Search This Blog

Wednesday, August 15, 2012

ஜனநாயகமும் மனித உரிமைகளும்;



மனித மாண்பு
மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ஒரேயொரு வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுவார்கள். அந்த வித்தியாசம்தான் மனிதர்களுக்கு இருக்கும் ஆறாவது அறிவான பகுத்தறிவு என்று கருதப்படுகின்றது. இந்தப் பகுத்தறிவு என்ன தன்மையானது என்று பார்த்தால், நியாயம் எது அநியாயம் எது, சரி எது பிழை எது என்று பகுத்துப் பார்த்து உணர்ந்து அதைப்போல நடக்கவைக்கும் மூளையின் செயற்பாடு என்று சொல்லலாம். இந்த வரைவிலக்கணத்தை நாங்கள் ஒத்துக்கொள்வோமானால்;, நியாயம், அநியாயம், சரி, பிழை என்பவற்றை எந்த அளவு கோலை வைத்துக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க முடியும் என்ற கேள்வியே உதிக்கின்றது. ஏதை நியாயம் என்று நாங்கள் சொல்லுகின்றோம்? ஏன்?
இந்தக் கேள்விக்குப் பதில் தேடும்போதுதான் மனித மாண்பு என்கின்ற விடயத்தை நாங்கள் விளங்கிக் கொள்ள வேணடியதாகிறது. மாண்பு என்பது, சுய கௌரவம், பரஸ்பர மரியாதை, சுய ஆளுமை போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியிருக்கும் சொல்லாகும். மனிதர்களாகப் பிறந்திருக்கும் நாங்கள் மாண்புடன் வாழவேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதர்கள் ஆவோம், இல்லாவிடில் மிருகங்களுக்கு சமனாவோம். எனவே, நாம் நியாயம் என்று கூறுவது மனித மாண்பினை உயர்த்தும் வலுப்படுத்தும் சகல விடயங்களையும் குறித்துத்தான். நாம் அநியாயம் என்று சொல்லுவது மனித மாண்பினை அழிக்கும் சகல விடயங்களையுமே.
உதாரணமாக, மனிதர்களை மரியாதை கூடிய மேம்பட்ட வாழ்க்கையைக் கொடுக்கும் கல்வி யாருக்காவது கிடைக்காவிடில் அதை அநியாயம் என்று கூறுகின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாக தனது கருத்தினைக் கூறும் பேச்சுச் சுதந்திரம் இல்லாவிடில் அதையும் அநியாயம் என்கின்றோம் இல்லையா? ஒருவர் சுதந்திரமாகச் சிந்திக்கவும் பேசவும் பங்குகொள்ளவும் கல்வி கற்கவும்தான் அவருடைய மாண்பு அங்கு நிலைப்படுகின்றது. ஆகவே, நாம் ஆறறிவு கொண்ட மனிதர்கள் என்பதனால் மாண்புடன் வாழக் கடமைப்பட்டவர்கள் என்றும் சொல்லலாம். அதைத்தான் நீதி என்றும் நியாயம் என்றும் மனிதகுலம் கருதுகின்றது.
மனிதர்கள் மாண்புடன் வாழ வழி செய்யத்தான் ஜனநாயகம், மனித உரிமைகள் என்கின்ற இந்த இரண்டு கருத்தோட்டங்களும் உலகத்தில் உருவாயின. ஏந்த இடத்திலும் ஜனநாயகமும் மனித உரிமைகளும் இல்லாவிட்டால் அங்குள்ள மக்கள் மாண்புடன் வாழ முடியாது, அவர்கள் விலங்குகள் போலத்தான் வாழ வேண்டும். இதனால்தான் சுயமரியாதையுடன் வாழ விரும்பும் எவரும் மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பேணுவதற்காக உழைத்தல் அவசியமாகின்றது. இந்த இடத்தில், ஒரு கேள்வி எழுகிறது. மனிதர்கள் மாண்புடன் வாழவே பிறந்தவர்கள் என்றால், ஏன் அவர்கள் அப்படி வாழும் வாழ்க்கையை நாம் பிரத்தியேகமாகப் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது? இதற்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இங்குதான் அரசு என்கின்ற விஷயத்துக்கு வருகின்றோம்.
அரசு என்றால் மனிதர்களை ஆட்சி செய்வதற்காக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இயந்திரம் என்று சொல்லாம். பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் எல்லோரும் ஒரு ஒழுங்கு முறையுடன் வாழவேண்டுமானால் அங்கு அவர்களுக்கு ஒரு அரசு தேவைப்பட்டது. இந்த அரசு காலத்துக்குக் காலம் உருவத்தில் மாறி வந்திருக்கின்றது. முன்னர் இராசாக்கள் ஆண்டார்கள். அவர்கள் காலத்துக் கதைகளையும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம்தானே. 'யாரங்கே! இவன் தலையைச் சீவிக் கொன்று விடுங்கள்!!' என்று இராசா கட்டளையிட்டால் அது நிறைவேற்றப்பட்ட காலமும் இருந்தது. இந்த அமைப்பின்கீழ் மனித மாண்பு எவ்வளவு சிதைந்து போனது என்பதைச் சொல்லத்தேவையில்லை. இந்த நடைமுறை அநியாயம் என்று மனிதர்கள் கருதியதால்தான் இந்த முறையை மாற்றிக்கொண்டு புதிய அரசு முறைகளைக் கொண்டு வந்தார்கள்.
இதற்குப் பின்பான காலத்தில்தான் தேர்தல்கள் மூலம் மக்கள் தெரிவு செய்கின்ற பிரதிநிதிகள் ஆளும் அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. இன்று, இப்படிப்பட்ட 'மக்கள் அரசாங்கம்' என்று நாம் கூறுகின்ற அரசாங்கம் இருந்தும், எங்கள் நிலை கிட்டத்தட்ட அரசர் காலத்து நிலையாக இருக்கவே காண்கின்றோம். எங்கள் நாட்டை எடுத்துப் பாருங்கள். ஒரு விசாரணையும் நீதியுமின்றி எங்களில் எத்தனைபேர் துப்பாக்கிக்குப் பலியாகினர். இந்த சம்பவங்களில் அனேகமானவை எங்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசின் வேலையாகவும், ஏனையவை அரசு அல்லாத ஆயுதக்குழுக்களின் வேலையாகவும் நாம் காண்கின்றோம். இந்த ஆயுதக்குழுக்களை இயங்க வைப்பதிலும்கூட எங்களது அரசின் பங்கு கணிசமாக இருப்பதைக் காணலாம்.
இந்தப் பயங்கரவாத  சூழ்நிலையின் காரணங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, ஒரு சிலருக்கு அளவற்ற அதிகாரம் நிலைக்க வேண்டுமானால், ஏனைய மக்களெல்லோரும் தங்கள் மாண்பினை இழக்க வேண்டியது அவசியமாகின்றது என்பது இதிலிருந்து எங்களுக்குத் தெரிகின்றது. நாங்கள் ஒழுங்காக வாழுவதற்கு அரசு உதவுகின்ற அதே நேரத்தில், அதிலிருந்து கொண்டு எங்களை ஆள்பவர்கள் அளவற்ற அதிகாரங்களைத் தமது கைகளில் வைத்திருக்கவும் அரசு உதவுகின்றது. எனவேதான், அரசின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, அது மக்களின் மேம்பாட்டுக்கும் மாண்பு மிகுந்த வாழ்க்கைக்கும் இயைபானதாக மாற்ற வேண்டும். இதற்கு, மக்களாகிய நாம் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் விசேடமாகப் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஆதலினால்தான் நாம் ஜனநாயகத்தினதும் மனித உரிமைகளினதும் அடிப்படைகளைக் கற்றுக் கொள்வோம். இவை ஏன் எப்பொழுதும் அரசுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றது என்பதையும் விளங்கிக் கொள்வோம்.
மனித உரிமைகள்
மனிதர்களின் மாண்பினைப் பேண உதவும், அடிப்படையான விழுமியங்களை மனித உரிமைகள் என்று சொல்லுவோம். பிரதானமாக, மனித உரிமைகள் என்பனவை மனிதர் கொண்டிருக்கவேண்டிய விழுமியங்களே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இவை பிறகு சட்டங்களாக அமுல்படுத்தப்படுகின்றன. மனித உரிமைகள் என்னும் கருத்தியல் ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவை ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் ஒன்றிணைந்து வாழ வழி செய்கின்றன.


மனித உரிமைகள் ஐந்து வகைப்படும்.
1) குடியுரிமைகள்
வாழ்வதற்கான உரிமை, சுதந்திரமாக நடமாடுவதற்கு உரிமை, கருத்துச் சுதந்திரம், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை, பிரசாவுரிமை, மனிதாபிமானமற்ற செயல்களிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை, சட்டத்தின் முன் சமவுரிமை போன்றவை குடியுரிமைகளாகும். இவற்றை ஆராய்ந்து பார்த்தீர்களானால், இவை தன்னிச்சையாக மனம் போன போக்கில் அரசு மக்களின்மீது தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க விடாமல் மக்களைப் பாதுகாக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
2) அரசியல் உரிமைகள்
அமைதியாக ஒன்று கூடும் மற்றும் சங்கம் அமைத்துக்கொள்வதற்கான உரிமை, தகவல்களைப் பெறும் உரிமை, சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமை போன்றவை அரசியல் உரிமைகளாகும். இவை மக்கள் தங்களது சார்பில் ஆட்சி செய்வதற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வைக்கவும், அந்தப்பிரதிநிதிகள் ஆட்சியை சரிவர நடத்துகிறார்களாவென கண்காணிக்கவும், இந்த ஆட்சிக்கூடாகத் தங்கள் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கப் பங்களிக்கவும், வழிவகுக்கின்றன.
3) பொருளாதார உரிமைகள்       4) சமூக உரிமைகள்
பொருளாதார உரிமைகளும் சமூக உரிமைகளும் மக்கள் தகுந்த வாழ்க்கைத்தரத்தோடு கௌரவமாக வாழுவதை உறுதி செய்கின்றன. பட்டினியிலிருந்து விடுபடுவதற்கான உரிமை, வேலை செய்யும் உரிமை, வேலைக்குரிய தன்மானமான ஊதியத்தினைப் பெறுவதற்கு உரிமை, கல்வி சுகாதாரம் போன்ற பொது அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை, தொழிற்சங்க உரிமை, ஓய்வு பெற்றபின்னரோ அல்லது தொழிலை இழந்த தருணத்திலோ வாழ்க்கையைப் பாதுகாக்க உதவும் சமூகப் பாதுகாப்பிற்கான உரிமை போன்றன சமூக பொருளாதார உரிமைகளுக்குள் அடங்கும்.
பசியில் வாடுபவனுடன் அரசியல் கதைக்க முடியுமா? முதலில் பசியைத் தணித்து விட்டுத்தான் மிகுதிக்கதைகளைச் சொல்லலாம் இல்லையா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போதுதான் அவர்கள் தங்கள் குடியுரிமைகளைப் பற்றியோ அரசியல் உரிமைகளைப் பற்றியோ யோசிக்க முடியும் என்கின்ற கருத்தோடுதான் சமூக பொருளாதார உரிமைகள் பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. தன்னுடைய மக்களுக்கு இந்த உரிமைகளையெல்லாம் உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு அரசுக்கும் உள்ளது.
4) கலாசார உரிமைகள்
கலாசார உரிமைகள் மனிதர்களின் உள ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவே கொண்டுவரப்பட்டன எனலாம். எல்லா மனிதர்களுக்கும் தங்களுடைய மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் இவையெல்லாவற்றையும் அனுசரிக்கும் தேவைகள் உண்டு. அவ்வாறுதான் ஒவ்வொரு குழுக்களுடைய அடையாளங்கள் பேணப்பட்டு அவற்றுடைய பரம்பரைகள் பாதுகாக்கப்படுகின்றன. தூன் எந்த இனம், மொழி, மதம், பிரதேசம் நாட்டினைச் சேர்ந்தவர் போன்ற தன்னடையாளங்கள் ஒவ்வொரு மனிதருக்கும் அவசியமாகின்றது. எனவே, மொழி, பாரம்பரியங்கள், சடங்கு முறைகள், குல வழக்கங்கள் போன்றவற்றைப் பின்பற்றும் உரிமைகள் வழங்கப்படுகின்றன.
கலாசார உரிமைகள் குழு உரிமைகள் என்னும் வகைப்படுத்தலுக்குக் கீழ் அடங்கும். யாராவது தனிமனிதனாக இருந்து தனது மொழி மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாக்க முடியுமா? உதாரணமாக, ஐஸ்லாந்தில் எஸ்கிமோக்கள் மத்தியில் ஒரு இலங்கைத் தமிழர் அல்லது இஸ்லாமியர் வாழ்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தனது மொழியையோ மதத்தையோ தொடர்ந்து பின்பற்றத்தான் முடியுமா? தன்னையொத்த மனிதர்கள் இருந்தால்தானே அவர்களுடன் தமிழில் உரையாடலாம், சேர்ந்து ஒரு பள்ளிவாசலைக் கட்டி தொழுகைக்குப் போகலாம்? எமது பண்பாட்டினைப் பின்பற்றுவதற்கு ஒரு சமூகம் தேவை. தனியே விட்டால் அவர்கள் எஸ்கிமோக்களின் வாழ்க்கையைப் பினபற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. எனவே கலாசார உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதற்கு அவற்றிற்கேயுரிய குழுமங்களின் இருப்பும் முக்கியமாகின்றது. அதேபோல மறுபக்கத்தில், அந்தக் குழு தொடர்ந்து இருப்பதற்கு கலாசார உரிமைகள் பாதுகாப்பது அவசியமாகின்றன. இதனால், மனித உரிமைகள் கோட்பாட்டில் தனிநபர் உரிமைகளைப் போலவே, குழு உரிமைகளும் மிக முக்கியமான அங்கம் வகிக்கின்றன. அக்குழுக்களின் பேரில்தான், அவை தமது விடயங்களைத் தாமே தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.
ஜனநாயகம்
மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்கேற்க வகை செய்யும் அரசாங்கத்தின் நடைமுறையை ஜனநாயகம் என்று கூறுவோம். நடைமுறை என்பதோடு, இது ஒரு அரசியல் சித்தாந்தம் என்றும் விளக்கலாம். அதைவிட, இது மனித சமூகத்தின் இலட்சிய நோக்காகவும் ஒரு வாழ்க்கைப் பண்பாடாகவும் கருதப்படுகின்றது.
ஜனநாயகம், மக்களையும் அதிகாரத்தையும், இந்த இரண்டுக்கும் இடையிலான தொடர்புகளையும் நிர்ணயிக்கும் கட்டமைப்பாகும். அதிகாரம் என்பது ஒருவருக்கோ, ஒரு சிலருக்கோ மட்டுமல்லாமல், ஒரு நாட்டிலுள்ள சகலருக்கும் கிட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்படும் ஆட்சி முறையே ஜனநாயகம் ஆகும். இவ்வாறு சகலருக்கும் சமமாக ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் அங்கு எல்லாருக்கும்,
அவர்கள் உடல் உடைமைகளுக்கு சம பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்
தம்முடைய வாழ்க்கையையும் தொழிற்றுறையையும் மேற்கொள்ள சம வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
அரசியலில் பங்கெடுக்க சமவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
சட்டத்துக்கு அமைவான முறையில் தாங்கள் விரும்பிய கருத்துக்களைத் தெரிவிக்கவும், விரும்பியதை எழுதவும் அதன்படி நடக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும்
சுதந்திரமாகப் பொதுவில் கூட்டம் கூட அனுமதி வழங்கப்படவேண்டும்,
அமைப்புக்களாகவும் சங்கங்களாகவும் கட்சிகளாவும் இயங்கும் முழுச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும்
எழுந்தமானமான கைதுக்களிலிருந்தும் தடுப்புக்காவல்களிலிருந்தும், (கொலை அச்சுறுத்தல்களிலிருந்தும் கூட) பாதுகாப்பு வேண்டும்
மேலே கூறியவற்றிலிருந்து, ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படவேண்டுமானால் அங்கு மனித உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும் என்பது தெளிவாகின்றது. அதேபோல, மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் அதற்கு ஜனநாயகம் அவசியமாகின்றது என்பதையும் யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜனநாயகம் சரிவர இயங்குவதற்கு மூன்று நிபந்தனைகள் உண்டு. அவையாவன,
1) தகுந்த முற்போக்கான சட்டங்கள்
ஒரு நாட்டின் சட்டங்கள், அந்நாட்டிலுள்ள மனிதர்களெல்லோரும் இயங்கும் பொதுவிதிகளைக் குறிக்கின்றன. இவை கட்டாயமாக மனித உரிமைக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும். சட்டங்களை நாம் சரியாக அனுசரிப்பதால் எமது சமூகத்தில் ஒழுங்கு நிலைநாட்டப்படுகின்றது, எல்லோருக்கும் நீதியும் நியாயமும் கிடைக்கின்றது. சகல நிறுவனங்களும் நியாயத்தின் அடிப்படையில் இயங்க வழிசெய்யப்படுகின்றது. எல்லோரும் சமமாகப் பங்களிக்கவும் சமவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளவும் சட்டங்கள் உதவுகின்றன.
எந்தளவு அதிகாரமுள்ள அரசியல் தலைவரானாலும், ஒரு நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு முடியாது என்ற வகையில் அச்சட்டங்கள் சட்டத்தரணிகளாலும், நீதிபதிகளாலும், ஊடகவியலாளர்களாலும், படித்த சமூகத்தினாலும் பொது மக்களினாலும் பாதுகாக்கப்படவேண்டும். அத்துடன், அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்களை மாற்றுவதையும் தடை செய்ய வேண்டும். மொத்தத்தில், சிறியதோ பெரியதோ, நாமெல்லாரும் சட்டத்தை மதித்து நடக்கப் பழக வேண்டும்.
2) நடுநிலையான சுதந்திரமான நீதித்துறை
எல்லோருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும் கருவி சட்டங்கள் என்று பார்த்தோம். சுட்டங்கள் மீறப்படும்பொழுது அதைத் தடை செய்கின்ற அதிகாரம் நீதிமன்றங்களுக்கே உண்டு. எனவே நீதித்துறை சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் இயங்குவது ஜனநாயகத்துக்கான முக்கிய நிபந்தனையாகும். நீதித்துறையும் நீதி மன்றமும், சட்டப் பிரகடனங்களை மேற்கொள்ளவும், அரசியல் யாப்பையும் மனித உரிமைகளையும் மீறும் அரசியல் தூண்டலிலான செயல்களை செல்லுபடியற்றதாக ஆக்கவும் அதிகாரம் உள்ளது. அவை அப்படியே இயங்கவும் வேண்டும்.
3) ஊழல் இன்றிய நிறுவனங்கள்
பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் யாருமே இல்லையென்று சொல்லலாம். பொது நிறுவனங்கள் அதிக தொகையான பணத்தைக் கையாளுவதனாலும், அப்பணம் செலவழிக்கப்படுவதற்கு  தனிநபர்கள் பொறுப்பாக இருப்பதனாலும், நிதிகள் கையாடப்படுவது சகஜமாகி விட்டது. இத்துடன், பொறுப்பான பதவிகளில் தங்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அமர்த்துதல் என்பதும் ஊழல் செயற்பாடாகும். ஊழலானது ஜனநாயக நடைமுறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். ஏனெனில், பணத்தைக் கொண்டும் செல்வாக்கைக்கொண்டும் எந்தச் சட்டமும் வளைக்கப்படலாம்.
ஊழலை அழிக்க ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் பொதுவாகவே வழங்கும் கருத்தாகும். அனேகமாக எல்லோரும் ஊழல் பேர்வழிகள் என்பதோடு, ஒருவர் ஊழலில் ஈடுபடும்பொழுது ஏனையவர்கள் பேசாமல் இருப்பதே இதற்குப் பிரதான காரணங்களாகும். ஏனையவர்கள் என் பேசாமல் இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் தாங்கள் இருந்திருந்தாலும் அதையேதான் செய்திருப்பார்கள் என்கின்ற உணர்வே மற்றவர்களின் வாயை அடைத்து வைக்கின்றது. அத்தோடுகூட, ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் நிலைகளில் சிறு சிறு ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதனால்தான் பெரும் ஊழல் நடக்கும்போது அதனை அனுதாபத்துடன் நோக்கத் தலைப்படுகிறார்கள்.
இதிலிருந்து, ஊழல் என்பது ஒரு சமூகத்தின் பண்பாடு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். அது, மக்கள எல்லோருடைய அங்கீகாரத்துடனும்தான் நடக்கின்றது. இந்தப் பண்பாட்டை நாமெல்லோரும் இணைந்து மாற்றினாலன்றி அது மாறாதுதான். ஊழல் நடவடிக்கை எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறு நன்மைகளைக் கொடுத்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது எங்கள் சமூகத்துக்கே அளப்பரிய கேட்டினை விளைவிக்கின்றது என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். ஊழலினால் சமூகத்துக்கும் சகல மக்களுக்கும் நீண்ட கால நன்மை பயக்கும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றனளூ இவ்வாறு நாட்டின் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்து விடுவதால் அவர்கள் சர்வாதிகாரிகளாக மாற உதவுகின்றது.
இதனை நாம் மனமார உணர்வோமாயின் ஊழல் இல்லாத சமூகத்தை நிச்சயமாக உருவாக்க முடியும். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கண்காய்வாளர் நாயகத்தின் அலுவலகம், பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக்குழு, ஊடகவியலாளர்களின் அமைப்புக்கள் இவையனைத்தும் ஊழலுக்கெதிராகப் போராடவேண்டும். இதைத் தவிர எங்கள் பாடசாலைக் கல்வியில் ஊழலின் தீமை பற்றிய அறிவுறுத்தலை ஒவ்வொரு வகுப்பிலும் கொண்டுவரவேண்டும். மதத் தலைவர்கள் தங்கள் ஆசியுரைகளின்போது ஒவ்வொரு முறையும் ஊழலின்றி சுத்தமாகவும் நேர்மையாகவும் வாழுவது பற்றிய அறிவுரைகளைக் கூறிக்கொண்டேயிருக்கவேண்டும். பெற்றார் தமது பிள்ளைகளுக்கு அறிவுரை கூறும்பொழுது அவர்கள் நேர்மையான பொது ஒழுக்கத்தைக் கைக்கொள்வது எவ்வளவு முக்கியமென விளக்க வேண்டும். இப்படி கிரமமாக நாமெல்லோரும் முயன்றோமென்றால் ஊழலை இல்லாதொழிக்கலாம்.

முடிவுரை
'மக்கள் எல்லோரும் தீர்மானம் எடுத்தலில் பங்கேற்க ஜனநாயக நடைமுறை வேண்டும். ஆனால் அந்த ஜனநாயக நடைமுறையைப் பேணுவதற்கு மக்கள் எல்லோரும் பங்கேற்க வேண்டும்..'      
இதுவரை நீங்கள் வாசித்த விடயங்களிலிருந்து அறிந்து கொண்டதை சுருக்கமாகக் கூறினால், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், பெற்றார், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், கணக்காய்வாளர்கள் போன்ற இத்தனை பேர்களும் சேர்ந்து செயற்பட்டால்தான் ஜனநாயகத்தைப் பேணலாம். பார்க்கப் போனால்,  இந்த மக்கள் குழுவினர் எங்கள் சமூகம் முழுவதையும் உள்ளடக்குகின்றனர் அல்லவா?
ஏதைப் பெறுவதற்கும் நாம் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். பரீட்சையில் திறமையான சித்தி கிடைப்பதற்கு இரவும் பகலும் கடுமையாகப் படிக்க வேண்டுவதே நாம் கொடுக்கும் விலையாகும். அதே போல் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கு நாம் கடும் உழைப்பை விலையாகக் கொடுக்கின்றோம். இதேபோலத்தான் சுதந்திர ஜனநாயகத்தை நாம் பெறுவதற்குக் கொடுக்கவேண்டிய விலை எந்நேரமும் விழிப்பாக இருப்பதே என்று ஒரு அறிஞர் கூறினார். எனவே பொதுவில் நடப்பதை அறிய முயற்சி செய்யாது, ஒன்றும் தெரியாத அசட்டு மனிதர்களாக நாம் வாழும்போது எங்கள் வாழ்க்கையையே நாமே பாழாக்குகின்றோம்.  




கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. குழு அங்கத்தவர்களெல்லோரும் 'நியாயம்', 'அநியாயம்', 'மனித மாண்பு' இவையெல்லாவற்றுக்குமான உதாரணங்களைத் தந்து அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளைத் தெளிவாக்கிக்கொள்க.
2. எங்கள் நாட்டில் சமீப காலங்களில் மனித உரிமைகள் பேணப்பட்டனவா இல்லையா என்பதை உங்கள் அனுபவங்களைக் கொண்டு விளக்குங்கள். இதில் நீங்கள் கண்டது, பிறர் சொல்லக் கேட்டது, பத்திரிகையில் வாசித்தது, என்பவற்றை அடக்கலாம். நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு உரிமையும் மனித உரிமைகளின் எந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியுமா?

3. உங்களது கிராமத்தவர்களினால் மனித உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் உண்டா?


4. 'ஜனநாயகம்', மனித உரிமைகள்', 'சட்டங்கள்', இவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்ன?

5. ஏங்களது நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா இல்லையா? எப்படிப் பாதுகாக்கக்படுகின்றது? எப்படி மீறப்படுகின்றது?


6. ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க நீங்கள் என்னென்ன செய்யலாம்?

7. ஏந்த நடவடிக்கையோடு ஆரம்பிப்பீர் என்பதை ஒவ்வொருவரும் விளக்கி அதற்கான உபாயங்களைக் கலந்துரையாடி குறித்துக் கொள்க.






No comments:

Post a Comment