Search This Blog

Tuesday, May 3, 2011

பொன்மொழிகள் (வெற்றி வேண்டுமா?)

வெற்றி வேண்டுமா?
  • எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே, வெற்றியாக வளர்கிறது. -வால்டேர்
  • வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. -வால்டேர்
  • நல்ல செயலின் துணிவு உடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர். -புரூக்
  • நல்ல செயல்களில் துணிவுடையவர் நாள்தோறும் வெற்றி காண்பர் - புரூம்
  • வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாக ஆகிவிடுகிறது. -ஹாப்பர்
  • தன்னைத்தானே அடக்கி வெற்றி கொண்டவனே உயர்தரமான வெற்றியாளன் -புத்தர்
  • நம்பிக்கையை விடாதே அதுதான் வெற்றியின் முதல்படிக்கட்டு - அண்ணாத்துரை
  • தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம் -வீல்
  • வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்படுவதில்லை. -எல்மர்
  • மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றி அடங்கியுள்ளது. -எமர்சன்
  • யாருக்கும் தோல்வியில்லாத வெற்றிக்குப் பெயர்தான் சமாதானம். -நேரு
  • தியாகத் தழும்பு பெறாமல் நீ வெற்றி பெற முடியாது. -புசிடன்
  • ஒருவன் தனக்கு அளவற்ற உற்சாகம் இருக்கும் எந்தத் தொழிலிலும் வெற்றிபெற முடியும்.
-எமர்சன்.
  • வெற்றி பெற்றே தீருவேன் என்று உன்னுடைய மனதில் நீ மேற்கொள்கிற திட சங்கல்பம்தான் வெற்றிக்கு அடிப்படை.
-லிங்கன்
  • நீ உச்சி சென்று வெற்றி காண விரும்பினால் மெல்ல மெல்ல கீழ்மட்டத்திலிருந்து துவங்கு
-சைரஸ்
  • வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன் இரண்டாம்முறை வென்ற மனிதனாவான்.
- லத்தீன் பழமொழி
  • தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
-விவேகானந்தர்
  • ஒரு நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனடியாகச் செய்து முடித்தால் வெற்றியை நோக்கித் திரும்பிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
-கிளமெண்ட்
  • இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்தால்தான் வெற்றியை நழுவாமல் காக்க முடியும்
-ஸ்வேர்டு.
  • பிரச்சனைகள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
-கென்னடி
தொகுப்பு: தேனி.எஸ்.மாரியப்பன்.

ஜப்பானியப் பழமொழிகள்

ஜப்பானியப் பழமொழிகள்
  • என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
  • மூன்று செயல்கள் மகிழ்வான வாழ்வுக்குரியது அவை சென்றதை மறப்பது, நிகழ் காலத்தை நேர் வழியில் செலுத்துவது, வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது.
  • மனிதன் பணத்தைக் கூட்டுகிறான், கடவுள் மனிதனின் ஆயுளைக் குறைக்கிறான்.
  • நோய் வந்தபோது ஒருவன் - தன் உயிரைப்பற்றி நினைக்கிறான். சுகமான போது பணத்தை பற்றி நினைக்கிறான்.
  • தன்னுடைய அறியாமையை ஒத்துக் கொள்கிறவன் அதை ஒரு முறை காட்டுகிறான். அறியாமையை மறைக்கிறவன் அதை பலமுறை காட்டுகிறான்.
  • கல்யாணமான பின்பு சம்பாதிக்க ஆரம்பிப்பவன் இறந்த பிறகுதான் பணக்காரனாவான்.
  • புகழ் என்பது நீர் மட்டம் போன்றது அது ஒரு கட்டத்தில் பெரிதாகி பின் மறைந்து விடுகிறது.
  • அடக்கி வைத்திருப்பதை விட திறந்து விடுவது மேலானது.
  • சத்தியம், நிதர்சனம், சகிப்புத்தன்மை மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
  • குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும் தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை அறியாது.
  • செல்வம் இருப்பதைவிட ஒரு தொழில் இருப்பது மேலானது.
  • மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை வந்து சலிப்படைய செய்வாள்.
  • உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால் அது அவனுக்கு அவமானம், இரண்டாவது தடவை ஏமாற்றினால் அது உனக்கு அவமானம்.
  • இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
  • பறவைக்கு பயந்து விதைக்காமல் இருக்காதே.
  • அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள், முட்டாள்கள் அதைப் பெற்று விட்டதாக நினைக்கிறார்கள்.
  • அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பது மரணத்திற்காகக் காத்திருப்பதுதான்.
  • ஒழுகும் கூரை, புகையடையும் கூண்டு, ஓயாமல் சண்டையிடும் மனைவி இவை மூன்றும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிடும்.
  • உச்சியில் இருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும் தள்ளி விடுவான்.
  • ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது.
    தொகுப்பு: தாமரைச்செல்வி.

முதன் முதலில்...!


  • முதன்முதலில் கழுதையின் படத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்த நாடு கென்யா
  • முதன்முதலில் தோன்றிய பாலூட்டி இனம் மனிதக் குரங்கு
  • முதன்முதலில் நினைவுத் தபால்தலை வெளியிட்ட நாடு அமெரிக்கா (1893)
  • முதன்முதலில் தன் உருவத்தை நாணயத்தில் பொறித்த அரசர் மகா அலெக்சாண்டர்.
  • முதன்முதலில் சிகரெட் பிடிக்கத் தொடங்கியவர்கள் துருக்கியர்கள்
  • முதன்முதலில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்
  • முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து
  • முதன்முதலில் சோதிடம் பார்க்கும் வழக்கம் தோன்றிய நாடு பாபிலோனியா
  • முதன்முதலில் ஒலிம்பிக்கில் பெண்கள் பங்கு கொண்ட ஆண்டு 1912
  • முதன்முதலில் தீக்குச்சிகள் உற்பத்தி செய்த நாடு சுவீடன் (1844)
  • முதன்முதலில் வாழ்த்து அட்டை ஜெர்மனியில்தான் வெளியிடப்பட்டது (1889)
  • முதன்முதலில் அரசுப்பணிக்காக தேர்வு நடத்திய நாடு சீனா (கி.மு.இரண்டாம் ஆண்டு)
  • முதன்முதலில் பரிசுச்சீட்டு இங்கிலாந்தில் அறிமுகமானது (1612)
  • முதன்முதலில் ரிக்சாவைக் கண்டுபிடித்தவர்கள் ஜப்பானியர்கள்
  • முதன்முதலில் தமிழில் சிறுகதை எழுதியவர் வ.வே.சு.அய்யர் (சிறுகதை- குளக்கரை)
  • முதன்முதலில் கண்மையை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்
  • முதன்முதலில் அதிகக் கதாபாத்திரங்களைக் கோண்டு எழுதப்பட்ட நாவல் டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும். (ஐநூறு கதாபாத்திரங்கள்)
  • முதன்முதலில் வெளியான அகராதியை வெளியிட்டவர் அப்பிரோகி யோகலிப்னோ (இத்தாலி-1502)
  • முதன்முதலில் ஆம்புலன்சை அறிமுகப்படுத்தியவர் சாரன்ஜிலாரி (பிரான்ஸ்)
  • முதன்முதலில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட நாடு பிரான்சு
  • முதன்முதலில் வெற்றிலையைப் பயிரிட்ட நாடு மலேசியா.
  • முதன்முதலில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை அனுமதித்த நாடு டென்மார்க்
  • முதன்முதலில் தோன்றிய வேதம் ரிக் வேதம்
  • முதன்முதலில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு சரணாலயம் அமைத்த நாடு மெக்சிகோ
-தேனி.எஸ்.மாரியப்பன்.

அபூர்வத் தகவல்கள்


லைரே பறவ
லைரே பறவை
லைரே பறவை (Lyre birds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். லைரே பறவை மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் பல குரலில் (மிமிகிரி) செய்யும் ஆற்றல் படைத்தது. இந்தப் பறவையினம் ஸ்திரெலியாவின் கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது.  இந்தப் பறவைகள் மயிலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்தப் பறவை வெப்பப் பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்கின்ற. இந்தப் பறவை முக்கிய உணவாக உக்கிய மரப் பாகங்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை உண்கின்றது. இந்தப் பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளது. இது தனது பெண் இனத்தினைக் கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்கிறது. இந்தப் பறவைக்கு வைத்திருக்கும் பெயரான லைரே (Lyre) என்பது ஒரு பழமையான இசைக்கருவி.
டைட்டன் ஆரம் மலர்
டைட்டன் ஆரம்
இந்தோனேசியாவின் சுமத்திரா காட்டுப் பகுதியில் உள்ள டைட்டன் ஆரம் (Titan Arum) தாவரம் உலகில் மிகப்பெரிய மலர்களை கொண்டுள்ளது. இந்த டைட்டன் ஆரம் தாவரம் தனி ஒரு மலரை மட்டுமே கொண்டிருக்கும். இதனை தாவரவியலில் Talipot palm  எனும் இன வகையில் சேர்த்துள்ளனர். இம்மலர் சராசரியாக 10 அடி (3 மீட்டர்) உயரம்,  மூன்று முதல் நான்கு அடி சுற்றளவு உடையதாக உள்ளது. இதன் வாசனை அழுகிய மீன் மணத்தை ஒத்ததாக இருக்கும். இந்தத் தாவரம் உலகிலுள்ள பல தாவரவியல் பூங்காக்களிலும் முக்கியம் கருதி வளர்க்கப்படுகின்றது. இந்த மலர் இராட்சத அளவில் உள்ள போதிலும் மற்றய சிறிய மலர்களில் நிகழக்கூடிய சிறிய பூச்சியினம் மூலமான மகரந்தச் சேர்க்கை மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது.
நீலதாமரை மலர்
நீலதாமரை
நீலதாமரை (Udumbara) மலர்கள் 3,000 வருடத்திற்கு ஒரு தடவை மலர்கின்றதாம். இந்து மதம், பெளத்த மதம் இரண்டும் இதனைப் புனித மலர்களாகப் போற்றி வருகின்றன.  மிக மிகச் சிறிய அளவுடைய இந்த மலர்கள் சந்தன வகையை ஒத்த நறுமணம் உடையவை. வெண் நிறம் கொண்ட இந்த நீலதாமரை மலர்கள் 1997 ம் வருடம் ஜூலை மாதத்தில் கொரிய நாட்டில் மலர்ந்திருக்க காணப்பட்டது. நீலதாமரை புத்தபிரான் அவதரித்து 3,024 வருடங்களுக்குப் பின்பு மலர்ந்திருப்பது நல்லசகுனம் என்று பெளத்த மதத்தினர் நம்புகின்றனர்.
சீஹொயா மரம்
பூமியில் இருக்கக்கூடிய தாவரங்களில் உயரத்திலும் பருமனிலும் மிகவும் பெரியது  சீஹொயா (Sequoia) எனும் மரம்தான். இத்தாவரத்தின் இனத்தினை ஒத்த ரெட்வூட் (Red Wood) எனும் மர வகையும் உலகின் மிக உயரமானதும் மிகவும் பிரமாண்டமானதுமாகக் காணப்படுகின்றன. இந்த மரங்கள் டைனஸோர் எனும் இராட்சத விலங்குகள் வாழ்ந்த காலத்திலிருந்து (200 மில்லியன் வருடங்கள் முன்பு) பூமியில் வாழும் தாவரமாக இருந்திருக்கின்றன என்பது ய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் முதல் தாவரவியல் ஆராய்ச்சியாளர் என அனைவரிடத்திலும் பல வினாக்களையும் ஆச்சரியங்களையும் உருவாக்கி இருக்கும் இம்மரம் குறித்த மேலும் சில தகவல்கள்:
சீஹொயா மரம்
  • சீஹொயா (Sequoia) மரங்கள் 180 மில்லியன் வருட காலமாக பூமியில் காணப்படுகின்றன.
  • இந்த மரம் அதிகபட்சமாக 310 அடி உயரம் வரை வளர்கின்றன.
  • இம்மரத்தின் அடிப்பகுதி விட்டம் 45 அட ிவரை காணப்படுகின்றது. இதனால் இம் மரத்தினைக் குடைந்து போக்குவரத்துக்கான பாதைகளை குகை போல் சில இடங்களில் உருவாக்கியுள்ளனர். பண்டைய காலத்தில் இம்மரத்தின் உட்பகுதியில் மனிதன் குடியிருப்பாகப் பயன்படுத்தியிருப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இம்மரம் விதை மூலமாகத் தனது இனவிருத்தியைச் செய்கின்றது. இந்த இராட்சத மரத்தின் இலைகளும் விதைகளும் கால் (1/4) அங்குலத்திலும் மிக சிறியதாக உள்ளது.
  • இம்மரத்தின் வயது 3,200 வருடங்களுக்கும் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • நல்ல முதிர்ச்சியான ஹொயாவின் வேர்கள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகின்றது.
  • முற்றிய மரத்தின் வெளிப்பட்டை மட்டும் இரண்டு அடியிலும் மேலான தடிப்புடையது.
  • இந்த மரங்கள் தற்போது வடக்கு அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த மரங்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் 135 மில்லியன் வருடம் முன்பு அதிக அளவில் காணப்பட்ட போதிலும் இன்று வடக்கு அமெரிக்காவில் மட்டுமே அதிகமாக ள்ளன.
-கணேஷ் அரவிந்த்.

அறிஞர் அண்ணாவின் படைப்புகள்

அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாத்துரை தனது பெயரில் மட்டுமில்லாது சௌமியன், பரதன், நக்கீரன், வீரன், குறும்போன், துரை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்போக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர் என்கிற பல புனைப் பெயர்களிலும் பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். அவருடைய படைப்புகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

புதினங்கள்
1. என் வாழ்வு (அ) வீங்கிய உதடு - 1940
2. கலிங்கராணி - 1942
3. ரங்கோன் ராதா - 1943
4. பார்வதி B.A - 1944
5. தசாவதாரம் 1945

நாடகங்கள்

1.சந்திரோதயம் - 1943
2. சிவாஜி கண்ட இந்து இராச்சியம் - 1945
3. வேலைக்காரி - 1946
4. ஓர் இரவு - 1946
5. நீதிதேவன் மயக்கம் - 1947
6. நல்லதம்பி - 1949
7. காதல்ஜோதி - 1953
8. சொர்க்கவாசல் - 1954
9. பாவையின் பயணம் - 1956
10. கண்ணாயிரத்தின் உலகம் - 1966
11. ரொட்டித்துண்டு - 1967
12. இன்ப ஒளி - 1968

குறும்புதினங்கள்

1. கபோதிபுரத்துக் காதல் - 1939
2. கோமளத்தின் கோபம் - 1939
3. சிங்களச் சீமாட்டி - 1939
4. குமாஸ்தாவின் பெண்தான் - 1942
5. குமரிக்கோட்டம் - 1946
6. பிடிசாம்பல் - 1947
7. மக்கள் தீர்ப்பு - 1950
8 திருமலை கண்ட திவ்யஜோதி - 1952
9. தஞ்சை வீழ்ச்சி - 1953
10. பவழ பஸ்பம் - 1954
11. சந்திரோதயம் - 1955
12. அரசாண்ட ஆண்டி - 1955
13. மக்கள்கரமும் மன்னன்சிரமும் - 1955
14. எட்டு நாட்கள் - 1955
15. புதிய பொலிவு - 1956
16. ஒளியூரில் ஓமகுண்டம் - 1956
17. கடைசிக் களவு - 1957
18. இதயம் இரும்பானால் - 1960
19. இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் - 1963
20. தழும்புகள் - 1965
21. வண்டிக்காரன் மகன் - 1966
22. இரும்பு முள்வேலி - 1966
23. அப்போதே சொன்னேன் - 1968

சிறுகதைகள்

1. கொக்கரக்கோ - 11.02.1934
2. பாமா விஜயம் - 18.06.1939
3. தங்கத்தின் காதலன் - 09.07.1939
4. வாலிப விருந்து - 10.09.1939
5. புரோகிதர் புலம்பல் - 10.09.1939
6. பிரார்த்தனை - 14.03.1943
7. வள்ளித் திருமணம் - 28.03.1943
8. கைக்கு எட்டியது - 04.04.1943
9. நாக்கிழந்தார் - 18.04.1943
10. சரோஜா ஆறணா - 25.04.1943
11. இவர்கள் குற்றவாளிகளா - 24.07.1943
12. சொல்லாதது - 21.10.1943
13. உண்ணாவிரதம் ஓர் தண்டனை - 21.10.1943
14. பள்ளியறையின் பரமசிவன் - 16.04.1944
15. ஜஸ்டிஸ் ஜானகி - 17.09.1944
16. கிருஷ்ணலீலா - 12.11.1944
17. 1938-40 ஓர் வசீகர வரலாறு - 14.01.1945
18. சிக்கலான பிரச்சினை - 21.01.1945
19. காமக் குரங்கு - 28.01.1945
20. -பிரசங்க பூனம் - 04.02.1945
21. மதுரைக்கு டிக்கட் இல்லை - 04.03.1945
22. தனபால செட்டியார் கம்பெனி - 03.06.1945
23. அன்ன தானம் - 10.06.1945
24. அவள் முடிவு - 04.11.1945
25. பொய் லாப நஷ்டம் - 18.11.1945
26. இரு பரம்பரைகள் - 06.01.1946
27. புலிநகம் - 20.01.1946
28. சுடுமூஞ்சி - 03.02.1946
29. வேலை போச்சு - 17.02.1946
30. சொல்வதை எழுதேண்டா - 29.02.1946
31. தேடியது வக்கீலை - 03.03.1946
32. ஜெபமாலை - 12.05.1946
33. பூபதியின் ஒரு நாள் அலுவல் - 07.07.1946
34. முகம் வெளுத்தது - 08.09.1946
35. நான் மனிதனானேன் - 17.11.1946
36. நெற்றியில் நெஞ்சில் - 17.11.1946
37. நாடோடி - 17.11.1946
38. ஆறுமுகம் - 17.11.1946
39. கைதிகள் - 12.01.1947
40. சூதாடி - 12.01.1947
41. தீட்டுத் துணி - 12.01.1947
42. கலி தீர்ந்த பெருமாள் - 12.01.1947
43. குற்றவாளி யார் - 02.03.1947
44. மாடி வீடு - 16.03.1947
45. பேய் ஓடிப் போச்சு - 31.08.1947
46. சோணாசலம் - 21.09.1947
47. கதிரவன் கண்ணீர் - 09.11.1947
48. சாது - 16.11.1947
49. இம்சைக்கு ஆளான இலட்சியவாதி (அ) கள்ளன் - 23.02.1947
50. பலாபலன் - 23.01.1948
51. ராஜபார்ட் ரங்கதுரை - 06.06.1948
52. இரும்பாரம் - 13.06.1948
53. மரத்துண்டு - 13.06.1948
54. இரு சாட்சிகள் -17.10.1948
-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்

திரையிசைப் பாடலில் இலக்கணம்.

திரையிசைப் பாடலில் இலக்கணம்.

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...
  • அடுக்குத்தொடர்:  ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
  • இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
  • சினைப்பெயர்:  பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
  • பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
  • இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
  • காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
  • குணம் அல்லது பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
  • தொழில் பெயர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
  • இறந்த காலப் பெயரெச்சம்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
  • எதிர்காலப் பெயரெச்சம்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
  • இடவாகுபெயர்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
  • எதிர்மறைப் பெயரெச்சம்: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
  • குறிப்புப் பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
  • வன்றொடர்க் குற்றியலுகரம்: முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
  • நெடிற்றொடர்க் குற்றியலுகரம்: நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
  • இரண்டாம் வேற்றுமை உருபு: நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
  • மூன்றாம் வேற்றுமை உருபு: உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
  • பெயர்ப் பயனிலை: காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்.
-முனைவர் மா. தியாகராஜன், சிங்கப்பூர்.

கண்பார்வை இல்லாத கவிஞர்

கண்பார்வை இல்லாத கவிஞர்
  • இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அரசமரத்தின் இலை சமாதானத்தின் சின்னமாகப் போற்றப்படுகிறது.
  • உலகில் அதிக நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியாதான். இங்கு 27, 948 கிலோ மீட்டர் நீளம் கடற்கரையுள்ளது.
  • திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம், லட்டு கிடையாது.
  • சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய 6,30,04,000 மைல்கள் பயணிக்கின்றன.
  • ஆங்கிலக் கவிஞர் மில்டன் கண் பார்வையற்றவர்.
  • உலகில் அதிக அளவில் முட்டையிடும் உயிரினம் கரையான்.
  • பாகிஸ்தான் முதல் இசுலாமியக் குடியரசு நாடு.
  • வாத்து அதிகாலையில்தான் முட்டையிடும்.
  • சைமன் பொலிவியர் என்பவர் 1928 ஆம் ஆண்டில் பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியா என மூன்று நாடுகளுக்கு குடியரசுத் தலைவராக இருந்தார்.
  • உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 இருக்கின்றன.
  • ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாளில் சராசரியாக 60, 000 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்குத் தேவையாக இருக்கிறது.
  • இந்தியாவில் முதலில் தமிழில் தான் “பைபிள்”  மொழிபெயர்க்கப்பட்டது.
  • உலகில் 2792 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
  • சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கம்.
  • ஆப்கானிஸ்தானில் ரயில் போக்குவரத்து இல்லை.
  • தபால்தலையில் நாட்டின் பெயரை வெளியிடாத நாடு இங்கிலாந்து.
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு உலகின் 17 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன.
  • நத்தையில் ஆண், பெண் பிரிவுகள் கிடையாது. இதற்குக் கொம்பில்தான் கண்கள் இருக்கின்றன.
  • பீர்பால், தான்சேன், தோடர்பால், மான்சிங், ஃபைஜி, அப்துல்ஃபாசல், ரஹீம்கானி-கானன், பகவான்தாஸ், மிர்சா அஜிஸ்கோகோ ஆகிய ஒன்பது பேர் அக்பர் அவையின் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனைச் சாப்பிடமாட்டார்கள்.
  • பிரேசில் நாட்டில் கிடைக்கும் தேன் கசக்கும்.
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இல்லாததால் அவரை அவருடைய பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராகவேக் கருதினார்கள்.
  • உலகிலேயே அதிகமான மசூதிகள் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில்தான்  இருக்கின்றன. இங்கு மொத்தம் 444 மசூதிகள் இருக்கின்றன.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

இந்தியாவை ஆண்ட முதல் முசுலீம் பெண்.General Knowledge

  • பரிசுச்சீட்டுக் குலுக்கல் முதன் முதலாக சீனாவில்தான் நடைபெற்றது.
  • கராத்தே பயிற்சிக்கான பள்ளி முதன் முதலாக ஜப்பானில் தோன்றியது.
  • டக்டக் என்றால் டேனிஷ் மொழியில் நன்றி என்று அர்த்தம்.
  • உலகில் அதிகமானவர்களை வாட்டும் நோய் பல்வலி.
  • புத்தமதக் கொள்கைகளைப் போதிக்கப் பயன்படுத்தப்பட்ட மொழி பாலி.
  • திருக்குறளில் 14,000 வார்த்தைகள் இருக்கின்றன.
  • சானாமோரினோ நாடு இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு.
  • முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு பெரு.
  • பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
  • பைபிள் முதன் முதலில் ஹூப்ரு மொழியில்தான் எழுதப்பட்டது.
  • இந்தியாவை முதலில் ஆண்ட முசுலீம் பெண் ரசியா பேகம் (1236-1240)
  • ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோமீட்டர்.
  • உலகில் பெண் வீராங்காணைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு நியூசிலாந்து.
  • ஸ்நூக்கர் எனும் விளையாட்டில் 22 பந்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு யானைக்கும் தினசரி 200 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்காகத் தேவைப்படுகிறது.
  • பூமியில் கடல்பகுதி 74.34 சதவிகிதமும், தரைப்பகுதி 25.63 சதவிகிதமும் உள்ளது.
  • பாம்பு முட்டைகள் இடப்பட்ட பின்னர் பெரிதாகும் தன்மையுடையது.
  • மெசபடோமியர்கள்தான் கண்ணாடிப் பாத்திரங்களை முதலில் செய்தவர்கள்.
  • உலகின் மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான். இதன் பரப்பு 580,000 சதுர மைல்கள்
  • பால்கன் எனும் பறவை மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய பறவையாகும்.
  • ஆஸ்ட்ரிச் எனும் பறவை ஒரே கூட்டில் 100 க்கும் அதிகமான முட்டைகளை இடும்.
  • உலகின் மிகப் பழமையான தேசியக் கொடி டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான்.
  • சிங்கப்பூரை சர் தாமஸ் ஸ்டான்ஃபோர்ட் ராஃப்ட்லஸ் என்பவர் 1819ல் நிறுவினார்.
  • புலி தாக்கப் பயப்படும் விலங்கு காட்டெருமை.
  • கழுத்தைத் திருப்பாமல் கண்ணை மட்டும் அசைக்கும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

குறுந்தொகைக் கதைகள்-3, மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ?

மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ?
-முனைவர். மா. தியாகராஜன்.
சேவல் கூவி எழுப்பியது. செங்கதிரோனும் கிழக்கு வானிலே விழித்து எழுந்தான் - கதிர்களை விரித்து எழுந்தான்.

அந்த வேளையில்
, அந்தச் சிறு கிராமத்தில், ஒவ்வொரு தெருமுனையிலும் மக்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள்.

“என்ன பொன்னா
, நம் திருமாறனுடைய மகள் தேன்மோழி தேனூர்த் தென்னன் மகன் திண்ணனுடன் போய் விட்டாளாமே? தெரியுமா?” என்றார் எழிலன்.

“ஆமாம்! ஆமாம்! தெரியும்! தெரியும்! போனது மட்டுமா? திருமணமும் முடிந்து விட்டதாம்!” என்றார் பொன்னன்.

“அப்படியா எங்கே?” எழிலன் கேட்டார்.

“தேனூரிலேயே - அதாவது பையனுடைய ஊரிலேயே!” இயம்பினார் எழிலன்.

இவ்வாறு எழிலனும் பொன்னனும் பேசிக்கொண்டு நின்றனர். தெருவில். இவர்கள் பேசிக் கொண்டதை ஒட்டி இருந்த வீட்டின் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தி தீட்டிய காதுகளுடன் கூர்மையாய்க் கேட்டாள்.
ஆம்! அவள் வேறு யாரும் அல்லள். தேன்மொழியின் தோழியே! - பெயர் கனிமொழி என்பதாகும்.

தெருவில் நடந்த உரையாடலைக் கேட்ட கனிமொழி உடல் எல்லாம் பதைபதைத்தாள்
. உள்ளம் எல்லாம் பதறினாள்.

“அம்மா! அம்மா!” என்று கதறிய வாயோடும்; உதறிய கையோடும்; வடிகின்ற வியர்வையோடும்; படபடவெனத் துடிக்கின்ற இதயத்தோடும் ஓடினாள் சமையலறை நோக்கி.

“என்னடி? என்னடி?” என்று கேட்டபடியே கமையலறையில் இருந்து விரைந்து வந்தாள் அவளுடைய தாய்.

ஆம்! அவள்தான் தேன்மொழியின் வளர்ப்புத் தாய் - செவிலித்தாய் - தேன்மொழியைப் பெற்ற தாய்க்கு - நற்றாய்க்கு தோழி ஆவாள் - செல்லம்மாள் என்பது அவள் பெயர்.

ஓடி வந்த தாயும் மகளும் இடையிலே நின்றனர்
. ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டனர்.

“என்னம்மா? என்ன செய்தி? ஏன் இப்படிப் பதறுகிறாய்?” என்று கேட்டாள் செல்லம்மாள்.

“அம்மா! எப்படியம்மா சொல்வேன் அதை? என்று கதறினாள்.

பதறும் மகளைப் பாசத்தோடு தழுவிக் கொண்டாள். சிறிது நேரம் உடலைத்தடவிக் கொடுத்தாள்
, முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

ஆறுதல் பெற்ற கனிமொழி தான் கேட்டதை எல்லாம் தன் தாயிடம் கூறி முடித்தாள். கூரிய கண்களிலிருந்து நீர் வடித்தாள்.
மகள் கூறிய செய்தி கேட்ட செல்லம்மாள் மகளைப் போலவே பதறினாள். பதைபதைத்தாள். நெஞ்சு படபடத்தாள். பின்னர் ஆறுதல் அடைந்தாள்.

இந்தச் செய்தியைத் தேன்மோழியின் தாய் நல்லம்மாளிடம் எப்படியும் தெரிவிக்க வேண்டும்! இது நம் கடமை அல்லவா! ஒரு வளர்ப்புத் தாயின் பொறுப்பு அல்லவா? ஐயோ! கடவுளே! எப்படி இதைச் சொல்வது? இதை அந்தத் தாய் தாங்கிக் கொள்வாளா? ஐயய்யோ! கடவுளே! ஏன் என்னைச் சோதிக்கின்றாய் இப்படி?” என்று பலவாறு புலம்பினாள்
. தவித்தாள்.

இறுதியில் இச்செய்தியை நற்றாய்க்கு நல்லம்மாளுக்குத் தெரிவிப்பது தன் கடமை. நற்றாய்க்கு அறத்தோடு நிற்பது தன் பொறுப்பு என்பதை உணர்ந்தாள்
. உடனெ புறப்பட்டாள். தேன்மோழியின் இல்லம் போய்ச் சேர்ந்தாள்.

ஏற்கனவே அதனை அறிந்து கொண்ட நற்றாய் நல்லம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். செல்லம்மாள் தன் உள்ளத்தில் தோய்ந்திருந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நல்லம்மாளுக்கு முன் சென்று நின்றாள்; அமைதியாய் அமர்ந்தாள்
. மெல்ல வாய் திறந்தாள். மெதுவாகப் பேசத் துவங்கினாள்.

“தோழி! நல்லம்மா! நடந்தது நடந்து
விட்டது. வருந்தாதே! எல்லாம் நன்மைக்கே! இப்படி நடந்து விட்டாலும் நம்முடைய பெண் மிக மிகப் புத்திசாலித்தனமாகவே நடந்து கொண்டிருக்கிறாள்.”

“எப்படி?”

“பையன் மிகவும் அறிவுள்ளவன்
, கழல்களிலேயே சிறந்த கழல்களை ஆராய்ந்து பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கால்களிலே அணிந்துள்ளவன். வலிமை வாய்ந்த வேல் ஒன்றைப் பற்றியுள்ள வீரம் செறிந்தவன். எனவே, நல்லவனைத் தான் தன் கணவனாக நம் பெண் தேர்ந்தெடுத்துள்ளாள். எனவே, பையன் எப்படிப்பட்டவனோ? எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று கவலை கொள்ளத் தேவையில்லை” என்று இயம்பினாள்.

ஐயோ! தோழி! அது எல்லாம் சரிதான்! இப்பொழுது அவள் எங்கு இருக்கின்றாளோ? எப்படி இருக்கின்றாளோ? என்றும் தெரியவில்லையே!”

“நல்லம்மா! வருந்தாதே! நல்லபடியாகவே எல்லாம் முடிந்திருக்கிறது!”

“என்ன சொல்கிறாய் செல்லம்மா?”
“ஆம்! திருமணம் முடிந்து விட்டது! மணப்பறை மங்களமாய் முழங்க, வரிசங்கு ஊதி ஒலிக்க, இரு மனம் கலந்த திருமணம் நடந்து முடிந்து விட்டது. கழல் அணிந்த கால்களை உடைய தலைவன் திண்ணன் என்பவன் வளையல் அணிந்த நம் மகளின் கையைப் பற்றி அழைத்துச் சென்று மணம் முடித்துக் கொண்டான்.

நாலூர் என்றோர் ஊர். அங்கு வாழும் மக்கள் கோசர்கள் ஆவர். அவர்கள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கும் ஊர்ப் பொது மன்றத்தில் கூடுவர். அவர்கள் வாய்ச் சொல் தவற மாட்டார்கள். ஒன்றே சொல்வர். அதுவும் நன்றே சொல்வர். அப்படிச் சொன்னதைச் சொன்னபடி அன்றே செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்களுடைய வாய்ச் சொல்லைப் போலவே திருமணமும் தவறாமல், நல்லபடியாய் முடிந்துள்ளது. எனவே அவள் வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது. கவலையை நீ விட்டு ஒழி! என்று கூறித் தேற்றினாள். 
“பறைபடப் பணிபலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொண்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையோடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே!”
(குறுந்தொகை: 15 - ஒளவை.)

குறுந்தொகைக் கதைகள்-2

காதல் கடக்கும் நிலம்
-முனைவர். மா. தியாகராஜன்.
அந்தக் கிராமத்தின் அகன்ற தெரு ஒன்றில் அழகாய் அமைந்த ஒரு வீடு.

அவ்வீட்டைச் சுற்றிலும் உயரே எழுப்பப்பட்ட மதிற்சுவர்! யாரும் எளிதில் உள்ளே நுழையவோ, உள்ளிருந்து வெளியே செல்லவோ முடியாது. அந்த அளவுக்குப் பாதுகாப்பாய் அமைந்த வீடு! அவ்வீட்டின் ஓர் அறை.

அங்கே அன்னம் கவலை கவ்விய முகத்துடன் - கண்ணீர் வடியும் கண்களுடன் தரையிலே அமர்ந்து கன்னத்தில் கையை வைத்தபடி, குனிந்தபடி இருந்தாள். அருகில் தோழியும் அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.

நேரம் சிறிது நகர்ந்தது! தோழி கண்ணி அன்னத்தின் அருகே மெதுவாய் நகர்ந்து வந்தாள்; தோழி கண்ணியைப் பார்த்தாள்; உடனே குபுகுபுவெனக் கண்ணீர் கொட்டினாள்; தோழியின் தோளில் சாய்ந்து கொண்டாள்; தேம்பித் தேம்பி அழுதாள்.

அது கண்ட தோழி, அன்னத்தைத் தாங்கிக் கொண்டு முதுகைத் தட்டிக் கொடுத்து, “அன்னமே! அழாதே! எல்லாம் விதியின் படியே நடக்கும். நம் கையில் எதுவும் இல்லை. வருந்தாதே! வருந்தி அழுவதால் வரப்போவது ஒன்றும் இல்லை. ஆனால் உன்னுடைய பண்புக்கும் உறுதிக்கும் நல்லதே நடக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் கொஞ்சம் பொறுமையாய் இரு!” என்று தேற்றினாள்.

கண்ணி! எப்படிப் என்னைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறாய்? எதைத்தான் நான் பொறுத்துக் கொள்வேன்?
பகல் பொழுதில் நம்முடைய தினைப்புனத்தில் தினந்தோறும் பாசத்திற்குரியவரைச் சந்தித்துப் பழகி வந்தேன் - இன்பமாக இருந்தது. அதைக் கண்டு கொண்ட நம் பெற்றோர் அதைத் தடுத்து விட்டார்கள். தினைப்புனத்திற்குச் செல்லக்கூடாது என்று தடை போட்டு விட்டார்கள்.
அதன் பிறகு இடையூறுகள் பலவற்றுக்கிடையே இரவு நேரங்களில் அவரைச் சந்தித்து இன்பம் கண்டு வந்தேன். அதையும் கண்டு கொண்ட பெற்றோர் அதற்கும் வேலியிட்டு விட்டார்கள் - வீட்டை விட்டு வெளியே செல்லவே கூடாது என்று தடை ஆணை பிறப்பித்து விட்டார்கள்.
அவரைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டனவே! என்னடி கண்ணி நான் செய்வேன்? எப்படியடி தோழி இத்துன்பத்தை நான் பொறுத்துக் கொள்வது? அவரைச் சந்திக்காமல் என்னால் இருக்கவே முடியவில்லை! வாழவே பிடிக்கவில்லை! இவ்வேதனையை எப்படித் தாங்கிக் கொள்வது?” என்று கூறிப் புலம்பியபடியே வாய்விட்டு அழுதாள்; முகத்தைத் தோழியின் தோளில் புதைத்தாள்; விம்மி விம்மி அரற்றினாள்.
சிறிது நேரம் சென்றது. தீடீரென்று நிமிர்ந்தாள்; கண்ணீரை முந்தானையால் துடைத்தாள்; தோழியைப் பார்த்தாள்:
“ஏண்டி கண்ணே! எனக்கொரு திட்டம் தோன்றுகிறது. அதன்படி செய்தால் என்ன?” என்றாள்.
“என்ன திட்டம்? என்ன அது? சொல்!” என்றாள் தோழி.
அன்னம் சுற்றும் முற்றும் பார்த்தாள்; கண்ணியின் காதருகே சென்றாள்; மெதுவாகப் பேசினாள்:
“நானும் அவரும் யாருக்கும் தெரியாமல் இந்த ஊரை விட்டே போய்விட்டால் என்ன? அப்பொழுது யாரும் தடுக்க முடியாது அல்லவா? எப்படி என் திட்டம்?” என்றாள்.
“என்னம்மா சிறு பிள்ளை போல் பேசுகிறாய்? காவலோ கடுமை! இங்கிருந்து எப்படித் தப்பித்துச் செல்வாய்? ஆபத்தான திட்டமாய் இருக்கிறதே! அதுவெல்லாம் வேண்டாம் அம்மா” என்றாள் கண்ணி.
“நான் எப்படியாவது தப்பி விடுகிறேன்! அவருடைய எண்ணத்தை மட்டும் நீ தெரிந்து வா முதலில். அவர் சரியென்று ஒப்புக் கொண்டால் நான் எப்படியும் தப்பி வெளியில் வந்துவிடுவேன். நீ போய் அவர் கருத்தைத் தெரிந்து வா!” என்று விரைவுபடுத்தினாள்.
கண்ணியும் வேறு வழியின்றி, அஞ்சி நடுங்கியபடியே எழுந்து வீட்டிற்கு வெளியே வந்தாள்.
கண்ணி நேரே வழக்கமாகப் பொன்னன் காத்திருக்கும் இடத்திற்கு வந்தாள்.
அங்கே பொன்னனும் அல்லல் உற்று, ஆற்றாது, அழுத கண்ணீருடன் வீற்றிருந்தான். கண்ணியைக் கண்டவுடன் ஏதேனும் நல்ல செய்தி கொண்டு வந்திருப்பாள் என்ற ஆவலில் விரைந்து எழுந்தான்.
“என்ன கண்ணி? அன்னம் எப்படி இருக்கிறாள்? என்ன சொன்னாள்? சொல்!” என்று வேகமாய்க் கேட்டான்.
“தலைவா! இனிமேலும் காவலைப் பொறுத்துக் கொள்ள முடியாது - இனியும் தனிமையைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று புலம்பிக் கொண்டே இருக்கின்றாள் அன்னம். எனவே, உங்களுடன் உடன்போக்கு மேற்கொள்ள விரும்புகின்றாள், தங்களுடன் சேர்ந்து வேறு ஊருக்குச் சென்றுவிடக் கருதுகின்றாள். தங்கள் எண்ணத்தை அறிந்து வரச் சொன்னாள்” என்றாள் கண்ணி.
அதைக்கேட்ட பொன்னன் அகம் மகிழ்ந்தான்:
“அப்படியா! அன்னம் சொன்னாளா? நல்லது! நல்லது! நன்று! மகிழ்ச்சி! அப்படியே செய்வோம்!” என்று வேகமாக அகம் விஞ்சிய மகிழ்ச்சியோடும் கூறினான்; குதித்தான் குதூகலத்தில்.
உடனே......?
திடீரென்று, எதையோ எண்ணிப் பார்த்தவன் போல், “ஆனால்...........!” என்று இழுத்துப் பேசினான்.
“என்ன... ஆனால்?” என்று கேட்டாள் கண்ணி.
“ஒன்றும் இல்லை! அப்படிப் போகும் பொழுது கடந்து போக வேண்டிய வழியைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அது தான் தயக்கம்!”
“என்ன? வழி எப்படிப்பட்டது?” - கண்ணி.
“பாலை நிலம்!” - பொன்னன்.
“எல்லார்க்கும் தெரிந்தது தானே!” - கண்ணி.
“எல்லார்க்கும் தெரிந்தது தான்! ஆனால் அதனைக் கடப்பது கடுமை அல்லவா?” - பொன்னன்.
“எப்படிக் கடுமையானது” - கண்ணி
“பாதையோ கடுமையானது; பயணமோ கொடுமையானது; வீசும் வெப்பமோ எரித்து விடுவது போல் இருக்கும்; தாகத்தைத் தணித்துக் கொள்ள தண்ணீரே கிடைக்காதே; நின்று இளைப்பாற நிழல் கூடக் கிடையாதே. அவ்வளவு கொடுமையானது. தலைவியோ மென்மையானவள். எப்படி அதைத் தாங்கிக் கொள்வாள்?” என்று வருத்தத்துடனும் அச்சத்துடனும் சொன்னான்.
தோழி, “அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம்! அன்னம் கொண்டுள்ள உறுதிப்பாட்டினால் அவற்றை எல்லாம் தாங்கிக் கொள்வாள்.
உன்னோடு அவள் வந்தாலே பாலையும் அவளுக்குச் சோலையாகத் தோன்றும்.
குவளை மலர் நீரிலே வாழ்கிறது. ஆனால் அதன்மீது வெப்பம் மிகுந்த மேல் காற்று வீசுகிறது. அதனால் அந்த மலர் கருகியா விடுகிறது?
அவள் குவளை மலரைப் போன்றவள். நீரோ நீரைப் போன்றவர்; உங்களுடைய அன்பு என்னும் நீர் அவளுக்குக் கிடைத்து விட்டால் பாலை என்னும் வெளிவெப்பம் அவளை ஒன்றும் செய்யாது. அதை அவள் தாங்கிக் கொள்வாள். நீங்கள் செல்லப் போகும் பாலை நிலம் இடையில் தோன்றிய நிலம் - முதுவேனில் காலத்தில் வீசிய வெப்பத்தைத் தாங்க முடியாமல் முல்லை நிலம் பாலையாக மாறி உள்ளது. அந்நிலம் முல்லையாக இருந்த போது அங்கு முளைத்துக் கிளைத்துத் தழைத்துக் கிடந்த மூங்கில் மரங்கள் இப்பொழுது பசிய கிளைகளை இழந்து விட்டன; வற்றி உலர்ந்து போய் விட்டன; வரிசை வரிசையாய் நிற்கின்றன - கவனைப் போன்ற பூட்டுங்கயிற்றால பூட்டப்பட்ட எருதுகளைக் கொண்ட உப்பு வணிகர் வண்டிகளில் உள்ள குத்துக் கோல்களைப் போல் வரிசை வரிசையாய் நிற்கின்றன. வேறு உணவு எதுவும் அங்குக் கிடைக்காமையால் உலர்ந்து போன அந்த மூங்கில் கிளைகளையாவது ஒடித்து உண்ணலாமே என்ற ஆவலில் யானை ஒன்று வருகிறது.

ஆனால், அதை ஒடிக்கக்
கூட அதற்கு வலிமை இல்லை. காரணம், நீண்ட நாள்களாக அப்பாலையில் உணவு எதுவும் கிடைக்காமையால் உடல் பலம் குன்றிப் போய்விட்டது - உலர்ந்த கிளைகளை எளிதாக உடைக்கலாம். ஆனால், அந்த யானையால் அதைக்கூட ஒடிக்க முடியவில்லை. அந்த அளவுக்குப் பல நாள் பட்டினி கிடந்தமையால் பலம் இழந்து நிற்கிறது. அவ்வளவு கொடுமையானதுதான் அந்தப் பாதை - அந்தப் பாலை. அதை நாங்கள் நன்கு அறிவோம். ஆனால் அந்தப் பாலையும், உன்னுடன் தலைவி வருவதால் அவளுக்கு இனிமையாகவே இருக்கும் - கொடுமையின் கடுமை கடுகளவும் அவளுக்குத் தோன்றாது.

உன்னுடைய பிரிவுதான் அவளுக்குப் பெருந்துன்பம். உன்னுடைய பிரிவைக் காட்டிலும் அப்பெருங்காடு சுடுமோ? சுடாது! எனவே, நீ அதைப் பற்றி நினைக்க வேண்டியது இல்லை
. நினைத்து வருந்த வேண்டியது இல்லை. அவற்றை எல்லாம் அவள் தாங்கிக் கொள்வாள்.

ஆகவே, உடனே அவளை உடன் அழைத்துக் கொண்டு எங்கேயாவது சென்று விடு! அதற்கான முயற்சியை உடனே மேற்கொள்வாயாக!” என்று தோழி வற்புறுத்தி, வலியுறுத்திக் கூறினாள்.
“நீர்கால் யாத்த நிரை இதழ்க்குவளை
கொடை ஒற்றினும் வாடா தாகும்;
கவணை அன்னபூட்டும் பொழுது அசா ஆ
உமன் எருத்து ஒழுகைத் தோடு
நிரைத்தன்ன
முளைசினை பிளக்கும் முன்பு
டூன்மையின், யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே”
(குறுந்தொகைப்பாடல்)

குறுந்தொகைக் கதைகள்,அதுவரை பொறுத்திரு

அதுவரை பொறுத்திரு
-முனைவர். மா. தியாகராஜன்.
செல்வம் கொழிக்கும் சிங்கப்பூர்! அழகு செழிக்கும் எழில் நகர்! உலக மக்களின் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொள்ளும் ஒய்யாரப் பேரூர்! வானத்து மேகங்களை முட்டி முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அடுக்கு மாடி வீடுகளின் அழகே அழகு தான்! அந்த அழகுக்கு அவனியில் எந்த அழகும் இணை இல்லைதான்!
அத்தகு அடுக்கு மாடி வீடுகளின் அணி வகுப்பு நடைபெறும் கிம் மோ சாலை!
இரண்டு அடுக்கு மாடி வீடுகள் - எதிர் எதிரே எழில் பொழிய நின்றன.
ஒன்றில், ஒரு மாடியில் கவிதா குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
எதிர் மாடி வீட்டில், கண்ணன் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
கவிதாவும் கண்ணனும் சிட்டி ஹாலில் உள்ள ஒரு கல்லூரியில் பயின்று வந்தனர்.
ஆதலால், வீட்டை விட்டுப் புறப்பட்டுக் கல்லூரிக்குச் செல்லும் நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டு இருவருமே ஒரே நேரத்தில் புறப்படுவது வழக்கம்! இது யதேச்சையாக நடப்பது.
ஒரு நாள்
கவிதா தன் மாடியை விட்டு இறங்கிக் கீழே வந்தாள்! கண்ணனும் அதே நேரத்தில் வந்தான்.
அவரவர் தனித்தனியே சாலையின் இரு பக்கங்களிலும் விரைந்து நடந்தனர்.

எம்.ஆர்.டி. தொடர் வண்டியை நோக்கி நடந்தனர்.
இடையே ஒரு சாலை!

வண்டிகள் தேனீக்களைப் போல் வரிசை வரிசையாக, விரைந்து விரைந்து சென்று கொண்டிருந்தன.

அவை கடந்து செல்லும் வரை இருவரும் நடைபாதையில் நின்றனர்.

சிவப்பு விளக்கு எரிந்தது.

குறுக்கே சென்ற வண்டிகளின் ஓட்டம் நின்றது.

அந்தச் சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டு இருவரும் வேக வேகமாகச் சாலையைக் கடந்து எதிர் நடைபாதைக்குச் சென்று சேர்ந்தனர்; எம்.ஆர்.டி. வண்டி நிலையத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர்.
கண்ணன் முன்னே சென்றான்; கவிதா பின்னே சென்றாள்.
அடர்ந்த மரங்கள் செறிந்த பாதையைக் கடந்தன்ர்; படர்ந்த பசும்புல் தரையைக் கடந்தனர்; நிலையத்திற்குள் நுழைந்தனர்.
நகர்ந்து கொண்டிருந்த மின் படிகளில் நின்றனர்; படிகள் நகர்ந்து ஏறிக் கொண்டிருந்தன.

கண்ணன் தற்செயலாக கீழே திரும்பிப் பார்த்தான்; கவிதாவும் தற்செயலாக மேலே நிமிர்ந்து பார்த்தாள்.

இருவர் கண்களும் சந்தித்தன; இதழ்கள் புன்னகையால் மொழி பேசின. முதல் சந்திப்பாகையால் அறிமுகத்தோடு நிறுத்திக் கொண்டனர்.
மேலே, சென்று சேர்ந்தனர்; வண்டியும் வந்தது!
இருவரும் விரைந்து வண்டிக்குள் நுழைந்தனர், நுழைந்த வேகத்தில் கண்ணனின் கை மீது கவிதாவின் கைபட்டுவிட்டது. ஆயிரம் காந்த ஊசிகள் சேர்ந்தால் எவ்வளவு காந்த சக்தியைப் பெறுமோ அந்தச் சக்தியை இருவர் மனங்களும் பெற்றன.

வண்டி ஒவ்வொரு நிறுத்தமாக நின்று நின்று சென்றது. இடையிடையே ஒருவரை ஒருவர் சிறுசிறு பார்வையால் பார்த்துக் கொண்டனர்; குறுநகை புரிந்து கொண்டனர்.
சிட்டி ஹால் நிறுத்தம்!
இருவரும் இறங்கினர்!

முன்பு முன் பின்னாய் நடந்து சென்றவர்கள் தற்பொழுது ஒன்றாக நடந்து சென்றனர்.

“உம்........! நீங்க எந்தக் கல்லூரியில் படிக்கிறீங்க?”

தான் படிக்கும் தனியார் கல்லூரி ஒன்றின் பெயரை கவிதா சொன்னாள்.

“நீங்க........?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“நானும் அங்க தான் படிக்கிறேன்!” என்றான் அவன்.

இப்படிச் சிறு சிறு வினாக்களைக் கேட்டு, விடைகளைப் பரிமாறிக் கொண்டே சென்றனர் - பெயர்கள், பெற்றோர்களைப் பற்றிய விவரங்கள், படிப்பு பற்றிய செய்திகள் போன்றவற்றைப் பரிமாறிக் கொண்டே சென்றனர்.

கல்லூரி வாயில்!

இருவரும் பிரிந்தனர் - பிரிய முடியாது பிரிந்தனர் - அவரவர் நண்பர்கள் அங்கங்கே நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் பிரிய வேண்டிய கட்டாயத்தால் பிரிந்தனர்.
மாலை! கல்லூரி முடிந்தது.
எம்.ஆர்.டி வாயில் வந்தனர்! இருவரும் இணைந்தனர்; தொடர் வண்டி ஏறி “போனா விஸ்டா” நிறுத்தம் வந்தனர்; பழைய பாதையில் வந்தனர்.
புல்தரை, மரச்சோலை, ஓய்வு நாற்காலிகள்!
“கவிதா! இங்குக் கொஞ்சம் இளைப்பாறிச் செல்லலாமா?” கண்ணனின் கோரிக்கை இது.
கவிதாவின் ஒப்புதலும் கிடைத்தது!
இருவரும் ஒரு பக்கமாய்ப் புல் தரையில் அமர்ந்தனர்; உலகையே மறந்தனர்.
இது அன்றாட நிகழ்ச்சியாய் மாறியது.
இந்தச் செய்தி மெல்ல மெல்ல எல்லாருக்கும் பரவத் தொடங்கியது.
மூன்றாண்டுகள் முடிந்து விட்டன!
“ஊரார் எல்லாரும் ஒரு விதமாய்ப் பேசுகிறார்களே! இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளத் துணியாமல் இருக்கின்றாரே!” என்று ஏக்கத்தால் இதயத்தில் சோகத்தைச் சுந்தவளாய் கலையிழந்த முகத்தோடு ஒரு நாள் நின்று கொண்டிருந்தாள் கவிதா. அது சமயம் அவளுடைய தோழி அல்லி மலர் அங்கே வந்தாள். அவள் நிலை உணர்ந்தாள்;
“கவிதா! உன் ஏக்கம் புரிகிறது! வீணாக நீ கவலைப்பட்டு உடலைக் கெடுத்துக் கொள்ளாதே! எல்லாம் நல்லபடியாகவே நடந்து முடியும்! அதோ பார்! நீண்டுயர்ந்த பனைமரங்கள்! அம்மரங்களின் அடிப்பகுதியில் கோடைக் காற்றானது அரும்பங்கொடி படர்ந்த மணற் குவியலைத் தூக்கி வந்து பரப்புகிறது! அம்மணல் மரத்தின் அடிப்பகுதியை மூடுகிறது. அதனால் அம்மரம் குறுகிக் குட்டையானது போல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட இடத்துக்குச் சொந்தக்காரன் நம் தலைவனாகிய கண்ணன். அவனைப் பற்றி நம் தாய்க்கும் தெரியும். உன் மனக்கவலைக்கும், உடல் மாற்றத்துக்கும் காரணம் தெய்வமாக இருக்கலாமோ என்று நினைத்த நம் தாய் வெறியாட வேலனை அழைத்து வந்து வெறியாடச் செய்த போது இதற்கெல்லாம் காரணம் கண்ணன் மீது நீ கொண்ட காதலே என்பதை நம் தாயும் அறிவாள்.
நம் உறவினர்க்கும் தாய் உண்மையைச் சொல்லி விட்டாள். எனவே பழி பற்றியோ இழிவு பற்றியோ நீ கவலைப்பட வேண்டாம்.
அவர் விரைவில் வருவார்; பெற்றோருடன் வருவார்; மணம் பேசுவார்; மணம் செய்து கொள்வார். அது வரைக்கும் பொறுத்திரு! என்று கூறித் தேற்றினாள் - ஆற்றினாள்.
“அதுவரல் அன்மையோ அரிதே; அவன்மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்குஆ கின்ற தோழி கானல்
ஆடுஆரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும்பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி, யாய் அறிந் தனளே” (குறுந்: 248)

குறத்தி மலைக் கள்வன்

குறத்தி மலைக் கள்வன்
-முனைவர். மா. தியாகராஜன்.
அது ஒரு மலைக் கிராமம்! சுற்றிலும் மலைகள்; அவற்றின் முகடுகளைச் சூழ்ந்து படரும் மேகக் கூட்டங்கள்; வளைந்து நெளிந்து ஓடும் வற்றாத ஆறுகள்; மணம் பரப்பும் மலர்கள் இனம் இனமாய்ப் பூத்துக் குலுங்கின்றன; வண்டினங்கள் அவற்றை வட்டமிட்டுப் பாடும் ரீங்கார ஓலி, வானத்தில் பறந்து திரியும் வகை வகையான பறவைகளின் பாட்டு ஒலி ஆகியன எங்கும் எதிரொலித்துக் கொண்டுள்ள வளமான கிராமம்! இயற்கைத் தேவதை இன்புற்று எழுந்தருளியிருக்கும் இனிய ஊர்!
மலர்விழி! அந்த மங்கையின் பெயர்!

அவள் ஒரு நாள் தினைப் புனம் காக்கச் சென்றாள் - உடன் தோழி தேன்மொழியும் சென்றாள். தினைகளைக் கொத்தித் தின்னத் திரண்டு வரும் குருவி இனங்களைக் கவண் மூலம் கல்லெறிந்து ஓட்டிப் புனத்தைக் காத்து நினறாள்.

அப்பொழுது அப்பக்கமாகக் காளை ஒருவன் வந்தான் - கண்ணன் அவன் பெயர். கன்னியைக் கண்டான் - நின்றான் - சிறிது நேரம் சேயிழையின் செயலைப் பார்த்து நின்றான். அதே சமயம் அவளும் அப்பக்கமாகத் திரும்பினாள் - காளையைக் கண்டாள். இருவரும் பார்த்தனர் - ஒருவர் கண்களை மற்றவர் கண்கள் கவ்வின - இதயங்கள் கலந்தன.
அது முதல் இருவருடைய சந்திப்புக்கும் அந்தத் தினைப் புனம் களம் ஆயிற்று.
பகல் எல்லாம் சந்திப்பு! இரவெல்லாம் பெருமூச்சு! இப்படியே நாள்கள் பல கழிந்தன!
ஒரு நாள்!
புனத்தை ஒட்டிப் புனல் ஓடை ஒன்று! மலர்விழியின் மடியிலே கண்ணன் - கண்ணனின் அணைப்பிலே மலர்விழி! - தினைப் புனமோ குருவிக் கூட்டங்களின் வேட்டைக்காடு!
இந்தச் சமயத்தில் தினைப்புனத்தைப் பார்க்கத் தந்தை அங்கே வந்தார்! தந்தை வருவதைத் தோழி குறிப்பாள் தெரிவித்தாள். மலர்விழியும் அதை உணர்ந்து ஓடையிலிருந்து ஓடோடி வந்தாள்!
ஆனால் அவளுடைய கலைந்த கூந்தல், கலைந்த ஆடை அகியவற்றைக் கண்டு ஓரளவு தந்தை ஊகித்துக் கொண்டார்.
மறுநாளிலிருந்து புனம் காக்கப் போக வேண்டாம் என்று தந்தை கட்டளையிட்டார். இதனால் பகல் பொழுதில் நடைபெற்ற சந்திப்பு நடைபெற்ற சந்திப்பு தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே தோழி தேன்மொழியின் துணையுடன் இரவு நேரங்களில் சந்திப்பு நடைபெற்றது.

மலர்விழியின் வீட்டிற்குப் பின்புறம் ஒரு தோட்டம்! அங்கே மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.

ஊரெல்லாம் உறங்கிய பிறகு கண்ணன் அங்கே மறைந்து மறைந்து வருவான். வீடெல்லாம் உறங்கிக் கிடக்க விழித்திருப்பாள் மலர்விழி மட்டும்.
தோட்டத்திற்குள்ளே வந்த கண்ணன் கல் ஒன்றை எடுப்பான் - மரம் ஒன்றின் மீது எறிவான் - கல்பட்ட உடனே கண் மூடி உறங்கிக் கொண்டிருக்கும் பறவையினங்கள் விழித்துக்கொள்ளும்; ஏதோ ஆபத்து என்று எண்ணி “கீச்கீச்” என்று அச்சத்தால் குரல் எழுப்பும். குருவிகளின் குரல் கேட்டு மலர்விழி, கண்ணன் அங்கே வந்துள்ளதை உணர்ந்து, மெல்ல எழுந்து, மெதுவாகக் கதவைத் திறந்து, பையவே அடி வைத்து நடந்து தோட்டத்திற்குச் செல்வாள். அங்கே அவர்கள் சந்திப்பு! விடியும் வரை சந்திப்பு! தோழி துணை புரிவாள்!
ஒரு நாள்!

கண்ணன் வந்தான் - கல்லை எடுத்தான் - கிணற்றிலே எறிந்தான் சப்தம்! கேட்டாள் மலர்விழி; கிளர்ந்து; எழுந்தாள்; வந்தாள்; கண்ணனின் அணைப்பிலே சாய்ந்தாள்.
அப்பொழுது...?
தற்செயலாக விழித்தார் தந்தை! கிணற்றடியில் சப்தம் கேட்டு வெளியே வந்தார்! தந்தை வெளியே வருவதைத் தோழி தெரிவிக்க, விரைந்து மலர்விழி வீட்டிற்குள்ளே வந்துவிட்டாள் - தந்தையிடம் ஏதோ சாக்குச் சொல்லிவிட்டு உள்ளே வந்துவிட்டாள்.
ஆனால், தந்தையோ அவள் நிலை கண்டு உண்மையை உணர்ந்து கொண்டார். மலர்விழி வீட்டை விட்டும் வெளியே செல்லக்கூடாது என்று கட்டளை பிறப்பித்தார் - கட்டுப்பாடு விதித்தார் - வீட்டிற்குள்ளேயே வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்தார். அதனால் இரவுச் சந்திப்பும் தடுக்கப்பட்டு விட்டது - தலைவி இல்லத்திற்குள்ளே முடக்கி வைக்கப்பட்டாள் இற்செறிக்கப்பட்டாள்.

பகலிலும் இரவிலும் சந்திக்க முடியாதபடி தடுக்கப்பட்டாள். அதனால் துயரத்திலே தோய்ந்தாள்; உண்பது கிடையாது - உறங்குவது கிடையாது. அதன் காரணமாய் நாளுக்கு நாள் உடல் மெலிந்தாள்.

மலர்விழியின் மேனி மெலிவைக் கண்டனர் பெற்றோர். அதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? என்று பலவாறு சிந்தித்தனர்.

நோய் என்று கருதி, தேர்ந்த மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் செய்தனர். ஆனால் குணமாகவில்லை.

சாமி இறங்கி ஆடும் அருளாளனை - வெறியாடும் வேலனை அழைத்தார்கள்; வெறியாடச் செய்தார்கள். வெறியாடிய வேலனும் பல்வகைக் காரணங்களையும் கூறினான். அவன் சொன்னபடி அனைத்தையும் செய்தனர். பலன் தான் ஒன்றும் இல்லை.

இறுதியாகக் கட்டுவச்சி என்பவளை அழைத்தனர். கட்டுவச்சி என்பவள் மலையில் வாழும் குறத்தி ஆவாள் - குறி சொல்பவள் - குறி பார்த்துப் பலன் சொல்பவள் ஆவாள்.

கட்டுவச்சி வந்தாள் - அமர்ந்தாள். அவள் முன்னே மலர்விழியை அழைத்து வந்து அமர்ந்தனர்.

“அம்மா! நன்றாய்க் குறி பார்த்துச் சொல்ல வேண்டும்! இவள் நோய்க்கான காரணம் என்ன என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும்!” என்று கேட்டனர் பெற்றோர்.

இதைப் பார்த்த தோழி தேன்மொழி பரிதாபத்தோடு அவர்களை. உண்மை நோய் புரியாமல் இப்படி மயங்குகிறார்களே என இரக்கத்தோடு பார்த்தாள் - ஏதேதோ செய்கிறார்களே என்று கருணையோடு பார்த்தாள்.

கட்டுவச்சியை நோக்கிய பெற்றோர்கள் தொடர்ந்து “அம்மா! அவளுடைய எதிர்காலத்தைப் பற்றியும் நன்றாகச் சொல்! அவளுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்! மாப்பிள்ளை எப்படி இருப்பான்? நாங்கள் நினைக்கும் பையனுக்கு மணம் முடித்துக் கொடுக்கலாமா?” என்று கேட்டனர்.

இதைக் கேட்ட தோழி சற்றுப் பதறினாள். மலர்விழியை வேறொரு மாப்பிள்ளைக்கு மணம் முடித்துக் கொடுக்க தீர்மானித்து விட்டார்களே என்று மயங்கினாள் - ஒருவேளை மலர்விழியினுடைய காதல் தோல்வி அடைந்துவிடுமோ என்று கலங்கினாள் - “இனியும் காலம் தாழ்த்துதல் கூடாது; உண்மையை உணர்த்திவிட வேண்டும்!” என்று முடிவு செய்தாள். அடுத்த நொடி..? எப்படி உணர்த்துவது? என்று அறியாது திகைத்தாள். தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள்.
கட்டுவச்சியைப் பார்த்தாள் - அவளோ முதியவள்!
அவளுடைய கூந்தலைப் பார்த்தாள் - அடர்ந்து இருந்தது; அலை அலையாய்ச் சுருண்டு கிடந்தது; வெண்மையான சங்குகளைக் கோர்த்தால் எப்படி இருக்குமோ அதைப்போல் நரைத்து இருந்தது.
அவள் குறி சொல்லத் தொடங்கினாள். ஒரு கட்டுவச்சி குறி சொல்லத் தொடங்கும் முன் அவளுடைய மலையின் பெயரைக் கூறி, அதன் வளத்தைப் பாடி முடித்த பின்னரே குறி சொல்வது வழக்கம்.

அதைப் போலவே, இங்கு குறி சொல்ல அந்தக் கட்டுவச்சியும் தன் மலையின் பெயரைச் சொன்னாள்.

தோழி அப்பெயரைக் கேட்டாள்; துள்ளிக் குதித்து எழுந்தாள்; கட்டுவச்சியைக் களிப்புடன் பார்த்தாள்; முகம் மலர்ந்தாள்; புன்னகை பூத்தாள்.

“குறத்தி மகளே! குறத்தி மகளே! குறி சொல்லும் குறத்தி மகளே! குறவர் குலக் கொழுந்தே! உன் குலத் தெய்வங்களை உரக்கக் கூவி அழைக்கும் குறத்தியே! அவர்களிடம் கேட்டுக் குறி சொல்லும் அகவன் மகளே! குறி கேட்பவர்களின் குலதெய்வங்களையும் கூவி அழைத்துக் குறி சொல்லும் அகவன் மகளே! அகவன் மகளே!
கூறு! இன்னொரு முறை கூறு! இப்பொழுது கூறினாயே ஒரு மலையின் பெயரை - அந்தப் பெயரை இன்றும் ஒரு முறை கூறு! அப்பெயரைக் கேட்கக் கேட்க இதயம் எல்லாம் இனிக்கிறதே! எங்கே கூறு! அப்பெயர் எனக்கு இன்பத்தைத் தருகிறது. என் தலைவியாகிய இவளுக்கும் இனிமையைத் தருகிறது. எனவே, அந்த இனிய மலையின் பெயரை இன்னும் ஒரு முறை கூறு! கூறு! கூறிக் கொண்டே இரு!” என்று மகிழ்ச்சி வெள்ளம் பொங்கிக் கரை புரண்டு ஓடக் கூறிக் குதித்தாள் களிப்பால்.

தோழியின் உரையையும் உவகையையும் பெற்றோரும் சுற்றி இருந்த மற்றோரும் புரிந்து கொண்டனர் - தலைவியின் நோய்க்கான காரணத்தைத் தெரிந்து கொண்டனர் - குறத்தி குறித்த குன்றத்தில் வாழும் காளை ஒருவனே அவள் காதலன் என்பதை உணர்ந்து கொண்டனர் - அக்காதலே மலர்விழியின் நோய்க்குக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டனர். 
“அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே!
இன்றும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!”
 (குறுந்தொகை 23 - ஒளவை)

Prokon

Prokon

Primavera Project Planner

Primavera Project Planner

Facebook photo downloader - Pick&Zip

Facebook photo downloader - Pick&Zip