Search This Blog

Saturday, June 4, 2016

பாடும் நிலா பத்மபூஷண் டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்தநாள்






1966 ஆம் ஆண்டு திரையுலகில் தன் குரல் தடம் பதித்து 2016 ஆம் ஆண்டில் தன் ஐம்பதாண்டுக் கலைச்சேவையைக் கடக்கும்

”எஸ்.பி.பாலசுப்ரமணியம்” அவர்கள் இன்று தனது 70 வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். மனித நேயத்திலும், தன்னடக்கத்திலும், சிறந்த பன்புகளிலும், திறமையிலும் உயர்ந்த இடத்தில் இருக்கும் அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இசைசேவையாற்ற ”லஷ்மன் ஸ்ருதி” இசைகுழுவின் சார்பாக வணங்கி வாழ்த்துகிறோம்.


 








• ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் எனப்படும் எஸ்,பி.பி அவர்கள் 4.6.1946 அன்று ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கொணேட்டாம்பேட்டையில் பிறந்தவர். 

• எஸ்.பி,பாலசுப்பிரமணியம் எஸ் பி சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர்.

• உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள்

• இவருடைய தந்தை ஹரிகதா கலைஞர் ஆவார். 

• பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிகதா வாசிக்கும் பொழுது கவனித்து, அதைக்கற்று, இசைக்கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும்.

• எஸ்.பி.பி பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு அனந்தபூரில் உள்ள ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி மாணவனாக சேர்ந்தார். டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

• 1964 ஆம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னையை மையமாக்க் கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.
• எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
• இளையராஜா, ஆர்.டி.பாஸ்கர் மற்றும் கங்கை அமரன் இவர்களோடு சேர்ந்து எஸ்.பி,பி இசை நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொண்டிருந்தார்.
• நாடகங்களில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். 
• அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பிக்கு முதல் போட்டிப் பாடல் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய ”நிலவே என்னிடம் நெருங்காதே” என்ற பாடலாகும்.



















• வாய்ப்புக்காக இசையமைப்பாளர்களிடம் செல்லும்போதும் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்களையேதான் பாடிக்காட்டுவார்.

• எஸ்.பி.பி என்ற மூன்றெழுத்துக்களால் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர்
• எஸ்.பி.பாலா என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அழைப்பார்கள்.
• பாலு என்று இசைத்துறை நண்பர்கள் அழைப்பார்கள்
• பாலுகாரு என்று ஆந்திர மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
• 1966 ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து தன் திரைத்துறை வாழ்வை துவங்கியவர்
• . 1966 முதல் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். 
• உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான, நாற்பதாயிரம் பாடல்களுக்கும் மேல் பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைக புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 
• திரைப்படப் பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். 
• இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் ”பத்மஸ்ரீ” விருதும் 2011 ஆம் ஆண்டில் ”பத்மபூஷண்” விருதும் வழங்கியது
• 1960 களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார்.
• இவர் தமிழில் முதலில் பாடியது ”சாந்தி நிலையம்” படத்தில் வரும் ”இயற்கையென்னும் இளையகன்னி” என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா வெளிவந்தது 
• ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். 
• எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்று அவர் அடிக்கடி சொன்னாலும், ”சங்கராபரணம்” படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். 
• இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. 










• ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றிருக்கிறார். 
• 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். 
• எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா, பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். 
• பின்னணி பாடகி எஸ். பி. சைலஜா இவருக்கு இளைய தங்கை ஆவார் அவரும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்
• எஸ்.பி.பி யின் மனைவி பெயர் சாவித்ரி, மகன் எஸ். பி. பி. சரண், மகள் பல்லவி, 
• எஸ்.பி.பி சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருபவர்.

• எஸ்.பி.பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ்.பி.கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா (1966), இத்திரைப்படத்தில் ஒரு பாடலைப்பாடினார்.
• அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் "நகரே அதே ஸ்வர்க" என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு பாடினார்.
• இவர் முதன் முதலில் தமிழ் மொழியில் பாடியது, 1969 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடித்த சாந்தி நிலையம் திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் இயற்றிய பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இயற்கையென்னும் இளையக்கன்னி பாடலைப் பாடினார்.தமிழில் இரண்டாவது பாடலாக எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் ஆயிரம் நிலவே பாடலைப்பாடினார்.
• மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் அவர்களால் கடல்பலம் என்ற திரைப்படத்தில் "ஈ கடலும் மறு கடலும்" பாடல் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
• இவர் 1970 களில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.
• தமிழ் திரைப்பட உலகில் எம்.ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.
• இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான பி. சுசீலா, எஸ். ஜானகி, வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.
• தென்னிந்திய திரையிசையில் வெற்றிக் கூட்டணியான இளையராஜா, எஸ். பி. பி , எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது.
• எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார்.
• சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது.
• இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி.மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
• இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.








• இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.
• எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார் குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழ் திரையிசையில் இளையராஜா, எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன.
• 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சாகர சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைந்ததனால் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது.
• 1988 ஆம் ஆண்டு ருத்ரவீணா (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது.
• இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார் .
• 1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.பி.பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் மைனே பியார் க்யா மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது தில் தீவானா பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ஹம் ஆப்கே ஹே ஹான் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ்.பி.பி பாடிய திதி தேரா தேவர் தீவானா பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார்.
• எஸ் பி பி 1990களில் இசையமைப்பாளர்களான தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் "ஜுலை மாதம் வந்தால்" பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும். கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் "மானூத்து மந்தையிலே மாங்குட்டி" பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.
• பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) இத்திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.
• எஸ் பி பி 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா, ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார் போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.
• இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015 ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்.
• எஸ்.பி.பி நடிகர் கமல்ஹாசனுக்கு தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
• கமல் நடித்த தமிழ் திரைப்படம் மன்மத லீலை தெலுங்கில் மனமத லீலா என மொழிமாற்றம் செய்யப்பட்டது அதன்மூலம் எஸ்.பி.பி தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
• குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான்கான், கே.பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஷ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.
• நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை அன்னமய்யா மற்றும் ஸ்ரீ சாய் மகிமா திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார்.
• பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
• தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்.

No comments:

Post a Comment