Search This Blog

Monday, August 5, 2019

“துணை” என்ற குறும்படம்

“இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் மறுமணம் பற்றிய உரையாடல்களைச் செய்யப்போகிறோம்?” என்று கேள்விகளை எழுப்புகிறார் வி. சபேசன். “துணை” என்ற குறும்படத்தை இதற்காகவே அவர் ஒரு வழியாக எடுத்திருக்கிறார். இந்தப்படம் இன்று (04.08.2019) கிளிநொச்சி - கருணா நிலையத்தில் திரையிடப்பட்டது.
மறுமணம் பற்றிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உடனடியாக உங்களுக்கு நினைவுக்கு வருவது ரத்தக் கண்ணீர். இதைவிடப் பல குறும்படங்களும் இலக்கியப் பிரதிகளும் தமிழில் வந்திருக்கின்றன. ஈ.வெ.ரா இதைப்பற்றி நிறையப் பேசியிருக்கிறார். முன்னோடிகளாகப் பலர் மறுமணத்தைச் செய்து காட்டியிருக்கிறார்கள். எங்களுடைய குடும்பத்தில் கூட மறுமணம் செய்திருப்பதாக பழைய சுவடிகள் சொல்கின்றன. அம்மாவின் தாயாரான ஆச்சியின் தம்பி மூன்று திருமணங்களைச் செய்திருக்கிறார். ஆனால் கருணாநிதியைப்போலவோ கண்ணதாசனைப்போலவே அல்ல. எம்.ஜி.ஆரைப்போல என்று சித்தப்பா பகடியாகச் சொல்வார். ஒருவர் இறந்த பிறகு மற்றவர். அவர் இறந்த பிறகு அடுத்தவர் என்று. இளவயதிலேயே இவ்வளவும் நடந்ததால் அவர் மறுமணம் செய்ததைப்பற்றி யாரும் புகார் கொண்டதாகத் தெரியவில்லை. சொத்துக்குளைக் குறித்தும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.
1940 க்கு முதல் மறுமணம் செய்து கொள்வதென்பது ஈழத்தில் - குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெரிய விசயமாகக் கொள்ளப்பட்டதில்லை. அன்று மருத்துவ வசதிகள் குறைவு. இதனால் ஏற்படும் இளவயது மரணங்கள் மறுமணத்துக்கான சூழலை அல்லது நிலைமையை உருவாக்கியுள்ளன என்று தோன்றுகிறது. குறிப்பாக பெண்கள் குழந்தைப்பேறு காலங்களில் கூடுதலாக மரணமடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பேறு கால மரணங்கள் நிகழும்போது காயாசுவாதம், கடுங்காய்ச்சல் என்றெல்லாம் பேசப்பட்டது நினைவிலுண்டு.
இளவயதில் துணையின்றி வாழ்வது கடினம் அல்லது பிள்ளைகளுக்கு ஆதரவு தேவை என்றெல்லாம் யோசிப்பவர்கள் மறுமணத்துக்கு முன்வருகிறார்கள். சிலருக்கு மறுமணம் உவப்பாக இருப்பதில்லை. அப்படியானவர்கள் அவர்களுடைய விருப்பப்படியே வாழலாம். இதெல்லாம் அவரவர் விருப்பமும் சுயாதீன நிலைப்பாடுமாகும். எதற்கும் கட்டுப்பாடுகளோ அழுத்தங்களோ வேண்டியதில்லை. ஆனால் மறுமணம் செய்ய விரும்புகிறவர்களுக்கு எந்த வகையிலும் குடும்பத் தடைகளோ சமூக மறுப்புகளோ வேண்டியதில்லை.
இவற்றைப்பற்றியெல்லாம் விரிந்த தளத்தில் பேச வேண்டும் என்று உணர்த்துகிறது துணை. 
Karunakaran Sivarasa


No comments:

Post a Comment