Search This Blog

Monday, August 23, 2021

குறுங்கதை-மேற்கோள்

 

என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு போவான். குடித்து விட்டு வந்து தூங்குவான். வழக்கம் போல் காலையில் அலுவலகம் கிளம்பிவிடுவான். தினம் வழமையாக நடக்கும் இது அவனுக்குச் சலிப்பைத் தரவில்லையா என்று ஒரு நாள் கேட்டேன். ஆம் என்றான். இனிமேல் சண்டை போட்டாலும் வேறு ஏதாவது புதுமையாகச் செய்யலாம் என சொல்லிவிட்டுப் போனான். அலுவலகம் போய் ஒரு தத்துவவாதியின் கீழ்க்கண்ட மேற்கோளை அனுப்பினான்:
“இருவருக்கு இடையில் இணக்கம் என்பது இணக்கமின்மைக்கான அச்சத்திலிருந்து வருவது. இதில் இணக்கம் என்பதில் அன்பு, பாசம் போன்ற பெயரிடப்படாத பல உணர்வுகளைப் பொதித்து வைப்பதன் மூலம் இணக்கமின்மை வெடித்துவிடுகிறது. அன்பின்மை, வெறுப்பு, துயரம் போன்ற பல எதிர்மறை உணர்வுகள் குடியேறிவிடுகின்றன. இணக்கமும் இணக்கமின்மையும் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன. இதுதான் சலிப்புக்கு அடிப்படையாகிறது. இணக்கமும் சலிப்பைத் தருகிறது. இணக்கமின்மையும் அவ்வாறே. இதில் சலிப்பின்றி இருப்பது குறித்தத் தேடல் மறைகையில் வாழ்வின் சுமை கூடிவிடுகிறது. அதை அடுத்தவர் தலைமேல் போட்டுவிடுவதே குறிக்கோளாக இருப்பதால் போர் மூளுகிறது. இதில் சமாதானமும் சலிப்பின் ஒரு வடிவம்தான். போரில் இருக்கும் சுவை சமாதானத்தில் இருப்பதில்லை. போர் உருவாகிவிடும் அல்லது போரை உருவாக்கவேண்டும் என்பதில் உள்ளார்ந்து ஏற்படும் கிளர்ச்சிக்கு நிகர் ஏதுமிருப்பதில்லை. அதை அனுபவிக்கத்தான் சலிப்பை அதிகப்படுத்த முனைகிறோம். போர் அபின் போன்றது. அந்த மயக்கம் தரும் போதைக்காக எவ்வளவு சலிப்பையும் தாங்குகிறோம். பால், சாதி, மத, இன வேறுபாடு எல்லாம் முக்கியமல்ல. தொடர்ந்து சலிப்படைந்து போரிடுகிறோம். போரைக் கைவிட்டு அங்குக் குடியேறிவிடும் சலிப்பை வெளியேற்ற எந்த ஆயுதமும் இல்லை. போரும் இன்றி சலிப்பும் இன்றி இருப்பதுதான் முக்தி நிலை. அது ஒருவருக்கு வாழ்நாளில் எதற்குத் தேவை? எனவே போரிடலாம் சலிப்படைய. சலிப்படையலாம் மீண்டும் போரைத் தொடங்க…”
இப்படி தினம் ஒன்றைப் புதுமையாகச் செய்து நாம் இணக்கமும் இணக்கமின்மையும் கொள்ளலாம் என்றும் ஒரு செய்தியை அனுப்பியிருந்தான். இந்தப் புதுமைக்கு சண்டையே பரவாயில்லை என்று தோன்றியது.

Mubeen Sadhika

No comments:

Post a Comment