Search This Blog

Monday, February 13, 2012

மகிழ்வித்து மகிழ்

இவ்வுலகில் உள்ள அனைத்து நெஞ்சங்களும் ஒரு சிறிய பாராட்டுக்காகத் தான் ஏங்கிக்கிடக்கின்றன!

உணர்ச்சி வெளிப்பாடு என்பது ஒரு தனி மனிதன், தான் ரசித்த, அனுபவித்த அல்லது தன்னைச் சுற்றி இருக்கும் சூழ்நிலைக்கு ஒப்பத் தன் மனநிலையை வெளிக்காட்டுவது.
இதைத் தான் ஆங்கிலத்தில் body language என்பர். இவ்வாறான உணர்ச்சி வெளிப்பாடு தான் மகிழ்ச்சி.
”உன் துன்பத்தை பகிர்ந்து கொள்
அது பாதியாகக் குறையும்;
உன் இன்பதைப் பகிர்ந்து கொள்
அது இரு மடங்காகும்”

இந்த கூற்று மகிழ்தலும், பிறருடன் மகிழ்ச்சியைய் பகிர்தலும், பிறரை மகிழ்வித்து அதனால் மகிழ்ச்சி அடைதலும், அந்த மகிழ்ச்சி என்ற உணர்வை இரு மடங்காக அனுபவித்தமைக்கு சமம் என்று கூறுகிறது.

ஒருவனுக்கு எதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று பார்த்தால், வரையறுத்துக் கூறுவதற்கு அது எளிமையானது அல்ல.

இவ்வுலகில் உள்ள மனிதர்களுள் ஒருவர் மற்றொருவரைப் போல் இருத்தல் அரிது. அவருடைய தோற்றம் வெவ்வேறு; பழக்கம் வெவ்வேறு; குணம் வெவ்வேறு; நடை உடை பாவனை வெவ்வேறு; குரல், எண்ணம், சிந்தனை, ஆசை அனைத்தும் வேறு வேறு.

அதேபோல் ஒவ்வொரு மனிதனின் மகிழ்ச்சிக்கான காரணகுறியும் வெவ்வேறு.

சிலருக்கு வேலை கிடைத்தால் மகிழ்ச்சி; சிலருக்கு வேலை செய்யாமல் நேரத்தை வீணாக்குவதில் மகிழ்ச்சி.

சிலருக்கு பரிட்சையில் நிறைய மதிப்பெண் பெற்றால் மகிழ்ச்சி; பலருக்கு இந்திய கிரிக்கெட் அணி கோப்பை வென்றால் மகிழ்ச்சி.

நாடக மேடையான இவ்வுலகில் பல வகையான கதாப்பாத்திரங்கள் இருப்பது போல் ஒருவர் மகிழ்ச்சி அடைவதற்காண சூல்நிலையும் செயலும் பல வகைப்படும்.

வேலை கிடைப்பது, நிறைய சம்பாதிப்பது, அதிக மதிப்பெண் பெறுவது, இந்திய அணி கோப்பை வெல்வது – இவை அனைத்தும் ஒருவர் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதற்குரிய சூல்நிலை தான்.

அதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் ஆத்ம பூர்வமாண மகிழ்ச்சி என்பது, தான் மகிழ்வது மட்டும் அல்லாமல், பிறரையும் மகிழ்வித்து, அவர்கள் மகிழ்ச்சியில் மனநிறைவு அடைவதுதான்.
அந்த மனநிறைவு தான் உண்மையான மகிழ்ச்சி.

நம் தமிழ் மாந்தர் தோன்றிய காலதில் இருந்தே பிறரை மகிழ்வித்து மகிழ்வதில் மனநிறைவு அடைந்திருந்தனர்.

தமிழ் சங்ககாலத்தில் புலவர் பெருமக்கள் பலர் இருந்தனர். அப்புலவர்களுக்கும், நம் தமிழ் மண் வேந்தர்களுக்கும் இடையே இருந்த‘மகிழ்வித்து மகிழ்’ என்ற பண்பாடு மிகவும் இனிமையானது.

தமிழ் புலவர்கள் மன்னர்களைச் செந்தமிழில் பாடி, போற்றி மகிழ்ந்தனர். புலமைச் சொற்களால் தன்னை மகிழ்வித்த புலவருக்கு பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்தான் மன்னன்.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் வள்ளல் குணத்தை நாம் அனைவரும் அறிவோம். தான் ஒரு வள்ளல் என்று உலகம் தன்னைப் போற்ற வேண்டும் என்பதற்காகவா பாரி தன் பொற்தேரை மொளவல் கொடிக்குக் கொடுத்தான்?

இல்லவே இல்லை!!

படர இடம் இல்லாமல் முல்லைக் கொடி தவிப்பதைக் கண்ட பாரியின் மனம் வெம்பியது. முல்லைக் கொடி செழித்து வளர்வதே தனக்கு மகிழ்ச்சி என்றான்! தன் தேரைக் கொடுத்தான்! மகிழ்ச்சியோடு தன் மனைக்குத் திரும்பினான்.

தான் தானமாக வாங்கிய அரிசியைச் சிட்டுக் குருவிகளின் பசிக்கு இரையாகக் கொடுத்து மகிழ்ந்தான் புரட்சிக்கவிஞன் பாரதி.

தனக்குக் கிடைத்த அரிய நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்து அந்தப் பிராட்டி அதிக நாள் மகிழ்ச்சியாக உயிர் வாழ்வதில் மனநிறைவு அடைந்தான் மன்னன் அதியமான்.

’வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் கூறியது போல், பிறர் துன்பத்தைக் கண்டு துவண்ட தமிழர்கள் பிறர் இன்பத்தில் தான் தனது உண்மையான இன்பம் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தனர்.

கொடுப்பது மட்டும் மகிழ்ச்சி அல்ல. பிறருக்கு விட்டுக்கொடுப்பதிலும் மகிழ்ச்சி அமைந்துள்ளது.

வளர்ந்து வரும் நாகரிக உலகில் தன்னைப் பற்றி சிந்திக்கவே மனிதனுக்கு நேரம் இல்லாமல் போயிற்று!

தனது மகிழ்ச்சியையே முழுமையாகக் கொண்டாட முடியாத நிலை. இதில் அடுத்தவரை மகிழ்வித்து தான் அதில் மகிழ்ச்சி அடைவது என்பது கானல் நீர் கண்ட கதைதான்.

போட்டிப் போட்டுக்கொண்டு நகரும் இந்த எந்திர உலகில் மக்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்ளவும், வாழ்த்தவும் நேரம் செலவழிப்பதில்லை. தன் வேலை தன் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருக்கிறது.

மனிதன் மறந்துவிட்டான்,
”we are human-beings not human-doings”

நல்ல மனங்களைத் தேடித் தத்தளிக்கும் இவ்வுலகில் உள்ள அனைத்து நெஞ்சங்களும் ஒரு சிறிய பாராட்டுக்காகத் தான் ஏங்கிக்கிடக்கின்றன.

மற்றவரைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லாரிடமும் காணப்படாது. தன்னலம் இல்லாத உள்ளம் படைத்தவரால் தான் பிறரை வஞ்சகம் இல்லாமல் பாராட்ட முடியும்.

அவ்வுள்ளம் படைத்தவரால் மட்டுமே பிறரை மகிழ்வித்து மகிழ்ச்சி அடைய முடியும்.

நம்மால் முடிந்ததைப் பிறருக்குக் கொடுப்போம்; கொடுப்பதில் மகிழ்வோம்!
பிறர் எண்ணங்களையும் செயலையும் பாராட்டுவோம், பாராட்டுவதில் மகிழ்வோம்!
நாமும் மகிழ்வோம்; பிறரையும் மகிழ்விப்போம்! 


S. சவிதா

No comments:

Post a Comment