ஊரில், குறித்த நொக்கத்தை அடைவதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவையெவையென்று கருதுகிறீர்கள்? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
2) பங்குபற்றுபவர்களுடைய நேரத்தை வீணாக்கி நடத்தப்படும் சந்திப்புக்களும், கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவை? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
3) நன்றாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு ஒழுங்காக பங்கபற்றுனர்கள் வருகை தருகிறார்களா? அதற்கு ஏதேனும் சன்மானம் எதிர்பார்க்கிறார்களா? சுன்மானம் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அல்லது ஒழுங்காக வருகை தரவில்லை என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுக.
4) ஒழுங்கான முறையில் நடத்தப்படாத கூட்டங்களைப் பற்றி என்ன செய்யப்போகிறீர்கள்? விளக்குக.
5) சமுகப்பொறுப்புடன் மக்கள் ஒன்று கூடுவதை ஊக்குவிப்பதற்கு என்ன செய்யலாம்? உம்முடைய நடவடிக்கையின் முதல் படி என்ன? விளக்குக.. இதனை எவ்வளவு காலத்தக்குள் செய்து முடிப்பீர் என்பதை குழுவுக்குச் சொல்லுக. ஓவ்வொரு அங்கத்தவரும் இவ்வாறான வேலைத் திட்டமொன்றை வைத்திருத்தல் நன்று.





No comments:

Post a Comment