Search This Blog

Thursday, May 8, 2014

குறும்பட டிப்ஸ் / இடறுகுழிகள்:

10 நிமிடப்படம்தானே ரெண்டு மணி நேரத்தில் எடுத்து முடித்துவிடலாம் என்று முதன்முதலில் படமெடுக்க கிளம்புபவர்கள் அது எத்தனை தவறான கருத்து என்பதை முதல் 30 நிமிடத்திலேயே உணர்ந்துவிடுவார்கள். ஒரு படம் எடுப்பது ஒரு தனிநபர் காரியமல்ல, ஒரு குழுவினராய் செயலாற்றி நிறைவேற்ற வேண்டிய கூட்டுப்பணி. அதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் குழுவினர் முழுவதுமே பாதிப்புக்குள்ளாவார்கள். அதனால்தான் ஒரு சரியான செயல்திட்டம் வகுப்பது மிக முக்கியமாகிறது. எனக்கு தெரிந்த டிப்ஸ் மற்றும் இடர்களை முடிந்தவரை பட்டியலிட்டிருக்கிறேன்.

1. திரைக்கதையை முடிந்தவரை அதற்குரிய வடிவத்திலேயே எழுதப்பழகுங்கள். அதையே மற்றவர்களுடன் கருத்து பரிமாற்றத்திற்கும் பயன்படுத்துங்கள். செல்டெக்ஸ் போன்ற இலவச மென்பொருட்களை பயன்படுத்துவது செலவை குறைப்பதுடன் திட்டமிடுதலுக்கும் பல நல்ல செயலிகளை கொண்டுள்ளது. ஒரு பக்க கதை படத்தில் ஒரு நிமிட நேரத்திற்கு ஒடும். ஒரு பக்கத்தை காட்சிப்படுத்த ஒன்னரை - இரண்டு மணிநேரங்கள் பிடிக்கும். அதனால் செல்டெக்ஸில் ஐந்து பக்க திரைக்கதை, முடிவில் 5 நிமிடம் ஓடும் படமாக வரும். அதை படம்பிடித்து முடிக்க எட்டு முதல் பத்து மணிநேரம் வரை பிடிக்கும்.

2. ஒரு கதாபாத்திரத்தின் வசனம் 10-12 வார்த்தைக்கு மிகாமல் பார்த்து கொள்ளுங்கள். படக்குழுவினரும், நடிகர்களும் பெரும்பாலும் தொழில்முறை கலைஞர்களாக இல்லாதபட்சத்தில், ஆறு - எட்டு வார்த்தைக்கு மேற்ப்பட்ட வசனங்களை இயல்பாக ஏற்ற இறக்கத்துடன் நீங்கள் நினைக்கும் வகையில் பேச வைப்பது மிகவும் கடினம். அதனால் வசனங்களின் அளவை குறைப்பது நல்லது. மேலும் பெரிய வசனங்கள் காட்சிகளை நீளமடையவைத்து பார்வையாலர்களை சலிப்பைடைய வைக்கும்.

3. காட்சிக்கோணங்களையும், காட்சி வரிசையையும் முன்தயாரிப்பிலேயே முடிவு செய்து கொள்ளுங்கள். படப்பிடிப்பு சம்யத்தில் லைட்டிங், கேமராவின் குறைபாடுகள் போன்றவற்றால் சில காட்சிகளின் அமைப்பு கோணங்களை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாவிட்டாலும், முன்னரே தீர்மானிப்பது படப்பிடிப்பு நேர அலைச்சல்களையும் கருத்து மோதல்களையும் தவிர்க்கலாம்.

4. படப்பிடிப்பில் நேரும் டெக்னிக்கல் விசயங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திக்கொள்ளலாம் என்ற எண்ணமே வரக்கூடாது. குறிப்பாக நிறங்கள், லைட்டிங் போன்ற சமாச்சாரங்களை பிற்சேர்க்கையில் சரிபடுத்திவிடலாம் என்ற நினைப்பிற்கு இடம் தரக்கூடாது. பிற்சேர்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை படப்பிடிப்பிற்கு முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும்.

5. நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுத்தாலும் அவர்களுடைய நேரம், பங்களிப்பு ஆகிவற்றை பற்றி முன்பே வரையறுத்து கூறிவிடுங்கள். யாராருக்கு எந்த துறை, எந்தவிதமான பங்களிப்பு, மற்றவர்களுடன் இருக்கும் சார்புநிலை ஆகிவற்றை முன்பே விலக்கிவிடுதல் நலம். படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் 15-30 நிமிடங்கள் இதை தெளிவுபடுத்திவிடுவது நல்ல வாடிக்கை. நண்பர்களின் பங்களிப்பிற்கு தக்க அங்கீகரிப்பை செலுத்தவும் மறக்ககூடாது.

6. படக்கோணங்களை ஒளிப்பதிவாளரிடம் முன்னரே பேசி தெளிவுபடுத்திவிடுங்கள். ஒளி அமைப்பிற்கும் படக்கருவியை வைக்க தகுந்த இடம் போன்றவற்றை அவர் தயார் செய்ய அது உதவும்.

7. குறும்படங்களில் பங்கேற்பவர்களுக்கு பணம் கொடுக்க நம் பட்ஜெட் ஒத்து வராவிட்டாலும், கலைஞர்களுக்கு குறைந்தபட்ச உணவவையாவது வழங்குவதற்க்கான பட்ஜெட் செய்வது பண்பு.

8. ஒரு காட்சி/கோணத்தைப்பற்றி சந்தேகம் இருந்தால், படப்பிடிப்பிற்கு முன்பே டெஸ்ட் சூட் செய்துவிடுவது நல்லது. படப்பிடிப்பில் டெஸ்ட் செய்துகொண்டிருந்தால் குழுவினருக்கு டைரக்டர் மேல் உள்ள நம்பிக்கை போய்விடும்.

9. முடிந்தால் கலைஞர்களின் திறமையை கண்டறிய ஆடிசன் வைப்பது நல்லது. அப்படி ஆடிசன் நடக்கும் போது கையில் உள்ள சிறிய கேமராவாகினும் அதை படம்பிடித்து கொள்ளுங்கள். பின்னர் சரியான கலைஞர்களை தேர்ந்தெடுக்க உகர்ந்ததாக இருக்கும்.

10. ரிகர்சல் / ஒத்திகை பார்ப்பது மிகவும் அவசியம். முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலேயே ஒத்திகை நடப்பது சிறப்பு. பெரும்பான்மையான கலைஞர்கள் இதை பொழுதுபோக்காக செய்ய வருவதால் ஒத்திகை அவர்களுடைய பங்களிப்பை மேன்மைபடுத்த உதவும். ஒத்திகையையும் படம்பிடித்தால் தவறுகளை திருத்த உதவும்.

முக்கியமான கட்டளையாக -

டைரக்டர்தான் கேப்டன் என்பதை தீவிரமாக செயல்படுத்துங்கள். சினிமா / படப்பிடிப்பு என்பது நம் மக்கள் அதீத விருப்பு கொண்டுள்ள ஒரு விசயம். படப்பிடிப்பை பார்வையிட வந்த நண்பருக்கு கூட காட்சி அமைப்பில் சில கருத்துகள் இருக்கலாம், டெண்டுலகருக்கே கிரிகெட் கற்றுத்தரும் துடிப்புடன் களத்தில் குதிக்க தயாராக நண்பர்கள் சுற்றிலும் இருக்கலாம். நடிகர்களின் நடிப்பை பற்றிய மாற்றங்களை சொல்ல நினைக்கலாம். ஆனால் அதை டைரக்டரிடமோ அவரது உதவியாளரிடமோ தெரிவிக்கலாமோ அன்றி, படக்குழுவினரையும், நடிகர்களையும் வெளி நபர்களோ மற்ற படக்குழுவினடிடத்திலோ நேரடியாக கருத்து / மாற்றங்களை சொல்ல அனுமதித்தல் கூடாது. டைரக்டர் மட்டுமே மொத்த குழுவினரையும் வழிநடத்தவேண்டும். நீங்கள் டைரக்டராக இல்லாத பட்சத்தில் இதையே கடைப்பிடித்து டைரக்டரின் பேச்சுக்கு மதிப்பளியுங்கள்.

குறும்படத்திற்கு இத்தனை திட்டங்களா என்று தளர்ந்துவிடாதீர்கள், முன்பே சொன்னது போல இந்த திட்டங்களை எல்லாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டியதில்லை. முடிந்தால் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ஒரு முறை சென்று பார்வையாளராக சென்றி கவனித்துவிட்டு வாருங்கள்.

இனி என்ன, குறும்படம் எடுக்க கேமராவை கையில எடுத்துட்டீங்களா? அதான் தப்பு... அப்ப கட்டுரையை இன்னொருக்கா முதல்ல இருந்து படிங்க!

No comments:

Post a Comment