Search This Blog

Tuesday, April 1, 2014

உன் நினைவுகள்

காட்சி 

முதலில் athmanam
நீதான் என்னைக் 
கண்டுகொண்டாய் 
எனக்குத் தெரியாது 
மனிதர்களைப் பார்த்தவண்ணம் 
முன்னே வந்துகொண்டிருந்தேன்  
உயிருடைய ஒரு முகத்துடன் 
பளிச்சிட்டுத் திரும்பினாய் 
பின்னர் நடந்தவைக்கெல்லாம் 
நான் பொறுப்பல்ல 
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ 
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய் 
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க 
காட்சிகள் மாற மாற 
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம். 


உன் நினைவுகள் 
எனினும் நான் 
உற்றுப் பார்த்தேன் 
கூர் வைரக் கற்கள் 
சிதறும் ஒளிக் கற்றைகளை 
வீசும் விளக்கை 

அப்பொழுதேனும் 
துடிக்கும் மனத்தின் 
பிணைப்பினின்று மீள 

முடியாது 
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று 
நிற்கும் தரையின் 
பரிமாணங்களைச் செதுக்கிய 
ஓவியத்திற்குச் செல்வேன் 
பழகிவிட்ட ஓவியமும் 
கைவிடும் 

உதிர முடியாத 
காகிதப் பூக்கள் 
வண்ணம் இழக்கும் 

மெல்லிய ஒலியுடன் 
நாடி நரம்புகளைத் 
தொற்றிக் கொண்டு 
சிறிது நேரம் 
மூச்சளிக்கும் இசை 

எழுத்துக் கூட்டங்களுக்கும் 
தொடர்வேன் 
ஏதேனும் ஒரு மூலையில் 
உன் நினைவுகள் 

என் அறையில் 
நான் முடங்கிக் கிடக்கையில் 
எப்பொழுதேனும் 
அந்த உயிரிழந்த பஸ்ஸரை 
அழுத்திச் சென்றுவிட்டாயோ 
என்று மன மதிரும் 

பின்னர் 
உயிர்த்திருக்கும் 
புட்களுடன் 
தேடிக்கொண்டிருப்பேன் 
அலையும் நினைவுகளில் 

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002) 

No comments:

Post a Comment