Search This Blog

Thursday, March 12, 2015

அலறல்களின் பாடல்

வன்புணர்
முலைகளை வெட்டியெறி
பிறப்புறுப்பில் கடப்பாரையைச் செலுத்து
தெறிக்கும் குருதிச் சிவப்பு
உன் தெய்வங்கள் வீற்றிருக்கும்
கோயிலின் சுற்றுச்சுவருக்கு வண்ணமாகிறது

வன்புணர்
முந்திரிக் காட்டில்
நிர்வாணமாக்கு
அவள் உடைகள்
உன் கடவுளை அலங்கரிக்கின்றன

வன்புணர்
பள்ளிச்சீருடையில் ரத்தம் படரச் செய்
பின் முள்காட்டில் தூக்கியெறியுமுன்
அக்குழந்தையின் பால் மணத்தை
உன் மேனியில் வழித்து எடு
அதுவே
கோயிலின் தெய்வீக மணமாகிறது

வன்புணர்
மொட்டைமாடியில் இருந்து வீசியெறி
அவளின் அலறல்
பக்திப் பாடலாகிறது

வன்புணர்
அவள் கதறலை அணுஅணுவாய் ரசி
அவள் கண்ணீர்
புனிதத் தீர்த்தமாகிறது

வன்புணர்
அடையாளம் தெரியாமல்
அவளைச் சிதைத்து
சிதையில் இடு
அச்சாம்பல்
பிரசாதத் திருநீறாகிறது

வன்புணர்
அவள் மூச்சை நிறுத்து
இத்தனை காலம்
அவள் உதிர்த்த
புன்னகைகள் கோக்கப்பட்டு
உன் கடவுளின் கழுத்தில்
மலர்மாலையாகின்றன

இனி
நீ வல்லாங்கு செய்ய
சேரிவாழ் பெண்கள் எவரும் இலர்
காமுற்ற நீ
கோயிலுக்குள் நுழைகிறாய்

உன் முந்தைய வன்புணர்ச்சிகளின்
சாட்சியங்களைச் சுமக்கும்
அக்கோயிலுக்குள்
நீ அடியெடுத்து வைக்க வைக்க
பெண் கடவுளர்களின் கற்சிலைகள்
நடுங்கத் தொடங்குகின்றன!

கவின் மலர்

No comments:

Post a Comment