Search This Blog

Wednesday, August 15, 2012

பொது நிகழ்வுகளிலும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளல்



1986ல் இந்தியாவில் நடந்த சம்பவமொன்று இது. ஷாபானு என்னும் முஸ்லிம் பெண்ணொருவர் தனது தன்னை தலாக் (விவாகரத்து) செய்த கணவரிடமிருந்து தாபரிப்புப் பணம் கோரி வழக்குத் தொடுத்தார். இஸ்லாமிய சட்டத்தில் தாபரிப்புப் பணம் பெறுவதற்கான அங்கீகாரம் இல்லலையாதலால் , ஷாபானு இந';தியாவின் சிவில் சட்டத்தின் கீழ் தனது வழக்கைத் தாக்கல் செய்தார். அவருடைய கணவரின் வழக்கறிஞர் உடனேயே ஒரு பூகம்பத்தைக் கிளப்பி விட்டார். ஒரு முஸ்லிம் பெண் இஸ்லாமியச் சட்டத்தை மட்டும்தான் உபயோகிக்கலாம், அவர் எப்படி இந்தியவின் பொதுச் சட்டத்தை நாடலாம் என்னும் வாதமே இந்தப் பூகம்பமாகும். இந்த வாதம், முஸ்லிம்கள் இஸ்லாமியச் சட்டத்தினைப் பாவிக்காது விட்டால் இஸ்லாமிய மக்களின் கலாசார உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்கின்ற ரீதியில் பூதாகாரமாக உருவெடுக்கலாயிற்று. இதற்கு ஆதரவாக முழு முஸ்லிம் ஆண் சமூகமும் ஒன்று திரண்டது. அவர்கள் அறிக்கைகள் விட்டார்கள், தெருக்களில் போராட்ட ஊர்வலம் நடத்தினார்கள். அப்போதைய இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தியிடம் முறையிட்டார்கள். ராஜீவ் சாந்தியும், முஸ்லிம் சமூகத்தினர் முழுமையாக இஸ்லாமிய சட்டத்தின்கீழ்தான் வரவேண்டும் என்றும், அவர்கள் (இந்திய பிரஜைகளாக இருந்தும்கூட) இந்திய சிவில் சட்டத்தை உபயோகிக்க முடியாதென்றும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர ஒப்புக்கொண்டார்.
இந்தியாவில் இருந்த பெண்கள் அமைப்புக்களும் சளைக்கவில்லை. ஷாபானுவுக்கு ஆதரவாகக் கூடினார்கள். ஒரு நிர்க்கதியாக விடப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதே முக்கிய விடயமாகையால், இந்திய பொதுச் சட்டத்தை அவள் நாடலாம் என்பதே அவர்கள் வாதம். அவர்களும் ராஜீவ் காந்தியிடம் ஓடோடிச் சென்று சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவேண்டாமென்று கோரிக்கை வைத்தார்கள். அதற்கு ராஜீவ் காந்தி என்ன சொன்னார் தெரியுமா?
'ஆம், இச்சட்டத் திருத்தம் அநீதியானது என்பதை நானறிவேன். ஆனால் இஸ்லாமியத் தலைவர்கள் சனத்திரளை வீதிக்குக் கொண்டுவந்து இறக்கக்கூடியவர்கள்.  அதை வாக்குகளாகவும் மாற்றிக் காட்டக்கூடியவர்கள். உங்களுக்கு அது முடியுமா? முடியாதென்பதால் நான் அவர்கள் பக்கம்தான் சாய்வேன்..'
பெண்களோ வாயடைத்துப்போய்த் திரும்பினார்கள்.
ஆம். எங்கும் மக்கள் திரளின் சக்தியினால்தான் நல்ல மாற்றங்கள் என்றாலும் தீய மாற்றங்கள் என்றாலும்; நிகழுகின்றன. ஏந்த சக்தி வாய்ந்த தலைவரும் இறுதியில் மக்களின் ஆதரவினால்தான் அரசாளுகின்றார். அது இல்லாவிட்டால் அவர் ஒரு கணமேனும் தனது பதவியில் இருக்க முடியாது. ஏப்படி இருக்கமுடியும்? அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்களும் நாம் மக்களல்லவா? தட்டத் தனியாக அவர் இயங்க முடியாதல்லவா? எனவே மக்கள் ஒன்று கூடினால், முடியாதது ஒன்றுமில்லை.
மக்கள் ஒன்றுகூடி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான இன்னுமொரு கதையைப் பார்ப்போம். இலங்கையில் பெண்களின் நிலையை மாற்றுவதற்கு இங்குள்ள பெண்கள் அமைப்புக்கள் பலகாலமாக முயன்று வந்திருக்கின்றன. 1989ம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸ அவர்கள் பெண்கள் அமைச்சினை உருவாக்கினார். இந்த அமைச்சினை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அதன் தலைமையின்கீழ் சிங்கள முஸ்லிம் தமிழ் பெண்கள் அமைப்புக்கள் எல்லாம் கூட்டாகச் சேர்ந்து ஒரு பெண்கள் பட்டயத்தை (றுழஅநn'ள ஊhயசவநச) 1993ம் ஆண்டு உருவாக்கின. சமவாயம் என்பது அடிப்படை மனித உரிமைகளைக் கோடு காட்டி உருவாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய விடயங்களின் தொகுப்பாகும். எனவே, இந்தப் பெண்களின் பட்டயமானது பெண்கள் குறித்த பல பிரச்சினைகளைப் பேசியது. இது ஒரு அரசு நிறுவனத்தின்கீழ் செய்யப்பட்டதால் அதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.
இப்பட்டயத்தில் குடும்ப வன்முறைக்கு எதிராகப் பெண்கள் பாதுகாக்கப்படுவதைப் பற்றிப் பேசப்பட்டது. தொழிலிடங்களில் பெண்கள் பாலியல் இம்சைக்குள்ளாவதைத் தடுக்க வழிகோரப்பட்டது. நூற்றி ஐம்பது ஆண்டுகள் பழமையான எங்கள் பாலியல் கற்றச் சட்டம் புதுப்பிக்கப்படவேண்டுமென்று கோரியது. இதைத் தவிர, வெளிநாட்டவர்களை மணக்கும் பெண்களின் கணவர்களுக்கு குடியுரிமை கொடுக்காத சட்டம் மாற்றப்பட்டு ஆண்களைப் போலவே பெண்களின் வெளிநாட்டுத் துணைவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவேண்டுமென்று பரிந்துரைத்தது. இந்த ஆவணத்தின் அடிப்படையில் அடுத்த வருடங்களில் கடுமையான பிரச்சாரம் இந்த அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இன்று 2005ம் ஆண்டுக்குப் பிறகு, குடும்ப வன்முறைக்கெதிரான சட்டமும், தொழிற்தலங்களில் பாலியல் இம்சைகளுக்கெதிரான சட்டமும் செயற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஏங்களுடைய கிராமங்களில் வாழும்  பெண்களைக் கேட்டுப் பாருங்கள். குடும்ப வன்முறைக்கெதிரான சட்டம் இருக்கின்றது என்று தெரிந்த ஆண்கள் மனைவியை அடிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது என்று தங்கள் கதைகளைக் கூறுகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களும் பெண்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுவிட்டன. இதனால் வெளிநாட்டவரை மணந்த நூற்றுக்கணக்கான பெண்கள், இதுவரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தக்கு ஓடி  அலைந்தவர்கள், இப்பொழுது ஆறுதல் பெற்றிருக்கிறார்கள். பார்த்தீர்களா? ஏங்கோ எல்லோரும் இணைந்து செய் சமூகப் பணி எப்படி ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் விடிவைத் தந்திருக்கின்றது என்று. மக்கள் ஒன்று கூடி செயலாற்றுவதனால் எப்படி சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றலாம் என்பதை விளக்க இம்மாதிரியான ஏராளமான கதைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மக்கள் அணிதிரளவேண்டும் என்பது தெளிவாகின்றது.
 மக்களை அணிதிரட்டுதல்
மக்கள் அணிதிரளுவது தன்பாட்டிலேயே சும்மா நிகழும் ஒரு நிகழ்வல்ல. தற்கு சில முன்னிபந்தனைகள் இருக்கின்றன.
1) தனித்தனியே தங்கள் வீடுகளுக்குள்ளிருக்கும் மக்கள், பொது நோக்கத்துக்காக ஒன்று சேரும் பண்பாட்டினை உருவாக்க வேண்டும்.
நாங்கள் எங்களுக்குத்தான் இருக்கின்றது என்று நினைக்கும் பிரச்சினைகள் யாவும் பிறருடன் ஒன்று சேரும்போதுதான் அது பொதுவில் இருக்கின்ற பிரச்சினை என்று உணர்ந்து எங்களுக்கள் ஒற்றுமையை வளர்க்க முயலுவோம். இதற்காக அடிக்கடி ஒன்று கூடி மக்கள் தங்களுக்குள் உறவு வளர்க்கப் பழக வேண்டும். புதிய மனிதர்களைச் சந்திக்கும்போது எப்போதும் பல புதிய விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். உண்மையான உலகத்திலிருந்து உலக நடப்புக்கள் பற்றிக் கற்றுக் கொண்டு அறிவில் முதிர்ச்சி அடையலாம். இதை விட்டு, தொலைக்காட்சி நாடகங்களில் வரும் கற்பனைக் கதாபாத்திரங்களில் நாம் மூழ்கி விடுவதனால் முதலாவது ஒன்று சேரும் பண்பினை இழக்கின்றோம், அடுத்தது உலகத்தைப் படிக்காமல் தொலைக்காட்சியின் மாய உலகத்தில் நடக்கத் தொடங்குகின்றோம். இதனால்தான் வெறுமனே தொலைக்காட்சியே கதியென்றிராமல் நாலு மனிதர்களைச் சந்தித்து சமூகம் தொடர்பாக நாம் முதிர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகின்றது.
2) ஒரு விடயத்தை அல்லது பிரச்சினை பற்றிய தெளிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
ஆம். ஒரு பிரச்சினையைத் தீர்க்க மக்கள் ஒன்று கூடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால் அப்பிரச்சினையின் ஆழங்களை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? இந்த அறிவு பல முறைகளில் நம்மை வந்தடைகின்றது. ஒன்று எமது சொந்த அனுபவங்களினூடாக அதை ஏற்படுத்துகின்றோம். இரண்டு பிறர் சொல்லக் கேட்டுப் பயனடைகின்றோம். மூன்றாவது வாசித்து, வேறு தகவல்களைத் திரட்டி அறிந்து கொள்கின்றோம். அடுத்து, பிறருடன் கலந்துரையாடித் தெளிகின்றோம். இவையெல்லாவற்றுக்கும் நாங்கள் கூடிக் கதைக்க வேண்டும் இல்லையா?
3) ஒரு பிரச்சினை பொதுப் பிரச்சினை என்பதை அறிவதும், அதனைக் கூடிக் கலந்துரையாடித் தெளிவதும் போதாது. இதை தீர்க்கலாம் என்கின்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கு பொது நிகழ்வுகள் உதவுகின்றன. பொது நிகழ்வுகளில் ஏராளமானோர் கலந்து கொள்கின்ற படியினாலே, அங்கிருப்போர் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கின்றது. நாம் மட்டும் தனியாக இதில் ஈடுபடவில்லை, எம்மைப்போல் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றார்கள் என்கின்ற தெம்பும் தைரியமும் உருவாக அங்குள்ள எல்லோருமே மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராகி விடுகிறார்கள். பிறகென்ன, மாற்றங்கள் வந்தது போலத்தான். ஆத்துடன், ஏராளமான மக்கள் கருத்து இங்கு ஒருமித்திருக்கின்றது என்று கண்டவுடனேயே அதிகாரத்திலுள்ளவர்களும் தீர்மானம் எடுப்பவர்களும் உஷாராகி மக்கள் வழிக்கு வந்து விடுவார்கள். ராஜீவ் காந்தியின் கதையில் பார்த்தீர்கள்தானே
மேலே கூறியவற்றைப் படித்துப் பார்த்து யோசியுங்கள். அவ்வளவு தகைமைகளையும் கூட்டச் சந்திப்புக்களும் பொது நிகழ்வுகளுமே எங்களுக்குத் தருகின்றன.
கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் நாம் பொதுவாகக் கலந்து கொள்ளும் முறைகள்
மக்கள் மத்தியில் கூட்டுறவினை உருவாக்குவதற்காகவே அனேகமாக சகல அமைப்புக்களும் சிறு கூட்டங்களையும் பொது நிகழ்வுகளையும் தொடர்ந்து ஏற்பாடு செய்தவண்ணம் இருக்கின்றன. இவற்றில் நாம் எப்படிக் கலந்து கொள்கின்றோம்? இந்த இடத்தில் வாசிப்பை நிறுத்தி விட்டு உங்கள் குழுவில் ஒருவருடன் ஒருவர் கலந்துரையாடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து வாசியுங்கள்.
கூட்டங்களுக்கு அங்கத்தவர்கள் சமுகமளிப்பதில்லையென்பது பரவலான குற்றச்சாட்டாகும். புல இடங்களில் குழுக் கூட்டங்களுக்கு வருவதற்கும் போக்குவரத்துச் செலவுகளைக் கேட்பதுமுண்டு. கூட்டம் நடக்கின்ற நேரத்தில் சித்தி அண்ணாமலை என்று தொலைக்காட்சித் தொடர்கள் நிகழ்ந்தால் கேட்கவே வேண்டாம். யாரும் வரமாட்டார்கள். பொது நிகழ்வுகள் என்றால் நிச்சயமாக போக்குவரத்துக்கு வானோ பஸ்ஸோ ஒழுங்கு பண்ணா விட்டால் யாரும் வரமாட்டார்கள். போதாக்குறைக்கு வந்தவர்களை உபசரித்து சிற்றுண்டி உணவுகளையும் வழங்க வேண்டியதாக இருக்கின்றது.
இதை நீங்கள் ஆற அமர இருந்து யோசித்துப் பார்த்தால் உண்மையில் வெட்கப்படவேண்டும். உங்கள் தேவைகளுக்குப் போகும்போது நீங்கள் யாரிடமாவது போக்குவரத்தச் செலவுகளைக் கேட்பீர்களா? சிற்றுண்டி கேட்பீர்களா? உதாரணமாகக் கதிர்காமத்துக்கு தல யாத்திரை போகவேண்டுமென்றால் உங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை அல்லவா? ஏனெனில் உங்களுக்கு ஒன்று உண்மையாகத் தேவைப்பட்டால் அதைச் செய்து முடிப்பீர்கள் இல்லையா?
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஒரு பொதுப்பிரச்சினையை எங்கள் சொந்தத் தேவைகளாக நாம் கருதுவது மிகக் குறைவாகவே இருக்கின்றது. குடும்பவன்முறைக்கெதிராகச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்கு பொது நிகழ்வொன்றை நடத்தினால் அதில் வரும் பெண்களுக்கு போக்குவரத்து தொடக்கம் எல்லா வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள்தான் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், அது கடைசியில் சட்டமாக அமுலுக்கு வந்தால்...?.... அதனால் நன்மை அடைபவர்களும் அந்தப் போக்குவரத்து இத்தியாதிகளைக் கேட்ட பெண்களும் அவர்கள் மகள்மார்களும்தானே. இன்று விழுது அமைப்பு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டுமென்று போராடுகின்றது. இது நிறைவேறினால், இதனால் நன்மை அடைந்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் அதிகார பூர்வமாக நுழையப்போகின்றவர்கள் யார்? சகல பெண்களும் அல்லவா? விழுது உத்தியோகத்தர்கள் அல்லவே.
இது மிக எளிமையான, ஆனால் அனேகம் பலரும் உணராத உண்மையாகும். இதை நாமெல்லோரும் மனதார உணரும்போதுதான் சமூகப் பொறுப்புடன் நடக்கும் உண்மையான நாட்டுப்பிரசைகளாக வளருவோம். இல்லாவிட்டால், ஐயோ அவன் அப்பிடிச் செய்யிறான், இவன் இப்பிடிச் செய்யிறான் நாங்கள் என்ன செய்ய என்று கையைப் பிசைந்து கொண்டு சிறுபிள்ளைத்தனமாகத்தான் நிற்போம்.
ஒரு கூட்டம் அல்லது பொது நிகழ்வு நடக்கப்போகின்றது என்றால் நாங்களே அதற்குச் செல்லுவதற்கான ஊக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும். அதில் எங்கள் சமூகப்பொறுப்பினை அடையாளம் காணவேண்டும். இதனால் எங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிந்திருத்தல் வேண்டும். அறிந்து தெரிந்து நாங்களே எங்கள் வாழ்ககையின் போக்கினைத் தீர்மானம் செய்கின்ற செயலாளர்களாக வரவேண்டும். ஒரு நிகழ்வுக்குப் போக போக்குவரத்து வசதி உங்கள் ஊரில் இல்லையா, நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி நிதியைத் திரட்டி போக்குவரத்து ஏற்பாடு செய்ய முடியாதா? ஒரு கூட்டம் நீண்ட நேரம் போகும் சாத்தியக்கூறு இருக்கின்றதா, உங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிற்றுண்டிகள் செய்து எடுத்துவர முடியாதா? யோசித்துப் பாருங்கள்.
 நிகழ்வுகளில் பங்குகொள்ளத் தயங்குவதற்கான நியாயங்கள்
கூட்டங்களில் கலந்து கொள்ள மக்கள் பஞ்சிப்படுவதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. ஒரு வித குறித்த நோக்கங்களுமின்றி, பங்குகொள்ளும் மக்களின் நேரத்தை வீணாக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்னும் பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. அரச நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும் தங்கள் நிதிகளை வெறுமனே முடித்து அறிக்கை எழுதுவதற்காக அவசர அவசரமாக இந்த மாதிரியான கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒழுங்கு செய்கின்றனதான். அது உண்மைதான். ஆனால் அதற்காக எல்லாக் கூட்டங்களையும் நிகழ்வுகளையும் ஒரே கண்ணோட்டத்தில் நோக்க முடியாது. குறித்த முக்கியமான நோக்கங்களுக்காகவும் பொது நிகழ்வுகளும் போராட்டக் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. அவற்றை அக்கறையுடன் இனம்பிரித்துப் பார்த்து அடையாளம் கண்டு பங்குபற்றவேண்டும்.
ஒரு நிறுவனம் ஒழுங்காகக் கூட்டங்களை எற்பாடு செய்யாவிட்டால், துணிந்து அதிலுள்ள குறைகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுங்கள். ஏனெனில், அக்கூட்டங்கள் ஒழுங்காக நடந்தால் உங்களுக்குத்தான் நன்மை தருமேயொழிய அவர்களுக்கல்ல. வேண்டுமானால், அக்கூட்டங்களை எப்படி நடத்தலாம் என்று நீங்களே அவர்களுக்கு சிபாரிசுகளை வையுங்கள். எந்த விடயம் கதைக்கப்படவேண்டும், எதைப் பற்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை நீங்களே சொல்லி விடுங்களேன். அவர்கள் திருந்தாமலா போகிறார்கள்? உங்கள் தேவைகளை அறிந்து உங்களுக்கு சேவை செய்யத்தான் இந்த நிறுவனங்கள் எல்லாம் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள்.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1) உங்கள் ஊரில், குறித்த நொக்கத்தை அடைவதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவையெவையென்று கருதுகிறீர்கள்? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
2) பங்குபற்றுபவர்களுடைய நேரத்தை வீணாக்கி நடத்தப்படும் சந்திப்புக்களும், கூட்டங்களும் பொது நிகழ்வுகளும் எவை? அவற்றை நிரல்படுத்தி ஏன் என்று விளக்குக.
3) நன்றாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு ஒழுங்காக பங்கபற்றுனர்கள் வருகை தருகிறார்களா? அதற்கு ஏதேனும் சன்மானம் எதிர்பார்க்கிறார்களா? சுன்மானம் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அல்லது ஒழுங்காக வருகை தரவில்லை என்றால், அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கூறுக.
4) ஒழுங்கான முறையில் நடத்தப்படாத கூட்டங்களைப் பற்றி என்ன செய்யப்போகிறீர்கள்? விளக்குக.
5) சமுகப்பொறுப்புடன் மக்கள் ஒன்று கூடுவதை ஊக்குவிப்பதற்கு என்ன செய்யலாம்? உம்முடைய நடவடிக்கையின் முதல் படி என்ன? விளக்குக.. இதனை எவ்வளவு காலத்தக்குள் செய்து முடிப்பீர் என்பதை குழுவுக்குச் சொல்லுக. ஓவ்வொரு அங்கத்தவரும் இவ்வாறான வேலைத் திட்டமொன்றை வைத்திருத்தல் நன்று.





குடும்ப வன்முறை



எங்கள் பிரதேசங்களில் பல வெளிநாட்டு உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்கள் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகத் தங்கள் வேலைகளை முன்னெடுப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். 'எங்களால் முடியும்' (றுந உயn) என்கின்ற பிரச்சாரம் ஒக்ஸ்பாம் என்னும் நிறுவனத்தினால் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதில் பங்குபற்றியிருக்கிறீர்களா? அப்படியானால், குடும்ப வன்முறையைப் பற்றிய விளக்கம்  உங்களுக்குத் தெரிய வந்திருக்கும். குடும்பம் என்றால் என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், வன்முறை என்பது என்ன என்று விளங்கிக் கொள்வதனாலும், நாங்கள் குடும்ப வன்முறை என்னும் சமூகப் பிரச்சினையின் மூலத்தை அறிந்து கொள்ளலாம்.
குடும்பம்
அந்தக் காலம் என்றால் என்ன, இந்தக் காலம் என்றால் என்ன, மனித இனம் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழவேண்டுமானால் அது இரண்டு கடமைகளை அவசியமாகச் செய்ய வேண்டும். ஓன்று, மனிதர்கள் தமது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றை பண்டங்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்வது என விபரிக்கலாம். அடுத்தது, அவர்கள் தாங்கள் தொடர்ந்து வம்சங்களாக வாழ்வதற்கான மறு உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இதனை, குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது தொடர்பான சகல கடமைகளாக விளங்கப்படுத்தலாம். எங்கள் சமூகக் கட்டமைப்புக்களும் கலாசார வெளிப்பாடுகளும் எல்லாமே எப்பொழுதும் இந்த 'உற்பத்தி', 'மறு உற்பத்தி' என்னும் இரு முக்கியமான உறவுகளைச் சுற்றியே உருவாக்கப்பட்டிருக்கின்றன. உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உற்பத்தி உறவுகள் என்றால் என்ன? உற்பத்திக்குத் தேவையான வளங்களை (மூலதனம், தொழில்நுட்பம், நிலம் போன்ற இயற்கை மூலங்கள்) உற்பத்தியில் ஈடுபடும்; மனிதன் எப்படி எடுத்துக் கொள்கின்றான் என்பதெல்லாம் உற்பத்தி உறவுமுறைகளுக்குள் அடங்கும். மறு உற்பத்தியின் உறவுகளானவை, பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதற்காக சமூகம் தன்னைக் ஒழுங்கமைத்துக்கொண்ட நடைமுறைகளாகும். முதலில் நாங்கள் தின்று குடித்து உயிர் வாழ்ந்தால் அப்புறந்தானே எமது மறு உற்பத்தி பற்றிச் சிந்திக்கலாம்? எனவே மனிதர்களின் வயிற்றுப் பிழைப்பென்பது அவர்களின் இருப்பின் அல்லது வாழ்க்கையின் முதன்மையான செலுத்திகளாக இருப்பதைப் பார்க்கலாம். ஆகவே எங்கள் பொருளாதாரக் கட்டமைப்புக்கள்தான் பின்பு எங்களின் சமூக உறவுகளைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றது என்று கூறலாம்.
கீழே ஒரு அட்டவணையில், ஆதிகாலம் தொட்டு மனித சமுதாயத்தில் நிலவிய பிரதானமான உற்பத்தி உறவு முறைகளையும் அவற்றுடன் தொடர்பாக உருவாகிய மறு உற்பத்தி உறவு முறைகளையும் தருகின்றோம். அதனை ஆராய்ந்து படிப்பதன்மூலம் உற்பத்திக்கும் மறு உற்பத்திக்கும் இடையே உள்ள தொடர்புகளை நீங்கள் இன்னும் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

அட்டவணை
உற்பத்தி உறவு முறைகள் உற்பத்தி உறவு முறைகளுடன் தொடர்பான மறு உற்பத்தி உறவுமுறைகள்
1. மனிதன் உருவாகி முதல் 30,000 வருடங்கள்

பெண்கள் காய்கிழங்கு கனி பொறுக்குவதும் ஆண்கள் காட்டு மிருகங்களை வேட்டையாடுவதும் உற்பத்தி தொடர்பான தொழிலாக இருந்தது..
ஓரிடத்தில் உணவு மூலங்கள் முடிந்து விட்டால் அடுத்த பிரதேசத்துக்கு குடி பெயரும் நாடோடி வாழ்க்கை. சொத்து என்று கூறிக்கொள்ள எதுவும் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் பொதுவென வாழ்ந்த காலம்.
ஓற்றுமையாக ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக வாழ வேண்டிய நிலைமை என்பதனால் மக்கள் குடிகளாகவும் குழுக்களாகவும் வாழ்ந்த காலம்.
பெண்களும் ஆண்களும் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்த காலம். ஒரு ஆணுடன் வாழ்வது என்பது என்ன என்று அறியாத பருவம். பெண்கள் பிள்ளைகளைப் பெற்றவுடன் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்து வளர்த்தெடுத்தனர். இங்கு சமூக மத்தியில்தான் பிள்ளைகள் வளர்க்கப்பட்டனர் என்று கொள்ளலாம். ஆண்களுக்கு தங்கள் பிள்ளைகள் யாரென்று தெரியாததோடு அவர்கள் பிள்ளை வளர்ப்பிலும் ஈடுபடவில்லை.

குழாமுக்கு மிக அவசியமான மனித உயிர்களை உற்பத்தி செய்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், சாஸ்வதமான உணவுப்பொருளாக இருக்கின்ற கிழங்கு கனிகளை குழுவுக்கு வினியோகிப்பவர்கள் என்கின்ற அடிப்படையிலும், குடிகளின் சமூக வாழ்க்கையில் பெண்கள் முதன்மை ஸ்தானத்தில் வைக்கப்பட்டார்கள். இச்சமூகத்தைத் தாய்வழி சமூகங்கள் என்று ஆய்வாளர்கள் விபரிப்பார்கள்.
2. மனிதனின் அடுத்த 10,000 வருடங்கள்

மனிதர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கி விட்டார்கள். உபரி உற்பத்தி அதிகரிக்க குடிகளுக்குள் செல்வம் பெருகியது. உபரி உற்பத்திகள் பண்ட மாற்றுச் செய்யப்பட்டு வர்த்தகம் பெருகியது. பெண்கள் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டதனால் ஆண்களே கால்நடை மேய்ப்பதிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.   அயல் குடிகளின் கால்நடைகளை அபகரிப்பதற்கு அவர்கள்; போரிடவும் தொடங்கினர்.
ஆண்களின் கைகளில் சொத்து சேரத் தொடங்கியது. முதன்முதலாக உலகத்தில் தனியுடைமை தோன்றியது.


ஆண்கள் தங்களுடைய சொத்தைக் கொடுக்க தமக்கென வாரிசு வேண்டுமெனக் கருதத் தொடங்கினர். ஒரு குடும்பத்தின் சகோதரர்கள் அனைவரும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் வழக்கம் வந்து அதிலிருந்து ஒரு பெண் ஒரு ஆணுக்கு மட்டும் சொந்தமாகும் ஒருதார மணம் உருவாகிற்று. தனியுடைமையுடன் நாங்கள் அறியும் மணவாழ்வு நடைமுறைக்கு வந்தது. ஆண்கள் பெண்களின் மீது பிரயோகித்த அதிகாரமே திருமணம் என்னும் சடங்கு என்றால் மிகையாகாது. இத்துடன் பெண்களின் சமூக அந்தஸ்து சரியலாயிற்று. குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு ஆரம்பமானது.
3. மனிதனின் அடுத்த 5,000 வருடங்கள்

பாரிய அளவில் விவசாயப் பொருளாதாரம் உருவாகியது. வுpவசாயம் மனித குலத்துக்கு இதுவரை காணா பொருளாதார வளர்ச்சியைக் கொடுத்தது.  நகரங்களும் நாடுகளும் உருவாகின. கலைகளும் கல்வியும் வளர்ந்தன.


ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைகின்ற குடும்பம் நிலைபெறுகிறது. சொத்துடைமை ஆணின் கைகளில் பூரணமாகத் தேங்குகிறது. ஒரு குடும்பத்தின் உரிமையாகும் நிலத்தைத் துண்டாடுவது விவேகமில்லையாதலால், நிலத்தை ஒன்று சேர்க்கும் கூட்டுக்குடும்ப முறை நிலவியது. அதாவது சகோதரர்கள் எல்லாருமே ஒன்றாக வாழ்கின்றனர்.  இதன்மூலம் ஒரு குடும்பம் முழுவதுமே கூட்டாகத் தங்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்தார்கள், தங்களுக்குள் திருமண பந்தங்களையும் வைத்துக்கொண்டு தங்கள் சொத்துக்களைப் பிரிய விடாமல் பாதுகாத்தார்கள்.


4. மனிதனின் அடுத்த 300 வருடங்கள்

தொழில் நுட்ப விரிவாக்கத்தினால் தொழிற்சாலைகள் எழுந்தன.  மனிதர்கள் தங்கள் தங்கள் நிலத்திலிருந்து பிரிக்கப்பட்டார்கள். அவர்கள் தனியே உழைப்பை மட்டும் சொந்தம் கொள்ளும் தொழிலாளிகளாக மாறினர்.






மனிதர்கள் நிலத்தை அண்டிப்பிழைப்பவர்களாக இல்லாமல், தொழில் எங்கே உள்ளதோ அங்கு போய் அத்தொழிற் துறையுடன் வாழுபவர்களாக இருந்தார்கள். அதாவது எங்கே தொழில் இருந்ததோ அங்கே வாழும் தொழிலாளிகளாக இருந்தார்கள். கூட்டுக்குடும்பம் உடைந்தது. அப்பா அம்மா பிள்ளை என வாழும் தனிக்குடும்பங்கள் தோன்றின. இங்கும் ஆண்தான் பிரதானமான உழைப்பாளியாகக் கருதப்பட்டான். பெண்கள் குறைந்த வருமானம் பெறும் உழைப்பாளிகளாக இருக்கின்றனர்.
5. மனிதனின் அடுத்த 30 வருடங்கள்
(சமகாலம்)

மூலதனம், தொழில்நுட்பம் இவை மூலமாக உற்பத்தி, ஆகியன சுதந்திரமாக நாட்டுக்கு நாடு தாவும் உலகமயமாக்கல் பொருளாதார அமைப்பு உருவாகின்றது. உற்பத்தி துண்டாடப்பட்டு கண்டம் விட்டுக் கண்டம் தாவுவதுபோல (ஒரு சப்பாத்தின் அடிப்பக்கம் கொரியாவிலும், மேற்பக்கம் சீனாவிலும் லேஸ் இந்தியாவிலும் அதன் முழுமையான உருவம் அமெரிக்காவிலும் செய்யப்படுதல்)  உழைப்பும் கண்டம் விட்டுக் கண்டம் தாவுகின்றது. தொடர்பாடல் புரட்சி ஏற்பட்டு உலகின் தூரங்கள் குறைக்கப்படுகின்றன.




மலிவான உழைப்பைத் தேடி உற்பத்தி துண்டாடப்படுவதனால்  பெண்கள் பிரதான உழைப்பாளிகளாக மாறுகின்றனர். திருமணம் என்பது அவசியமில்லாத பந்தமாக மாறுகின்றது. தனிக்குடும்பங்கள் உடைகின்றன. ஆணும் பெண்ணும் திருமணமாகாமல் (அதாவது வாழ்நாளுக்குரிய பந்தமாக இல்லாமல்) ஒன்றாக வாழும் சமூகக் கட்டமைப்பு உருவாகின்றது. இவர்கள் தங்கள் குலத்துக்குள்ளோ இனத்துக்குள்ளோ மட்டும் பார்ட்னரைத் தேடாமல், உலகளாவிய ரீதியில் சர்வதேச பார்ட்னர்களைத் தேடத் தொடங்குகின்றனர்.

இதிலிருந்து, ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழும் உறவுமுறை, அல்லது குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பு இவை பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தையே குறியாக வைத்து தோற்றுவிக்கப்பட்டன என்பதைக் காணலாம். அத்துடன், தங்களுடைய சொந்த வாரிசுகளாக பிள்ளைகளைப் பெறுவதற்கெனவும் இது ஏற்படுத்தப்பட்டது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த அதிகாரமானது ஒரு குடும்பத்தின் பல அங்கத்தவர்களினால் வௌ;வேறு நிலைகளில் பிரயோகிக்கப்படுகின்றது. உதாரணமாக, குடும்பத் தலைவனின் தாய் என்கின்ற உறவு தருகின்ற அதிகாரத்தில் மாமியார் மருமகளைக் கொடுமை செய்யும் நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறே மாமனார், கணவனின் சகோதரர்கள், மூத்த சகோதரனின் மனைவி என்று படிப்படியாக இந்த அதிகார உறவு முறைகள் அடுக்கப்பட்டிருக்கும்.  ஆகவே, ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்க்கலாம். குடும்பங்களில் அதிகார உறவுமுறைகளுக்குப் பழக்கப்பட்டு அவற்றை ஏற்றுக்கொள்கின்றபோது, அதே மாதிரியான அதிகார உறவுமுறைகளை சமூகத்திலும் அரசியலிலும் ஏற்றுக்கொள்ள மனிதர்கள் பழகுகிறார்கள். அப்படித்தான் ஒடுக்குமுறை சமூக அரசியல் கட்டமைப்புக்கள் எங்கள் மத்தியில் நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கின்றது.
வன்முறை
எந்த மேலாதிக்க உறவும் ஒருவருடைய விருப்பங்களையும் தீர்மானங்களையும் இன்னொருவர் மீது திணிக்கும் நடைமுறையாகும். இந்த உறவு வன்முறையின் மூலம்தான் தக்கவைத்தக்கொள்ளப்படலாம். இப்படியான வன்முறைகளுக்கு இரு நோக்கங்கள் உண்டு. முதலாவது, பயமுறுத்தி அல்லது சிறுமைப்படுத்தி அடிபணிய வைப்பதன் மூலம் எதிர்ப்பையே இல்லாமல் செய்வது, இரண்டாவது, எதிர்ப்பிற்கான தண்டனையைக் கொடுத்து அடுத்த முறை எதிர்ப்பு எழாமல் செய்வது. முன்னையது அனேகமாக உள ரீதியான செயற்பாடாகும். பின்னையது உடல் ரீதியான செயற்பாடாகும். பெரும்பாலான குடும்ப வன்முறைகள் (90 வீதமானவை என்று கூறலாம்) ஆண்களினால்தான் செய்யப்படுகின்றன. தங்களின் தேவைகளைக் கவனிக்கவென மட்டும் தங்கள் குடும்பத்தை வடிவமைக்கவும், வேறு ஆடவனுடன் தங்கள் பெண்கள் போகாவண்ணம் (இந்தப் பயம் பெரும்பாலான ஆண்களுக்கு உள்ளுர இருக்கின்றது) தடுக்கவும் கூடிய தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவே அவர்கள் வன்முறையிலும் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றனர். பொதுவாகக் கணவன்மார், தந்தையர், பாட்டாமார், அதற்குப் பின்பாக மாமன்மார் என்று இந்த வரிசையில்தான் குடும்ப வன்முறையாளர்கள் தோன்றுவதைக் காணலாம்.
தங்கள் கணவன்மார்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதனால்தான் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்று அனேகமான பெண்கள் தவறாக விளங்கிக் கொள்ளுகின்றனர். குடிபோதை வன்முறையில் ஈடுபடுவதற்கான தெம்பைக் கொடுக்கின்றதேயொழிய, வன்முறையில் ஈடுபடுவதற்கான லைசன்ஸ் முழுக்க ஆண்களுக்கு மேலாதிக்கத்தினை வழங்கும் எங்கள் சமூகப் பண்பாட்டினால்தான் கொடுக்கப்படுகின்றது. எனவே, குடிப்பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், பெண்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபட்டால்தான் குடும்ப வன்முறையை முற்றாக ஒழிக்கலாம்.
அடுத்து, பெண்கள் தங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பற்றி வெளியில் குறைகூற வெட்கப்படுவதனாலும், தமக்கு நிகழும் வன்முறையைப் பற்றி சொல்லுவதில்லை. இது யாருக்குமே உதவாத வரட்டு கௌரவமாகும். ஒரு தவறு நடக்கும்போது அதைப் பற்றி வெளிவெளியாக நாங்கள் பேச ஆரம்பிக்கத் தொடங்கும்போதே அத்தவறுக்கான மாற்று நடவடிக்கை 50வீதம் செயற்படுத்தப்படுகிறது. எப்படி என்கிறீர்களா? நாங்கள் வாய்விட்டுப் பேசும்போது அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தைரியத்தையும் எங்களுக்குள் வளர்த்துக்கொள்ளுகின்றோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? பேசக்கூட முடியாவிட்டால் தைரியம் எங்கேயிருந்து வரும்? மேலும், மற்றவர்களுடன் பேசப்பேசத்தான் பிரச்சினையும் தெளிவாக எங்களாலேயே விளங்கிக் கொள்ளப்படுகின்றதுளூ உங்கள் பிரச்சினையை அறிந்தால்தான் ஏனையோர் உங்கள் உதவிக்கு வரலாம். இவ்வாறாக மக்கள் பலரின் மனஉறுதி ஒன்றுபடும்பொழுது அங்கு தீர்வு உருவாகி செயற்படுத்தப்படுகின்றது. எங்கள் மத சாத்திரங்கள்கூட சொல்லின் சக்தியைப் பற்றி எங்களுக்கு கூறுகின்றன. உங்களுடைய சொல் வாக்கியங்களின் சக்தியை எனிதாக எடை போடாதீர்கள்.
குடும்ப வன்முறைக்கெதிராக செயற்படுவது பற்றி....
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிபர், அவருக்கு பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்கள் கொஞ்சமும் பிடிக்காது. 'தேவையில்லாமல் வெளிநாட்டு நிதிகளைக் கொண்டு எங்கள் சமூகத்தின் கலாசாரப் பண்பாடுகளை மாற்றுகிறீர்கள்.. குடும்பங்களைப் பிரிக்கிறீர்கள்...' என்று குற்றஞ் சாட்டி அத்தகைய செயற்திட்டங்களுக்கு அவர் அனுமதி கொடுப்பதில்லை.
ஆம், குடும்ப வன்முறையை ஒழிக்க, ஏன் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் ஒழிக்க, நாம் பாடுபடும்பொழுது நிச்சயமாக குடும்பம் என்னும் சமூகக் கட்டமைப்பினுள் மாற்றங்களைக் கொண்டுவந்தேயாக வேண்டும். அங்கு பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சமத்துவமான அதிகாரங்களைக் கொண்டுவரவேண்டும். அதைவிட, குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் நிலைமைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மற்றவர் மீது மேலாதிக்கம் செலுத்தாமல் கவனமாக இருக்கும் விழிப்புணர்வினை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உதாரணமாக, 'இது என்டை பிள்ளை நான் என்ன வேணுமானாலும் செய்யலாம்...' என்று பல பெற்றோர்கள் சொல்லுவதை நாம் கேட்டிருக்கின்றோம். இது முற்றிலும் தவறான கருத்தாகும். எம்மில் தங்கி வாழும் எமது சொந்தப் பிள்ளையாக இருந்தாலும் நாங்கள் எங்கள் இஷ்டத்துக்கு அந்தப் பிள்ளையை ஆட்டி வைக்க முடியாது, அதற்கு இம்சைகள் புரிய முடியாது. அந்தப் பிள்ளைக்கு தனது உணர்வுகளினதும் அறிவினதும் பிரகாரம் நடப்பதற்கு சகல உரிமைகளும் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகளின் கருத்துக்களுக்கும், அது ஐந்து வயதாக இருந்தாலும் கூட, சமமான மரியாதை கொடுத்து இயங்கும் குடும்பங்களில் வன்முறை நிகழ மாட்டா.
எனவே மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் அரச அதிபர் உண்மையைத்தான் கூறினார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிகார முறையான ஏற்றத் தாழ்வும், வன்முறையைப் பிரயோகிப்பதுமான 'எங்கள் பாரம்பரிய கலாசாரப் பண்பாடுகளை' மாற்றினால்தான் வன்முறையை இல்லாதொழிக்கலாம். இந்த மாற்றத்தை எண்ணித்தான் அவர் பயப்படுகின்றார். அவர் மட்டுமல்ல, சமூகத்தின் பல 'பெரிய மனிதர்கள்' எல்லோரும் இந்தக் காரணத்திற்காகத்தான் பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான வேலைத் திட்டங்களுக்கு தங்கள் ஆதரவினைக் கொடுப்பதில்லை. அதிகாரம் தங்கள் கைகளை விட்டு நழுவுவது எவருக்கும் பிடிக்காத ஒன்றல்லவா? அதற்கு எப்பொழுதும் அவர்கள் கையெடுக்கும் அஸ்திரம் 'கலாசாரத்தை மாற்றுகிறார்கள்' என்னும் குற்றச் சாட்டாகும்.
எங்கும் எப்போதும் கலாசாரம் மாறிக்கொண்டுதானிருக்கின்றது. மாறாத கலாசாரம் ஒன்றிருக்கு என்னும் கருத்து பச்சைப்பொய்யாகும். சுpல கலாசாரங்கள் வேகமாக மாறுகின்றன, சில மெதுவாக மாறுகின்றன, அவ்வளவுதான். கலாசாரத்தை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்திருப்பவர்கள் அதனை வன்முறை மூலமாகத்தான் செயற்படுத்தலாம். வேறு வழியேயில்லை.  இதற்கு ஒரு உதாரணமாக பாகிஸ்தானில் இருந்து ஒரு கதையைச் சொல்லலாம். இஸ்லாமிய ஆட்சி கொண்டுவரப்பட்ட வேளையில் அங்கு பெண்களெல்லோரும் கையில்லாத சட்டை போடுகிறார்களேயென்ற கூக்குரல் எழுந்தது. எனவே மதத்தீவிரவாதிகள் ஒரு பிளேட்டுடன் பாதையில் இறங்கி அங்கு கையில்லாத சட்டை போட்டுச் சென்ற சகல பெண்களின் கைகளிலும் பிளேட்டினால் கிழித்து விட்டார்களாம். இப்பொழுது அங்கே பெண்கள் கைகளை மூடிய சட்டைகள்தான் அணிகின்றனர்.
பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக வேலை செய்பவர்கள் இந்தக் காரணியைத் தெளிவாகப் புரிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும். ஜிஏ வேண்டாம் என்கிறார் என்று பயந்தடித்து சொல்லிவிட்டு வீட்டில் இருப்பதல்ல எங்கள் பணி. ஏந்தப் பெரிய மனிதரானாலும் அவர் தவறான கருத்துக்களைக் கூறினால் அதற்கு சவால் விடத் துணிய வேண்டும். சமூகத்தில் இறங்கி இயலுமட்டும் மக்களுக்கு இதைப் பற்றி விளங்கப் படுத்தவேண்டும். ஆதிக்க உறவு முறைகளின் ஊற்றாக நாம் குடும்பத்தைப் பார்த்தாலும்கூட, இப்பொழுதே இங்கேயே குடும்பங்கள் எல்லாவற்றையும் இல்லாதொழிக்கவேண்டும் என்று கூற வரவில்லை. அம்மா, அப்பா, பிள்ளைகள் என்கின்ற சமூக அமைப்பு இப்பொழுது தோன்றியிருக்கின்றது. நாங்கள் அட்டவணையில் காட்டியதுபோல அது நாங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன, காலப்போக்கில், உற்பத்தி உறவுமுறைகள் மாற்றமடைய அது மாற்றமடைந்து கொண்டுதான் போகப் போகிறது. எந்த சமூக உருவத்தை மறு உற்பத்தியானது எடுத்துக்கொண்டாலும், அது நீதியானதும் சமத்துவமானதுமாக இருக்க வேண்டும் என்பதைத்தான் நாம் வலியுறுத்துகின்றோம். எனவே, தனிக்குடும்பம்தான் இப்போதுள்ள சமூக உறவுமுறையானால், பரவாயில்லை அது இருக்கட்டும், ஆனால் அதற்குள் அநீதிகள் நடக்கக் கூடாது என்கின்றோம்.
இந்த முறையான சமநோக்கு மக்கள் மத்தியில் ஏற்படுவதற்கு நாங்கள் அவர்களுக்கு நிறையவே எடுத்து விளங்கப்படுத்த வேண்டி நேரும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராயிருந்தாலும், சேர்ந்திருந்து அளவளாவிக்கொண்டிருக்கும் நேரத்தில் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். உங்களைப் போல இதற்கு எதிராகப் பணிபுரியத் தயாராக இருப்பவர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குள் தொடர்ந்த இணைந்த செயற்பாடுகளை ஊக்குவியுங்கள். இந்த முறையில் வன்முறைக்கெதிரான மக்களின் எண்ணிக்கையைத் திரட்டி அதிகரிக்கலாம். இவ்வாறு மக்கள் எண்ணிக்கை அதிகரிக்க, அவர்கள் அபிப்பிராயங்கள் வலுப்பெற, மாற்றங்கள் தானாகவே சமூகங்களில் நிகழும்.
  கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. உமது ஊரில் நிகழும் குடும்ப வன்முறைகள் எவையென்பது தெரியுமா? நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொரு சம்பவத்திலும் வன்முறையைப் பிரயொகித்தவர் யார் என்றும் அவருக்கும் வன்முறைக்குள்ளானவருக்கும் என்ன உறவு? இங்கு அதிகார உறவுமுறை என்பது தென்பட்டதா?
2. 'மாற்றம் ஒன்றுதான் இந்த உலகில் என்றும் மாறாத விஷயம்..' இந்த வசனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? புpற குழு அங்கத்தவர்களுடன் கலந்துரையாடுங்கள். ஆதி காலம் தொட்டு மாறாமல் இருந்து வருகின்ற ஏதாவது விஷயத்தை நீங்கள் காட்ட முடியுமா? உடை, உணவு, பழக்கவழக்கம், வீடு கட்டும் முறைகள், மொழி, பிரயாணஞ் செய்கின்ற முறைகள், கல்வி முறைகள், குடும்ப உறவுமுறைகள், இயற்கை இப்படி எல்லாவற்றையும் உதாரணமாகக் கொள்ளுங்கள். ஆராய்ந்த பேசி உங்கள் முடிவுகளுக்கு வாருங்கள்.
3. கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கு வன்முறையில் ஈடுபடுகின்ற சம்பவங்கள் உங்கள் ஊரில் நடந்திருக்கின்றனவா? அவை என்ன என்று பிற அங்கத்தவர்களுக்கு விபரியுங்கள்.
4. பெண்கள் மீதான வன்முறைகள், குறிப்பாக குடும்ப வன்முறைகளை ஒழிக்க நீங்கள் உங்கள் ஊரில் என்ன செய்யலாம்?
- சக பெண்களுடன்
- ஊரிலுள்ள பெரிய மனிதர்களுடன்
- பொதுவாக ஆண்களுடன்
- பிள்ளைகளுடன்
- பாடசாலை ஆசிரியர்களுடன்
- சமயத் தலைவர்களுடன்
- பாதிக்கப்பட்டவர்களுடன்
- பாதிப்பினை ஏற்படுத்தியவர்களுடன்
- உங்கள் பாராளுமன்ற உறுப்பினருடன் . . . . .
எப்படியான நடவடிக்கைகளை செய்வீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

பயங்கரவாதம்

பயங்கரவாதம் எனபதன் வரைவிலக்கணம்
இன்றைய உலகில் இலங்கையின் ஜனாதிபதி உரையாற்றினால் என்ன, உலகத் தலைவர்கள் எங்கேனும் பேசினால் என்ன, அவர்களின் பேச்சில் நிச்சயமாக பயங்கரவாதம் என்பதைப் பற்றிய ஏதோவொரு குறிப்பு இருப்பதைக்காணலாம். அந்தளவுக்கு பயங்கரவாதம் என்கின்ற விடயம் உலக அரசுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் பயங்கரவாதத்தை ஒழிக்கத்தான் யுத்தம் புரிகின்றோம் என்றல்லவா இதுவரைகாலமும் (2009ம் ஆண்டு) சொல்லி வந்தது? எனவேதான் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளுவது அவசியமாகின்றது.
அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு இவ்வாறு வரைவிலக்கணம் கொடுத்திருக்கின்றது:
' பயங்கரவாதம் என்பது ஏதும் அரசியல் அல்லது மதரீதியிலான, அல்லது கருத்தியலான குறிக்கோள்களை எய்துவதற்காக அரசாங்கங்களை அல்லது சமூகங்களை பயமுறுத்தவும் வற்புறுத்தவும் உதவும் சட்ட விரோதமான வன்முறைச் செயல்களாகும்.'
இந்த வரைவிலக்கணத்தில் 'சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் ' என்கின்ற பதத்தைப் பார்த்திருப்பீர்கள். சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் என்ற கருத்து இருக்கின்றது உண்மெயென்றால் சட்ட பூர்வமான வன்முறைச் செயல்களும் இருக்கின்றனவென்பதும் உண்மையாக வருமல்லவா? அரசுகள்தானே சட்டங்களை இயற்றுகின்றன. அதனால்தான் சட்ட பூர்வமான வன்முறையென்பது அரசுகள் மேற்கொள்கின்ற வன்முறையாக கருதப்படுகின்றது.. பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளைக் கொண்டு அரசு மேற்கொள்ளுகின்ற வன்முறை சட்ட பூர்வமான வன்முறையாகும். அரசு அல்லாத குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளுகின்ற வன்முறையானது சட்ட விரோதமான வன்முறையாகும். உதாரணமாக, விடுதலைப்புலிகள் கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியின் வழியாக வெடிகுண்டை வெடித்து அழிவுகள் ஏற்படுத்தினால் அதைப் பயங்கரவாதம் என்று உலகு சொல்லுகின்றது. ஆனால் கிபிர் ஜெட் கொண்டு அரசு வன்னியில் குண்டு வீச்சுக்களைப் புரிந்து வெற்றி கொண்டால் அதனை யுத்தம் என்கிறது.  இதைக் கொண்டு பார்த்தால், அரசு அல்லாத எந்தக்குழுவும் வன்முறையில் இறங்கினால் அதனைப் பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்றது எனவும் இந்தச் சொல்லை விளங்கிக் கொள்ளலாம். ஆனாலும், பயங்கரவாதத்துக்கு இது ஒரு பூரணமான விளக்கமல்ல.
பயங்கரவாதமும் கிளர்ச்சியும்
இன்றைய உலகில் அரசு அல்லாத குழுவினர் ஈடுபடும் வன்முறைகளை இரண்டு வகையில் நோக்கலாம்.
ஒரு அரசின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவோ அல்லது ஒரு நாட்டின் ஏதோவொரு பகுதியைக் கைப்பற்றும் முகமாகவோ பிரயோகிக்கப்படும் வன்முறை ஒரு வகையானது. இது கிளர்ச்சி என்று கூறப்படும். கிளர்ச்சி என்பது ஒரு நீண்ட காலமாக செயற்படும் இயக்கமாகும். இதற்காக மக்களையும் அணி திரட்டும்;. கிளர்ச்சியாளர்கள்  அரச படையினருடன்தான் பிரதானமாக மோதுவார்கள். தங்கள் நோக்கங்களை அடைவதற்கு இவர்கள் பொதுமக்களை அல்லது பொதுச் சொத்துக்களைத்தாக்கியழிக்கும் யுக்திகளையும் உபயோகிக்க முடியும். ஆனால் கிளர்ச்சிவாதிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் செயற்படமுடியாது என்கின்ற படியால் இந்த யுக்தியை ஒரு வரையறைக்குள்தான், மக்களை அதிகம் தாக்காதவாறுதான் அவர்கள் பாவிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
மக்களின் அபிப்பிராய மாற்றம், அல்லது ஏதோவொரு கொள்கை மாற்றம் அல்லது ஏதோவொரு சம்பவத்துக்கான பழிவாங்கல் நடவடிக்கைகள் இவையெல்லாம் இரண்டாவது வகையான வன்முறையாகும். இதில் ஈடுபடுவதற்கு ஒரு சிலரே போதுமானதாகும். உதாரணமாக, 1983ம் ஆண்டு மத்திய கிழக்கில் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 241 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் நோக்கம் பெய்ரூட்டில் அன்று நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை வீட்டுக்கு அனுப்புவதாகும் இந்தச் சம்பவத்தின் பின்னர் உடனேயே அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் எடுத்து அமெரிக்கப்படைகளை வாபஸ் வாங்கியது. இதே போல், பலஸ்தீனிய அகதிகளின் நிலைகளை உலகின் கவனத்தக்குக் கொண்டுவர ஜேர்மனி மியூனிக் நகரத்தில் இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற சம்பவத்தினையும் கூறலாம். இந்த மாதிரியான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள்  அரச படையினருடன் மோத மாட்டார்கள், அவர்களுக்கு பொது மக்கள்தான் போராட்ட களமாகும். இவர்களுக்கு மக்கள் ஆதரவும் தேவையில்லை. உண்மையில், இதனைத்தான்; பயங்கரவாதம் என்று நாம் வரைவிலக்கணம் கொடுக்கலாம்.
இவை தவிர்ந்த ஏனைய அர்த்தமற்ற வெகுசன கொலைகளை நாம் குற்றச் செயல்கள் என்கின்ற பிரிவுக்குக் கீழ் பார்க்கலாம். உதாரணமாக, அமெரிக்கப் பாடசாலையொன்றின் மாணவனொருவன் திடீரென்று ஒரநாள் காலை ஒரு தன்னியக்கத் துப்பாக்கியுடன் பாடசாலை வந்து அங்கு நூற்றுக்கணக்கான தனது சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டு வீழ்த்தினான். அதற்கு ஏதுமொரு காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. இப்படியானவற்றைக் குற்றச் செயல்கள் என்று கூறலாமல்லவா?
ஆனால் இன்று உலக அரசாங்கங்கள் எல்லாம் இந்த மாதிரியாக வன்முறைகளை நுணுக்கமாக வேறுபடுத்திப் பார்க்க விரும்புவதில்லை. அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகள் ஏதோவொரு முறையில் ஏதோவொரு அரசினது அதிகாரத்துக்கு சவால் விடுவதனால், எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகக் குவித்து பயங்கரவாதம் என்கின்ற முத்திரை குத்தி  வேரோடழிக்க அவை எத்தனிக்கின்றன. இதற்கான பல கூட்டுக்களை அமைக்கின்றன. தென்னாசிய நாடுகளின் கடந்த சார்க் மாநாட்டில் சகல நாடுகளும் பேசியது பயங்கரவாதம் என்கின்ற ஒரே பிரச்சினை பற்றித்தான்.  உலக அரசாங்கங்களின் இந்த முயற்சியில் மக்களின் பங்கு என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்கு பயங்கரவாதத்தின்  அடிமூலம் என்ன என்பதை விளங்கிக் கொண்டேயாகவேண்டும்.
அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகளுக்குக் காரணம் என்ன?
ஆதி காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குடிகளாக வாழ்ந்து வந்தனர் என்று எங்களுக்குத் தெரியும். அப்பொழுதெல்லாம் ராசாக்கள் கிடையாதுதானே. ஆனால் குடிகள் பெருகப் பெருக சின்ன அவற்றின் தலைமைத்துவமாக சின்னச் சின்ன ராசாக்கள் உருவாகினர். இந்த ராசாக்களின் ஒரு படத்தை இங்கு பாருங்கள்.

அவர் ராசாவாக வந்தவுடனேயே அவருக்குக் காவலுக்கு ஈட்டியுடன் ஒருவர் நிற்கின்றார் அல்லவா? ஏன்? அன்று ஈட்டியுடன் நின்ற அரசர்கள் பிறகு காலம் செல்லச் செல்ல ஒரு காவலாளர் கூட்டத்துடனும் பெரிய படைகளுடனும் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். இன்று பாதுகாப்பு அமைச்சும், ஆயுதப் படைகளும் இல்லாத எந்த நாடும் இருக்கின்றதா?
இதிலிருந்து ஏன்ன தெரிகிறது? மக்கள் மயப்படாத எந்த ஆட்சியாளரும் ஆயுதங்கள் கொண்டுதான் தன்னை நிலைநிறுத்துகின்றார், தனது ஆட்சியினைப் பாதுகாக்கின்றார். சுருங்கக் கூறினால் வன்முறையைப் பிரயோகிக்கும் வாய்ப்பை வைத்து பயமுறுத்திக் கொண்டுதான் எந்த அரசனோ எந்த அரசாங்கமோ மக்களை அடக்கிக் கொண்டு ஆட்சி செய்ய முடிகிறது. இன்று உலகில் நடக்கும் யுத்தங்களில் 99 வீதமானவை உள்நாட்டு யுத்தங்கள், அதாவது ஒரு அரசாங்கம் தனது பிரஜைகள் மீது செய்யும் யுத்தங்களாகும். அரசு ஆயுதம் கொண்டுதான் மக்களை அடக்கி ஆளுகின்ற படியினால், மக்களை ஆயுதம் தூக்க விடக்கூடாதுதானே. அதனால்தான் அரசு அல்லாத எவரும் ஆயுதம் பிரயோகிப்பதை சட்டத்துக்கு விரோதமான செயல் என்னும் சட்டங்களை இயற்றி விட்டிருக்கின்றன.
அரசுகள் ஆயுதபாணிகளாக இருப்பதனால்தான், அதன் அதிகாரத்துக்கு சவால் விடும் எந்தக் குழுவும் தானும் ஆயுதம் தூக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய அரசுகளின் அதிகாரங்களின் அளவுகளை யோசித்துப் பாருங்கள். அப்பப்பா. சொல்லி முடியாதே. அவை யாருக்கும் என்னவும் செய்யலாம் என்கின்ற அளவுக்குத் தங்களை மத்தியில்; பலப்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றன. இந்த அரசுகளை ஆட்டம் காண வைக்க வேண்டுமானால் வன்முறையைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் பலரும் நினைக்கின்றனர்.
அத்துடன், பேச்சுக்கு இல்லாத மதிப்பு வன்முறைக்கு உண்டல்லவா? எங்களது நாட்டில் ஏராளமான சிங்கள மக்கள் இனப்பிரச்சினை பிரபாகரனினால்தான் தோன்றியது என நம்புகின்றார்கள். ஆனால் பிரபாகரன் பிறக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னமேயே பிரச்சினை வலுப்பட்டுவிட்டது என்பதை அறியமாட்டார்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்கள் வெறுமனே கதைத்துக் கொண்டிருந்தபடியால் சிங்கள மக்கள் அதைக் கவனிக்கவில்லை. பிரபாகரன் துப்பாக்கியைத் தூக்கியதும்தான் தமிழ் தேசிய பிரச்சினை என்று ஒன்றிருக்கின்றது என்று உலகமெல்லாம் அறிந்து கொண்டது. இந்தக் காரணங்களுக்கெல்லாம்தான் சாதாரண மக்கள் ஆயுதம் தூக்கக் கிளம்புகின்றனர்.
சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தான் அரசாங்கங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கின்றன என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் ஆயுதப்படைகளின் மூலம் அடக்க வேண்டிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அப்படித்தான் என்ன? யோசித்துப் பாருங்கள்.
மேலும், பயங்கரவாதப் பிரச்சினை இருப்பது அரசாங்கத்துக்கு அனுகூலமான காரியமாகும். பயங்கரவாதப் பிரச்சினையைக் காட்டிக் காட்டியே மக்களைப் பயத்துடன் வாழ வைத்து ஆட்சிக்கு அடங்கி நடக்க வைக்கலாம். அதைச் சாட்டியே ஜனநாயகமற்ற சட்டங்களைக் கொண்டுவரலாம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமேயென்ற விசனத்தில் மக்கள் இம்மாதிரியான அநீதியான சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். இச் சட்டங்கள் அமுலுக்கு வந்தபின்னர் அதை வைத்துக் கொண்டு தனக்கு எதிராகக் கிளம்பும் எல்லாவகையான எதிர்ப்புக்களையும் அரசாங்கம் அடக்க வெளிக்கிடும். எங்கள் நாட்டில் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தமிழ் தேசியப் போராட்டத்தை அடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் பின்னர் தென்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியாளர்களை அடக்கவும் 60,000க்கு மேற்பட்ட தென்னிலங்கை மக்களைக் கொன்று குவிக்கவும் உதவியது. பிறகு எதிர்க்கட்சிகளை மிரட்டி அடக்கவும் உதவியது.
இந்தச் சட்டத்தின் உதவியுடன்தான் இதுவரை, 30 வருட காலங்களாக நூற்றுக்கண்கானோர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்படவும், தனி ஆயுதக்குழுக்களை அரசு வைத்துக் கொண்டு மக்களைக் கொலை செய்யவும், கடத்தவும், வெகுசன ஊடகங்களை மிரட்டவும், ஊடகவியலாளர்களை கொலை செய்யவும், கூட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் முடியுமாக இருந்திருக்கின்றது.    
பயங்கரவாதப் பிரச்சினையும் மக்களும்
ஆயுதந்தூக்கி வன்முறையில் ஈடுபடுகின்ற மக்கள் குழுக்களை பயங்கரவாதிகள் என்று பயங்கரமான முத்திரை குத்தி அரசாங்கங்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு மக்கள் துணை போகக் கூடாது. எப்பொழுதும் எந்த வன்முறை நடவடிக்கைகளினதும் மூலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மூலப் பிரச்சினையைத் தீர்க்க முயலவேண்டும். அதுதான் நிரந்தரமான அமைதியைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் அரசியல் நோக்கம் குறித்த வன்முறைகள் தலையெடுக்காமல் இருக்க வேண்டுமானால் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முதலாவதாக, நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏதோவொரு முறையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்கள் எல்லோரும் ஏதோவொரு அளவிலாவது தங்கள் தேவைகளைத் தாமே நிறைவேற்றுக்கூடிய கட்டமைப்புக்களைக் கொண்டு வரவேண்டும். இந்தத் தேவையை எங்கள் உள்ளுராட்சி மன்றங்களும் மாகாண சபைகளும் ஓரளவில் பூர்த்தி செய்கின்றன. இந்தக் கட்டமைப்புக்களுக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்குமாறு நாம் வலியுறுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். இவற்றை மென்மேலும் அதிகார பூர்வமான கட்டமைப்புக்களாக மாற்ற முயலவேண்டும். ஒரு உள்ளுராட்சி மன்றமானது வெளியுறவு விவகாரம், தேசிய திட்டமிடல் நடவடிக்கை ஆகியவை தவிர்ந்த சகல விடயங்களையும் பார்க்கும் ஆற்றல் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டாவதாக, யாருக்கும் ஏதாவது குறைகள் இருந்தால், அவர்கள் கூறுவதை ஆட்சியாளர்கள் கவனமாகக் கேட்பதை உறுதி செய்ய வேண்டும். நான் துவக்குத் தூக்கினால்தான் இனி என்னை யாரும் கவனிப்பார்கள் என்று யாருமே சிந்திக்க இடமளிக்கப்படாது. இதில் எங்கள் வெகுசன ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. எந்தச் சின்னக் குழுவாக இருந்தாலும் அவர்களின் குறைகளைப் படம் போட்டு இவை காட்ட வேண்டும். அவர்களின் குரலைக் கேட்பது மட்டுமல்ல அவற்றைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக, நீதியாக, காரண காரியங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தனது பிரஜைகளுக்கெதிராக ஒரு அரசு வன்முறை பிரயோகிப்பதற்கு எந்தக் காரணம் கொண்டும் இடமளிக்கக்கூடாது. தனது பிரஜைகளின் அங்கீகாரத்துடன்தான் ஒரு அரசு ஆட்சி செய்கின்றது. அரசுகள் கொண்டுள்ள இறைமையானது, (அதாவது சுதந்திரமாக தன்னிச்சையாக செயற்படக்கூடிய தன்மை) அவற்றின் மக்களால்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தனக்கு அதிகாரம் வழங்கும் மக்களுக்கெதிராக ஒருபோதும் ஒரு அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்க இயலாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  அந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவந்தாலும், தனது ஆயுதப் படைகளை மக்கள் மீது ஏவி விட்டாலும், நாங்கள் விழிப்பாக இருந்து அதனை நிற்பாட்டுவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நான்காவதாக, ஒரு அரசு எவ்வளவுதான் அதிகாரம் வாய்ந்ததாக இருந்தாலும் அதனை ஆட்டம் காண வைக்க மக்களால் முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மக்கள், கூட்டங்கள் கூட்டிப் பொதுப் பிரச்சினையை ஆராய்வதையும் கூட்டாக செயற்படுவதையும் கைவிடக்கூடாது. கூட்டங்கள் கூடுவதை எந்த உருவில் அரசு மறித்தாலும் அதனை எதிர்க்க வேண்டும். இன்று எங்கள் நாட்டில் பொதுக்கூட்டங்கள் கூடவேண்டுமானால் பொலிஸ் அனுமதி வேண்டும். ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத்தான் இந்த நடைமுறை என்று சொன்னாலும், மறைவில் தமக்கு ஒவ்வாத கூட்டங்களை தடை செய்வதற்கே இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகின்றது என்பது வெள்ளிடை மலையாகும்.  போதாக்குறைக்கு பிரதேசம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களையும் நிறுவி பொலிஸ் மூலமாக மக்களை வேவு பார்க்க அரசாங்கம் முயலுகின்றது. இதை நாங்கள் பார்த்தறிந்து கொள்ள வேண்டும். ஒன்று கூடி அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இப்படியான பல புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டு வந்துதான் ஐரோப்பா கனடா ஸ்வீடன் நோர்வே ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வன்முறையையும் பூசல்களையும் இல்லாதொழித்திருக்கிறார்கள். இங்கள்ள ஆயுதப்படைகள் வரவர சடங்குகளுக்கான படைகளாக மாறிக்கொண்டு வருகின்றன. ஏனெனில் அவற்றுக்கான தேவை அநதச் சமூகங்களில் குறைந்து கொண்டு வருகின்றது. அவர்களுக்கு அதைச் செய்யலாமென்றால் எங்களுக்கும் முடியுந்தானே.
கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. எங்கள் நாட்டில் அல்லது சமூகத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை, கிளர்ச்சிவாதிகளின் வன்முறை, பயங்கரவாதிகளின் வன்முறை, அர்த்தமற்ற வன்முறைக் குற்றச் செயல்கள் என்று வகை பிரித்து ஆராய்ந்து பாருங்கள். இவற்றின் நோக்கங்கள் எவையாக இருந்தன? அப்பிரச்சினைகளின் மூலங்கள் என்ன?
2. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் என்னென்ன இருக்கின்றனவென்பது தெரியுமா?
3. தெரியாவிட்டால் அதனை அறிந்து கொள்ள என்ன நடவடிக்கை எடுப்பீர்?

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்