பழமை வாய்ந்த இந்து மத நம்பிக்கைகளில் முக்கியமான ஒரு பகுதி “சாக்தம்”. “சக்தி” யை முழுமுதற் கடவுளாக கொண்ட நம்பிக்கையே சாக்தம். இந்த பிரபஞ்சத்தை படைத்த பரம்பொருளே சக்தியின் உருவான “திரிபுர சுந்தரி”. பூமி ஆகாயம் தேவலோகம் எனும் மூன்று லோகத்தையும் அவளே ஆள்கிறாள். மனம் புத்தி சித்தம் மூன்றிலும் அவளே நிறைந்து இருக்கிறாள். எல்லையில்லா சக்தி உடையவளே சக்தி. எல்லாவற்றிலும் நிறைத்தவளே சக்தி.
பிரபஞ்சத்தின் மத்தியில் இருக்கும் பரம்பொருளாக திரிபுர சுந்தரி வீற்றிருக்கும் நகரமே “ஸ்ரீநகரா”. ஸ்ரீநகரா வின் மத்தியில் இருக்கும் இடம் “மஹா பத்ம வனம்”. அந்த தாமரை வனத்தின் நடுவே இருக்கும் தேவியின் இல்லம் “சிந்தாமணி க்ருஹம்” என்று அழைக்கபடுகிறது. அதன் நாலுபக்க வாசல்களும் தேவியின் காவலர்களால் காவல் காக்க படுகிறது, சிந்தாமணி கிருகத்தின் மத்தியில் இருக்கும் மஹா பத்ம வனத்தின் மத்தியில் “ஸ்ரீ சக்ரம்” அமைந்து இருக்கிறது. அதன் மத்தியில் இருக்கும் பிந்து பீடத்தில் ஈஸ்வரனை பலகையாக கொண்டு அமர்ந்து மஹா திரிபுர சுந்தரி சர்வ லோகங்களையும் ஆள்கிறாள்.
இந்த மூன்று எழுத்தில் எத்தனை சுகம், எத்தனை இதம், எவ்வளவு பாதுகாப்புநடந்து போகும் காலில் சின்ன சிறு கல் பட்டாலும் நம்மையும் அறியாமல் அம்மா என்று தானே கத்துகிறோம். எனக்கொரு வலி என்றால் என்னால் தாங்க முடியாத துயரம் வருகிறது என்றால் அதை உண்மையாகவே என்னிடம் இருந்து விரட்டுவதற்கு பாடுபடும் ஒரே ஜீவன் அம்மா தானே,
இந்த உலகில் ஒரு ஜீவனாக பிறந்து கண் விழித்ததும் பார்த்தது அவள் முகம்தானே, அவள் இல்லையென்றால் நான் ஏது? திறமைகள் ஏது? எனக்கு வளர்ச்சி தான் ஏது? அம்மாவிடம் எனக்கு பயமில்லை, அம்மாவிடம் எனக்கு வெட்கமில்லை, நான் வயது முதிர்ந்து கிழவனாகி விட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஓடி ஒய்ந்து தளர்ந்து போய்விட்டாலும் அவளை காணும் போது நான் குழந்தையாகி விடுகிறேன்.
அதனால் தான் உலகத்தை ஆண்ட தமிழ் குடிமக்கள் பெற்ற மனம் பித்துபிள்ளை மனம் கல்லு என்றார்கள். கெட்ட பிள்ளைகள் இருக்கலாம், கெட்ட தாய் என்று உலகத்தில் ஒருத்தி கூட இல்லையென்று தேவி பாகவதம் சொல்கிறது. பிறக்கின்ற போதே அம்மாவின் உடம்பில், அம்மாவின் உயிரில்அம்மாவின் குருதியில் ஒட்டிக்கொள்கிறோம். அதனால் தான் அறுசுவை பதார்த்தம் கூட அவள் ஊட்டும் ஒரு பிடி சாதத்தின் முன் சுவையை தர முடியாமல் மண்டியிடுகிறது. வளர்ந்து விட்டோம், ஆயிரம் பொறுப்புகளை சுமக்க முடியாமல் சுமந்து தள்ளாடுகிறோம்.
அம்மா தான் எல்லாம் என்ற ஞானம் மனிதனுக்கு புதியதாக வந்ததல்ல, பச்சை மாமிசத்தை தின்று இலை தழைகளால் உடல் மறைத்து மரக் கொம்பிலும்,குகைக்குள்ளும் மனிதன் வாழ்ந்த போதே இதை உணர்ந்துவிட்டான். இதனால் தான் தாயாரை தெய்வமாக கருத வேண்டும் என்ற நிலையில் இருந்து தெய்வத்தையே தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்துவிட்டான். அன்று முதல் தோன்றியது தான் தாய் தெய்வ வழிபாடாகும்.
நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நினைந்திருக்கும் பராமாத்மாவை பரமதாயாளனான இறைவனை தாயாக ஒரு பெண்ணாக பார்ப்பது மனிதனின் கற்பனையல்ல. எல்லாமானஎம்பெருமானுக்குள் எல்லாமும் இருக்கிறது. ஒரு தாயினுடைய அன்பில் மூலம் எங்கே இருந்து வருகிறது. எந்த விரலை தொட்டாலும் அறிய முடியாத பாசத்தை உணர்கிறோமே அந்த கருணை, அந்த பாசம் எங்கே இருந்து வருகிறது எதுஅதனின் மூலம் என்று நெருங்கி பார்த்தால் கருணாமூர்த்தியான கடவுளிடம்இருந்து வருவதை உணர முடிகிறது.
இந்து மத வரலாற்றை தொடர்ச்சியாக கண்டு வரும் நாம், முதலில் வழிபாடு என்பதே சிவலிங்கத்தில் இருந்து தான் துவங்கியது என கண்டோம். சிவவழிபாடு என்பது எப்படி காலத்தால் கணித்து கூறமுடியாத அனாதிகாலம் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறதோ அதே போலவே சக்தி வழிபாடு என்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்து சமயத்திலுள்ள வைஷ்ணவம், சௌரம், கௌமாரம்,காணாபத்தியம் போன்ற பிரிவுகள் எல்லாம் சிவ சக்தி வழிபாட்டுக்கு பிறகேவந்தது என்று சொல்வதில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.எனவே அடுத்து வரும் சில பகுதிகளில் தாய் தெய்வ வழிபாடு என்ற சக்தி வழிபாட்டின் தத்துவத்தையும் மகத்துவத்தையும் சிறிது பார்ப்போம். குருஜியின் அருளாசியுடன்....அன்புடன் கே எம் தர்மா....
No comments:
Post a Comment