Search This Blog

Monday, July 15, 2019

உங்களை உறைய வைக்கும் வசனங்கள் (சுஜாதா குறும்பு)

புகைப் படம்: ஸ்டில்ஸ் ரவி. ( Ravi Varma V )
இந்தியன் படத்தில், நிழல்கள் ரவியை கமல்... ஸாரி.. இந்தியன் தாத்தா கொல்லும் காட்சி. வெறும் இரண்டே நிமிடங்களில் உங்களை உறைய வைக்கும் வசனங்கள்.
‘நீ ஒருத்தன் வாங்கறதால உனக்கு கீழ இருக்கறவனெல்லாம் வாங்கறான். இப்படித்தான் பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, நிதி, மின்சாரம், உணவு, சுகாதாரம், கல்வி, காவல், தொழில்னு எல்லாத் துறைலயும் வாங்கி வாங்கி நாட்டை வளர விடாம கெடுத்து குட்டிச்சுவராக்கி வெச்சிருக்கீங்க. நல்ல காத்தில்ல.. நல்ல பொருளில்ல.. நல்ல சாப்பாடில்ல.. ஏகப்பட்ட இயற்கை வளங்கள் இருந்தும் இந்த நாடு பிச்சைக்கார நாடா இருக்கே... ஏன்..? ஒவ்வொரு இந்தியனும் கடனாளியானதுண்டா மிச்சம். பக்கத்துல இருக்கற குட்டிக்குட்டி தீவெல்லாம் பெரிய பெரிய தீவா வளர்ந்திருக்கே.. எப்படி.. ஏன்?”
”அங்கெல்லாம் லஞ்சம் இல்ல”
“இருக்கு... இருக்கு.. அங்கெல்லாம் கடமைய மீறுறதுக்குதாண்டா லஞ்சம். இங்க கடமைய செய்யறதுக்கே லஞ்சம்.. தேசிய ஒருமைப்பாடுங்கறது இந்த நாட்ல லஞ்சத்துல மட்டும்தாண்டா இருக்கு” என்று தொடர்ந்து அவர் பேசும் வசனங்களின் வீரியம் 20 வருடங்கள் கழித்தும் வலிக்கிற நிஜமாய் இருக்கிறது.
’முதல்வன்’ படத்தின் ‘ரகுவரன்-அர்ஜுன்’ நேர்காணல் காட்சியை மறக்க முடியுமா? படத்தின் மிக முக்கியமான திருப்புமுனைக் காட்சி அது. திரையில் இரு ஆண்கள் 15 நிமிடத்திற்கு நீள நீள வசனம் பேசிக் கொண்டிருப்பதை ரசிகன் சலிக்காமல் பார்க்க வேண்டுமானால், வசனத்தின் முக்கியத்துவம் எப்படி இருக்க வேண்டும்! ‘எதிர்கட்சிகிட்ட எவ்ளோ வாங்கின’ என்று கேட்க, ‘நீங்க எதிர்கட்சியா இருந்தா எவ்ளோ கொடுத்திருப்பீங்க’ என்ற பதில் கேள்வி, தமிழக அரசியல் தலைவர்களின் எதார்த்தத்துடன் பின்னிப் பிணைந்த சுஜாதா குறும்பு.
போகிற போக்கில், நகைச்சுவை வெடியைக் கொளுத்துவதிலும் இவர்தான் பெஸ்ட். அதாவது நல்ல சீரியஸான காட்சிக்கு இடையே ஒரு குண்டூசியைக் குத்தி, ஒரு நிமிடம் சிரிக்கவும் கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிற காமெடி.
முதல்வனில், சேல்ஸ் டேக்ஸ் கட்டணும் என்று ஒருநாள் முதல்வனாக அர்ஜுன் கெத்து காட்டிக் கொண்டிருப்பதை ரகுவரன் டிவியில் பார்த்துக் கொண்டே, தன்னருகே இருக்கும் மந்திரியிடம் கேட்பார்.
“யோவ் நிதித்துறை.. ஒருநாளைக்கு சேல்ஸ் டாக்ஸ் வருமானம் எவ்வளவு?”
அந்த மந்திரி, மிகவும் மரியாதையான குரலில் கேட்பார்: ‘கட்சிக்குங்களா.. நாட்டுக்குங்களா?”
அந்நியனில், விக்ரம் சொல்லும் ‘சொக்கன் சிக்ஸ்டி ஃபைவ்’ சுஜாதாவைத் தவிர யார் மூளையிலும் உதித்திருக்க வாய்ப்பில்லை. இந்தியனில் கவுண்டமணி சொல்லும் ‘என்னய்யா மம்மியப் பாத்த எம்.எல்.ஏ மாதிரி பம்முறே’வை எழுதுகிற தில்லையும் சொல்லலாம்
- Vikatan E Magazine,
Thanks Chandran Veerasamy

No comments:

Post a Comment