Search This Blog

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Sunday, September 1, 2019

ஆக்கபூர்வமான விமர்சனம்

எதிரியின் மீதான நம் விமர்சனம்
புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும்.
நட்பு சக்திகளின் மீதான விமர்சனம்
பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது ஒருபோதும் உதவாது.
ஏனெனில், நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும்.
ஆனால், அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எமது உரையாடல்கள் பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.
நன்றி- tholar

Saturday, August 17, 2019

எப்படி நாம் வெல்வது அல்லது யாரை ஆதரிப்பது?

Karunakaran Sivarasa
சிறுபான்மையினச் சமூகங்கள் யாரை ஆதரிப்பது?
-----------------------------------------------------------------------------

அரசியலில் எப்போதும் இனிய சந்தர்ப்பங்களே அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. மகாத்மாக்களும் புனிதர்களும்தான் போட்டியாளர்களாகவும் தலைவர்களாவும் நமக்கு முன்னேயிருப்பார்கள் என்றில்லை. கண்ணியமான அரசியல் நடத்தைகளே நிகழ்ந்தேறும் என்பதற்கும் எந்த உத்தரவாதங்களுமில்லை. நமக்கு உவப்பானவர்களே தேர்தற் களத்தில் நிற்பார்கள் என்றும் சொல்ல முடியாது.
யதார்த்தத்தில் எப்போதும் எதிர்நிலைச் சக்திகளே நமக்கு முன்னே எழுந்து நிற்கின்றன. ஆகவே தவிர்க்க முடியாமல் நாம் அவற்றை எதிர்கொண்டே தீர வேண்டியிருக்கிறது. ஆக நமது திறனெல்லாம் அவற்றை எப்படிக் கையாளப்போகிறோம் என்பதிலேயே உள்ளது. இராஜதந்திரமாக, மதிநுட்பமாக, தந்திரோபாயமாக, சாணக்கியமாக, ஆளுமையாக, ஆற்றலைக் கொண்டதாக என.
 
எந்தப் பெரிய எதிர்நிலைச் சக்தியையும் நாம் நமக்குச் சாதகமாகக் கையாள முடியும். காட்டில் முயலையும் சிறு விலங்குகளையும் மட்டும்தான் நாம் வேட்டையாட முடியும் என்றில்லை. நம்மை விட வலுக்கூடிய, அபாயங்களை உண்டாக்கக் கூடிய விலங்குகளைக் கூட மனிதர்கள் வேட்டையாடலாம். கடலிலும் அப்படித்தான். அப்படி வேட்டையாடித்தான் மனித சமூகம் வென்று நிலைத்திருக்கிறது. இங்கே தேவைப்படுவது அவற்றுக்கான உபாயங்களேயாகும்.
தற்போது நமக்கு முன் வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் எவரையும், எந்தச் சக்தியையும் எந்தக் கட்சியையும் எதிர்கொள்ள முடியும். அதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில். அதற்கான தெளிவோடு. அதற்கான புரிதல்களோடு. அது சஜித் பிரேமதாசவாக இருந்தாலென்ன? கோத்தாபாய ராஜபக்ஸவாக இருந்தாலென்ன? அல்லது வேறு எந்தப் பேயோ பிசாசாகவோ இருந்தாலென்ன?
எளிய விசயம், எந்த அடிப்படையில் இந்த விடயத்தைக் கையாளப்போகிறோம் என்பதாகும்.
தமிழ் மக்கள் அல்லது தமிழ்பேசும் சிறுபான்மையினச் சமூகத்தினர் தங்களுடைய பிரச்சினைகளின் அல்லது விடயங்களின் அடிப்படையில் (Issue Based) தமது நிலைப்பாட்டை முன்னிறுத்தி ஆதரவை வழங்க முடியும். இந்த விடயங்களின் அடிப்படையிலான (Issue Based) ஆதரவை நாம் இரண்டாக வகுத்துக் கொள்ளலாம். ஒன்று உடனடியான, அவசரகதியில் மேற்கொள்ள வேண்டிய வேலைகள். இரண்டாவது, கால எல்லையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள். இதை மையப்படுத்தி எமது நிபந்தனையை விதிக்கலாம். இதற்கான உத்தரவாதத்தைக் கோரலாம். இந்த உத்தரவாதம் தேர்தலுக்குப் பிறகு, அதிகாரத்தில் ஏறிய பிறகு கைவிடப்படலாம் என்றால், தரப்படும் உத்தரவாதத்துக்கே உத்தரவாதம் கோர முடியும். அதெப்படி, உத்தரவாதத்துக்கு உத்தரவாதத்தைப் பெறுவது? என்று நீங்கள் கேட்கக் கூடும்.
தற்போதைய அரசியல் சாசனத்தின்படியும் அரசியல் யதார்த்தத்தின்படியும் இதற்கான வழிகளும் அடிப்படைகளும் தாராளமாகவே உள்ளன. எப்படியென்றால், எந்த வேட்பாளரும் ஜனாதிபதித் தேர்தலில் மட்டும் வெற்றிபெற்றால் போதாது. வெற்றிபெறும் ஜனாதிபதியானவர் நிம்மதியாகவும் நிறைவாகவும் அதிகாரத்தைக் கையாள வேண்டுமென்றால், ஆட்சி பரிபாலனத்தை இழுபறிகளில்லாமல் மேற்கொள்ள வேண்டுமென்றால் அவருக்கு இசைவான - சார்பான பாராளுமன்றம் அமைய வேண்டும். இல்லையென்றால் தற்போதைய மைத்திரி – ரணில் இழுபறி போலவே தொடர்ந்துமிருக்கும்.
ஆகவே பாராளுமன்றத் தேர்தலின் வெற்றியும் இதனோடு இணைந்தே உள்ளது. இந்த நல்வாய்ப்பை நாம் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவர் ஆதரவைப் பெற்றுக்கொண்டு கல்தா காட்டினால் பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு அல்லது அவர் சார்பானவர்களுக்கு நாம் நெருக்கடியை ஏற்படுத்தலாம். கல்தா காட்டலாம். இப்படி ஏராளம் வழிமுறைகள் நமக்குண்டு. வாய்ப்புகள் இருக்கின்றன. இதை நோக்கியே நாம் சிந்திக்க வேண்டும். எதற்குள்ளும் காணப்படும் இடைவெளிகளைத் தேடுவதே நமது பலத்தைக் கண்டடைவதற்கான வழி. எதையும் எதிர்மறையாகப் பார்க்க விழைந்தால் அது பலவீனமாகவே இருக்கும்.

Thursday, August 8, 2019

கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்பது


Karunakaran Sivarasa
கூட்டணி அல்லது கூட்டமைப்பு என்பது பல தரப்புகளின் பங்கேற்பு அல்லது கூட்டுச் செயற்பாட்டுக்கான களமாகும்.
இதை அதற்குரிய அர்த்தத்துடன், பெறுமானங்களோடு அணுகுவதற்குப் பதிலாக, நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, இது ஏதோ தமக்கு வழங்கப்பட்ட தயவு, வாய்ப்பு, கொடை, ஆதரவு, சலுகை என்கிற மாதிரியே பல கட்சிகளும் (தலைவர்களும்) செயற்படுவதைக் காண்கிறோம்.
இதனால்தான் ரெலோவும் புளொட்டும் தமிழரசுக் கட்சிக்கு முன்னால் தம்முடைய சுயத்தையும் ஆற்றலையும் இழந்து கைகட்டிக் கொண்டு நிற்கின்றன.
இவ்வாறே ஐக்கிய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற – அதற்கு ஆதரவளிக்கின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை மக்கள் கட்சி போன்றவை எல்லாம் ரணில் – ஐ.தே.கவின் முன்னால் பவ்வியம் கொள்கின்றன.
இப்படிக் கையைக் கட்டி, வாயைப் பொத்திப் பவ்வியம் கொள்வதற்கு ஏன் தனிக்கட்சி என்ற அடையாளங்கள்? கட்சித் தலைமை என்ற சலுகைகளைப் பெறுவதற்கு மட்டும்தானா?
தனி அடையாளம் என்பது ஒரு அரசியற் கட்சிக்கும் தலைமைக்கும் முக்கியமானது. தொடர்ந்தும் தனித்துவத்துக்கு இடமின்றி உள்ளடங்கியிருக்க முடியாதென்பதால்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் (சுரேஸ்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (கஜேந்திரகுமார்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறின என்பது கவனத்திற்குரியது..

Monday, August 5, 2019

சுமந்திரன் சட்டத்தரணியா? or அரசியல் பிரதிநிதியா?


 
Karunakaran Sivarasa
அரசியல் ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்களைச் செய்யாமல் விட்டுவிட்டு அந்தத் தவறுகளை மறைப்பதற்காக நீதி மன்றில் வழக்காடி வென்றதாகப் படம் காட்டுவது தமிழர்களை படு முட்டாளாக்கும் செயற்பாடே...
அரசியல் தீர்மானங்களைச் சரியாக எடுத்திருந்தால் அல்லது தீர்மானங்களை எடுப்பதற்கு முயற்சித்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். இப்படி நீதிமன்றப்படிகளில் ஏறி இடைக்காலத் தடை உத்தரவு என்ற சில்லறைத் தீர்வுகளைப் பெற வேண்டி வராது...
இதைத்தான் முன்னரும் தமிழ்த் தலைவர்கள் செய்தனர். தங்களுடைய அரசியல் பணிகளைச் செய்யாமல் அவர்கள் பிரபல சட்டத்தரணிகளாகவே புகழ் பெற்றனர்...
அரசியற் தலைவர்களாகச் செயற்பட்டிருந்தால் பல விடயங்களில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டிருக்கும்.
ஏனென்றால் அரசியல் என்பது வித்தை அல்ல. அது ஒரு விளைவு.
ஆகவே தமிழ்ச்சனங்களின் காதுகளில் பூவைப்பதை விட்டு விட்டு ஆக்கபூர்வமாக - அரசியல் ரீதியாகச் செயற்பட்டு தீர்வைக் காண முயற்சியுங்கள். 
  அரசியலில் சுமந்திரன் கீழிறங்குவதையும் மனோ கணேசன் மேலுயர்வதையும் பார்க்கிறோம். இருவரும் ஆட்சியிலுள்ள ஐ.தே.க அரசாங்கத்தையே ஆதரிக்கின்றனர். மனோ கணேசன் வெளிப்படையாக ஆதரிக்கிறார். சுமந்திரன் மறைத்துச் சுழித்து விளையாட முற்படுகிறார். ஆனால் மனோ அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிக்கிறார். எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கிறார். நெருக்கடியைக் கொடுக்க வேண்டிய இடத்தில் நெருக்கடியைக் கொடுக்கிறார். இதுதான் சாணக்கிய அரசியல். அவரே சொல்வதைப்போல தேவைக்கேற்ப ஆதரவாளராகவும் எதிர்த்தரப்பு ஆளாகவும் செயற்படுகிறார்.

ஆனால், சுமந்திரனோ எப்போதும் ரணிலையும் அவருடைய அரசாங்கத்தையும் பாதுகாப்பதையே குறியாகக் கொண்டிருக்கிறார். ரணிலுக்குத் தலையிடி என்றால் பதறிப்போய் பனடோலும் தண்ணீருமாக ரணலின் காலடியில் நிற்கிறார். இதுதான் சனங்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இதை மறைப்பதற்கே அவர் நீதி மன்றத்தின் மூலமாகப் போராடுவதாகக் காட்டுகிறார். இதில் இரண்டு வகையான உத்திகளைச் சுமந்திரன் கையாள முற்படுகிறார்.

1. மனோ கணேசன் போன்றவர்கள் ஏற்படுத்துகின்ற நெருக்கடியிலிருந்து ரணிலைக் காப்பாற்றுவது. அதாவது, தமிழர்களுக்குச் சாதகமான அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என சிங்கள மக்களிடம் கேள்வி எழுந்தால், அப்படியெல்லாம் இல்லை. இது நீதி மன்ற நடவடிக்கையே தவிர, அரசியல் ரீதியானதல்ல என்று காட்டுவதற்கு.

2. அரசியல் தீர்மானமாக இவற்றை மாற்ற முடியாதவாறு நீதி மன்ற விவகாரமாக முடக்கி வைத்திருப்பது.

ஆக மொத்தத்தில் தானும் செய்யாமல் மற்றவர்களையும் உருப்படியான காரியங்களைச் செய்ய விடாமல் தடுக்கும் வேலை இது.


ஆனால், இதைச் சனங்கள் உணராத விதமாக தான் இலவசமாக வழக்குப் பேசுவதாகக் காண்பிக்கிறார் சுமந்திரன்.

நஞ்சை இலவசமாகக் குடிக்கக் கொடுப்பதைப் போன்ற காரியம் இது.

இல்லையென்றால் தமிழர்கள் எல்லாம் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிப்பதற்குச் சம்மதம் என்று சொல்லியிருப்பாரா? அதுவும் பாராளுமன்றத்தில்....

இதற்குப் பிறகும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்கட்சியும் ஈழத்தமிழருடைய அரசியலின் விடிவெள்ளியாகச் செயற்படும் என்று யாராவது கனவு கண்டால் அதை விட முட்டாள் தனம் வேறில்லை.

Monday, July 22, 2019

இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல் ஷோபாசக்தி

Karunakaran Sivarasa

ஞானம் விளைந்தது
-------------------------------
சில நாட்களுக்கு முன்பு இணையத் தளமொன்றுக்கான நேர்காணலுக்காக எழுத்தாளர் ஷோபாசக்தியிடம் சில கேள்விகளை எழுப்பினேன். நான் எழுப்பியிருந்த கேள்விகள் அனைத்தும் இலங்கையின் இனப்பிரச்சினை, இலங்கைத்தீவின் இன்றைய அரசியல் சூழல், இனப்பகை அல்லது இன முரணைத்தீர்ப்பதற்கான வழிமுறைகள், பொறுப்புகள் பற்றியவையாக இருந்தன. கூடவே இலங்கையில் இடையீடு செய்யும் வெளிச்சக்திகளைப் பயன்படுத்திக்கொள்வது, புலம்பெயர்ந்திருக்கும் இலங்கைச் சமூகங்களின் பொறுப்பும் பணிகளும் என்பதைப் பற்றியும்.
என்னுடைய கேள்விகளுக்கு மிகச் சுருக்கமாகவே பதிலளித்திருந்தார் ஷோபாசக்தி. ஆனால் அவருடைய பதில் வேறு விதமாக இருந்தது. “உங்களுடைய கேள்விகளில் பத்துக்கு எட்டுக் கேள்விகள் புராதனத்தன்மை வாய்ந்தவை. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு இன்றைய சூழலில் கடவுளைத் தவிர வேறு யாராலும் பதிலளிக்க முடியாது. அப்படிப் பதில் இருப்பதாக யாராவது சொன்னால் அது மனமறிந்து சொல்லும் பொய்” என்று.
அத்துடன், “யாருக்கும் அரசியல் புத்திமதியோ ஆலோசனையோ கூறும் நிலையில் நானில்லை. வேண்டுமானால் என்னைப்பற்றி, என்னுடைய செயற்பாடுகளைப் பற்றிக் கேளுங்கள். தாராளமாகப் பதிலளிக்கிறேன்” எனவும்.
அவருடைய இந்தக் கண்ணியமான பதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்டது என்றாலும் இங்கே அதைத் துணிந்து நான் பகிரங்கமாக எடுத்தாள்வதற்குக் காரணம், அதில் உள்ள நேர்மைத்தன்மையும் உண்மையுமாகும். மட்டுமல்ல அது ஒரு பரந்துபட்ட விழிப்பூட்டலைச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்பதாலும்.
ஷோபாசக்தி இன்று உலகளவில் அறியப்பட்ட எழுத்தாளர். திரைக்கலைஞர். நாடகர். ஷோபசக்தியின் எழுத்துகளும் பிற கலைச் செயற்பாடுகளும் அவரே சொல்வதைப்போல “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” என அரசியல் மயப்பட்டவையே. அதுவும் வெளிவெளியான அரசியல்.
இப்படி அரசியல் முதன்மைப்பாட்டுடன் தன்னுடைய எழுத்துகளையும் கலை வெளிப்பாடுகளையும் முன்வைத்து வரும் ஷோபாசக்தி, நான் எழுப்பியிருந்த அரசியல் ரீதியான கேள்விகளைக் குறித்துச் சொன்ன பதிலிலுள்ள நியாயங்களும் உண்மையும் அவருடைய நிலைப்பாடும் மிகுந்த கவனத்திற்கும் பரிசீலனைக்குமுரியவை. அதாவது தன்னுடைய எழுத்துகளையும் வாழ்வொழுங்கையும் அரசியல் சிந்தனையின் பாற்பட்டு மேற்கொண்டு வரும் ஒரு முன்னணிக் கலைஞர், இந்த அரசியல் குறித்துப் பேச ஆர்வம் கொள்ளவில்லை எனில் அந்த அரசியல் செல்லுபடியற்றது - பொருளற்றிருக்கிறது என்பதே அர்த்தமாகும்.
இதற்குப் பிரதான காரணம் ஷோபாசக்தி எழுத்தாளராகவும் கலைஞராகவும் இருக்கிறார் என்பதாகும். அவர் அரசியல்வாதியல்ல. அரசியல் லாபத்தின்பாற்பட்ட எழுத்துத்துறையைச் சேர்ந்தவரும் இல்லை. அவர் புனைவை எழுதினாலும் புனைவியக்கத்தில் செயற்பட்டாலும் அவற்றில் வலியுறுத்தப்படும் விடயங்கள் எதுவும் புனைவற்றவை. அவை உண்மைக்குரியவை. சத்தியமானவை. நியாயத்தின் அடியொலிப்பான்கள். உண்மைக்குரியவற்றையும் சத்தியமானவற்றையும் எழுதும் ஒருவர் பொய்மைகளால் கட்டமைக்கப்பட்டவற்றின் வழி நின்றியங்க முடியாது.
ஷோபாசக்தியினுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி அரசியல் சார்ந்த எண்ணப்பாடுகளால் வழிநடத்தப்பட்டதே. ஆனாலும் அடிப்படையில் அவர் எழுத்தாளர், கலைஞர். ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகளுக்கு மேல் அவர் முற்று முழுதாக எழுத்தாளராகவும் கலைஞராகவுமே இயங்கிக் கொண்டிருக்கிறார். புறச் சூழலில் மட்டுமல்ல, அவருடைய அகமும் அவ்வாறே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஷேபாசக்தி மட்டுமல்ல, இலக்கியம் மற்றும் கலை வெளிப்பாடு போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபடும் எவரும் இன்றைய இலங்கையின் அரசியல் பற்றிப் பேச விரும்பமாட்டார். அது பயனற்றது என்பதே பலரும் உணர்ந்திருக்கும் உண்மை.
ஏற்கனவே பலர் பெரிய நம்பிக்கைகளோடு இன ஐக்கியத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் செயற்பட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லாமே பூஜ்ஜியத்தில்தான் முடிந்திருக்கின்றன. அவர்களால் அந்த நம்பிக்கைப் பெரு வீதியில் ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. இதனால் இந்த மாதிரித் துறைசார்ந்து இயங்குவோர் மட்டுமல்ல, வேறு எவரும் கூட இந்த மாதிரியான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஆர்வம் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர் எனக்கு எழுதியிருந்த மிகச் சுருக்கமான – கண்ணியமான பதிலிலிருந்து நானும் கற்றுக்கொண்டேன்.
ஏனென்றால் இலங்கையின் வெகுஜன அரசியல் முற்றிலும் பொய்மையின் மீதும் அநீதியின் மீதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்தம் எனப் புனிதப்படுத்தப்பட்ட மேலாதிக்கத்தின் மீது சிங்கள அரசியலும் 'முஸ்லிம் தனித்துவம்' என்ற புனிதத்தின் மேல் முஸ்லிம் அரசியலும் தமிழ்த்தேசியம் என்ற 'மகிமை'யின்கீழ் தமிழர்களுடைய அரசியலும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கட்டமைப்பாக்கம் செய்யப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்படும் அரசியலில் ஏற்கனவே பல தடவை பலராலும் பேசப்பட்டுப் பேசப்பட்டுப் பேசப்பட்டுக் காலாவதியாகிப்போனவற்றைப் பற்றிப் பேசுவதால் பயனென்ன? எப்போதும் புதியதை, புதுமையை, மாற்றை, வளர்ச்சியை, முன்னகர்வை விரும்பும் வலியுறுத்தும் எழுத்தாளர் பேசவேண்டிய அவசியமென்ன என்பதே ஷோபாசக்தியின் கேள்வி. இந்தக் கேள்வி ஏராளமான உண்மைகளை உணர்த்தி மெய்நிலைப்பாட்டைப் புரிய வைக்கிறது. இந்த நிலையில்தான் என்னுடைய கேள்விகளை அவர் புராதனத்தன்மையானவை என்கிறார்.
இந்த அரசியலைப்பற்றி நான் கூடத் தொடர்ந்து எழுதி வருகிறேன். நாளொன்றுக்கு ஏறக்குறைய எழுநூறு தொடக்கம் ஆயிரம் சொற்கள் வரையில் எழுதுகிறேன். என்னைப்போலப் பலரும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள். ஊடகப்பரப்பும் இணைய வெளியும் சமூக வலைத்தளங்களும் அரசியற் கருத்தாடல்களால் நிறைந்து கிடக்கின்றன.
ஆனாலும் பயனென்ன? நிகழ்ந்த மாற்றங்களென்ன?
ஷோபாசக்தியின் பதில் என்னிடம் எழுப்புகின்ற ஏராளம் கேள்விகளும் இவற்றைத் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதன் மூலம் நிகழ்ந்திருக்கிறது. நான் அவரிடம் எழுப்பிய கேள்விகளை விட அவருடைய பதில் என்னிடத்திலும் பிறரிடத்திலும் எழுப்பும் கேள்விகள் அதிகம்.
என்பதால் மெய்யாகவே நாம் சிலதை அவதானிக்க வேண்டியுள்ளது.
நமது சூழலில் மிகத்தீவிரமாக அரசியல் விவாதங்கள் நடக்குமளவுக்கும் அரசியல் பேசப்படும் அளவுக்கும் முன்னகர்வுகளோ மாற்றங்களோ நிகழவில்லை. அதற்கான சாத்தியங்களே தென்படவில்லை. புதிய சிந்தனை எங்கும் முளைக்கவில்லை. நற்சாத்தியங்கள் எங்குமே வேர்விட்டதாகத் தெரியவில்லை. மீள் பரிசீலனைகளும் மதிப்பீடுகளும் நடக்கவில்லை. சுயவிமர்சனத்துக்கு யாரும் தயாரில்லை.
மேலும் மேலும் சரிவுகளும் கீழிறக்கங்களுமே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இன ஒற்றுமையைப் பற்றியும் பகை மறப்பைப் பற்றியும் பேசியதை விட நடைமுறையில் இனப்பகையும் இனமுரணும் வலுவாக்கம் பெறுவதே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமாதானத்தை வலியுறுத்துவதை விட அமைதிக்கெதிரான பதற்றமே உருவாக்கப்படுகிறது. தீர்வுக்குப் பதிலாக தீர்வுகளின்மையே எதார்த்தமாகிறது. ஆக எழுத்துக்கும் பேச்சுக்கும் மாறாகவே நிலைமை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது.
இதற்குக் காரணம் இதனைச் சரியாக முன்னெடுத்திருக்க வேண்டிய, முன்னெடுக்க வேண்டிய தரப்புகள் அவற்றை எதிர்நிலையில் கொண்டு செல்வதேயாகும். இந்தத் தரப்புகளில் பலவும் மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தைத் தம்மிடம் வைத்திருப்பதால் நடைமுறையில் அவற்றின் நடவடிக்கைகளே வலுவானதாக அமைகின்றன. அவை தவறாக இருப்பதால் பிழைகளும் அதிகமாகி விடுகின்றன. இதையிட்ட கவலையோ கேள்விகளோ இல்லாமல் சனங்களும் இவற்றின் பின்னால் இழுபட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
இதனால்தான் இந்த அரசியலைப்பற்றி மேலும் மேலும் பேசுவது கலைஞர்களின் எழுத்தாளரின் பணி இல்லை என்றாகிறது. அவர்கள் இதை அதற்குரிய வகையில் வெளிப்படுத்தினால் போதும் என்று எண்ணுகிறார்கள்.
ஷோபாசக்தியின் “மிக உள்ளக விசாரணை” என்ற சிறுகதை இதற்குச் சிறந்த உதாரணம். அவர் என்னுடைய பத்துக் கேள்விகளுக்கும் அளிக்கக் கூடிய பதிலை அந்த ஒரு கதையில் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விட்டார். என்னுடைய கேள்விக்கான பதிலாக மட்டுமல்ல, ஐ.நாவின் அணுகுமுறைக்கு, அமெரிக்காவின் அறிக்கைகள் பலவற்றுக்கு, சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக்கு, இலங்கை அரசின் நியாயங்களுக்கு, சிங்கள பௌத்த உளவியலுக்கு, விடுதலை அரசியல் பற்றிய தடுமாற்றங்களோடு இருப்போருக்கு இன்னும் இந்த மாதிரியான எல்லாவற்றுக்கும் எல்லாத் தரப்புகளுக்கும் அவர் மிகச் சிறந்த பதிலாக அந்தக் கதையை எழுதி விட்டார்.
எழுத்தாளரின் பணியும் அடையாளமும் இதுதான். இதற்குமேல் எதையும் பேச வேண்டிய அவசியமில்லை. அவசியமிருந்தால் பேசிக் கொள்ளலாம். கட்டாயமொன்றுமில்லை. ஏனெனில் லாப நோக்கோடு இயங்கும் அரசியல்வாதியல்ல எழுத்தாளரும் கலைஞரும். அவர்கள் அதற்கு எதிரானவர்கள், அதிலிருந்து விலகி, வேறுபட்டவர்கள், உண்மையின் வழியில், அறத்தின் ஒளியில் நடப்பவர்கள் என்பதேயாகும்.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழல் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இப்படியே சீரிழிவும் மோசமானதாகவுமே இருக்கப்போகிறது என்பதற்கு சான்றுகளோ விளக்கங்களோ தேவையில்லை. சரியானவர்களும் பொருத்தமானவர்களும் அரசியலில் முன்னிலை அரங்கில் இல்லை. அவர்கள் அதிகாரத்தைப் பெறக் கூடிய சூழலும் தென்படவில்லை. அவ்வாறான தரப்பினரை இனங்கண்டு முன்னிலைப்படுத்துவதற்கான சக்திகளும் ஊடகங்களும் பொதுவெளியில் இல்லை.
மாற்று அரசியல் பண்பாடு, மாற்று அரசியல் சிந்தனை, மாற்று அரசியல் போன்றவற்றைப்பற்றியே சிந்திக்காத அளவில்தான் மக்களும் புத்திஜீவிகளும் உள்ளனர். அவர்கள் திரும்பத்திரும்ப தம்முடைய கூடையில் உள்ள கூழ்முட்டைகளே மிகச் சிறந்த குஞ்சுகளைப் பொரிக்கும் என்று நம்புகிறார்கள். கனவு காண்கிறார்கள்.
இதனால்தான் இன்று அரசியலை வெறும் பார்வையாளராக நோக்கும் போக்கு பல மட்டங்களிலும் வளர்ந்துள்ளது. அரசியலில் ஈடுபடுவதை தொழிலாக, வாணிபமாக, அதிகாரத்தின் ருஸியாகக் கொள்வோரைத் தவிர ஏனையவர்கள் அதில் வெல்ல முடியாதவர்களாக இருப்பதற்கான காரணம் இதுவே.
வானம் இப்போதைக்கு வெளிக்கும் என்றில்லை. ஆனால் நமக்கு ஞானம் வசப்பட்டிருக்கிறது. ஷோபாசக்தி எனும் ஞானக் கலைஞருக்கு நன்றி

இலங்கையின் தமிழ் வெகுசன அரசியல்.

“இலங்கையின் தமிழ் வெகுசன அரசியலை” தெளிவான இரண்டு பண்பாட்டுக் கோடுகளால் வகுத்து வரையறை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று புத்திபூர்மான அரசியல். இது சாத்தியங்களின் புள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் வழியே அரசியலை முன்னெடுப்பது. இந்த வழிமுறையில் குறிப்பிடத்தக்க வெற்றியை மலையகத் தலைமைகள் பெற்றிருக்கின்றன. சி.வி வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான் தொடக்கம் இன்றைய மனோ கணேசன் வரையில் இதற்கு உதாரணம். நிலமற்ற, கல்வி மற்றும் பொருளாதார நிலையில் பின்னடைந்திருந்த மலையகச் சமூகத்தினை கடந்த எழுபது ஆண்டுகளில் இவர்கள் முன்னிலைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். தொடர்ந்தும் முன்னோக்கிச் செல்கிறார்கள். இன்று வலுவானதொரு அரசியற் சமூகமாக மலையகத் தரப்புப் பலமடைந்திருக்கிறது. கல்வியிலும் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருப்போராக மலைய சமூகத்தினர் உள்ளனர்.
இந்த அரசியல் முறைமைக்குள் எதிர்மறைப் பண்புகள் நிறைய உள்ளன என்பதையும் கணக்கிட்டே இதனை மதிப்பிடுகிறேன். தொண்டமான், செல்லச்சாமி, பெரியசாமி சந்திரசேகரன், மனோ கணேசன் ஆகியோருக்கு முன்னரே மலைய சமூகத்தின் அடையாளத்துக்கும் இருப்புக்குமான அடித்தளம் போடப்பட்டிருந்தது. கோ. நடேசய்யர், ஏ.அஸீஸ், எஸ்.எம். சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, கே.ஜீ.எஸ். நாயர், பி.தேவராஜ், எஸ்.நடேசன் , ஓ.ஏ.ராமையா, வீ.கே. வெள்ளையன், இராஜலிங்கம் எனப் பெரியதொரு செயற்பாட்டுத் தொடரணி இந்தத் தள நிர்மாணத்தைச் செய்தது. தொழிற் சங்கப் போராட்டங்கள், வெகுஜன அரசியற் செயற்பாடுகள் போன்றவற்றின் வழியே மிகக் கடினமான சாத்தியப் புள்ளிகளை இவர்கள் உருவாக்கினர். இந்தத் தளத்தில் நின்றுகொண்டே தொண்டமானும் சந்திரசேகரனும் இப்பொழுது மனோ கணேசன், திலகராஜ் போன்றோரும் தமது அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
இத்தகைய சாத்தியப்புள்ளிகளை நோக்கி அரசியலை முன்னெடுத்த வடக்குக் கிழக்குத் தமிழ் தரப்புகளும் உள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையைத் துணிந்து பொறுப்பேற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் இதில் முக்கியமான ஒன்றாகும்.
இவர்கள் கண்டறிந்து செயற்பட்ட புள்ளிகளால் உருவாகிய அரசியற் பெறுமானங்களே இன்று மீந்திருப்பவை. இது கூட்டமைப்புப் போன்றவை செய்ததிலும் பார்க்க அதிகம்.
இந்தப் போக்கினை விமர்சனபூர்வமாக அணுகி மேலும் வளர்த்தெடுக்க வேண்டும். தேர்தல் ஜனநாயக வழிமுறையில் பேண வேண்டிய அரசியற் தந்திரோபாயத்தையும் அறத்தையும் உள்வாங்கி, சேதங்களும் சிதைவுகளுமற்ற பாதையை மெய்யான ஜனநாயக விழுமியங்களோடு உருவாக்க வேண்டும்.
இரண்டாவது உணர்ச்சிகரமான அரசியல். இது விளைவுகளைப் பற்றிய மதிப்பீடுகளற்றது. விமர்சனங்களும் ஆய்வுமற்றது. அதாவது அறிவுக்கு எதிரானது. ஒற்றைப்படையாக இனமானத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் தனக்கான தருக்கத்தையும் நியாயங்களையும் உற்பத்தி செய்து வைத்திருப்பது. தன்னுடைய எதிர்த்தரப்பை உணர்ச்சிகரமாகவே அணுகுவது. அடித்தால் மொட்டை. கட்டினால் குடுமி என்று சொல்வார்களே அதைப்போல ஆதரவோ எதிர்ப்போ இரண்டும் கண்மூடித்தனமாகவே இருக்கும். எதிர்ச்சக்தியையும் நட்புச் சக்தியையும் எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடப்பது. இதனால் அரசியற் தந்திரோபத்தைக் கடைப்பிடித்து வெற்றிகளைப் பெற முடியாமல் காலம் முழுவதும் புலம்பிக்கொண்டேயிருப்பது. எந்தப் பிரச்சினைக்குமே தீர்வு காண முடியாமல் தவறுகளை பிறர் மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முற்படுவது. வளர்ச்சியோ மாற்றமோ நிகழாமல் பழைய – புளித்துப்போன வழித்தடத்திலேயே பயணிப்பது. இதனால்தான் தமிழ்ச்சமூகம் எழுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையையும் விடத் தாழ்ந்து போயிருக்கிறது. இன்று வடக்குக் கிழக்குத் தமிழர்கள் உலகம் முழுவதிலும் சிதறுண்டிருக்கிறார்கள். அடுத்த நாற்பது ஆண்டுகளில் இவர்கள் அங்கே அடையாளமிழந்த சமூகத்தினராகி விடுவர். நாட்டில் உள்ளவர்கள் இதே போக்கில் போய்க்கொண்டிருந்தால் அவர்களும் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் மிகப் பலவீனமான சமூகமாகவே இருப்பர். 

Karunakaran Sivarasa

Monday, July 15, 2019

தலைவர் காமராசரின் பிறந்ததினம் ஜூலை 15



" காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர்! மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்!

முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தோண்டாற்றினால்தான் இந்தப் பாடத்தைப் பெறமுடியும்!

. . . வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடகி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்! அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்! "
- அறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்!
உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.
 

இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்! அவரைப் பற்றிய ஒரு சில செய்திகளை இன்றைய கடிதத்தில் நினைவு கூர்வது அவருக்கு கழகம் செலுத்துகின்ற மரியாதையாக இருக்குமென்று கருதுகிறேன்.

"கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட அவசர உத்தரவு - ஆசிரியர்கள் தவிப்பு" என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தினமலர்" நாளேட்டின் சிறப்பு நிருபர் வெளியிட்ட செய்தியில், "முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டது. இவ்விழாவையொட்டி, அனைத்துப் பள்ளி களிலும், பல்வேறு வகையான போட்டிகளை முன் கூட்டியே நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஜூலை 15ம் தேதி பரிசுகள் வழங்கி, விழா கொண்டாடப்பட்டு வந்தது. இதற்காக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தனி நிதி உதவியும் வழங்கப் பட்டது. இந்த விழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக, முந்தைய (தி.மு.கழக) அரசு தனி சட்டமும் கொண்டு வந்து அமல் படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இவ்விழாவைக் கொண்டாடுவது குறித்தோ, முன்கூட்டியே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவது குறித்தோ, தமிழக அரசு முன்கூட்டியே எவ்வித அறிவிப்பையும் பள்ளிகளுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று மாலை அவசர அவசரமாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, "பேக்ஸ்", "இ. மெயில்" மூலம் காமராஜர் பிறந்த நாள் விழாவை அனைத்து வகையான பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விழாவிற்கான செலவுத் தொகை பின்னர் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில், திடீரென அரசு இப்படி உத்தரவிட் டுள்ளதால், விழாவை எப்படி நடத்துவது என தெரியாமல் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்."
இவ்வாறு "தினமலர்" நாளேட்டில் செய்தி வந்தது.

காமராஜர் பிறந்த நாளுக்கு முதல்நாள் திடீரென இவ்வாறு அவசரமாக அரசு அறிவிக்கக் கூட காரணம் என்ன? 14-7-2011 அன்று நான் விடுத்த ஓர் அறிக்கையில்;

2007-2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என்று ஒவ்வொரு பள்ளி யிலும் கொண்டாடப்பட வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் அறிவித்ததோடு அதனைச் சட்டமாகவும் கொண்டு வந்து தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றினோம். ஆனால் இந்த ஆண்டு அரசின் சார்பில் செய்துள்ள அறிவிப்பில் கூட - பெருந்தலைவர் காமராஜர் 109ஆம் பிறந்த நாள் அன்று அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவிப்பார்கள் என்று மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டுள்ளதே தவிர - அந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்றுகூட அறிவிக் கப்படவில்லை என்றெல்லாம் தெரிவித்திருந்தேன்.

அதன் பின்னர்தான் அரசாங்கம் விழித்துக் கொண்டு காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தது. அதனால்தான் இந்த ஆண்டு என்னதான் இந்த ஆட்சியினர் செய்கிறார்கள் என்று இன்று வரை பார்த்தேன். இன்றைய தினம் அரசின் சார்பில் வெளிவந்துள்ள அரைப்பக்க விளம்பரத்தில், முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கடற்கரை காமராஜர் சாலையிலே உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று கொண்டாடும்படி எந்த அறிவிப்பும் இல்லை.

காமராஜர் அவர்களுடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் அறிவித்து, அந்த அறிவிப்பு தொடர்ந்து நிரந்தரமாக செயல்பட குறுக்கே வருகின்ற அரசு எப்படியிருக்குமோ என்ற சந்தேகத் தினால் - அதை ஒரு சட்டமாகவே ஆக்கி, ஜூலை 15 என்றால் அன்றைய தினம் காமராஜருடைய பிறந்த நாளை சட்டப்படி பள்ளிகளில் கொண்டாட வேண்டு மென்று - சட்டப்பேரவையிலேயே சட்டம் நிறைவேற்றி, அதை கழக ஆட்சியில் உறுதிப்படுத்தியிருக்கிறோம்.

ஏன் சட்டத்தை மாற்ற முடியாதா என்று கேட்கக் கூடும். மாற்றலாம், ஆனால் ஒரு அறிவிப்பை மாற்றுவது சுலபம். அதைக் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டால் தானாகவே மாறிவிடும். அல்லது வேண்டுமென்றே கூட அறிக்கை விட்டு அதை மாற்றி விடலாம். ஆனால் சட்டமாகச் செய்தால், அதை திரும்பப் பெற, மாற்றுவதற்கு, சட்டசபையைக் கூட்டியாக வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டி, இப்படி கழக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது காமராஜருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று குறிப்பிட்டு கொண்டாடினார். அதற்காக ஒரு சட்டம் செய்தார், அந்தச் சட்டத்தை நாங்கள் விலக்கிக் கொள்கிறோம், ரத்து செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சட்டத்தை ரத்து செய்து விட்டு வெளியிலே நடமாட முடியுமா என்பது வேறு விஷயம். அதனால் தான் இதைச் சட்டமாகவே ஆக்கினோம்.

2006 - சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை யில், ‘காமராஜர் பிறந்த நாளாம் ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்துப் பள்ளிகளில் விழா எடுப்போம்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அரசு அறிவித்து கழக ஆட்சியில் 24.5.2006 அன்று ஆணை வெளியிட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. அதன்படி, 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. அத்துடன் அவ்விழாவில் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின்னர், 15.7.2007 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும், 15.7.2008 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு; கழக ஆட்சி நடைபெற்ற வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை தி.மு. கழகம் பெருமைப்படுத்திய ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்திட வேண்டுமென்றால், காமராசர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வேளையில் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் அல்ல. ஆனால், 6 மாத காலத்தில் அவர் பேரவை அல்லது மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதனால் அப்பொழுது குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் "குணாளா, குலக்கொழுந்தே" என எழுதி, பெருந் தலைவர் காமராசரின் வெற்றிக்குப் பாடுபடுவோம் எனக் கூறி ஆதரவு தெரிவித்தார். அதன்படி, தி.மு. கழகம்; காமராசரின் வெற்றிக்காக பாடுபட்டு அவரை வெற்றி பெறச் செய்தது.

சென்னை மாநகராட்சி தி.மு. கழக நிர்வாகத்தில் இருந்தபோது பெருந்தலைவர் காமராசர் அவர்களுக் குப் பெரியார் பாலத்திற்கு அருகில் சிலை அமைத்து, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு 9.10.1961 அன்று அச்சிலையைத் திறந்து வைத்தது கழகம்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் 2.10.1975 அன்று மறைந்தபின், கிண்டி காந்தி மண்டபத்திற்கு அருகில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது. அந்த நினைவு மண்டப முகப்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவுச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

1990-இல் சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிலையத்திற்கு "காமராசர் முனையம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை கடற்கரைச் சாலைக்கு 1997-இல் "காமராசர் சாலை"" எனப் பெயர் சூட்டப்பட்டது.

கடற்கரைக்கு அருகில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை இருந்த காரணத்தால், குமரி முனையில் காமராசரின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணி மண்டபம் கட்டமுடியாத நிலை இருந்தது. அதன்பின், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் பேசி, கோரிக்கை வைத்து, அனுமதி பெற்று, காமராசர் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 2.10.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது.

2006- இல் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி சமூகப் பொதுத் தொண்டுகளில் சிறந்து விளங்கும் சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியுடன் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்பட்டது.

2006-இல் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த ஜூலை 15 ஆம் நாளை "கல்வி வளர்ச்சி நாள்" எனச் சட்டமியற்றி ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்து கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 19.7.2010 அன்று பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த படுக்கையானார்.

ஒரு நாள் காலை நானும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரும் காமராஜர் அவர்களைக் காண அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே அமர்ந்த என்னைக் கண்டதும் அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன். தழுவிக் கொண்டார். அவரது கண்கள் நீர்வீழ்ச்சிகளாயின. ‘தேசம் போச்சு! தேசம் போச்சு’ என்று உரக்கக் கூவினார். நான் வாய்விட்டுக் கதறி அழுது விட்டேன். நாவலர் கண்ணீர் வடித்தவாறு எங்களிருவரையும் தேற்றினார். ‘அய்யா! நீங்கள் சொல்லுங்கள்! இப்போதே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுகிறோம்! இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, சர்வாதிகாரத்தை அழிக்க நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள்! உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயார்!’ என்றேன். "பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்"" என்று அவர் அறிவுரை கூறினார்.

அப்படிப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  பிறந்த நாள் விழாதான் இன்று! மறைந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, காவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவரே காமராஜர் அவர்கள்தான்.
இவ்வாறு எத்தனையோ நினைவுகள்!

மாற்றாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாலை நேரப் பொதுக் கூட்டங்களில் பேசும்போது எப்படியெப்படியோ தாக்கிக் கொள்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய பிறகு, தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தது. அதற்காக தி.மு. கழகத்திடம் வெறுப்பைக் காட்ட வேண்டிய பெருந்தலைவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அதனால்தான் அவர் பெருந்தலைவர் ஆனார். அஃதே போல பேரறிஞர் அண்ணா அவர்களும், அவருக்குப் பின் நானும் பெருந்தலைவர் காமராஜ ரிடம் எந்த அளவுக்கு மரியாதை செலுத்தினோம், பழகினோம் என்பதை தமிழகம் நன்கறியும். அந்தப் பெருந்தலைவர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்!

Monday, February 18, 2019

ஒரு காஷ்மீர் மாணவியின் உளக் குமுறல்...


இராணுவத்துடன்
படுப்பதுதான் தேசபக்தியா?
காஷ்மீர் மாணவி....
"நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”
“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”
”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?
வினவு
”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செலவு செய்கிறது என்று சொல்ல வேண்டும்.
அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…..
உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”
“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”
“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்…
அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
”சொல்லுங்கள்”
”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை..
கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது…
ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”
”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”
“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்..
அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா.
இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”
“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”
“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..
நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது..
நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்..
ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்..
எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”
”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”
“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன்
. நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்…
ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா?
எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்…
நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”

Saturday, February 2, 2019

இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் சேவை

இலங்கை அரசியலில் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்களின் தியாகம் போராட்டம் சேவை அளப்பரியதே!
இது தொடர்பான சிறு துளிகள்
இலங்கைத் திரு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை முடுக்கி விடுவதில் முஸ்லிம்களின் பங்களிப்பு தீர்க்கமானது, உறுதியானது , வலுவுள்ள தாக்கத்தை உண்டு பண்ணியது.

எம்.சி.எம்.கலீல்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தேசேர் மொஹம்மத் மாக்கான்மாக்கார், டாக்டர் டி.பி. ஜாயா,டாக்டர் எம்.சி.எம்.கலீல்,அப்போதைய அப்துல் ராஸீக் ( பின்னால் சேர் ராஸீக் பரீத் )ஆகிய பெருந்தலைவர்கள் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி உறுதிப்படுத்தி அதை சுதந்திரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்ற மகத்தான பணியைச் செய்தார்கள்.
முஸ்லிம்கள் நாட்டினுடைய அரசியல்,அபிவிருத்திப் பணிகளுக்கு ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருந்ததேயில்லை.சித்திலெப்பை, வாப்புச்சி மரைக்கார், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் போன்ற மேமக்கள் சிங்கள பெருங்குடியினரோடு உறவை நெருக்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.
சித்திலெப்பை
ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்
வாப்புச்சி மரைக்கார்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா விடுதலைக்கு மேற்கொண்ட அளப்பரிய பெரும் பணிகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முனைப்புக்களைப் பற்றி ஸ்ரீலங்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கண்ணியத்திற்குரிய டாக்டர் கே.டபிள்யூ. குணவர்தன அவர்களே மிக்க சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்.
சேர் ராஸீக் பரீத்
வலிமை மிக்க அந்நிய ஏகாதிபத்தியவாதிகளோடு சில கட்டங்களில் இணங்கிப் போவதை ராஜ தந்திர நடவடிக்கையாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதத் தலைப்பட்ட நேரத்தில் கூட, முஸ்லிம்களும் சிங்கள பெருங்குடி மக்களும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு உறுதியான, பிடிவாதமான எதிர்ப்பைக் காட்டினார்கள்.
மன்னன் மூன்றாம் விஜயபாகு தனது ஆட்சிக்குக்கட்டுப்பட மறுத்த, தனது ராஜாங்க வணிகத்திற்கு குறுக்கீடு செய்த போர்த்துக்கீசர்களை எதிர்த்துப் போர்ப் பிரகடணம் செய்ய முற்பட்ட போது கூட, முஸ்லிம்களின் ஒத்துழைப்பையே அவன் நம்பி நின்றான்.
மன்னன் மாயதுன்னவுக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஒத்துழைப்பு, இராணுவப் பணிகளில் மட்டுமல்ல ராஜதந்திர தூதுவப் பணிகளிலும் அவர்களுடைய திறமை கொடி கட்டிப் பறந்த காலம் அது.கள்ளிக் கோட்டையிலிருந்து மன்னன் மாயாதுன்ன அடிக்கடி உதவி பெறுவதற்கு பெரிதும் முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள். மலபார் இராணுவ வீரர்களும், கடற்படை வீரர்களும் போர்த்துக்கீச ஏகதிபத்தியவாதிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்த தொல்லைகளின் காரணமாகத் தான் போர்த்துகீசர் கவனம் நம் பக்கம் இருந்து திசை திரும்பி அதன் காரணமாக சிங்களப் படையினர் சற்று நிம்மதி மூச்சு விட முடிந்தது.இந்த சூழ்நிலை உருவாவதற்கு முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள்.சிங்களப் போர் இயந்திரம் மிகத் திறமையாக செயற்படுவதற்கு அதன் அதி மகத்தான உறுப்பாக முஸ்லிம் பெருமக்களின் பணி அமைந்தது என்பது வரலாற்றில் மறக்க முடியாத உண்மையாகும்.
சேர் மாக்கான் மாக்கார்
சேர் முஹம்மத் மாக்கான் மார்க்கார், 1939 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்திலங்கை முஸ்லிம் அரசியல் மாநாட்டில் பேசிய பொழுது, நாட்டின் அனைத்து சமயத்தினரதும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையுமே மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.


அவர் சொன்னார் : நான் முஸ்லிம்களுக்குத் தக்க அளவிலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிய போது, நான் வெறும் 50:50 என்ற கணக்கு வழக்கு விகிதாசாரங்களில் மட்டும் நம்பி நின்றுவிடவில்லை. எல்லா விகிதாசார கணக்கு வழக்கு புள்ளி விபரங்களும் ஒரு தலைப்பின் கீழ் அடங்கி விடுகின்றன.அத் தலைப்பு என்னவென்றால்,அது தான் ஒரு நல்லாட்சி அமைவதாகும்.
நல்லாட்சி அல்லது அரசு என்பதென்ன? இதைச் சுருக்கிக் குறுக்கி இரண்டே சொற்களில் அடக்கிவிடலாம். நீதியும் நியாயமும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நீதியாக நடந்து கொள்வதும் அனைத்து சமுதாயங்களுக்கும் நியாயம் செய்வதுமாகும்.அதே நீதி நியாயத்தின் அடிப்படையில் தான் நான் அப்போதோ அல்லது இனி எப்போதுமோ ஒரு பெரும்பான்மைச் சமுதாயத்தை சிறுபான்மை நிலைக்கு இட்டுச் செல்லவதை விரும்பினேனில்லை. அதனால்தான் என்னுடைய நல்லெண்ணத்துக்குச் சான்றாக,இந்நாட்டை சிங்களவர் ஆள்வதை நான் ஆட்சேபிப்பதாயில்லை என்று சொல்கின்ற அளவிற்கு வந்தேன். இந்த என்னுடைய ஒரு பேச்சே போதும். நான் ஒரு வகுப்பு வெறியனல்லன் என்பதை மெய்ப்பித்திட.


சிறுபான்மையினர் அரசியற் சட்டச் சாசனப் பாதுகாப்பிற்காகச் செய்த முயற்சி, சுதந்திரம் வழங்குவதைக் கிடப்பில் போட்டிட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சாக்காக அமைந்திடக் கூடாதே என்பதற்காக டாக்டர் டி.பி.ஜாயா வெளியிட்ட கருத்துக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சொற்பொழிவாக இன்னும் மிளிர்கின்றன! உள்ளத்தைத் திறந்து கொட்டி,உணர்வுகளை வலுவுள்ள சொற்களாக அவர் வடித்துத் தந்த அந்தப் பேருரை, அதில் அவர் முஸ்லிம்களின் நோக்கு, போக்கு என்ன என்பதை தீர்க்கமாக வரையறுத்துக் காட்டியமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே அதிர வைத்ததோடு, இனிவரும் வருங் காலமெல்லாம் இந்நாட்டில் பிறக்கக்கூடிய சந்ததியினரையுங் கூட முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக ஆக்கி விட்டது.
டாக்டர் டி.பி. ஜாயா
தான் சான்று நின்றவர்களாலேயே தான் வருத்தப்படுத்தப்பட்ட நிலையிலுங் கூட டாக்டர் ஜாயா, இந்நாட்டின் அனைத்து சமுதாயங்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து உடன்பாடு கண்டிட பேரவாக் கொண்டு செயல்பட்ட அதே நேரத்தில், கிடைக்க வேண்டிய சுதந்திரம் முஸ்லிம்களால் தான் கெட்டது என்ற ஒரு கருத்து எக்காலத்திலும் இந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் மெத்தக் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.அவருடைய அந்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பேச்சு இந்நாட்டு மக்களின் மனதில் பாரியத்தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மக்களை ஐக்கியப்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தை ஒரு அர்த்தமுள்ள விவகாரமாகவும் ஆக்கி விட்டது.
சுதந்திரப் பாதையில் ஒரு மைல்கல்லான சட்டசாசன சபையில் சோல்பரித் திட்டத்தின் மீது டாக்டர் ஜாயா பேசிய பேச்சு ஆதிக்க எதிர்ப்பிற்கு இஸ்லாம் காட்டுகின்ற வேகத்தையும், முஸ்லிம்களின் இயல்பான சுதந்திர வேட்கையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.”முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது அவர்களின் பண்பாட்டின் அடித்தளம். முழுமையான சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்படும் எந்தப் போரிலும், போராட்டத்திலும் முன்னணியில் தான் நிற்க வேண்டுமென அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு ஆணையிடுகிறது. முழுமையான சுதந்திரத்திற்கான ஒரு போர் என்றால் அதில் முஸ்லிம் தனது சொந்த நலனையுங் கூட கருதாது களத்தில் குதிப்பான்.சுதந்திரம் முதலில் வரட்டும். தன்னை எதிர்நோக்கும் இதர பிரச்சனைகளை அப்போது சந்தித்துக் கொள்ளலாம் என்பதே அவனது தெளிவான நிலை.”
தன்னுடைய இந்த முத்தாய்ப்புப் பேச்சால், முஸ்லிம், நாட்டை தனது சமுதாயத்திற்கு முன்னால் வைப்பான் என்ற கருத்தையே தியாகி, தீரர் ஜாயா நிலை நாட்டினார். அவருடைய அரசியல் மதி நுட்பமும், ஆழ்ந்த அறிவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் மேற்கொண்ட நிலைப்பாடு ஒன்றும் தவறானதல்ல என்பதையே இத்தனையும் மெய்ப்பிப்பதாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த எந்தவொரு ஆட்சியும், அரசும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வந்திடத் துணிந்ததில்லை.
முஸ்லிம்கள் தாமாகவே தான் தமது முன்னேற்றப் பாதையில், தமக்கிடையேயுள்ள ஒற்றுமையின்மையின் காரணமாக அடிக்கடி தடைக் கற்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஒழுங்கான ஒற்றுமை மாத்திரம் நம்மிடையே அமைந்தால் அன்று டி.பி.ஜாயா எடுத்த முடிவு எத்துணை சரியானதென்பதை மெய்ப்பிக்கும். தியாகி டி.பி.ஜாயாவின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதற்கு சான்றாக இன்று அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு உரிய ஆக்கமும் , ஊக்கமும் தருகின்ற ஒரு நியாய சிந்தனையுள்ள ஜனாதிபதியை மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களைப் பார்க்கின்றோம்.
அரசியல் சாசன ரீதியாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்புக்குள்ளேயே வாழ்க்கையில் சகல வட்டங்களிலும் நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை செம்மையாக அமைத்துக் கொள்ள முடியும்.ஆனால் அதை நாம் ஐக்கியமாகத் தான் சாதிக்க முடியும். இறுதியாக ஒன்றை சொல்லி வைக்க விழைகின்றேன். நாட்டின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம் இருந்ததில்லை. அதன் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக அவன் ஒருபோதும் இருந்திட மாட்டான் என்ற விடயம் யாருடைய அவதானத்திலிருந்தும் நழுவி விடக் கூடாது.
சிறப்பு உரையில் பழமையின் தொய்மையும் உண்மையும் இருந்தது அதனால் என்னை வெகுவாக கவர்ந்தது.
நன்றி
Nazeem Mohammed


Thursday, November 22, 2018

சம்மந்தனின் தவறுகள் – எதிர்க்கட்சித் தலைவராக



Karunakaran Sivarasa

1. 26.11.2018 வெள்ளிக்கிழமை இரவு மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பை மீறிய செயல், ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கை, அரசியல் சதி என்றால், அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தன் உடனடியாகக் கண்டிக்கவில்லை. அது தவறு என்றும் சொல்லவில்லை. இது தவறெனச் சம்மந்தன் கருதியிருந்தால் மகிந்த ராஜபக்ஸ பதவியேற்ற அன்றிரவே தனது எதிர்ப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது எதிர்க்கட்சித் தலைவருக்குரிய பொறுப்பாகும்.
2. மறுநாள் மகிந்த ராஜபக்ஸ சம்மந்தனை அழைத்தது தனக்குரிய பெரும்பான்மைக்கான ஆதரவைப் பெறுவதற்காகவே. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் சம்மந்தனை மகிந்த அழைக்கவில்லை. அப்படிப் பேசவும் இல்லை. இதைத் தெரிந்து கொண்டே சம்மந்தன் மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கச் சென்றிருந்தார்.
கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலேயே “சந்திரிகா குமாரதுங்கவின் தீர்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா?” எனக் கேட்டதை நாம் அவதானிக்கலாம்.
முதலில் இந்தச் சந்திப்பே தவறானது.
ஏனெனில் பிரதமரை நியமித்தபோது குறைந்த பட்ச நாகரீகமாக அதைப்பற்றிய தகவலை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஜனாதிபதி தெரியப்படுத்தியிருக்க வேணும். அப்படிச் செய்யவே இல்லை. இந்த நிலையில் மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக ஏற்றுக்கொண்டே சம்மந்தன் சந்தித்திருக்கிறார். அந்த அடிப்படையில்தான் சந்திரிகா முன்வைத்த தீர்வுத்திட்டத்தை அமூல்படுத்தமுடியுமா என்று கேட்டதும்.
இதன் மூலம் மகிந்த ராஜபக்ஸவின் பிரதமர் நியமனத்தைச் சம்மந்தன் ஏற்றிருக்கிறார். அதாவது கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையிலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையிலும்.
சம்மந்தனின் கோரிக்கையை அல்லது அந்த நிபந்தனையை மகிந்த ராஜபக்ஸ ஏற்றிருந்தால் இன்று அவர் கூட்டமைப்பின் ஆதரவோடு பாராளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்ற தலைவர். பிரதமர். அதற்குப் பிறகு பாராளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை மைத்திரி எடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது. இப்போதைய குழப்பங்கள், இழுபறிகள், பாராளுமன்ற மோதல்கள் போன்றவையும் வேறு விதமாகியிருக்கலாம். இல்லாமலும் போயிருக்கும். அதாவது சட்டபூர்வமான பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நீடித்திருப்பார்!
(இப்படியெல்லாம் செய்து விட்டு முன்பின் முரணாக “மகிந்த ராஜபக்ஸவின் பிரதமர் நியமனம் சட்டவிரோதமானது” என்று கூட்டமைப்பினால் எப்படிச் சொல்ல முடியும்?)
3. பாராளுமன்றம் கலைக்கப்பட்டபோது அது அரசியல் சாசனத்துக்கும் மக்களுடைய ஆணைக்கும் எதிரானது. ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை.
4. நீதிமன்றத் தீர்ப்பையடுத்துப் பாராளுமன்றம் கூடியபோது அதிகாரப்போட்டிக்காக பாராளுமன்றத்தில் முறைகேடாக உறுப்பினர்கள் நடந்து கொண்டமையை எதிர்க்கவோ கண்டிக்கவோ இல்லை. ஆனால், அதற்கான எதிர்ப்புக்குரலைக் கொடுத்திருக்க வேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சித் தலைவருக்குரியது.
5. மகிந்த ராஜபக்ஸவின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை மறுத்து ஜனாதிபதி அடாத்தாகச் செயற்படுவதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்தானத்திலிருந்து இதுவரையில் சம்மந்தன் எதிர்க்கவில்லை. அப்படி ஒரு அறிக்கை கூட வந்ததில்லை.
6. அதிகாரப் போட்டியின் காரணமாக நாட்டுக்கும் ஆட்சிக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் பாதகமான நிலைமை குறித்து மக்களுக்கு உத்தியோக பூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் எதையும் சொல்லவேயில்லை. இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முயற்சியில் நாட்டிலுள்ள முக்கியமான தரப்பினருக்குள்ள பொறுப்பை உணர்த்தி அவர்களை அணிதிரட்ட வேண்டிய கடமையையும் செய்யவில்லை.
7. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை போன்றவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கையீனமும் மரியாதைக்குறைவும் ஏற்பட்டிருக்கும்போது அந்த வெற்றிடத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பு அதற்கான குரலை உயர்த்துவது. அதை அவர் செய்யத் தவறியுள்ளார்.
8. இந்தக் காலகட்டத்தில் சம்மந்தன் மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோரைப் பல தடவை சந்தித்திருக்கிறார். அவர்களுடன் கூட்டமைப்பின் தலைவராகப் பேசியிருக்கிறாரே தவிர, எதிர்க்கட்சித் தலைவராக இல்லை. ஒரேயொரு தடவை மட்டுமே ஜனாதிபதிக்கு நீங்கள் தொடர்ந்து தவறுகளைச் செய்கிறீர்கள் எனக் கூறியிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவருடன் நீங்கள் சந்திக்கிறீர்கள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு தரப்பினரின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி, அவரவரின் பொறுப்புகளுக்குப் பதிலளிக்கும் நிலையை உணர்த்தியிருக்க வேணும்.
(நடந்த சந்திப்புகளை நினைவு கொண்டு பார்த்தால் இந்த உண்மை புரியும்).

சம்மந்தன் செய்திருக்க வேண்டியதும் செய்ய வேண்டியதும்
கருணாகரன்
2015 க்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகப் பலமுடைய தலைவராக இருப்பவர் திரு. சம்மந்தன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் என்று சொல்ல முடியும். எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற இருநிலைகளிலும் அவருடைய பலம் மிக உயர் வலுவுடையது. அதாவது எதையும் தீர்மானிக்கும் அரசியற்சக்தி இப்பொழுது சம்மந்தனிடமுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐ.தே.கவினதும் அரசியல் தலைவிதியைத் தீர்மானித்துக் கொண்டிருப்பதே இன்று சம்மந்தன்தான். ஏன் மகிந்த ராஜபக்ஸவினுடையதும்தான்.
சம்மந்தன் நினைத்திருந்தால், மகிந்த ராஜபக்ஸவின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து அவரைப் பிரதமராக்கியிருக்க முடியும். ரணிலைக் களத்திலிருந்து அகற்றுவதும் தொடர்ந்து வைத்திருப்பதும் கூடச் சம்மந்தனின் கைகளிலேயே உள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலை நீடிப்பதும் முடிவுக்கு வருவதும் கூடச் சம்மந்தனின் கைகளிலேயே தங்கியுள்ளது. இதனால்தான் அவரை மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்ஸவும் ரணில் விக்கிரமசிங்கவும் ஆள்மாறி ஆளாக அடிக்கடி அழைத்துப் பேசுகிறார்கள். தமக்கு ஆதரவளிக்குமாறு கேட்கிறார்கள் (கெஞ்சுகிறார்கள்).
இது ஏறக்குறைய 2009 க்கு முன்பு விடுதலைப்புலிகளிடம் இருந்த பலத்துக்கும் வாய்ப்புகளுக்கும் நிகரானது. அதையும் விடப் பலமானது எனலாம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தடுமாற்றங்களில்லாமல், வெளிச்சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களில் சிக்கிச் சீரழியாமல், சுமந்திரனின் தனிப்பட்ட விருப்பங்களுக்கெல்லாம் இழுபடாமல் துணிவோடும் தூரநோக்கோடும் நல்ல முடிவுகளைச் சம்மந்தன் எடுப்பாராக இருந்தால் எதையும் செய்ய முடியும். மாற்றங்களை உண்டாக்க முடியும்.
ஆனால், இதெல்லாத்தையும் பெறுமதியற்று வீணாக்கிக் கொண்டிருக்கிறார் சம்மந்தன். (மடியில் மாணிகக் கற்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. அவ்வளவையும் அவர் மண்ணாக்கிக் கொண்டிருக்கிறார்). அவருடைய கைத்தடியாக இருக்கும் சுமந்திரன் ஆணைக்கொம்பாக மாறியதன் விளைவே இது.
இதில் முதல் பலியாகியிருப்பது சம்மந்தன். சம்மந்தன் பலியாகியிருப்பதன் மூலமாக தமிழ் மக்கள். மட்டுமல்ல, முழு இலங்கைத்தீவும்தான்.


Friday, November 9, 2018

இலவசங்கள் - என் பார்வை.


Sivarajah Ramanathan
தமிழக அரசுகளின் இலவசங்கள் பற்றி சர்கார் சினிமா நெகட்டிவ் ஆக பேசுவது ஒரு புறம் இருக்கட்டும். நானும் சில மாதங்கள் முன்பு வரை இந்த இலவசங்கள் பற்றி மிகக் கடுமையான எதிர் நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அது பற்றி தெளிவாக அறிய முற்பட்டேன். ஏராளமான தரவுகள், வாசிப்புகள், வாதங்கள், நேர்-எதிர் உரையாடல்கள்....பகுத்தறிந்த சீராய்வுக்கு பின் எனது புரிதல் எப்படி இருந்தது என்பதை இங்கே தந்துள்ளேன். இதை ஒரு myths & truths analysis என்றும் கூட சொல்லலாம். சற்றே நீளமான பதிவு.
Myth 1: இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகின்றன.
Truth: மேலோட்டமாக பார்த்தால் உண்மை போலத்தான் தோன்றும். ஆனால் நான் பேசிய அளவில் எந்த ஏழையும் அல்லது அடித்தட்டு பயனாளியும் அரசின் இலவசங்களை தங்கள் வாழ்வாதார தேவைகளுக்கான அடிப்படையாக நினைக்கவே இல்லை. அது ஒரு பரிசு. ஒரு தேவையை பூர்த்தி செய்யும் நல்ல பரிசு. அதன் மூலம் தன்னிடம் இல்லாத -வசதியானவர்களிடம் இருக்கும் ஒன்றை - பயன்படுத்தும், பயன் பெரும் திருப்தி. அவ்வளவே. இலவசங்களை வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை அடித்தட்டு மக்கள் இழக்கும் நிலையை தரவுகளும் காட்டவில்லை.அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இது ஒரு எதிர் சித்தாந்த கற்பிதம்.
Myth 2: இந்த இலவச திட்டங்கள் ஊழல் செய்வதற்கும் ஓட்டு வாங்குவதற்கும் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன.
Truth: நீதிக்கட்சியும், காமராசாரும் கூட இத்தகைய சமூக நலத்திட்டங்களின் முன்னோடிகள் தான். அவர்கள் ஊழல் விமர்சனத்துக்கு முற்றிலும் அப்பால் பட்டவர்கள். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய பிற்கால முதல்வர்களின் திட்டங்கள் பலவும் (பட்டியல் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்) மிகவும் புதுமையான முன்னோடித் திட்டங்கள் என்றால் அது மிகையாகாது. அவற்றில் பல பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் நாடுகளுக்கும் கூட முன்னுதாரணமாக அமைந்தன. இவற்றை வாக்கு அரசியலுக்கும் அவர்கள் பயன் படுத்திக் கொண்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் தவறு இருப்பதாக நான் மட்டுமல்ல உச்ச நீதி மன்றம் கூட நினைக்கவில்லை. தி.மு.க /அ .தி.மு.க காலங்களில் ஊழல் நடந்தது என்ற கோணத்தில் பார்த்தால் கூட மொத்த சமூகநல திட்டத்தில் ஊழல் என்ற ஒரு பகுதி தான் பிரச்சினையே தவிர இந்த சமூக நல திட்டங்கள் அல்ல. தலையில் பேன் இருக்கிறது என்பதற்காக தலையை வெட்டித்தள்ள முடியாது.
Myth 3: இலவசங்களால் பொதுமக்கள் யாருக்கும் பயன் இல்லை.
Truth: இது எதிர் சித்தாந்த பிரச்சாரகர்களால் கையில் காசுள்ளவர்களிடம் திணிக்கப்பட்ட எண்ணம். இவர்கள் வசதி இல்லாதவர்களின் அன்றாட வாழ்க்கையை அருகிலிருந்து ஒரு நாளும் பார்த்திருக்க மாட்டார்கள். மதிய உணவு, முட்டை, சைக்கிள், பஸ் பாஸ், நோட்டு, புத்தகம், லேப்டாப், மிக்சி, கிரைண்டர், டிவி, ஸ்கூட்டி, நிலம், கால்நடைகள், மின்சாரம், ரேசன் என ஒவ்வொன்றும் பெரும்பான்மையான பயனாளிகளின் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களை, நல்ல உணர்வுகளை கொண்டு வந்திருப்பதை அவர்களோடு பேசிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது எல்லா தரப்பு மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டையும் பொறுத்துள்ளது. தமிழ்நாடு பல ஆண்டுகளாக அணைத்து தட்டு மக்களையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முயன்றிருக்கிறது. இது ஒரு unique socio -economical innovation by Tamilnadu. இதுவே காலப்போக்கில் மகிழ்வான ஒரு சமூகத்தை கட்டமைக்க உதவும் அணுகுமுறையாகும். சமூகம் என்பது மனித உடல்களின் தொகுப்பல்ல அது மனங்களின் தொகுப்பு. வசதி வாய்ப்பு இல்லாத மனங்கள் இருக்கும் மனிதர்களை பார்த்து விரக்தியடையக் கூடாது. மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் முன் அவன் பசி தணிந்து கற்கும் மனநிலைக்கு வரவேண்டுமல்லவா? அதுதான் சமூகநலத்திட்டங்களின் (இலவசங்களின்) அடிப்படை.
Myth 4: பெரும்பாலாலானவர்கள் இலவசங்களை வாங்கி விலைக்கு விற்கவே செயதனர். அல்லது பரணில் போட்டனர்.
Truth: இது ஒரு சிறு சதவிகிதம் உண்மை. எல்லா சமுகநலத் திட்டங்களும் 100% நோக்கங்களை அடைவதில்லை. Critical Mass இலக்கு அடையப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். அந்த வகையில் விற்ற அல்லது வீணாக்கிய விகிதம் புறம் தள்ளத்தக்கதே. ஆயினும் பயனாளிகள் தகுதியை ஆராய்ந்து வழங்க நிர்வாக மேம்பாடு தேவை என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.
Myth 5: மக்களை பிச்சைக்காரர்கள் போல் கையேந்த வைத்தார்கள். பிற மாநில மக்களும் வெளிநாட்டவரும் பார்த்து சிரிக்கிறார்கள்.
Truth: இதுவும் ஒரு எதிர் சித்தாந்த அமைப்புகளால் ஊதிப் பெருக்கப்பட்ட பிரச்சாரம் தான். ஆங்காங்கே சில நலத்திட்ட வினியோகங்களின் போது மக்கள் முண்டியடித்து நெரிசலில் சண்டை போட்ட வீடியோக்களையும் செய்திகளையும் பார்த்திருப்போம். இது நிர்வாக குறைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை தானே தவிர குறிப்பிட்ட சமூக நலத் திட்ட அடிப்படைகள் பற்றிய பிரச்சினை அல்லவே. பிற மாநிலத்தவர் சிரிக்கும் முன் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் என்று பல தரவுகளையும் தங்கள் மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து விட்டு சிரிக்கலாம். அதே வேளை இது போன்ற தரக்குறைவான விநியோக முறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. கொடுக்கும் முறைகள் கொச்சையாக இருக்கக் கூடாது. இவை பிச்சை இல்லை. காலங்காலமாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கான சிறு ஆறுதலும் இழப்பீடும் தான்.
Myth 6: இலவசங்கள் மட்டுமே கொடுத்து மாநிலத்தை முன்னேற விடாமல் செய்து விட்டார்கள்.
Truth: இதற்கான பதிலை மத்திய அரசும் மற்றும் பல மதிப்பு வாய்ந்த நடுநிலை நிறுவனங்களும் நடத்தும் ஆராய்ச்சி மற்றும் தரவுகளுக்கான இணைய தளங்கள் தெளிவாகத் தருகின்றன. சுருக்கமாக கூற வேண்டுமானால் பெரும்பாலான ஒப்பிடுகளில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள் தான் இருக்கிறது. எனவே இலவசங்கள் என்று சொல்லப்படும் சமூக நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கின்றனவே தவிர மாநில வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
Myth 7: கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே இவற்றை கொடுத்து அடித்தட்டு மக்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டி விடுவார்கள்.
Truth: கட்சிக் காரர்களின் தலையீடு மற்றும் ஊழல் என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவும் குறிப்பிட்ட சிறு விகிதமாகவே இருக்ககைகூடும் என்பது நான் உரையாடிய சில கீழ்மட்ட கட்சிக்காரர்களின் கருதத்து. ஒவ்வொரு பகுதி கட்சி காரருக்கும் இந்த திட்டங்களின் சமூக நோக்கங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் பகுதி சார்ந்த அடித்தட்டு மக்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதுவும் இல்லா விட்டால் அது தேர்தலில் பாதிப்பை உருவாக்கும் என்பதுவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அடித்தட்டு மக்கள் நடுத்தர மனிதர்களைப்போல் இது போன்ற விடயங்களில் ஒதுங்கிப் போகக்கூடியவர்கள் அல்ல. இந்த இடத்தில் நான் கட்சி காரர்களின் ஊழலை நியாயப்படுத்த முயற்சி செய்யவில்லை. அவர்களில் பெரும்பான்மை ஊழல் வாதிகள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் நான் நிறுவ முயற்சிப்பது இந்த சமூக நலத் திட்டங்கள் கட்சிக் காரர்கள் கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே அல்ல என்பதை தான்.
ஆனால் இந்த "கட்சிக்காரர்களின் ஊழல்" என்ற பொதுவான உண்மை தான் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களையும் கேலி செய்வதற்கும் தூற்றுவதற்கும் முழு முதல் காரணமாக அமைகிறது. திராவிட கட்சிகள் ஜெயலலிதா காலம் வரை பல சமூகநலத் திட்ட சாதனைகளை செய்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பல அளவீடுகள் இறங்குமுகத்தில் இருப்பதையும் ஊழல் பூதாகரமாக தெரிவதையும் மறுப்பதற்கில்லை. இந்திய அளவிலான ஒப்பீட்டு தரவுகளின் கூட எல்லா குறியீடுகளிலும் முன்னணி வரிசையில் நிற்கும் தமிழகம் ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையில் மட்டும் கடைசியில் நிற்கிறது.என்னைப்பொருத்த வரை இந்த ஊழல் பிரச்சனை ஒட்டு மொத்த சமூகமும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் செல்லும் போதும் தொழில்நுட்ப தீர்வுகள் அரசாட்சி நிர்வாகத்தில் (governance) அதிகளவில் ஈடுபடுத்தப் படும் போதும் இயல்பாகவே குறையக் கூடிய ஒன்று. அதற்கான உறுதியான செயல்பாடுகளும் கலாச்சார மாற்றங்களும் வர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதும் இல்லை. ஆனால் ஊழல் என்ற ஒரு பிரச்சினையை மட்டும் பிடித்துக்கொண்டு சமூக நலத்தையும் சமூக நீதியையும் வலுவிழக்க செய்யும் முயற்சிகளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Myth 8: கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மிக்சியும் டிவி யும் ம் எதற்கு?
Truth: இந்த மனப்பான்மை அதீத வலது சாரி அல்லது உயர்சாதி ஆணவச் சிந்தனையே தவிர வேறென்றும் இல்லை. எனக்கு தெரிந்த சில பெரும் பணக்காரர்கள் சில தனிப்பட்ட விவாதங்களில் என்னிடமே இப்படி விவாதம் செய்ததை கவனிதிருக்கிறேன். கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் உயர்ந்து மேலே வரவேண்டும் என்பதுவும் அவர்களது அன்றாட வாழ்க்கையும் குறைந்த பட்ச செழுமையுடன் அமைய வேண்டும் என்பதுவும் தான் சமூக நீதியின் முதல் படி. அவர்களை நீண்ட கால அடிப்படையில் உயர்த்தி தற்சார்பு அடைய வைப்பது கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு. அதை பயன்படுத்த ஏதுவாய் இலவச நோட்டு, புத்தகங்கள், மதிய உணவு, பள்ளி செல்ல சைக்கிள், தொழில்நுட்பம் பயில லேப்டாப்.
இது போக வசதி மறுக்கப்பட்டவர்கள் வளமாய் உணர வீட்டுக்கு தேவையான இன்ன பிற இலவச பொருட்களும் சேவைகளும் தரப்படுகின்றன. முதலில் பசிக்கு சோறு. பின்னர் சோற்றுக்கு வழி. இதெல்லாம் என்ன சித்தாந்தம் என்று கேட்டால் தமிழ் நாட்டு சமத்துவ சித்தாநத்தம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.. இடதா வலதா என்று ஆராய்ந்தால் இரண்டும் உண்டு எது எங்கு தேவையோ அது அங்கே.

myth 9: நல்ல அரசாங்கம் என்பது இந்த பொருட்களை எல்லாம் எல்லாம் வாங்க அந்த ஏழைகளுக்கு வேலை தான் தரவேண்டும். நேரடியாக இலவச பொருட்களை அல்ல.
Truth: இது பற்றி ஏற்கனவே மேலே பேசியாகி விட்டது. சில தீர்வுகள் நீண்ட கால அடிப்படையிலானவை. சில குறுகிய கால தீர்வுகள். தமிழகத்தின் சமூக பொருளாதார வழிமுறையானது தண்டவாளம் போன்றது. ஒரு கம்பி சமூக நீதி மற்றொன்று சமூக நலத் திட்டங்கள். இது மிகவும் தனித்தன்மையானது. இந்திய தேசம் பின்பற்றினால் வல்லரசாகலாம்.
Myth 10: இலவசங்கள் தான் திராவிட அரசியலின் கண்டுபிடிப்பு.
Truth: முதலில் நீதிக் கட்சி, பின்பு காங்கிரஸ் ஆட்சியில் காமராசர், அதன் பின்பு வரிசையாக வந்த திராவிட கட்சிகள் என எல்லோரும் வேறு வேறு கோணத்தில் தொட்டது தான் இந்த சமூக நலத் திட்டங்கள். அவற்றில் பெரும்பான்மையான வெற்றித் திட்டங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் வந்ததாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த திட்டங்களும் ஒரு காரணமாக இருந்ததாலும் திராவிடத்துக்கு எதிரானவர்கள் திராவிடம் என்றால் "கடவுள் மறுப்பு" என்று எப்படி திரித்தார்களோ அதேபோல் திராவிட ஆட்சி என்றால் "கேவலப்படுத்தும் இலவசம்" என்றும் திரித்தார்கள். இந்த இரண்டு திரிப்புகளையும் சமன் படுத்தினால் அவற்றில் ஊடுருவி நிற்கும் ஆழமான உண்மை என்பது "சமத்துவதை நோக்கிய பயணம்" என்பதாகத் தான் இருக்கும்.எனவே எனது முடிவானது திராவிடதின் கண்டுபிடிப்பு சமத்துவ சமூகம் என்பது தானே தவிர மற்றவை எல்லாம் திரிபு மயக்கங்களே.
முடிவுரை:
நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல முன்னர் மேம்போக்கான பார்வைகளின் காரணமாக திரிபுகளை நம்பி,ஊடுருவி நிற்கும் விழுமியங்களை பார்க்க தவறி விட்டேன். பகுத்து அறிய சற்றே நேரத்தை செலவிட்ட போது ஒரு சரியான புரிதல் எனக்குள் உருவானது. அதைத்தான் இங்கே தொகுதிருக்கிறேன்.

நான் திராவிடக் கட்சிகளுக்கோ சார்பாகவோ அல்லது தேசிய கட்சிகளுக்கு எதிராகவோ இதை எழுதவில்லை. எனது நோக்கம் தமிழ்நாட்டிற்க்கென ஒரு தனித்தன்மையான சமூக-பொருளியல் பாதை ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அதில் ஊழல் என்பது சில இடங்களில் இருக்கும் மேடு பள்ளம். அதை சீர் செய்வது ஒரு வேலை தான் என்றாலும் சாத்தியமே. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சிப்பாதையே இல்லை, இனிமேல் தான் உருவாக்க வேண்டும் என்று தத்தமது சித்தாந்த மண்வெட்டிகளுடனும் பெரும் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களுடனும் வருபவர்களை பார்த்தால் சிரிப்பாகவும் அவர்களை நம்பும் நம் சொந்த மக்களைப் பார்த்தால் வேதனையாகவும் இருக்கிறது.
அதே வேளை மாற்றம் எதுவும் தேவை இல்லை என்ற வாதத்தையும் நான் வைக்க விரும்பவில்லை. தற்கால மனிதர்களின் வாழ்வில் வரும் midlife crisis போல் தமிழக அரசியலிலும் ஒரு ageing crisis தற்போது உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. திராவிடம் என்ற கருத்தியல் சார்ந்த அரசியல் சற்றே ஒரு flatness நிலையை அடைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அது மாபெரும் ஆளுமைகளின் மறைவினால் இருக்கலாம், மாற்று சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அது ஊழலாக இருக்கலாம், தலைமைக்கான வெற்றிடமாக இருக்கலாம், முற்றிலும் புதுமையான ஆளுமைக்கான எதிர்பார்ப்பாக இருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அல்லது வெறும் மாயையாகக் கூட இருக்கலாம். இதுபற்றிய பொதுமக்களின் மனநிலையை வரும் தேர்தல்கள் தான் சொல்லமுடியும். ஆனால் நண்பர் ஆழி செந்தில்நாதன் சொல்வது போல் ஒரு post dravidianism தளம் தேவைப்படுகிறது என்பது காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது. மிக வலுவான அடித்தளம் தந்த திராவிட சமூக-அரசியல்-பொருளாதார தளத்தில் காலூன்றி காலத்தை வெல்லும் கட்டிடங்களை உருவாக்கும் சிற்பிகள் ஒருங்கிணைய வேண்டிய காலம் இது - தேர்தல் அரசியலைத் தாண்டி.
-----------------------------------------------------------------------
Suresh Sambandam, Aazhi Senthil Nathan, Ravishankar Ayyakkannu, Narain Rajagopalan, Balasubramanian AJ ஆகியோர்களின் ஆழமான தொடர்ந்த பகிர்வுகளுக்கு நன்றிகள். இந்த பதிவில் தண்டவாளம் பற்றிய உதாரண விளக்கத்துக்கு Govi Lenin அவர்களுக்கு நன்றி.