Search This Blog

Saturday, July 1, 2017

சூன்யத்தின் பெருவெளியில் ஒரு சிறு துளி

இருளடர்ந்து வரும் அந்திப்பொழுதொன்றில்
ஏதேனும் ஒரு ஆற்றின் பரப்பை பார்க்கையிலே
மனது பிசையும் உணர்வை உதற முடியவில்லை
என்னால் எப்போதுமே

மனதின் விசாலங்களை
சூன்யம் சூழும்போதெல்லாம்
பெருமணல் பரப்பிக்கிடக்கும்
அந்தி நேரத்து ஆற்றோரத்தை
தனியாய் அளைந்து திரிய
மனது விளைகின்றது..........

முன்பனிக்காலமொன்றில்
குளிர் சுருட்டும் உடலோடு
தோழனொருவனின் நெஞ்சினில் சாய்ந்தபடி
நிலவை வெறித்த
ஆற்றோர தில்லை மர வாழ்வை
எப்படி நான் மறந்து போனேன்.......

மெலிதான அரவத்திலும்
துணுக்குற்று விழித்தெழுவதும்
பின் நீளும் இரவுகளை
கதை மொழிந்து கடத்துவதும்.
ஆட்காட்டியின் கேவலிலே
அனைத்தும் அடங்குவதும்
சோவெனப் பெய்யும் மழையில்
விறைத்து நடுங்குவதும்
எப்படி மறந்தேன் என் தில்லை மர வாழ்வை?

ஆழப்படுக்கையினில்
அழவற்ற அற்புதங்களைப்
பொதித்திருக்கும்
கோரைக்களப்பாறு அமைதியாய்
தூங்கும் நடு நிசி நேரத்திலே
துள்ளியெழும் கயல் மீனில்
நிலவு தெறிக்க உண்டாகும்
வெள்ளி வளைவுகளை ரசித்த
தருணங்களை எப்படி நான் மறந்து போனேன்?

அந்த இரவுகள் அச்சங்களில் முடிந்தது
அந்த இரவுகள் அழுகைகளில் முடிந்தது
அந்த இரவுகள் மரணங்களோடு முடிந்தது
அந்த இரவுகள் காதலின் துயரோடு முடிந்தது
ஆனாலும் யாவற்றையும் மீறி
அந்த இரவுகள் நம்பிக்கையோடு முடிந்தது

எப்படி மறந்தேன் என் தில்லைமர இரவுகளை?.....
Yuvendra Rasiah

No comments:

Post a Comment