Search This Blog

Monday, August 13, 2012

கலிங்கத்துப் பரணி

பரணி
பரணி என்பது போரில் ஆயிரம்
யானைகளை வென்ற வீரனைப் பாடும்
சிற்றிலக்கிய வகை ஆகும். 
   
கலிங்கத்துப்பரணி , பரணி எனப்படும்
தமிழ்ச் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த ஒரு நூல்.
குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனைப்
பாட்டுடைத்தலைவனாகக்
கொண்டது. அனந்தவன்மன்
என்னும் வட கலிங்க மன்னன்
திறை கொடாமலிருந்த பிழையின்
காரணமாக முதலாம் குலோத்துங்க
சோழனின் படைத்தலைவனும்
அமைச்சனுமாயினாயிருந்த கருணாகரத்
தொண்டைமான் கி.பி. 1112 ஆம்
ஆண்டில் போரில் வென்ற
செய்தியே நூற்பொருள். இது
செயங்கொண்டார் என்னும்
புலவரால் இயற்றப்பட்டது.

 போரிலிருந்து மீண்டதலைமகன் பால் புலவியுற்ற
தலைமகளது ஊடலைத் தீர்க்க புலவர்கள்
வாயிலாவதும், புலவியாற்றிய பின்னர்,
தலைவன் சென்ற காட்டின்
கொடுமையையும் தலைவனின்
வீரத்தையும், அக்காட்டிலுள்ள பேய்கள்
காளிக்குச் சொல்லுவதையும்,
காளி பேய்களுக்கு உரைப்பதையும் எடுத்துச்
சொல்லும் வடிவுடன் பரணி
நூலானது அமையும். பரணி நாளில் பேய்கள்
கூடி நிணச்சோறு( இரத்தமும் இரைச்சியும் கலந்த
உணவு) அட்டு ( சமைத்து)
உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடிக் களித்து போரில்
வென்ற மன்னரைப் புகழும் புகழ்ச்சியைக்
கூறுவது. காளிக்குக் கூளிகள் கூறுவதாக
அமைவது.
நூலின் அமைப்பு முறை
கலிங்கத்துப்பரணியின் நூலமைப்பில் பின் வரும்
பொருள்கள் விளக்கப்படுகின்றன.
கடவுள் வாழ்த்து
போர்த்தலைவனாகிய குலோத்துங்கன்
நெடிது நின்று ஆட்சி செய்ய
வேண்டுமென கடவுளைத் துதித்துப்
பாடப்படுகிறது.
கடை திறப்பு
கலிங்கத்தின் மேல் படையெடுத்துச்
சென்ற வீரர்கள் வருவதற்குக் கால
தாமதம் ஆனதால் அதனைக்
கண்டு மகளிர் ஊடல்
கொண்டு கதவை அடைத்ததாகவும்,
அப்பெண்கள் மகிழுமாறும் ஊடல்
நீங்கிக் கதவைத் திறக்குமாறும் செய்ய,
தாம் வெற்றி பெற்ற கலிங்கப்போர்
பற்றி கூறுவது போலவும் அமைந்தது.
தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பாடும் சிறப்புடையவன் குலோத்துங்க சோழன்.அவனுடைய அருமை பெருமைகளையும், கலிங்க வெற்றியை அவனுக்கு ஈட்டித்தந்த கருணாகரத் தொண்டைமானின் சிறப்புகள் பலவும் இதில் எடுத்துரைக்கப் பட்டுள்ளன.


..ஜெயங்கொண்டார்.

அன்றைய தமிழகத்தின் சிறப்பு.



நிழலில் அடைந்தன திசைகள் !

நெறியில் மறைந்தன மறைகள்!

கழலில் அடைந்தனர் உதியர்!

கடலில் அடைந்தனர் செழியர்.

கருணையொடும் தனத உபய 
கரம உதவும் பொருள் மழையின் 
அரணிய மந்திர அனல்கள் 
அவை உதவும் பெருமழையே 

பரிவில் சுமந்தன கவிகள் !
பகடு சுமந்தன திறைகள்!
அரசு சுமந்தன இறைகள்!
அவனி சுமந்தன புயமும்!
விரித்த வாள்உகிற் விழித் தழல் புலியை 
மீது வைக்க இமயத்தினைத் 
திரித்த கோளில் வளைவு உண்டு! நீதிபுரி 
செய்ய கோயில் வளைவு இல்லையே- 

கதங்களில் பொருது இறைஞ்சிடா அரசர்
கால்களில் தளையும் நூல்களின் 
பதங்களில் தளையும் அன்றி வேறு ஒரு 
பதங்களில் தலைகள் இல்லையே!

மென்கலாப மடவார்கள் சீறடி
மிசைச் சிலம்பு ஒலி விளைப்பது ஓர்
இன்கலாம் விளைவது அன்றி , எங்குமோர்
இகல்கலாம் விளைவது இல்லையே !


எங்கும் எழில் ,எங்கெங்கும் இலங்கும் நெறி முறைகள்.இரு கைகளாலும் அள்ளி வழங்கும் வள்ளன்மைக்குரிய அரசன், குலோத்துங்கச் சோழன். ;பருவம் தவறாமல் மழை பெய்யும் நாட்டிற்குரியவன். பசுமை படர்ந்த நிலங்கள். பாவலர்கள் அவனிடமிருந்து பரிசுகளைச் சுமந்து சென்றனர்.
அவனுடைய அரசுக்குரிய பங்கை, திறையை எருதுகள் ஏராளமாகச் சுமந்து வந்தன. குறுநிலங்களின் ஆட்சியதிகாரத்தை சிற்றசர்கள் சுமந்திருந்தனர்.ஆட்சியின் மாட்சிக்குரிய எல்லாவற்றையும் ,ஏற்றமுரச் சுமந்திருந்தான் குலோத்துங்கன். அவன் இமயத்தில் மாட்டியிருந்த புலிக கொடியின் கோலில் வளைவு இருந்திருக்கக் கூடும்; ஆனால் எங்கும், எவருக்காகவும்,எப்போதுமே வளையாத சிறப்புக்குரியது அவனுடைய சித்திரச் செங்கோல். பணிவற்ற பகைவர்க்குத் தளையிட்டவனேயன்றி, வேறேதேர்க்கும் தடையிட்டு அறியாதவன். கண்ணியர்தம் கால் சிலம்பின் நல் லொலியை அன்றி வேறு வல்லொலி,வழக்கொலி ,வம்பொலி என ஓலங்கள் ஏதும் ஒலிக்காத உயர்ந்த நாடு ,குலோத்துங்கன் ஆண்ட கோலத் திருநாடு தமிழ் நாடு

No comments:

Post a Comment