Search This Blog

Tuesday, April 9, 2013

நோயின் பாதிப்பை கண்டறிய சருமத்தை கவனிங்க



சருமத்தை நமது உடல்நிலை பாதிப்பைக் காட்டும் கண்ணாடி என்று கூறலாம். சருமம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகளையும், அப்படியானால் உடலில் என்ன பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்...
வியாதி: இதய நோயாக இருக்கலாம். குறிப்பாக, காதுகளுக்குப் பக்கத்தில் உள்ள தோலில் தடிப்பு ஏற்பட்டால் நீங்கள் உடனே ஓர் இதய மருத்துவ நிபுணரை நாடிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஆனால் காதருகே ஏன் தடிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவத்துறையினருக்கே சரியாகப் புரியவில்லை என்று கூறப்படுகிறது.
ஆலோசனை: அதிகப்படியான மனஅழுத்தம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மனதைப் பாரமில்லாமல் இலேசாக வைத்துக் கொள்ள முயல்வதும், பிரச்சினைகளை எளிய முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது...
வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும் போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
ஆலோசனை: ஒரு நாளைக்கு எட்டுகுவளை தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக்கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு அதிக தண்ணீரை அருந்துவீர்கள்.
தோல் இளமஞ்சளாக மாறுவது...
வியாதி: கல்லீரல் நோயாக இருக்கலாம். கல்லீரல் பாதிப்படையும்போது உடலில் இருக்கும் பித்தநீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறுகிறது.
ஆலோசனை: அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவதால் (மது) இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருப்பவர்கள் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.
சிவந்த உள்ளங்கை...
வியாதி: இதுவும் கல்லீரல் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால் நம் ரத்தத்தில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும்.
அந்நிலையில் ரத்தத்தின் நிறம் அதிக சிவப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை அதிக சிவப்பான உள்ளங்கை சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்றபாகங்களை விட உள்ளங்கை தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
ஆலோசனை: கீழாநெல்லியை வாரத்தில் ஒருமுறை சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையைப் போக்க, மாதம் ஒருமுறையாவது நாள்முழுக்கப் பழங்களையே உணவாக உட்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment