Search This Blog

Thursday, August 15, 2019

இது முதன் முறையல்ல



அவர்கள் ஏலவே திட்டமிட்டபடி
தனித்தனியாகப் பிரிந்தும்
கூட்டம் கூட்டமாகவும்
பலமற்ற விலங்குகளை பிடித்துண்ணும்
கழுதைப் புலிகள் போன்று
எங்கள் பூர்வீக நிலங்களுக்குள்
இருளின் புதரி்ல் பதுங்கியபடி ஊடுருவினர்
முதலில் எங்களது வணக்கஸ்தலங்களை
அடித்து நொறுக்கினர்
புனித நூல்கள் மீதும்
தொழுகை விரி்ப்புகள் மீதும்
காலைக் கிளப்பி மூத்திரம் அடித்தனர்
பின்னர் குடியிருப்புகளுக்குள்ளும்
கடைத் தொகுதிகளுக்குள்ளும்
பரவசத்துடன் நுழைந்தனர்
அங்கு அவர்கள் என்ன அளிச்சாட்டியம்
புரிந்திரிப்பார்களென்று
விபரிக்கத் தேவையில்லையென கருதுகிறேன்
அதற்கான அவகாசமும் என்னிடமில்லை
இவ்வாறு அவர்கள் அத்து மீறி வருவது
இது முதன் முறையல்ல
இதற்கு முன்னரும்
நிறையத் தடவைகள் வந்திருக்கின்றனர்
அவர்கள் வழமைபோல்
எங்களை நெருங்கும்போது
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது
ஊரடங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தன
துப்பாக்கிகளை வெளியே நீட்டியபடி
கவச வாகனங்கள் அணியணாயாய் நின்றன
எல்லாவற்றையும் கடந்து
சிப்பாய்களின் தோழ்களில் அமர்ந்தபடி
மிக இலகுவாக தங்களது தாகத்தை
தீர்த்துச் சென்றனர்
அவர்கள் திரும்பிச் செல்லும்போது
அவர்களது கரங்களில்
எங்களது ரத்தம் படிந்திருந்தது
மாறாக அவர்களிடத்தில்
மனசாட்சி இருந்திருக்கவில்லை
நேயம் இருந்திக்கவில்லை
எங்களது வாழ்வை தீக்கிரையாக்கிச் செல்லும்
ஒவ்வொரு தடவையும்
நாங்கள் நிராயுதபாணிகளாகவே நின்றிருந்தோம்
தவிரவும் அன்பை மட்டுமே போதிக்கும்
புத்தனின் சீடர்களுக்கெதிராக
வேறு என்ன செய்யலாமென கருதுகிறீர்கள்
0
ஜமீல்

No comments:

Post a Comment