Search This Blog

Monday, August 1, 2011

மிகப்பெரிய விண்வெளி கல் சீனாவில் கண்டுபிடிப்பு



பூமியில் சில தருணங்களில் விண்வெளி கற்கள் விழுவது உண்டு. அவ்வாறு விழுந்த அதிசய விண்வெளி கல் ஒன்றை சீன நிபுணர்கள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர்.
சீனா மற்றும மங்கோலியாவை பிரிக்கும் அல்டாய் மலைப்பகுதியில் இந்த விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விண்வெளி கல் 2.2 மீற்றர் நீளமும், 1.25 மீற்றர் உயரமும் கொண்டதாக உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய 3வது விண்கல்லாக இந்த கல் உள்ளது. இந்த விண்வெளி கல் நமது பூமியில் உள்ள கல்லை விட கடினமாக இருந்தது. அட்லாய் மலைப்பிராந்தியத்தின் 10 ஆயிரம் அடி உயரத்தில் விண்வெளிக் கல் இருந்தது. இந்த விண்வெளிக் கல் மேற்பரப்பு, கறுப்பு, சிவப்பு என பல வண்ணங்களை பிரதிபலித்தது.
இந்த விண்வெளிக் கல்லை எதிர்பாராத விதமாக தான் கண்டுபிடித்தோம் என ஷாங்போலின் தெரிவித்தார். இவர் பெய்ஜிங் கண்காணிப்பக விண்வெளி கல் ஆய்வு நிபுணர் ஆவார்.
விண்வெளிக் கல் இரும்பு சார்ந்ததாக இருக்கும் என ஷாங்போலின் தெரிவித்தார். சூரியக் குடும்பம் உருவாகும் தருணத்தில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி கிரகங்கள் சேதம் அடைந்து இந்த கற்கள் உருவாகி இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
1808 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிலும், 1923 ஆம் ஆண்டு நமீபியாவிலும் மிகப் பெரிய விண்வெளிக் கல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இஞ்சி, பூண்டின் மருத்துவ குணங்கள்



இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.
வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்:
உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது. நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லைகள் நீங்கும். பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோல் உரிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட்டால் காது வலி நீங்கும்
பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பூனைகளால் மனிதர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படலாம்: விஞ்ஞானிகள் தகவல்



பூனையின் வயிற்றில் வளரும் ஓர் ஒட்டுண்ணியானது மனிதர்களுக்கு மூளைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த ஒட்டுண்ணி மோசமான நோயை மனிதர்களுக்கு ஏற்படுத்தலாம் என்ற எச்சரிக்கையை விஞ்ஞானிகள் விடுத்துள்ளார்கள். பிரித்தானியாவில் வருடத்திற்கு 3500 இறப்புக்கள் இந்த மூளைப் புற்றுநோயால் ஏற்படுகின்றன என தெரியவந்துள்ளது.
ரொக்சோபிளாஸ்மா கொன்டி(Toxoplasma gondii) எனும் இந்த ஒட்டுண்ணியானது உலகத்தில் உள்ள மனிதர்களில் மூன்று பங்கினரால் மூளைகளின் ஆழத்திலே காவிச்செல்லப்படுகின்றன. இதுவே மனிதர்களுக்கு மட்டுமல்லாது மிருகங்களிலும் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
பிரித்தானிய மக்களில் 34 வீதத்தினரை இது தாக்குவதுடன் வாழ்க்கைமுறையையும் சிக்கலானதாக்குகின்றது. ஆனால் இது பூனைகளுக்குள்ளேயே வாழ்கின்றதுடன் தமது நுண்ணிய முட்டைகள் மூலம் கிருமித்தொற்றையும் ஏற்படுத்துகின்றது.
கர்ப்பமாயுள்ள பெண்கள் பூனைகள் உண்ட தட்டைத் துப்புரவு செய்யக்கூடாதென்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது பிறக்கப்போகும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இப்போது ஏனையவர்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஆண்களிலும் பெண்களிலும் உள்ள மூளைப் புற்றுநோயின் தரவுகளைச் சேமித்தனர். அதனைப் பின்னர் T.dondii கிருமித்தாக்க வீதத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தனர்.  ஒட்டுண்ணிகள் கூடுதலாகக் காணப்படும் நாடுகளில் இந்த மூளைப் புற்றுநோய் அதிகளவில் காணப்பட்டதாக இந்தத் தரவு குறிப்பிட்டது.
இந்த ஒட்டுண்ணியால் ஒருவரது செயற்பாடும் மாற்றமடையலாம். எலிகளில் செய்யப்பட்ட ஆய்வின் போது இவை பூனைக்குப் பயப்படும் தன்மையிலிருந்து மாறியிருந்தன.
இதுபோலவே மனிதர்களுக்கும் ஏற்படலாம். அவை ஆண்களை மூர்க்கமானவர்களாகவும் பொறாமை மிக்கவர்களாகவும் மாற்றுவதோடு பெண்களைப் பாலியல் ரீதியில் அதிக ஆர்வங்கொள்ள வைப்பதாகவும் மாற்றிவிடுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களில் ஏற்படும் கிருமித்தொற்றுக்கள் கூடுதலாக நன்றாகச் சமைக்காத ஆட்டிறைச்சி, பன்றியிறைச்சி, மானிறைச்சி போன்றவற்றாலும் பூனையின் கழிவினால் தொற்றாக்கப்பட்ட நீரை, மண்ணை அல்லது எந்த உணவினையும் உட்கொள்வதாலும் ஏற்படுத்தப்படலாம்.
மூளைப் புற்றுநோயைப் பூனைகள் பரப்புகின்றனவெனத் தாங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை என்றும் இந்த ஆய்வில் கூறியுள்ளனர். இதற்கு மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
T.dondii ஒட்டுண்ணிக்கும் மூளைப் புற்றுநோய்க்குமிடையிலுள்ள தொடர்பை அறிவதன் மூலம் புற்றுநோய்க்கான ஆபத்தைக் குறைப்பதற்கான முக்கிய வழிகளைக் கண்டுபிடிக்கும் வழி கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்