Search This Blog

Sunday, June 18, 2017

தகப்பன் சாமி (கவிஞர். சுமதி ஸ்ரீ)



விபரமறியா வயதில்
விரலிரண்டை
துப்பாக்கியாக்கி
நான் சுடும்போது
விழி பிதுக்கலோடு
நாக்கும் நீட்டி
செத்துப்போவதாய்
பாவனை செய்து
பின் சிரிப்பாய்...
என் கையால் சாவதே
சந்தோஷம் என்பதாய்...

மேல் சட்டையில்
துளை மாறிய பொத்தானும்
கால் சட்டை தெரியக் கட்டிய
கைலியுமாய்
விடுதிக்கு வந்து
என் மானம் வாங்குவதாய்
புலம்புகையில்
நீ நீட்டிய
மஞ்சள் பையில் இருந்தது
எனக்கான புதுத்துணி...

போட்டா புடிச்சா
ஆயுசு குறையும் என
பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கும்
புகைப்படம்
எடுக்க விடாமல்
அடம் பிடித்த அப்பா(வி) நீ...

விடுமுறைக்கு
வரும்போதெல்லாம்
சிறுவாட்டு காசை
கறியாக்கி
என் இலை நிரப்பி
உன் மனம் நிறைவாய்...

விடுதிக்குக் கிளம்பும் நாளில்
வாசலடைத்துக்
கோலம்போடச் சொல்வாய்...
வாரம் கடந்தாலும்
அதைப் பெருக்காமல்
இழைகளுக்குள் சிக்கிய
புள்ளிகளில்
என் முகம் பார்த்து
மகிழும்
உன் மனசுக்காகவே
பொய்யெனப் பொய்த்தது
நம்மூர் மழை...

இருந்தும் என்ன...
ஒற்றை ரோஜாவுக்கும்
ஒரேயொரு வாழ்த்து அட்டைக்கும்
ஓடிவந்து விட்டேன் நான்...
நீ ஏற்க மறுத்த
என் காதலனோடு...

பிரசவத்திற்குப் பிந்திய
முடி உதிர்தலென
வேகமாய்
கழிந்த காலம்
கொண்டு வந்தது
உன் மரணச் செய்தியை!

வறட்டி மூடிய
முகம் காணவும்
கொடுத்து வைக்கவில்லை
எனக்கு...
முன்பொருநாள்
நான் சுவரில் எழுதி வைத்த
என் விடுதி தொலைபேசி எண்ணில்
என்னையே
பார்த்து மகிழ்ந்த நீ
எந்தப் பொங்கலுக்கும்
வெள்ளையடிக்கவே இல்லையாம்...

அடைமழை நாளொன்றில்
அச்சுவர் இடிந்து விழ
அடுத்த நாளே
படுக்கையில் விழுந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
நீ செத்துப்போனதை
தண்டட்டி குலுங்க
நெஞ்சிலடித்துக்கொண்டு
அலுமேலு ஆச்சி
சொன்னபோது...
‘அப்பா’வென பெருங்குரலெடுத்து
அழத் தொடங்கினேன்...

நீயோ…
என் பொருட்டு சாவதே
சந்தோஷம் என்பதாய்
சிரித்துக்கொண்டிருக்கிறாய்
விளக்கின் பின்னே உள்ள
புகைப்படத்தில்...
அன்று சிரித்தது போலவே!

No comments:

Post a Comment