Search This Blog

Monday, June 6, 2011

இந்துமதவரலாற்று தொடர்பாகம் -8 !!! கடவுள்உருவாக்கியமதம் !!! இப்படித்தான்இருந்ததுவேதகாலம் !!!

இந்துமதவரலாற்று தொடர்பாகம் -8 !!! கடவுள்உருவாக்கியமதம் !!! இப்படித்தான்இருந்ததுவேதகாலம் !!!

குருஜியின் அருளாசியுடன்

இந்துமதவரலாற்று தொடர்பாகம் -8 !!!
கடவுள்உருவாக்கியமதம் !!!
இப்படித்தான்இருந்ததுவேதகாலம் !!!

கால்நடைகளை நம்பியே வாழ்க்கையை ஓட்டிய ரிக்வேத கால மக்கள் அதிகப்படியான மாமிச உணவுகளையே கொண்டவர்களாக இருந்தார்கள்.  ரிக்வேத ஆதாரப்படி திருமண சடங்குகள் யாகங்கள் போன்ற வழிபாட்டு நிகழ்வுகளின் மாமிச விருந்துகளே அதிகம் இருந்ததை அறிய முடிகிறது.  செல்வத்தின் இருப்பிடமான பசுவை கொல்வது பாவம் என்ற பொருளில் அகணியா என்ற வார்த்தை ரிக்வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் மாட்டு இறச்சியானது அக்காலத்தில் ஒதுக்கப்பட இல்லை என்று பல இடங்களில் அறிய முடிகிறது.  மாமிசம் தவிர பார்லி, அரிசி, யவம் போன்ற தானியங்கள் பிராதன உணவாகவும் இருந்து இருக்கிறது.  பால், தயிர், வெண்ணெய், காய்கறிகள், பழங்கள் போன்றவைகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.  போதை தருகின்ற சோம பானம், சுறா பானம் போன்றவைகள் விருந்து காலங்களில் ஏகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நகைகள் அணிவதில் இந்தியர்களுக்கு எப்போதுமே அலாதியான ஆர்வம் உண்டு.  இந்திய மண்ணின் தன்மையே பொன்னின் மீது ஆசையை வரவழைத்து விடும் போல.  இதற்கு ஆரியர்கள் மட்டும் விதிவிலக்காக முடியுமா  என்ன?  ஆரிய ஆண்களும் பெண்களும் கழுத்திலும், காதிலும் கையிலும், மூக்கிலும் ஏன் தலைமுடியிலும் கூட தங்க ஆபரணங்களை அணிந்து அழகு பார்த்திருக்கிறார்கள்.  தாடி, மீசை வைத்த ஆண்களும், மழுங்க சிரைத்த ஆண்களும் இப்போது போலவே அப்போதும் இருந்திருக்கிறார்கள்.  பெண்கள் மலர்களால் தங்களை அழகுப்படுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.  மெல்லிய ஆடைகளும், கம்பளி ஆடைகளும் அவர்களின் உடையாக இருந்திருக்கிறது. ரிக்வேதகால ஆண்களும், பெண்களும் நடனமாடுவதில் வல்லவர்கள்.  வீணை, புல்லாங்குழல், முரசு போன்ற இசை கருவிகள் அவர்களின் இனிமையான வாய்பாட்டிற்கு மெருகூட்டி இருக்கின்றன.  தேரோட்டம், குதிரை சவாரி அவர்களின் பொழுது போக்கு.

ரிக்வேதகால மக்கள் சிறந்த மருத்துவ அறிவு பெற்றவர்கள்.  விஸ்பலா என்பவன் கால்கள் துண்டிக்கப் பெற்றபிறகு செயற்கை கால்கள் பொருத்தியதாக ரிக்வேத பாடல் ஒன்று சொல்வதை வைத்து பார்க்கும் போது நமக்கே ஆச்சர்யம் வருகிறது.  அறுவை சிகிச்சை செய்வதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்காவிட்டால்  நிச்சயம் செயற்கை கால் பொருத்த முடியாது.  மருத்துவ தேவதைகளான அஸ்வினி குமாரர்கள் பல நோய்களுக்கான அரிய மருந்து வகைகளை அடுக்கடுக்காக சொல்லியிருக்கிறார்கள்.  யசஷ்மா என்ற நோய் பற்றி வேதம் அடிக்கடி சொன்னாலும் அந்த நோயின் பாதிப்பு என்பது நமக்கு முழுமையாக தெரியவில்லை.  அவர்களின் மருத்துவத்தை பற்றி பேசப் போனால் ஏராளமான பக்கங்கள் செலவாகும்.

வழி நடை பயணத்திலேயே வாழ்க்கையின் பெரும்பகுதியையும் ஆரியர்கள் செலவிட்டாலும், ரிக்வேத காலத்தில் சில இடங்களில் தங்க நேரிடும் போது வேளாண்மை தொழிலையும் அவர்கள் செய்திருக்கிறார்கள்.  நிஷ்கா என்ற நாணயம் அவர்கள் பயன்படுத்தினாலும் கூட பெருவாரியான வியாபாரம் பண்டமாற்று முறையில் தான் நடந்திருக்கிறது.  நங்கூரம், பாய்மரம் போன்ற சொற்களை அவர்கள் அதிகம் பயன்படுத்தவில்லை என்பதினால் கடல் வாணிபம் அவர்கள் இடத்தில் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தை பற்றி ரிக்வேதம் பேசுவதால் கடல் பயணத்திற்காக அல்ல என்றாலும் நதிகளில் பயணப்படவும் அதன் மூலம் அவர்கள் பொருட்களை ஈட்டவும் அதிக வாய்ப்பு இருந்தது என்று சொல்லலாம்.

ரிக்வேதகால கிராமங்கள் அதிகப்படியான தூரத்தில் அமையாமல் பாதுகாப்பிற்காக அருகருகிலேயே அமைந்திருந்தன.  பொதுவாக வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு தாவர உப பொருட்களால் கூரை வேயப் பட்டாலும் கூட மரத்தால் ஆன மச்சு வீடுகளும் மூங்கில் வீடுகளும் இருந்திருக்கின்றன. ரிக்வேத காலத்தில் இறைவழிபாடு என்பது இயற்கை வழிபாடாகவே இருந்தது.  கடவுகளுக்கு அவர்கள் எந்த தனிப்பட்ட உருவத்தையும் கொடுத்தது இல்லை.  இயற்கை சக்திகளை வருணன், அக்னி, வாயு, பிருத்வி என்று பல்வேறு பெயர்களில் துதி செய்து வழிபட்டனர்.  அப்படி வழிபட்ட தெய்வங்களில் ரிக்வேதத்தில் மட்டும்இருபத்தி மூன்று சக்திகளாகும்.  ஆரம்ப காலத்தில் வேதகால மக்களால் தீயஸ் என்னும் கடவுளும்பிருத்வி என்ற கடவுளும் பெரிதும் வழிப்படபட்டனர். 

காலம் செல்ல செல்ல இத்தெய்வங்கள் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.  அதற்கான காரணம் என்னவென்று சரிவர தெரியலில்லை.  இடி இடித்து மழை பெய்விக்கும் வருணணும், மேக கடவுளான இந்திரனுமே நான்கு வேத காலங்களிலும் முதலிடம் பெற்றிருந்தனர்.  அதிலும் வருணனுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டது.  திராவிடர்களிடமிருந்து திருமாலை பற்றிய  அறிவை பெற்ற பிறகு எப்படி திருமாலானவன் பாவங்களை மன்னிப்பவனாக கருதப்பட்டானோ அப்படியே வருணனும் வேதகாலத்தில் கருதப்பட்டான்.

வருணன் இந்திரன் ஆகிய கடவுள்களை தவிர மருத்துகள் புயல் கடவுளாகவும் ருத்திரன் மின்னல் கடவுளாகவும் வணங்கப்பட்டான்.  சிவன், திருமால், விநாயகன், முருகன், பார்வதி மகாலஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றிய நேரடியான குறிப்புகள் வேதங்களில் இல்லையென்றாலும் கூட அவர்களை பற்றிய மறைமுகமான குறியீடுகள் வேதத்தில் உள்ளன. மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மாவை விதாத்,ஹிரன்யகர்ப்பன், பிரஜாபதி பிராமணஸ்பதி என்ற பெயர்களால் அழைக்கப் படுகிறார். இவைகளையெல்லாம் பார்க்கும் போது வேதகாலத்தில் பல கடவுள் வழிபாடு இருந்ததாக நமக்கு தோன்றும். பல சமயங்களில் இந்து மத சிறப்புகளை சொல்லுகின்ற போது சில பகுத்தறிவாத நண்பர்களும் மாற்றுமத சகோதர்களும் இந்து மத வேதங்கள் கடவுள் பல என சொல்லி தவறான பாதையை காட்டுகிறது என்று குறைபட்டவர்களும் உண்டு.  குற்றம் சாட்டியவர்களும் உண்டு.  அவர்களுக்கெல்லாம் எனது ஒரே பதில் இந்து மதத்தில் பல கடவுள் பெயர்கள் உண்டு.  அவைகள் கடவுளின் ஒவ்வொரு செயலிலும் அவருக்கு உள்ள பெயரே தவிர அவரே பல அல்ல, என்பது தான். உதாரணமாக இயற்கை மழையாக கொட்டுகின்ற போது இந்திரன் என்று அழைக்கப் படுகிறது.  மழை தண்ணீரே வெள்ளமாக பாயும் போது வருணன் என்று அழைக்கப் படுகிறது.  ஆனாலும் இயற்கை ஒன்றே தான்.  இந்து மத தத்துவப்படி கடவுள் இயற்கையாகவும் இருக்கிறார்.  இயற்கைக்கு அப்பாற்பட்டும் இருக்கிறார். இயற்கையை வழி நடத்து பவராகவும் இருக்கிறார்.  இதற்கு என்ன ஆதாரம் என்று சிலர் கேட்கலாம்.  அவர்களுக்காக ரிக் வேதத்தில் உள்ள ஒரு பாடலை கீழே தருகிறேன்.

இந்திரனென்றும்மித்திரனென்றும்வருணனென்றும்,
அக்கினியென்றும்தெய்விகம் பொருந்திய கருடமதன்
என்றும் உன்னை வழங்குவர்.

ஒரு பொருளாம் உனக்குக்
கவிஞர் பல பெயர்கள் அளிப்பார்
அக்கினியும்யமனும் மாதிசுவனும்
நீயே அன்றோ?’

இதை விட சிறந்த ஆதாரம் வேறு எதையும் தர இயலாது.  இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் இன்று கடவுள் ஒருவரே என்று சொல்லுகின்ற மதங்கள் கூட இந்திய வேதத்தில் இருந்து தான் ஒரு தெய்வ வழிபாட்டை பெற்றிருக்கின்றன என்று சொல்லலாம்.  அதாவது பாரசீகத்தில் தோன்றிய சொராஸ்தியர் என்பவர்உபநிஷத ஞானியொருவரின் உபதேசத்தை கேட்ட பிறகே அஸ்சரமஸ்தா என்ற முழுமுதற் கடவுளை அறிந்து சொராஸ்திய மதத்தை ஸ்தாபித்தார். அவரின் அஸ்ரமஸ்தா தான் யுத மதத்தின் ஜெகோவா கடவுளானார். ஜெகோவா கடவுளே கிறிஸ்துவத்தில் பரிசுத்த ஆவியானார்.  இந்த பரிசுத்த ஆவிதான் இஸ்லாம் சொல்லும் அல்லா. 

எனவே உலகிலுள்ள எல்லா மதங்களுக்கும் ஆதார தத்துவத்தை கொடுத்தது இந்து மத வேதங்கள் தான்.  

No comments:

Post a Comment