Search This Blog

Showing posts with label Sri Lanka Short Stories. Show all posts
Showing posts with label Sri Lanka Short Stories. Show all posts

Friday, August 1, 2014

சதுப்பு நிலம்- எம்.ஏ. நுஃமான்

அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிnoomanறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.
அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது.  புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அவன் உணர்ந்தான். புத்தகத்தில் குனிந்திருந்த தன் நெற்றியில், அவள் விழிப்பார்வை பட்டுச் சுடுவது போல் அவனுக்கு உணர்வு தட்டியது.
அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான். ஆனால், அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தன் பாட்டில் புத்தகத்தைப் பார்த்து கொப்பியில் ஏதோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அதே மேசையில் அவளைச் சுற்றி அவளுடைய தோழிகள் மூவர் அதேபோல் ஏதோ குறிப்பு எழுதிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரும் அவனைக் கவனிக்கவே இல்லை.
அவனுக்கு அது சிறிது ஏமாற்றமாக இருந்தது. வெட்கமாகவும் இருந்தது. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்ததை எண்ணியபோது அவனுக்குச் சிறிது அவமானமாகவும் இருந்தது. அவன் மீண்டும் அந்த மாதப் பத்திரிகையில் தலை குனிந்தான்.
தான் அவளைப் பார்த்ததை மற்றவர்கள் பார்த்திருக்கக்கூடும் என்று திடீரென அவன் நினைத்தான். மற்றவர்கள் தன்னைப் பிழையாக நினைப்பதை அவன் விரும்பவில்லை. யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று அவன் தலை நிமிர்ந்து சுற்றவும் பார்த்தான். யாருமே அவனைக் கவனிக்கவில்லை. எல்லோரும் தம்பாட்டில் பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் புரட்டிக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருந்தனர். எங்கும் அமைதியாக இருந்தது. தாள் புரளும் ஓசையைவிட மற்றபடி அறை மௌனமாகவே இருந்தது. சற்றுத் தள்ளி மேசைத் தொங்கலில் இருந்த அந்தக்கண்ணாடி போட்ட மனிதன் இடைக்கிடை காலை இழுத்து நீட்டுவதால், செருப்பு தரையில் உராயும் ஓசை மெதுவாகக் கேட்டது. தூரத்தே கல்லடிப் பாலத்தின் ஊடாகப் பஸ் ஒன்று போவது சன்னலின் ஊடே தெரிந்தது. கீழே பரந்து கிடக்கும் வாவியிலிருந்து வரும் காற்று மேல் மாடியில் மிகவும் இதமாக வீசியது.
அவன் மேல்மாடிக்கு ஏறி வந்தபோதுதான் அவளைக் கண்டான். எழுதுவதை விட்டுவிட்டு அவள்தான் அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் மட்டுமில்லை; மேல் மாடியில் இருந்த எல்லோரும்தான் அவனை ஒரு கணம்பார்த்தார்கள். பார்த்துவிட்டு மீண்டும் தங்கள் வாசிப்பில் கவனத்தைப் பதித்துக் கொண்டார்கள். எல்லோரும் அவனைப் பார்த்ததும் அவனுக்குக் கூச்சமாக இருந்தது. அவன் வாசிகசாலைக்குப் பொருத்தமில்லாத சப்பாத்தை அணிந்திருந்தான். சப்பாத்தின் அடிப்பகுதியில் அடித்திருந்த இரும்பு லாடங்கள் சீமேந்துத் தரையில் டொக்... டொக்... என்று சத்தம் எழுப்பின. வாசிகசாலையின் அமைதியில் அந்தச் சத்தம் மிகவும் பெரிதாகக் கேட்பதுபோல் இருந்தது.
அவன் மிக மெதுவாக நடந்துவந்தான். மேசையில் கிடந்த ஒரு பத்திரிகையைக் கையில் எடுத்துக்கொண்டு தூண் ஓரத்தில் கிடந்த கதிரையில் உட்கார்ந்தான். அதுவரை அவள் அவனைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். அவன் நடந்து வந்த மெதுமை அவளுக்கு வேடிக்கையாக இருந்திருக்க வேண்டும். பேனையின் மூடிப்பகுதி அவள் கன்னத்தில் பதிந்திருந்ததை அவன் கண்டான். அவள் இதழ்களில் ஒரு சிறிய நகை நெளிந்ததையும் அவன் கண்டான். பிறகு அவன் அந்தப் பத்திரிகையில் பார்வையைப் புதைத்துக் கொண்டான்.
அவளுடைய விழிகள் அவனைக் கவர்ந்தன. அவை மிகவும் அழகாக இருப்பதாக அவன் நினைத்தான். மீண்டும் ஒருமுறை அவளைப் பார்க்க வேண்டும் என்று அந்த நினைப்பு அவனைத் தூண்டியது. கையைத் தூக்கித் தலையின் முன் மயிரைத் தடவிவிட்டவாறே அவள்புறம் திரும்பிப் பார்த்தான். அவள் இன்னும் எழுதிக் கொண்டுதான் இருந்தாள். அந்த நாலுபேரிலும் அவள் மட்டும்தான் அழகாக இருப்பதாக அவன் நினைத்தான். பாடசாலை உடையில் அவள் அழகாகத்தான் இருந்தாள். பழுப்பு நிறமான வட்டமான முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.
அவனுக்குச் `சுரீர்’ என்றது. தான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்துவிட்டதைக் கண்டதும் அவன் கண்கள் உயர்த்தி மேலே சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான். பிறகு தனது மணிக்கூட்டையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தான். தன்னைப்பற்றி அவள் பிழையாக நினைக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அந்த நினைப்பு அவனைச் சுட்டது. அவள் அவ்வாறு நினையாமலும் இருக்கலாம். அவளுக்கும் என்னைப் பார்ப்பதில் ஒரு கவர்ச்சி உண்டாகி இருக்கலாம். நான் அவளைப் பார்த்ததனால் கவர்ச்சிகொண்டு அவள் மீண்டும் என்னைப் பார்க்கக்கூடும் என்றெல்லாம் அவன் நினைத்தான்.
எனினும் இனி அவளைப் பார்க்கக்கூடாது என்று அவன் உறுதி கொண்டான். தான் பார்க்காவிட்டாலும் அவள் தன்னைப் பார்ப்பாள் என்ற எண்ணத்தில் அவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். கையில் இருந்த தமிழ்ப் பத்திரிகையைப் போட்டுவிட்டு ஓர் ஆங்கிலப் பத்திரிகையை எடுத்துக் கொண்டான். அவனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால், சாதாரணமாக வாசிக்க முடியும். வாசிப்பது அரைகுறையாக விளங்கும். ஆயினும் அவன் அதை வாசிக்கத் தொடங்கினான். அடிக்கடி வாசித்ததை நிறுத்தி வாசித்ததை ஆழ்ந்து சிந்திப்பதுபோல் நெற்றியைச் சுருக்கிக் கொண்டான். எதையோ கண்டு மகிழ்ச்சியுற்றவன்போல முகத்தை மலர்ச்சி அடையச் செய்துகொண்டான்.
என்றாலும், `சே இது பெரிய கேவலம்’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். சாதாரணமாக இருக்க முனைந்தான். காற்சட்டைப் பையில் இருந்த கைலேஞ்சியை எடுத்து முகத்தையும் கழுத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டான். பிறகு பத்திரிகையை வேகமாகப் புரட்டி அதில் உள்ள படங்களைப் பார்க்க முனைந்தான்.
ஆயினும், மனம் அலைபாய்ந்தது. அவள் இதற்கிடையில் தன்னைப் பார்த்திருக்கலாம் என்று அவன் கற்பனை பண்ணினான். இப்பொழுது அவள் என்ன செய்கிறாள்? உதட்டைக் கடித்துக் கொண்டிருக்கிறாளா இல்லையா? என்று பார்க்க வேண்டும்போல் இருந்தது. என்றாலும் அவன் பார்க்கவில்லை. தான் பார்ப்பதை அவள் பார்த்துவிட்டால் தன்னைப் பற்றிக் குறைவாக நினைப்பாள் என்று அவன் எண்ணினான். அது தனது ஆண்மைக்குப் பெரிய அவமானம் என்றும் அவன் கருதினான்.
அவள் யாராக இருக்கக்கூடும் என்றுகூட அவனுக்குத் தெரியாது. பள்ளி மாணவி என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது. பள்ளி விட்டதும் புத்தகக் கட்டோடு வந்து ஏதோ குறிப்பு எடுக்கிறாள் என்பதும் தெரிந்தது. ஒருவேளை அவள், `அட்வான்ஸ் லெவல்’ படிக்கக்கூடும்; எங்கே படிக்கிறாளோ? வின்சன்தானே பக்கத்தில் இருக்கிறது. அங்கேதான் படிக்கக்கூடும் என்றெல்லாம் யோசித்தவாறே ஜன்னலூடு பார்வையைச் செலுத்தினான்.
பாலத்தின் ஊடாக ஒரு வைக்கோல் லொறி மெதுவாகப் போய்க்கொண்டிருக்கிறது. சன்னல் நிலைப்படியில் ஒரு அடைக்கலக் குருவி வந்து நின்று `கீச்’ என்று இருமுறை கத்தியது. பிறகு எங்கோ வெளியே பறந்து சென்றது.
பக்கவாட்டில் கதிரைகள் இழுபடும் சத்தம் கேட்டது. அவர்கள் போவதற்காக எழுந்துவிட்டார்கள் என்று அவன் நினைத்தான். அவளைப் பார்க்கக்கூடாது என்ற உறுதியுடன் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டினான். செருப்புச் சத்தங்கள் மெதுவாக ஒவ்வொரு அடியாகக் கேட்டன. தான் பார்ப்பதனாலோ பார்க்காமல் விடுவதனாலோ தனக்கோ அவளுக்கோ என்ன வந்துவிடப் போகின்றது என்று அவன் நினைத்தான். இது தனது பலஹீனம்தான் என்று யோசித்தபோது அவளைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.
அவள் கீழே குனிந்துகொண்டு ஒவ்வொரு அடியாக இறங்கிச் சென்றாள். கீழே செருப்புகளின் ஓசை கேட்டு மறைந்தது. அவனுக்கு நெஞ்சில் சிறிது உறுத்தலாகவும் பாரமாகவும் இருந்தது. இது வெறும் அர்த்தமில்லாத உணர்ச்சி என்று அவன் நினைத்தாலும், அது அப்படித்தான் இருந்தது. அவள் பின்னலைத் தள்ளிவிடுவதற்காக நிமிர்ந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வாங்காது அவளுடைய கண்களை உற்றுப் பார்த்திருக்கலாம் என்று அவன் எண்ணினான். தான் பார்த்திருந்தால் அவளும் கண் கொடுத்திருக்கக்கூடும் என்று அவன் நினைத்தான். அவளுடைய பொழுபொழுப்பான கன்னங்களும் ஈரமான உதடும் எண்ணெய் பூசாத கூந்தலும் அவன் கண்ணுக்குள் நின்றன.
அவள் இருந்த கதிரையை வெறித்துப் பார்த்தான். இப்போது யாரைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால், அவள் பார்க்கும் இடத்தில் அந்தப் பெண்கள் இல்லை. கதிரைகள் காலியாகத்தான் இருந்தன. எழுந்து அவள் பின்னாலேயே சென்று பார்ப்போமா என்று யோசித்தான். கூடவே, உடனே சென்றான். நான் அந்தப் பெட்டைகளைப் பார்ப்பதற்காகத்தான் அவர்கள் பின்னால் எழுந்து செல்கிறேன் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது.
அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நாலரை மணி. ஐந்து மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரியில் நிற்கவேண்டும். அவனுடைய சகோதரிக்கு நேற்று ஓப்பரேஷன் நடந்தது. அவளைப் பார்ப்பதற்காகத்தான் கல்முனையில் இருந்து காலையில் வந்தான். ஆறேகால் கல்லோயா எக்ஸ்பிரசில் திரும்பிப் போகவேண்டும். அவன் எழுந்து கீழே சென்றான். அவளும் தோழிகளும் பள்ளிவாசல் வாகையின்கீழ் நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நிற்கும்போது அவன் அவர்களைக் கடந்துபோக விரும்பவில்லை. இப்போது போனால், `தங்களைப் பார்ப்பதற்காகத்தான் இவன் வருகிறான்’ என்று ஒருவேளை அந்தப் பெட்டைகள் நினைக்கக்கூடும் என்று அவன் எண்ணினான்.
வாசிகசாலைக்கு வெளியே நாட்டி இருந்த விளம்பரப் பலகையை வாசிக்கத் தொடங்கினான்.
பொது நூல் நிலையம்
மட்டக் களப்பு.
திறந்திருக்கும் நேரம்....
மூடும் நேரம்.......
என்று ஒவ்வொன்றாக வாசித்தான். அது அலுத்தபின் வெறுமையாகக் கிடந்த கோட்டடியையும் தூரத்தெரிந்த கச்சேரி மதிலையும் நகரசபைக் கட்டிடத்தையும் பார்த்துக்கொண்டு நின்றான். விளையாட்டு மைதானத்தில் ஏழெட்டுப் பெண் பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவளும் தோழிகளும் தபால் கந்தோரடியால் நடந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். அவன் சிறிது தூரம் நடந்து பள்ளிவாசலடிக்கு வந்தான். அவர்கள் நெடுக நடந்து கொண்டிருந்தார்கள்.
`நெடுகப் போனால் அவளுகளைப் பின்தொடர்ந்து போவது போல இருக்கும். நாம் சென்றால் கொலிச்சால போவம்’ என்று அவன் குறுக்கு வீதியால் திரும்பி நடக்கத் தொடங்கினான். நெடுகவும் போய் இருக்கலாம் என்றும் ஒரு மனம் சொல்லியது. அவளுடைய இடை அசைந்து செல்லுவது மிகவும் அழகாக இருப்பதாக அப்போது அவன் நினைத்தான். ஆயினும் அவன் குறுக்கு வீதியால் நடந்து கொண்டிருந்தான். இவளுகளப் பாத்தாத்தான் என்ன? பாக்காட்டித்தான் எனக்கென்ன? என்று நினைத்தவாறே அவன் தன்பாட்டில் நடந்தான்.
`சே! எப்பவும் இப்பிடித்தான். நான் ஒரு மடையன்’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

நன்றி : அன்று தேர்ந்த சிறுகதைகள் 1917_1981 ஓரியன்ட் லாங்மன் வெளியீடு

Wednesday, July 23, 2014

வெருட்டி- உமா வரதராஜன்












































மிகுதியைக் காண வெண்திரைகள் இல்லாமற் போன அரங்குகளில் கரிபடிந்த சுவர்கள் மட்டும் மிஞ்சியிருந்தன. சுற்றி வர ஆளுயர முட்பற்றைகள் காவல் காத்து நின்றன. அவ்வப்போது வழிப்போக்கர்கள் உள்ளே போய் ஒன்றுக்கிருந்து விட்டு வந்தனர். சினிமாப் படப்போஸ்டர்கள் அருகி வந்த நகரத்தில் மாட்டுச் சாணம் மலை போல் உயர்ந்து வர, அதை அகற்ற வழி தேடி மாநகர சுகாதார அதிகாரிகள் வீதிகள் தோறும் அலைந்து திரிந்தனர். சாணமடிப்பதிலும், சேறு பூசுவதிலும் வல்லமை பெற்ற பலரும் சினிமா போஸ்டர்கள் இல்லாத சலிப்பில் இலக்கியப் பத்திரிகைகளின் பக்கம் சென்று விட்டதாகத் தகவல் அறிந்தனர்.
ஏறத்தாழ இதே காலகட்டத்தில் அகில உலகப் புகழ் பெற்ற ஜேம்ஸ்பொண்டும், தன் வாழ்வின் இன்னொரு தீரச் செயலாக இலக்கியப் பத்திரிகையொன்றை நடாத்திக் கொண்டிருந்தான். கடலின் சுறாக்களோடு போராடி, சுழியோடி அடியில் புதையுண்டு கிடக்கும் கப்பல்களைக் கண்டு பிடித்தவன் அவன். கொட்டும் மழையில் ஆகாய வெளியில் விமானங்களுக்கிடையே பாய்ச்சல் நிகழ்த்திய சாகஸக்காரன் அவன். பனிமலைச் சறுக்கலில் சூரன், கூடுவிட்டுக் கூடு பாயும் அவனுடைய வித்தையும், 'குதிரை'ச் சவாரியும் பேர் பெற்றவை. எனினும் பத்திரிகையொன்றை நடத்துவதிலேயே, தன் காற்சிரங்கைச் சுட்டுவிரலால் லேசாகத் தடவுவதற்கொப்பான பேரின்பத்தை அவன் பெற்றான்.
தன் பூர்வீகத்தை மறவாத ஜேம்ஸ்பொண்ட் தனது பத்திரிகையில் 'க்ரைமி'ற்கு முன்னுரிமை அளித்தான். இசைத்தட்டுக் களஞ்சியத்தினுள் காணாமற் போன ஸப்த நந்தனப் பிரியா ராகத்தை மீட்டெடுத்தமை, ஆலையடி மண்ணுக்குள் புதையுண்டு போன கிட்டிப்புள்ளைத் தேடியெடுத்தமை, பேராசிரியர் சுகுமாரனின் உண்மை முகத்தைக் கண்டு பிடித்தமை சம்பந்தமாக அவன் எழுதிய கட்டுரைகள் அவனுடைய துப்புத்துலக்கும் திறனுக்கு சான்றுகளாக விளங்குகின்றன எனப் பல இலக்கிய விமர்சகர்களும் நமுட்டுச் சிரிப்புடன் சொன்னார்கள்.
பனையோலைச் சுவடிகளால் வேயப்பட்ட சொற்கொல்லன் பட்டறையில் ஜேம்ஸ்பொண்டின் அலுவலகம் இயங்கியது. எழுத்தாணி ஏந்திய காவற்காரர்கள் வாசலில் நின்றனர். சொற்களை எடையிட்டுப் பார்க்க ஒரு தராசும் கொஞ்சம் மஞ்சாடிக் கொட்டைகளும், உராய்ந்து பார்க்க ஓர் அண்டா நிறைய நெருப்புத் தண்ணியும் இருந்தன.
சொற்கொல்லன் பட்டறையின் பின் புறத்தில் சமையற்கட்டு, சமையற்காரர்களாக இருந்த ஜேம்ஸ்பொண்டின் சகபாடிகள் ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் சமூகப் பிரக்ஞை சூப் தயாரித்தார்கள். விடுமுறை நாட்களில் அகவயம்-புறவயம் சுண்டல். விசேஷ பண்டிகைக் காலங்களில் போராட்டப் பாயாசம் அல்லது புகலிட ஐஸகிரீம். சமையற்கட்டில் இருக்கும் தடியன் ஒருவன் சதா இறைச்சி வெட்டிக் கொண்டும் இடையிடையே கவிதைகள் எழுதியவாறுமிருந்தான். இரண்டிலுமே ரத்தம் வந்து கொண்டிருந்தது.
சொற்கொல்லன் பட்டறைக் கூடத்தின் சாய்வு நாற்காலியொன்றில் போர்வை போர்த்திய ஒரு முதியவர் இருப்பார். வேலைக்கு நடுவே சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்ட நாவிதனை எதிர்பார்த்திருக்கும் சலூன் கோலமென முதற் பார்வைக்கு அவர் தெரிவார். ஆனால் அவர் போர்த்திருந்தது ஒரு பொன்னாடை. கீறல் விழுந்த இசைத்தட்டுகளும், ஒரு லொறி கொள்ளக்கூடிய பெருங்காய டப்பாக்களும் இவரிடம் நிறைய இருந்தமைக்காக தொல் பொருள் ஆராய்ச்சி அமைச்சு அண்மையில் அவருக்குப் பொன்னாடையொன்றைப் போர்த்தியிருந்தது. அதைப் பிரிய மனமில்லாத காதலாலும், கூதலாலும் பொன்னாடையுடனேயே அவரது அந்திமகாலம் சொற்கொல்லன் பட்டறையில் கழிந்து கொண்டிருந்தது. மயிர் மழிக்கப்பட்ட பூனைக்குட்டியொன்று செல்லப்பிராணியாய் அங்கே உலாவித் திரிந்தது. கொல்லைப்புறத்தில் நின்ற கூரிய கொம்புகளைக் கொண்ட எருமைகள் அவ்வப் போது மேடைகளுக்குச் சென்று புத்தகங்களைத் துவைத்து, மிதித்து, புழுதி கிளப்பி விட்டுத் திரும்பி வந்தன.
ஜேம்ஸ்பொண்ட் தற்போது முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தான். கட்டபொம்மன் குரலில் பேசும் வியாபாரியான எழுத்தாளன் எவளையெல்லாம், எவ்வாறெல்லாம். எப்போதெல்லாம் தழுவுகின்றான் என்பதைத் தனது பத்திரிகையின் அடுத்த இதழில் விபரிக்க அவன் விரும்பியிருந்தான். இதற்காக அவன் பட்டபாடு கொஞ்ஞநஞ்சமல்ல. 'வியாபாரி எழுத்தாளர்களைக் கொல்வது எப்படி' என்ற நூலெதையும் மணிமேகலைப் பிரசுரம் இன்னும் வெளியிடாத காரணத்தால் ஜேம்ஸ்பொண்ட் வாலிவதைபடலம், சூரபத்மன் வதைபடலம் ஆகியவற்றைப் படிக்கலானான். நாடான் கடைகளின் பழைய பேப்பர் கட்டுகளை அறிவுப் பசியின் காரணமாகத் தின்று தீர்த்தான். ஏடுகளைத் தலையில் சுமந்து மழையிலும், வெயிலிலும் அலைந்து திரிந்தான். பனையோலைச் சுவடிகளைப் பாயாகவும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பேரகராதிகளைத் தலையணையாகவும் போட்டும் படுக்கப் பழகிக் கொண்டான். தன் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றி இராப்பகலாய் எரியவிட்டான். வியாபாரி எழுத்தாளன் தன் கதைகளில் பயன்படுத்தும் அத்தனை சொற்களும் தமிழகராதியிலே இருக்கின்ற இரகசியத்தை இவ்வாறுதான் அவன் கண்டுபிடித்தான். தெலுங்கரான ஸ்ரீ பலிவாட கந்தாராவின் ஆவியைப் பழங்காகித மணம் வீசும் நூலகமொன்றில் ஜேம்ஸ்பொண்ட் சந்திக்க நேர்ந்தது இந்நாட்களில்தான்.
'வணக்கம்'
'யாரது?' என்றது பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஸ்ரீபலிவாட காந்தாராவின் ஆவி.
'நான்தான் ஜேம்ஸ்பொண்ட். துப்பறியும் பத்திரிகையாளன். சங்கீதம், நடனம், விளையாட்டு, நாடகம், சினிமா, கதை, கவிதை, ஓவியம் எனப் பல துறை தெரிந்த சகல கலாவல்லவன்............'
'சமையல், தையல், சோதிடம்?'
'அடுத்து வரும் இதழ்களில் அவற்றைப் பற்றியும் நான் எழுதப்போகின்றேன். அது சரி, பிக்காஸோவின் ஓவியக்கலை சுயமான ஒன்று என நீங்கள் நினைக்கின்றீர்களா? ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் தியாகையர் நாட்டம் கொள்ளாதது ஏன் தெரியுமா?' என எடுத்த எடுப்பில் திடீரென ஜேம்ஸ்பொண்ட் கேட்ட போது 'ஐயா நீங்கள் மகா மேதாவிதான்' எனக்கூறிவிட்டுக் கழன்று கொள்ள முயன்றது ஸ்ரீபலி வாடகாந்தாராவின் ஆவி. ஆனால் ஜேம்ஸ்பொண்ட் விடுவதாக இல்லை.
'ஒரு சின்னக்கேள்வி. நீங்கள் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?'
'அது கீரியைப் பற்றியது. எலியைப் பற்றிச் சிலவரிகள் அதில் வரும்...'
'அது போதும்...... அது போதும் எனக்கு.....' என்று எலிவாலைப் பிடித்துவிட்ட குதூகலத்துடன் துள்ளிக் குதித்தான் ஜேம்ஸ்பொண்ட்.
'என்ன நடந்தது?'
'வியாபாரி எழுத்தாளன் ஒருவன் வசமாக மாட்டிக் கொண்டான். அவனும் எலியைப் பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறான்.'
'அதனால்....?'
'அந்த எலிதான் இந்த எலி. இந்த எலிதான் அந்த எலி. காவேரிதான் சிங்காரி, சிங்காரிதான் காவேரி....' என்று பாடத் தொடங்கினான் ஜேம்ஸ்பொண்ட்.
'உலகின் அத்தனை எலிகளுக்குமாக ஓர் பண்ணையை நான் நடத்துவதாக உங்களுக்கு யார் சொன்னது?' என்று ஸ்ரீபலிவாடகாந்தாராவின் ஆவி எரிச்சலுடன் வினவியது
'விண்வெளியில் விமானங்கள் முட்டுவது சாத்தியமா? யானைகள் வரும் தமிழ்ப் படங்கள் எல்லாம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பல்லவா?' என்றான் ஜேம்ஸ்பொண்ட்.
ஸ்ரீபலிவாட காந்தாராவின் ஆவிக்கு முதற் தடவையாக இப்போது பயம் வந்தது. துர்க்குணம் கொண்ட சாத்தானொன்று தன்னை ஏதோ சோதனை செய்து பார்ப்பதாகத் தோன்றியது. அதற்கு மேலும் தாங்காது என்று மிரண்டு அது புத்தக அலுமாரிகளில் விழுந்தடித்துக்கொண்டு ஓடியது.
'எலி...எலி...எலி...' என்றுகத்திக்கொண்டே ஜேம்ஸ்பொண்ட் பின் தொடர்ந்து ஓடினான். நூலகத்தில் பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அனைவரும் அச்சத்தில் கால்களை உயர்த்தித் தூக்கிக் கொண்டனர்.
மாதநாவல் சுவாரஸ்யம் குலைந்து போன எரிச்சலில் 'சைலன்ஸ்...சைலன்ஸ்...' என்று கத்தினாள் நூலகப் பொறுப்பாளர்.
'எலிகள் அங்கேயல்லவா இருக்கின்றன என்று கூறிய அவள் புத்தக அலுமாரிகளைச் சுட்டிக் காட்டினாள். ...அது அசோகமித்திரன் எலி. அது அம்பையின் எலி. அது மலர்மன்னனின் எலி. அது இன்குலாப்பின் எலி...' என்றாள் அவள்.
'இல்லை எனக்கு ஸ்ரீபாலிவாடகாந்தாராவின் எலிதான் வேண்டும்' என்று முனகியவாறு சொற்கொல்லன் பட்டறையை வந்தடைந்தான் ஜேம்ஸ்பொண்ட்.
அன்றிரவு அவனால் தூங்கமுடியவில்லை. நாகத்தின் விஷம் தோய்ந்த மூச்சுக்கள் அறையெங்கும் பரவியிருந்தன. கனவுமற்ற, நினைவுமற்ற ஓர் அந்தரிப்பில் அவன் பாலை நிலத்தில் அலைந்துகொண்டிருந்தான். படிக்கட்டில் அனாதையாக அழுது கொண்டு நிற்கும் அவனுக்கு அம்மை தருகின்றாள் ஞானப்பால். உறிஞ்சுகின்றான். உறிஞ்சுகின்றான் மூர்;க்கம் கொண்டு உறிஞ்சுகின்றான் அவன். அம்மை கலகலவென்று நகைக்கின்றாள். அப்பால் நிற்கும் தோடுடைய செவியன் மர்மப் புன்னகை புரிகின்றான். ஞானப்பால் திகட்டிப் போய் கடைவாய் வழியே வழிகின்றது. பாலின் நிறம் மெது மெதுவாய் நீலமாகிறது. விஷம் உடலெங்கும் பரவி ரத்தம் நீலமாய் ஓடுகிறது. புத்தகங்கள் திடீர் திடீர் எனத் தீப் பற்றி எரிகின்றன. கூவும் குயில்களின் சிறகுகளெனப் பக்கங்கள் மெல்ல மெல்லக் கருகி மடிகின்றன. புத்தகங்களின் புகை வளையங்கள் சுற்றிச் சுற்றி வந்து அவன் குரல்வளையை இறுக்குகின்றன. காளி சூலாயுதம் ஏந்தியவாறு அவனைத் துரத்துகின்றாள். ஜேம்ஸ்பொண்ட் சைக்கிளில் ஏறித் தப்பி ஓடுகின்றான்.
'ஏய் அது எனது சைக்கிள்...' என்று கத்துகின்றான் பின்னாலிருந்து வியாபாரி எழுத்தாளன்.
காலையில் முதல் வேலையாக டொக்டரைப் பார்க்கச் சென்றான் ஜேம்ஸ்பொண்ட். இரவு முழுவதும் தூங்காததில் கண்கள் கலங்கிய குட்டைபோலிருந்தது. 'எல்லாமே மங்கலாகத் தெரிகிறதா?' என அவனைப் பரிசோதித்த வைத்தியர் கேட்டார்.
'இல்லை டொக்டர், பார்க்குமிடமெல்லாம் ஒரே தழுவலாகத் தெரிகின்றன. பதினோராம் நூற்றாண்டு காஜுராஹோ கோயில் சிற்பங்களையும் மிஞ்சிய நெருக்கமான தழுவல்கள். கம்பனைக் கண்ணதாசன் தழுவிக் கொண்டு நிற்கிறார். தாகூரைக் கலாப்ரியாவும், ஷpயாம் பெனகலை மகேந்திரனும் தழுவியபடி நிற்கிறார்கள். கண்களை மூடினால் உமையொருபாகன் எப்போதும் தாண்டவமாடுகின்றான். என்ன அதிசயம் டொக்டர். என் கனவுகளில் பச்சை வயல்கள் இல்லை. நதிகள் இல்லை. குயில்களோ, கிளிகளோ அழகிய பெண்களோ இல்லை. எப்போதும் என் கனவுகளில் குச்சிகள் தீர்ந்த தீப்பெட்டிகளும், அண்டங்காகங்களும், வான்கோழிகளும், மண் புழுக்களுந்தான்..........'
'த்சோ!' என்று அனுதாபப்பட்டார் டொக்டர்.
'எல்லா நூல்களையும் படிக்க எனக்கு ஆர்வம். ஆனால் நான்கைந்து பந்திகளைக் கூடத் தாண்ட முடிவதில்லை. படிக்கின்ற வாசகங்களை எல்லாம் ஏற்கனவே சந்தித்து விட்டதைப் போன்ற உணர்வு மனதைப் பிறாண்டிக் கொண்டேயிருக்கின்றது. மேய்ச்சல் நிலத்தை சரியாகப் பயன்படுத்தாத ஆட்டின் நிலைமையில் நான் இருக்கிறேன் டொக்டர்'
'உங்கள் நோய் என்னவென்று ஓரளவு புரிகின்றது. மனதிற்குள் ஓர் இமயமலையை உண்டாக்கி அதன் உச்சியில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். உங்களை யாரும் கவனிக்கவிலலை என்பதால் புழுங்குகின்றீர்கள். நூறு பேர் கவனிப்பார்கள் என்றால் ஆடைகளைக் களைந்தெறிந்து விட்டு ஓடக்கூட தயார். ஆனால் உங்கள் உடல் வனப்பு அதற்கு இசைவாக இல்லையே என்ற எரிச்சல்'.
ஜேம்ஸ்பொண்ட் மௌனமாக இருந்தான். டொக்டர் தொடர்ந்தார்.
'எல்லோரிலும் உங்களுக்கு அவநம்பிக்கை. மனைவியை, சகோதரியைப் பார்க்கும் போதெல்லாம் கூட இவள் சோரம் போன ஒருத்தியாக இருப்பாளோ என்ற சந்தேகம் உங்கள் மனதை வதைக்கின்றது தெருவில் போகும் குடும்பப் பெண்களைப் பார்த்து 'அடீ வேசி' என்று கூக்குரலிடலாம் போல் உங்களுக்குத் தோன்றுகிறது. உங்கள் மனதின் சுவர்களில் பல கறையான் புற்றுகள்.'
'போதும் டொக்டர் போதும். என் நோய் பற்றிய விபரங்கள் போதும். அது தீர என்ன வழி? அதைச் சொல்லுங்கள்'.
'மிகவும் எளிது. உங்கள் அதிமேதாவி வேஷத்தைக் கலைத்து விடுங்கள். துப்பறியும் திறனை ஒரு பக்கம் வைத்துவிட்டு தியானம் செய்யப் பழகுங்கள், பரஸ்பரம் அன்பு செலுத்தப் பழகுங்கள். நான் எழுதித் தரும் நூல்களை சாப்பாட்டிற்கு முன்பும், சாப்பாட்டுக்குப் பின்பும் படியுங்கள். இரவில் தூங்கப்போகும் முன்னர் இதில் எழுதித் தரும் இசை நாடாக்களைக் கேட்டுப் பாருங்கள். இதற்கும் சரியாகவில்லை என்றால் மூளைமாற்று சத்திரசிகிச்சை ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும்' என்ற டொக்டர் தாளொன்றில் சில பெயர்களைக் கிறுக்கித் தந்தார்.
தளர்ந்த நடையுடன் தன் அறைக்குள் நுழைந்த ஜேம்ஸ்பொண்ட் கதவைத் தாளிட்டுக் கொண்டான். அன்று தாளிடப்பட்ட கதவுகள் இன்று வரை திறக்கப்படவில்லை. பல நூல்களையும், இசை நாடாக்களையும் அவன் அங்கிருந்து கேட்டுக் கொண்டிருப்பதாக சிலர் சொன்னார்கள். அவன் உள்ளேயிருந்து மீள்பாய்ச்சலுக்கு தயாராவதாக சகபாடிகள் தெரிவித்தனர். அவனை இடையூறு செய்யக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் 'அதிமேதாவித்தனம் உள்ளே உறங்குகிறது' என்ற அறிவிப்புப் பலகையை கதவில் அவர்கள் மாட்டி விட்டு வெளியே காவலிருந்தார்கள்.

30.07.1996
மூன்றாவது மனிதன்

Tuesday, July 22, 2014

கள்ளிச்சொட்டு - உமா வரதராஜன் -


இருக்கின்ற அழகையும் கெடுத்துக் கொண்ட ஒப்பனை கூடிய கல்யாணப் பெண்ணாக நடுவே கோயில். சூழ நின்ற விருட்சங்களுடன் நிலாக்காலத்தில் இனி என்றைக்குமே பேசாது என்பது போல நின்றது அது, கோயிலை வளைத்துக் கடை வீதி, கரிமண் கிளறிக் கிளறி நடைபோடும் ஜனங்கள். ஒவ்வொரு கடையிலும் தேனடையை மொய்க்கும் ஈக்களாகிக் குழுமி நிற்கும் ஜனங்கள். எறும்புகளாகி முட்டியும், மோதியும் விலகிப் போகும் ஜனங்கள். ஜனங்கள். ஜனங்கள்.
எதிர்வெயிலை வாங்கி தம் முகம் நோக்கித் துப்பியெறிகின்றன அலுமினியப் பாத்திரங்கள். மெல்லிய கைகளைப் பற்றி வளையல் அணிவிப்பதில் காலத்தைக் கரைக்கிறார்கள் காப்புக்கடைப் பையன்கள். இந்த உச்சக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்டு விட்டனர் கச்சான் கொட்டை விற்பவர்களும், கடலை வண்டிக்காரர்களும். சப்த சங்கீதத்துடன் தேநீர்க்கடைகள். புல்லாங்குழல் ஊதியபடி கிருஷ;ணன். தியானத்தில் இருக்கிறார் புத்தர். கண்ணாடிகளில் கிழவனாகிக் கொண்டிருக்கும் நான். 'அம்மா எனக்கு வேணும்' என்று கைகால்களை உதறி அடம் பிடிக்கிறது பொம்மைக் கடைமுன்னே நிற்கும் குழந்தை. தலைகளில் 'பலூன் கொம்புகள்' முளைத்த வியாபாரிகள் வாய்களால் வினோத ஒலி எழுப்புகிறார்கள். புறா முக்கலுடன் ஐஸ்கிரீம் வண்டிகள், கிணற்றடி மூலையில் கணேசனின் அப்பா கரும்பு விற்கிறார்.
கோயிலின் பின்புறம் தீக்குழி. அடுக்கப்பட்ட விறகுகளை விழுங்கியபடி நெருப்பு மோகினி சுழன்று சுழன்று ஆட்டம் போடுகிறது. அதன் தாபமும் தகிப்பும் எங்கும் பரவும் தீக்குழியைச் சுற்றிச் சில மனிதர்கள் நிற்கிறனர். நெருப்பில் உதித்தவர் போன்றும் நெருப்புடன் வாழ்பவராயும் அவர்கள் தோற்றம் காட்டினர். விறகுகளை விழுங்கி செந்தழலாகி ஒளிர்கிறது நெருப்பு. மட்டையினால் அடித்தடித்து எரிதழலின் உயரத்தை மண்ணோக்கிச்சரிப்பார்கள் அந்த மனிதர்கள். கால் நடைகளை விழுங்கி அசைய இயலாமல் படுத்துக்கிடக்கும் மலைப்பாம்பை நினைவு சொல்லும் அந்தியிலே இந்தத் தீக்குழி. அந்தியில் ஊர் எல்லைக் கடலில் நீராடி, மஞ்சள் பூசி, சங்கு, உடுக்கை, பாறை மேளங்களுடன் வருவார்கள் தருமன், வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், பாஞ்சாலி கொலுவினர். அவர்கள் நெருப்பில் நடப்பார்கள். மறுகரை அடைவார்கள்.
ஜனநெரிசலில் தள்ளுண்டு நான் நடந்தேன். மரங்களின் கண்ணீர்த்துளிகளென சருகுகள் பரவிக் கிடக்கின்றன. சருகுகள் நொறுங்க நொறுங்க மென்மேலும் முன்னேறுகின்றன என் பாதங்கள். செக்குமாட்டுத் தனத்துடன் இலக்கற்ற ஒரு பயணம்.
ஆயிரமாயிரம் அண்டங்காகங்கள் ஒலிபெருக்கியில் கூடியிருந்தன. அவை பாரதம் பாடி வில்லிபுத்தூராழ்வார் மீது எச்சங்கள் இட்டன. 'இன்னும் சொற்ப நேரத்தில்' என்று அடிக்கடி ஒலித்தன. குழந்தைகளைத் தொலைத்தவர்களை வந்து கையேற்கும்படி வேண்டின. முடிச்சு மாறிகள் பற்றி எச்சரித்தன. பெண்களின் பாகங்களுக்கு யாதொரு சேதமும் விளைவிக்க வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டன.
அம்பாக்குழலை சிறுவர்கள் போட்டிக்கு ஊதுகிறார்கள். சர்பத் கடைகளின் பலவர்ணப் போத்தல்களிலும் கரண்டிகள் ஓடியோடி ஒலி எழுப்புகின்றன. குழந்தைகள் வீரிட்டழுகின்றன. அம்மாக்கள் அடிக்கப் போவதாகப் பாசாங்கு செய்கிறார்கள். கையிலும் இடுப்பிலும் குழந்தைகள் தொங்கப் புருஷமரங்கள் முழிக்கின்றன. எங்கும் நாரசம். மரம் விட்டு நீங்கி என் செவிகளில் இறங்குகின்றன மரங்கொத்திப் பறவையின் அலகுகள். ஒரு தொகைப் பாதங்கள் எற்றிக் கிளம்பும் புழுதியிலும், குளோரின் நெடியிலும் மீறிய மூத்திரவாடையிலும் மூச்சுத் தினறுகிறது.
திடீரெனப் பரபரப்புடன் ஜனங்கள் விலகி நின்று வழிவிடுகின்றார்கள். எனக்கல்ல. துப்பாக்கிகள் ஏந்திய கூட்டம் ஒன்று பின்னால் வருகின்றது. பத்துக் கட்டளைகளில் வரும் மோசேயிற்கும், கூட்டத்திற்கும் கிடைத்ததைப் போல ஜனக்கடலில் இவர்களுக்கும் தனிப்பாதை தோன்றித் திறந்திருந்தது. முட்டல் மோதல் எதுவுமின்றி அவர்கள் முன்னேறலாம். ஆயுதந்தாங்கிகளின் முன்னால் எப்போதும் திறபட்டுக் கிடக்கின்றன வழிகள். கோயிலின் மூலஸ்தானம் வரை, கடலின் தொங்கல் தொடுவானம் வரை, ஏன் தாயின் கருவறை வரை கூட அவர்களால் சென்றுவர முடிகிறது.
என் தோளைப் பற்றிப் பிடிக்கிறது ஒரு கரம். திரும்பிப் பார்த்தேன். துப்பாக்கியுடன் ஒருவன் நின்றான். ஏதாவதொரு கானகத்தில் தொலைந்து போயிருக்கும் அவனது முகத்தின் புன்சிரிப்பு.
'என்னை அடையாளம் தெரிகிறதா?' என்று கேட்டான் அவன். மண்புழுவாகி வேர்களின் நுனிகளைக் கண்டறியும் குழப்பத்தில் தவிக்கின்ற என் முகம் அவனுக்கு வியப்பூட்டவில்லை. நான் இருட்குகையில் ஓவியங்ளைக் கண்டறியத் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
என்னைக் கரையேற்றி விடும் பரிவுடன் சாந்தமான குரலில் அவன் சொன்னான். 'நான் உன்னுடைய நண்பன்;.'
'அப்படியா?' என்றேன்.
வௌ;வேறு பராயங்களில் வௌ;வேறு நண்பர்கள் என் வாழ்வின் சாலையில். வண்ணத்துப் பூச்சியாய் ஞாபகம் அலைக்கழிக்கின்றது. என் அத்தனை சக்திகளையும் ஒன்று திரட்டித் துரத்திக் கொண்டிருக்கிறேன்.
'நீ குழம்பிப் போயிருக்கிறாய்....வா! பேசிக்கொண்டே போகலாம்' என அவன் அழைத்தான். நீட்டிய அவன் கைகளை உதறமுடியாமல், மிட்டாய் தந்த சந்நியாசி பின்னால் இழுபடும் சிறுவனாகப் போய்க் கொண்டிருந்தேன். யானை இழுத்துச் செல்லும் மரக்குற்றி போல் என் உடல் தோன்றிற்று.
என்பக்கமாக முகத்தைத் திருப்பி அவன் 'இன்னமும் என்னைக் கண்டு பிடிக்கவில்லை போல?' என்றான் கிண்டலாக.
நான் மௌனங் கொண்டிருந்த போதிலும் என் முழு முயற்சியும் அதிலேயே இருந்தது. கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிகிறது. அந்த கண்கள், இடது கோடித் தெற்றுப்பல், நெற்றித் தழும்பு....பனிப்புகார் மெல்ல மெல்ல விலகுகிறது. ஒட்டடை தட்டியாயிற்று. அவன் யாரென்று தெரிந்து விட்டது. இடியுண்ட கட்டிடத்தின் கற்குவியல்களுக்குள் இருந்து தலை நீட்டி மேலெழுந்து வருகிறது ஒரு சர்ப்பம். 'கொல் கொதாவில் சிலுவையில் அறைபட்டவன் மூன்றாம் நாள் முழித்தெழுகிறான். சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிறது இதோ ஃபீனிக்ஸ் பறவை.... தீம்தரிகிட....தீம்தரிகிட....
செத்துப் போனவன் ஜனசமுத்திரத்தின் நடுவே என்னைக் கூட்டிச்செல்கிறான். மரணம் ஒரு புத்தகத்தின் கடைசிப்பக்கமா? இல்லையேல் இன்னொரு புத்தகத்தின் முதற்பக்கமா? கடலில் முடிந்ததாக சொல்லப்பட்டவன் தரையில் நடக்கிறான். சப்பாத்துக்கால்களால் சருகுகளை நொறுக்கிக் செல்கிறான். பயமும் பரவசமும் என்;னைச் சூழ்ந்து கொண்டன. அவன் தோளை உரிமையுடன் பற்றினேன்.
'நீ செத்துப் போனதாகச் சொன்னார்கள் படுபாவிகள்.....' அவன் தீட்சண்யமான கண்களால் என்னைப் பார்த்தான்.
'எனக்கு சாவில்லை' என்றான்.
மலை அருவியின் மூர்க்கத்தனத்துடன் எனக்குள் வார்த்தைகள் இருந்தன. வெகு வாஞ்சையுடன் அவனை உற்று நோக்கினேன். அப்போது அது நிகழ்ந்தது. துப்பாக்கி வேட்டுச் சத்தம் ஒன்று. தொடர்ந்து பல வேட்டுகள். நிலமும், காதுகளும் பிளப்பது போல ஒரு வெடியோசை. அதிர்வுடன் ஒரு முறை குலுங்கிற்று பூமி. எங்கும் புகை. ஒரே இரைச்சல். கூக்குரலிட்டு ஜனங்கள் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தனர். என் பக்கத்pல் நின்ற துப்பாக்கி நண்பன் 'ஏதோ சிக்கல்' என்று சொன்னான். அவன் முகம் கொடூரமாக மாறியிருந்தது.
கடல் கொந்தளித்து ஊர் நோக்கி வருகின்ற இரைச்சல். ஆளை ஆள் முண்டித்தள்ளி ஏறிமிதித்து ஓடுகின்றனர். நண்பன் துப்பாக்கியுடன் உஷhர் நிலையில் நின்றான். மழையில் நனைந்து கொடுகும் ஆட்டைப் போல மரமொன்றின் மறைவில் நான் நின்றுகொண்டேன். பயத்தில் என் உதடுகள் உலர்ந்திருந்தன. கை கால்களின் நடுக்கத்தை மறைக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
'பயம் வேண்டாம்' என்றான் துப்பாக்கி நண்பன்.
ஒவ்வொரு வகையான துப்பாக்கிக்கும் ஒவ்வொரு வகையான குரல் இருந்தது. துப்பாக்கிகளின் உரையாடல் முடிவற்று நீண்டு கொண்டே சென்றது. ஓய்கிறது என எண்ணும் போது மறுபடியும் எங்கிருந்தோ குண்டொன்று வெடிக்கிறது.
'இப்போது மண்ணில் நீங்கள் குப்புறப்படுத்துக் கொள்வது பாதுகாப்பானது' என்றான் துப்பாக்கி நண்பன்.
ஆபத்து நம்மிலிருந்து நகர்கிறத, அல்லது ஆபத்தை நோக்கி நாம் நகர்கின்றோமா என்ற புரியாமையின் தத்தளிப்புடன் நான் மண்ணில் கிடந்தேன். ஒரு சடலம் எந்தவொரு ஆட்சேபணையையும் எழுப்பாது என்ற நம்பிக்கையுடனும், உயிர் தப்பவேண்டுமென்ற வெறியுடனும் என்னை மிதித்தபடி ஆட்கள் ஓடிக்கொண்டிருந்தனர்.
'என்ன நடக்கிறது' என்று ஈனஸ்வரமான குரலில் என் நண்பனைக் கேட்டேன். தோட்டாக்கள் தீர்ந்து போயிருக்கலாம். அவனுடைய முகம் கலவரமடைந்திருந்தது.
'பின் வாங்க வேண்டிய தருணம் இது' என்றான் என் நண்பன். மரணம் நாலுகால் பாய்ச்சலில் என்னை நோக்கி வந்து கொண்டிருப்பது உறைக்க சட்டென்று எழுந்தேன். நண்பன் முதலிலும் நான் அவனைப் பின் தொடர்ந்தும் ஓடினோம்.
விஷப்பூண்டை விழுங்கி ஆற்றங்கரையில் ஆங்காங்கே சரிந்த மாடுகளின் பிணங்களைப் போல அநாதை சைக்கிள்கள், பாத்திரங்கள், பனையோலைப் பெட்டிகள், ரப்பர் பொம்மைகள்.... தடை தாண்டி ஓட்டக்காரன் ஆகியிருந்தேன். மலைப்பாம்பு படுப்பது போல் எதிரே ஆலமரவேர். இடறிக் குப்புற விழுந்தேன். மண் தட்டக் கூட நேரமற்று நோவுடன் மறுபடியும் ஓடினேன். என் நண்பனின் முதுகுபுப்புறம் வெகு தொலைவில் தெரிந்தது. மலைகளின் வாய்க்குள் போகும் இறுதிக் கணத்துச் சூரியன் போல அது மெல்ல மெல்ல நழுவிச் சென்றது. வலிகளையெல்லாம் மூட்டை கட்டியெறிந்து வட்டு சக மனிதர்களை முந்தும் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தேன். ஏதேனும் ஒரு குண்டு தாக்கிவிடலாம் என்ற முதுகுப்புறத்தின் குறுகுறுப்புடன் ஓடினேன்.
நகரத்துப் பேய்களாக ஜீப்வண்டிகள் ஊளையிட்டு அலைகின்றன. தாறுமாறாய் ஓடும் வாகனங்களின் ஹோர்ன் ஒலி மதங்கொண்ட யானைகளாய்ப் பிளிறுகின்றன. என் முன்னால் ஓடிக்கொண்டிருந்த கன்றுக் குட்டி கால் பிசகி, தெருவில் 'அம்பா' என்ற சத்தத்துடன் விழுகிறது. தாய்ப்பசுக்கள் பதில் குரலுடன் அலைகின்றன. ஒவ்வொரு மரத்திற்கும் காகங்கள் கரைந்து கரைந்து சேதிகள் சொல்கின்றன. ரத்தச் சொட்டுகளைத் தெருவில் சிந்தியபடி, சிவப்பொளி சுழன்றடிக்க, ஒலியெழுப்பியவாறு வாகனம் ஒன்று விரைந்து செல்கிறது. நீட்டிய பல சோடிக்கால்கள் வாகனத்தின் வெளியே தெரிகின்றன. மரணத்தின் கொடூரப்பற்களும், விஷநகங்;களும் என்னைக் குறி வைக்கின்றன. நான் தப்பித்தாக வேண்டும். கால்களில் உயிரை இறக்கி, பாய்ந்து பாய்ந்து ஓடினேன்.
வெறிச்சோடிய தெரு அச்சமூட்டியது. தொலைவில் கரும்புகை பூதமாய் எழுகிறது. கிரஹணம் கவிந்தது என் கிராமத்தின் மீது. குருNஷத்திரத்தின் பதினான்காம் நாளில். நான் வந்து நிற்கிறேன். ஜயத்ரதனின் தலை கொய்யப்படுவதற்காகப் பகலை இருளாக்கி நாடகமாடுகிறான் கிருஷ;ணபகவான். 'என் தலை எனக்கு வேண்டும்'. குருட்டு நம்பிக்கையுடன் ஓடுகிறேன். தெருவின் வீடுகள் எல்லாம் சப்தமிழந்து பேதலித்துப் போயிருந்தன. மௌனிகளாய், செவிடுகளாய், குருடுகளாய் நின்றன வீடுகள் எல்லாம். வானில் இராட்சதப் பறவை கெக்கலிப்புடன் சிறகடிக்கிறது. திக்கொன்றாய் அலையும் குஞ்சுகளைக் கர்வத்துடன் அது வேவு பார்க்கிறது.
தெருவில் தனியாக ஓடும் அபாயத்தை உணர்ந்தேன். பக்கத்து வளவொன்றினுள் நுழைவதைத் தவிர எனக்கு வேறு வழி இருக்கவில்லை. உறைந்து போன மெழுகைப் போன்ற வீடொன்று உள்ளே இருந்தது. மதில்களினாலும், தாறுமாறாக வளர்ந்த செடிகொடி மரங்களாலும் அடக்கியாளப்பட்ட வீடாக அது இருந்தது. சிறை மீட்டெடுக்க வரும் ராஜகுமாரனை எதிர் நோக்கியதான மௌனமான துயரத்துடனும் நீர்த்தடங்கள் மறையாத, பாசி படிந்த சுவர்களுடனும் அது காத்திருந்தது.
முற்றத்தில் ஒன்றையொன்று துரத்தியபடி ஓடுகின்றன கீரிப் பிள்ளைகள், கூரை முகட்டின் புறாக்கள் முக்குகின்றன. சிள்வண்டுகள் விட்டு விட்டொலிக்கின்றன. சுழிநிறைந்த ஆறு பற்றிய அச்சம் எடுத்துவைக்கின்ற என் ஒவ்வொரு காலடியிலும். அங்கிருந்த விருட்சங்களின் நீண்ட கிளைகள் என்னை வளைத்துப் பிடித்து, முறுக்கி, எலும்புகளை நொறுக்கிவிடுமோ என்ற அச்சத்திலும், பெயர் தெரியாத ஏதேனும் பறவை ஒன்று விருட்டெனப் பறந்து வந்து தன் கூரிய அலகினால் என் கண்ணைக் கொத்தித் தட்டிச் சென்று விடுமோ என்ற பயத்தினூடும் நான் தயங்கித் தயங்கி நடந்தேன். சங்கிலிக் கட்டுகளில் பின்புறம் கிடக்கின்ற நாய்களுக்குத்தான் எத்தனை ஆவேசம். என் சதைகளைப் பிய்த்தெறியும் குரூரம் கண்களிலே மின்ன, முன்னங்கால்களால் மண்ணை விறாண்டி விறாண்டி மூர்க்கத்தனத்துடன் குரைக்கின்றன அவை. 'கடவுளே, சங்கிலிக் கண்கள் தெறித்துவிடக்கூடாது'
பலநூறு வருடங்களுக்கு முன்னால் சாத்தப்பட்ட ஜன்னலொன்று பெருமுயற்சியுடன் திறபடுவதைப் போன்ற சத்தம். நான் அண்ணாந்து பார்த்தேன். இருட்குகையில் ஒளிரும் மெழுகுவர்த்தி ஏந்தித் தோன்றுகிறாள் ஒருத்தி. முகலாய காலத்து மூடுபல்லக்கின் திரை விலகத் தெரியும் ஒரு பெண்ணின் சோகம் கவிந்த முகம். நாய்களை அவள் அதட்டுகிறாள். இஷ;டமற்று முனகல்களுடன் அடங்குகின்றன நாய்கள். என் பக்கம் அவள் பார்வை திரும்புகிறது.
'நான்.... நான்...' என்னைப் பற்றித் தட்டுத் தடுமாறலுடன் சொல்ல ஆரம்பித்தேன்..........
'தெரியும்..... தெரியும்.....' என்று இடைமறித்த அந்த சாளரத்து முகம் மறைந்து போனது. வாசற்கதவின் தாள்பாள் உட்புறமாக அகற்றப்படும் ஓசை சிறிது நேரத்தில் கேட்டது. வாசல் நிலையில் தலைதட்டும் உயரத்துடன் அவள் நின்றிருந்தாள். முதுமையின் படிகளில் அவள் கால் வைத்திருந்தாள். வீட்டின் மௌன ஓலம் அவள் முகத்திலும் இருந்தது. வாவென்று கூடச் சொல்லாமல் சாவி கொடுத்த பொம்மை போல் மறுபடியும் வீட்டுப்படிகளில் அவள் ஏறத் தொடங்கினாள். மேகங்களைக் கையால் பிடிக்கப் போவது போல் அவள் போய்க் கொண்டேயிருந்தாள். நான் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். முடிவிடம் தென்படாமல் படிகள்..........படிகள்.....படிகள்........
படிகளில் ஏறி ஏறி என் மூச்சு வாங்கியது. என் உடலை எங்கேனும் சாய்க்கா விட்டால் தாங்காது போலிருந்தது. களைப்பினால் தளர்ந்து போயிருந்தேன். ஒவ்வொரு படிகளிலும் என் முன்னால் அவள் ஏறிச் செல்கையில் அவளுடைய கூந்தலை நான் மிதித்து விடக்கூடாதேயென அஞ்சினேன். முடியப்படாத கூந்தலின் பின்னால் ஒளிந்திருக்கலாம் ஏதேனும் சபதம். ரோமர் இலக்கங்கள் கொண்ட, என்றோ நின்று போன சுவர் மணிக்கூடு ஒட்டடையுடன் தொங்குகிறது. என்னைத் திரும்பிப் பாராமல், பேசிய படி சென்றாள் அவள்.
'இது பாதுகாப்பான இடம் என்றா இங்கு நுழைந்தாய்?'
'....................................'
'என்னை உனக்குத் தெரியாதல்லவா?'
'தெரியாது'
'நான்தான் ரோசலீன் '
'உன் அம்மாவின் பள்ளிக்கூடத்து சினேகிதி'
அம்மா எதுவும் தானாகச் சொன்னதில்லை. அம்மாவின் பால்யகால நினைவுகள் கறையான் தின்ற ஒரு புத்தகம். அங்கிருந்து எனக்குக் கிடைத்ததெல்லாம் ஓரிருவரிகள். தெருவில் சிந்திய தானியமணிகளை அவசர அவசரமாகக் கைப்பற்றிய காகம் போல அவளுடைய சம்பாஷணைகளில் நான் பொறுக்கியவை சொற்பம். ஆனால் ரோசலீன் பற்றி அங்கு எதுவுமிருந்ததில்லை.
'வீட்டில் வேறு யாருமில்லையா?' என்று நான் கேட்டேன்.
'இதோ.... இந்த சுவர்களில் இருக்கிறார்கள்' கருகிப்போன மலர் மாலைகளுடன் தொங்கும் புகைப்படங்கள். அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
'போனார்கள்..... ஒன்றன் பின் ஒன்றாகப் போனார்கள். திரும்பி வரவில்லை.'
'இங்கே தனியாகவா இருக்கிறீர்கள்? உங்களுக்கு அப்படி இருப்பது பயமாயில்லையா?'
அவள் நடை நின்றது. திரும்பி என்னைப் பார்த்தாள். 'பயமா? எலும்புகளால் கட்டப்பட்ட வீடு இது. ரத்தத்தினால் வர்ணம் பூசப்பட்டது இந்த வீடு. இன்னும் என்ன நடக்க வேண்டும் பயப்பட?'
நாய்கள் மறுபடியும் குரைக்கின்ற ஓசை. வெளியே தத்தம் வல்லமை கூறி வானத்தையும் எச்சரிக்கின்ற துப்பாக்கிகள். அவள் பரபரப்படைந்தாள். ஒரு படி கீழே இறங்கி என் கைகளை ஆதரவுடன் அவள் பற்றினாள். நெருக்கத்தில் மதுவாடை வீசியது. கண்களில் நீர் தேங்கியிருந்தது.
'சிறகடியில் வைத்திருந்து வைத்திருந்து என் குஞ்சுகளை ஒவ்வொன்றாய்ப் பறிகொடுத்தேன். எனக்கு வந்த கதி உன் அம்மாவுக்கும் வேண்டாம்...... ஓடித்தப்பு........'
அவன் படிகளின் வழியாய் இறங்கி மறுபடியும் ஓடத் தொடங்கினான்.

வீரகேசரி
16.05.1993
இந்தியா டுடேஏப்ரல் 1993

Monday, July 14, 2014

மன்னிப்பாரா?

பவானி ஆழ்வாப்பிள்ளை

'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா!....' ஒரு வார்த்தைதான்!...... பெற்றவள் கெஞ்சுகிறேன்....' மூர்த்தி அந்தக் காட்சியை தினைவு கூரச் சகியாதவன் போல் கண்களை இறுக மூடிக்கொண்டான், பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வுமிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ்சோதனை. அவன் சுமை ஒன்றும் புதிதல்ல. யுகயுகமாய் இரு உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம்தான் -  ஒன்றைக் கடமை என்பர்! மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித்திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டுமிருக்கிறான். அவனுக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் நால்வர் காதலை மறந்து கடமை பெரிதெனக் கவலையற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலித்து வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந்தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள் - எல்லா விதத்திலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்குத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திரமறிந்துதான் இடச்சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இடமறிந்து மதிப்பிட்டுக் கொடுக்கவேண்டுமோ?

அந்தச சம்பவம் நடந்து இன்று ஆறு மாதங்கள் சென்று விட்டன. நாளை உதயத்தில் சுசீலாவுக்குத் திருமணம். குலம், கோத்திரம் பார்த்துத் திருமணம். உலகின் உதயவேளையில் சுசீலாவின் வாழ்வும் மூர்த்தியின் வாழ்வும் அஸ்தமித்து இருள் பாய்ந்துவிடும். வீட்டு மாடியிலே அவன் அறையில் மூர்த்தியின் உருவம் சாய்வு நாற்காலியில் கிடந்தது. அவன் உணர்வோ தெருக்கோடியில் கமலாவின் கல்யாணக்களை தோய்ந்த வீட்டை நோக்கி ஓடிவிட்டது. மூர்த்தி கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது. நாதஸ்வரகீதம் திறந்த ஜன்னலூடே காற்றில் மிதந்து வந்தது. மேள ஒலி அவன் இதயத்தைப் பிளப்பது போலிருந்தது. மனதில் பட்ட பச்சைக்காயம் ரணமாக வலித்தது. மூர்த்தி எழுந்து ஜன்னலை அறைந்து மூடினான். சுசீலாவின் குணத்திலே குறையில்லை என்றாலும் பிறப்பிலே குறைவைத்துவிட்டார் படைத்த கடவுள். அவளின் நிலையை அறிந்தும் தன் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்களென்று தெரிந்தும் மூர்த்தி தன் உள்ளத்தை நெகிழவிட்டான். எண்ணும் திறனென தனக்கு இருந்ததெல்லாம் அவளைச் சுற்றிப்படரவிட்டான். தன் அறிவின் எச்சரிக்கைக்குப் புறம்பான முடிவைக் கொண்டுவிட்டான். ஆனால் அந்த முடிவைப் பின்பற்றிச் செல்லவேண்டிய தருணத்தில் துணிவிழந்த கோழையாகி விட்டான்.

சுசீலா ஒளிவு மறைவு அற்றவள். அவள் மூர்த்தியிடம் எதையுமே மறைக்கவில்லை.

'மூர்த்தி, ஏழ்மையிலும் நான் கண்ட நிறைவே நான் தரக்கூடிய நிதியம், குணமே நான் தரும் குலம். ஆனால் நமது சமூகம் கொடுமை வாய்ந்தது மூர்த்தி, எண்ணித்தான் துணிந்தீர்களா? அல்லது இவை உணர்ச்சி வேகத்தில் பேசும் வார்த்தைகளா?'

'நான் துணிந்துவிட்டேன் சுசீ, உலகம் வேகமாக முன்னேறுகிறது. அந்த முன்னேற்றப் பாதையில் சாதி வரம்புகள் நிலைத்து நிற்க முடியாது. நாளைய உலகம் நம்மைத்தான் ஆதரிக்கும் சுசீ. இதில் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது?' எவ்வளவு தன்னம்பிக்கையோடு மூர்த்தி அன்று பேசினான். இன்று மனச்சாட்சியின் பாதை தாங்காது புழுப்போல் நெளிகிறான். சுசீலா அவனை நம்பினாள். ஆமாம்! அவன் திண்மையில், திடசித்தத்தில் நம்பிக்கை வைத்தாள். இன்று அவள் எண்ணத்தில் ஒரு கணம் கூட நிலைக்கத் தகுதியற்றவன் ஆகிவிட்டான்.

மூர்த்தியின் மனம் கலாசாலை நாட்களை நோக்கித் தாவியது. எத்தனை இன்பமான நாட்கள் அவை. அந்த வாலிப சமுதாயத்திலே காதலுக்கு எதிர்ப்பு இல்லை. ஆதரவு தான் கிடைத்தது. அந்தக் கவலையற்ற வாழ்க்கையோட்டத்தில் பெற்றோர்கள் எதிர்க்கக்கூடுமென்ற சிறு நினைவுகூடத் தேய்ந்துவிட்டது. வாழ்க்கையின் பரிதாபமே இதுதான். சீர்திருத்தக் கருத்துக்களைச் சிந்தையாய்க் கொண்ட இளைஞர் உலகம் சாதிசமய வேற்றுமைகளை மதிப்பதில்லை. அவை இன்றைய சந்ததிக்கு அர்த்தமற்றவையாய்த் தோன்றும். அதனால்தான் பழமையில் ஊறிய புதிய சந்ததியின் மனப்போக்கு அதற்கு விளங்குவதில்லை. ஆசார அனுஷ;டானங்களில் ஊறிப் பழைய சமூக திட்டத்தைப் போற்றி வாழும் முதிய சந்ததி சமூக சீர்திருத்தத்தை ஆதரிப்பதில்லை. சாதியை ஒழிப்பது சத்தியத்தை அழிப்பதை ஒக்கும் என்றெண்ணும் சந்ததி அது. அதனால்தான் கடமையைப் பாசத்தைக் காட்டிக் களங்கமற்ற இளம் உள்ளங்களைச் சிதைத்து விடுகிறது. மூர்த்தியின் தந்தை கண்கலங்கக்காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.

'மூர்த்தி, உனக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அளிக்க முடியாது போய்விடுமோ என்ற பயத்தால் எனக்கு வேறு குழந்தையே பிறக்காது பார்த்துக்கொண்டேன். விளையாட்டல்ல, மூர்த்தி. உண்மைதான். கடைசியில் எனக்கு நீ செய்யும் உபகாரம் இதுதானா? மானத்தோடு வாழ்ந்துவிட்டேனப்பா! மானத்தோடு என்னைச் சாகவிடு மூர்த்தி!' மூர்த்திக்குமனம் தாளவில்லை. அவர் பச்சையாய்த்தன் உள்ளத்தைத் திறந்து காட்டியது அவனை என்னவோ செய்தது. உள்ளத்தில் கொப்பளிக்கும் ஆற்றாமைதானே அவரை அப்படிப் பேசச் செய்தது. இப்படியும் ஒரு தியாகமா?.

'அப்பா....அப்பா.... நீங்கள் விரும்பியபடியே செய்கிறேன் அப்பா!' மூர்த்திக்கு அப்பொழுது தன் குரலே வேற்று மனிதனின் குரல்போல், விசித்திரமாக ஒலிப்பது போல் தோன்றியது. மூர்த்தி சற்றே உடம்பை நெளிந்து கொடுத்தான். பெற்றோருக்கு நிம்மதி அளித்துவிட்டவன் தன் நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டான். அவன் இதயத்தில் செதுக்கப்பட்ட அந்த உயிரோவியத்தை என்ன முயன்றும் அவனால் அகற்றிவிட முடியவில்லை. சுசீலாதான் அவனைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். அன்றொருநாள் அவளிடம் பெரிதாக வீரம் பேசினானே!.

'மூர்த்தி, எங்கள் இருவரை மட்டுமன்றி, இது உங்கள் பெற்றோரையும் சுற்றத்தையும் சம்பந்தப்பட்ட விஷயம், எங்கள் சமூகம் அப்படிப்பட்டது. எனக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் உறுதி உங்களுக்குண்டா? எனக்காக ரத்த பாசத்தின் பிணைப்பைக்கூட உதறி விடமுடியுமா உங்களால்?' சுசீயின் உள்ள அடித்தளத்திலே இந்த அச்சம் சதா அரித்துக்கொண்டிருந்தது. நியாயமான அச்சந்தானே! மூர்த்தி அவளுடைய விரிந்த கண்களை, சற்றே திறந்த உதடுகளைப் புருவ வளைவைப் பார்த்துப் பாசத்தோடு, பெருமையோடு சிரித்தான்.

'சுசீ, தாழ்வில் நீ கண்ட திருப்திதான் வாழ்வில் எனக்கும் வேண்டியது. எனக்குச் சுற்றமும் சூழலும் இனி நீதானே? ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வது போதாதா? சுசீ? என் மேல் அத்தனை அவநம்பிக்கையா உனக்கு?' அத்தனையும் சொற்கள்தான். வெறும் வெற்றுச் சொற்கள்தான். அன்று அந்தச் சிறுமிக்கு இருந்த அறிவு, தைரியம் - அவற்றில் ஒரு துளிகூட அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் உள்ளத்தின் நம்பிக்கை, ஆசை, கனவு, அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டான். சுசீலா அவனை நோகவில்லை. குற்றம் கூறவில்லை: வெறுக்கவுமில்லை.

'மூர்த்தி, உங்கள் பெற்றோரின் மணக்கசப்பின் அடிப்படையிலே நம் வாழ்வை அமைத்துக்கொள்வதால் சுகமில்லை, உங்கள் மனைவியாக வருபவள் உங்கள் குடும்பத்தை வாழ்விக்க வருபவள் - குடும்பத்தை குலைக்க வருபவள் அல்ல, வருந்தாதீர்கள். காலம் உங்கள் உள்ளக்காயத்தை ஆற்றிவிடும்.' அறிவு வார்த்தைகளை உருவாக்கி உதிர்ந்தது. ஆனால் உள்ளமோ உடைந்து சுக்கலாகிக் கொண்டது. அடக்க முடியாது கண்களில் பொங்கிய கண்ணீர் துடைக்கத் துடைக்கப் பெருகியது.

'சுசீ! உன்னை எப்படி மறப்பேன் சுசீ! உன்னை எப்படி மறப்பேன்?' சட்டென்று அவள் கைகளைப் பற்றித்தன் மார்பில் புதைத்துக் கொண்டான். சுசீ இன்னொருவன் உடைமையாவதா? முடியாது? முடியவே முடியாது! வெறி பிடித்தவன் போல் அவளை இமையாது பார்த்து நின்றான்.

'சுசீ, உனக்களித்துவிட்ட இதயத்தை வேறெந்தப் பெண்ணுக்கும் என்னால் கொடுக்கமுடியாது சுசீ! எனக்கு மிக அருகில் இருந்த நீ இன்று அணுகமுடியாத இலட்சியம் ஆகிவிட்டாய், என் நெஞ்சில் நிலைந்த உன் நினைவிலேயே நான் வாழ்வில் திருப்தி காணுவேன். நீ என்னை மறந்து சந்தோஷமாக வாழவேண்டும் சுசீ... மறுபிறவி என்று ஒன்றிருந்தால்!......'

மறுபிறவி! தொடுவானம்போல் உரு விளங்காத புரியாத மறுபிறவியை நினைத்து ஆசையை, உள்ளத்தாபத்தைத் தணிந்துக்ககொள்ள முடியுமா?

மூர்த்தி பெருமூச்சு விட்டான். மெல்லிய நாதஸ்வர ஒலி அடங்கி வெகு நேரமாகிவிட்டது. வெளியே பால் நிலவு காய்ந்துகொண்டிருந்தது. உலக இருளுக்கு ஒளி ஏற்ற ஒரு நிலவு உண்டு! – அவன் உள்ள இருளுக்கு?.... ஏன் இல்லை?' சுசீயின் நினைவு. அவன் உள்ளத்தில் என்றும் சிரிக்கும் சுசீயின் அழகு முகம் அவன் வாழ்வில் இருளென்பதே இல்லாமற் செய்துவிடும்... விடிய ஆறு மணிக்குக் கோயிலில் முகூர்த்தம் என்று கேள்விப்பட்டிருந்தான். உலகமே உறங்கிவிட்டது. ஆனால் அவன் உள்ளத்திற்குத்தான் இனி உறக்கமென்பதே இல்லையே! சுசீலா தூங்குவாளா? அல்லது அவனைப்போல நினைவுகளால் அலைப்புண்டு தவித்துக் கொண்டிருப்பாளா? சுசீலாதான் அதற்குள் திருணமத்திற்குச் சம்மதிப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அதற்குள் அவனை அவளால் மறக்க முடிந்ததா? ஏன் மறக்கக்கூடாது? அவனை நினைத்து அவள் ஏன் உருகவேண்டும்? நம்பி வந்தவளை நட்டாற்றில் விட்டு விட்டான். ஏளனத்திற்கு, அவமானத்திற்கு, அவதூறுக்கு ஆளாக்கிவிட்டான். அவனுக்காக அவள் வாழ்வெல்லாம் நிராதரவாய், நிறைவற்றவளாய் அலையவேண்டும் என்று நியதியா? ஆமாம். சுசீலா அவனை மறக்கத்தான் வேண்டும். அதுதான் அவனுக்குத் தகுந்த தண்டனை. ஆனால்.... ஆனால் மூர்த்தியால் தான் அவளை மறக்க முடியவில்லையே! அவன் அவளை மறக்க விரும்பவில்லையே! அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்றுபோல் அவன் காதில் ஒலித்தன.

'மூர்த்தி, உங்கள் மனைவியாய் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை. இருந்தும், நீங்கள் என்னைஎன்னை மட்டுமே காதலிக்கிறீர்கள் என்ற நினைவே எனக்கு நிறைவளிக்கும். நான் எதற்காகவும் வருந்தவில்லை. நான் எங்கு சென்றாலும், என்னவானாலும் உங்கள் நினைவுதான் என்னை வாழ்விக்கும் மறவாதீர்கள்!' சுசீலா ஆழ்ந்து, உணர்ந்து வாழ்பவள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ அற்புதத்தை, ஜீவரகஸ்யத்தை உணர்பவள். அவளுக்கா இந்தக் கொடுமை நடக்கவேண்டும்?..... கடவுளே சுசீலாவின் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்தன. இலைகளினூடே தென்றலின் முணுமுணுப்புப்போல அவள் குரல்தான் அந்த வார்த்தைகளை அவன் காதில் வந்து ஓதிற்று. ஏனோ மூர்த்திக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. சுசீலா அருகிலிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. மூர்த்தி தன் இதயத்தை அமுக்கிப் பிடித்தான், முகத்தைக் கரங்களில் புதைத்துக் கொண்டான்.

'ஐயோ சுசீ!' உள்ளத்தைப் பிளந்து எழுந்தது அவ்வேதனைக் குரல். 'ஐயோ சுசீ!' பாவம்! அவன் வேறென்ன சொல்லமுடியும்? வார்த்தைகளில் வடிக்க முடியுமா அந்த வேதனையை? சொல்லித் தெரியமுடியுமா அந்த இதயத்;;;தின் வலி? அனுபவித்தல்லவா அறியவேண்டும்!

'மூர்த்தி, மனச்சாட்சி ஒன்றின் முன்தான் மனிதன் இவ்வுலகில் மண்டியிடவேண்டும். மனச்சாட்சியின் சொற்படி வாழ்வை அமைப்பவன் தெய்வத்தின் வழி நடப்பவன் ஆவான்.' மீண்டும் சுசீயின் அதே ரகஸ்யக்குரல். மூர்த்தி உடம்பைச் சிலிர்த்துக்கொண்டான். ஏன் இன்று மட்டும் இந்த எண்ணங்கள் அவன் நினைவில் தோன்றுகின்றன? சுசீயைப்பற்றி எத்தனையோ இனிய நினைவுகள். இன்பக்கதைகள் எல்லாம் இருக்க, இன்று மட்டும் இந்தச் சில வார்த்தைகள் அவன் நினைவில் ஓங்குகின்றன. சுசீ நாளை இன்னொருவனை மணக்கப் போகிறாளென்றா? இல்லையில்லை. சுசீ உள்ளமும் உணர்வுமாக என்றும் அவனுக்கே உரியவள். அவனை மணக்கப்போகிறவன் - பாவம் - அவள் உடலைத்தானே ஆளப்போகிறான்? ஆமாம், அவள் தன்னை மறந்துவிட்டாள் என்று நினைத்தது மடத்தனம். சுசீ தன் காதலின் நினைவை என்றென்றும் மறக்கமாட்டாள்! மறக்க முடியாது. இந்த நினைவு மூர்த்தியின் நொந்த மனத்திற்கு ஏதோவொரு நிறைவளித்தது......

'சலக்...சலசலக்!...' மூர்த்தி திடுக்கிட்டுச் சப்தம் வந்த பக்கம் திரும்பினான். 'சலசலக்... சலக்!' மூடிய யன்னல் கண்ணாடியின் வெளிப்புறத்தில் சிறு கற்கள் மோதி விழுந்தன. யாரோ வெளியே நின்று அக்கற்களை எறிந்து அவன் கவனத்தைக் கவர முயல்கிறார்கள் போலும்! மூர்த்தி எழுந்து யன்னலைத் திறந்தான் - அங்கே... அங்கே....

'சுசீலா!' மூர்த்தி மெல்லக் கூவினான், ஆமாம்! அவள்தான்! கரிய போர்வையால் முக்காடிட்டு இருந்தாள். நிமிர்ந்து மேல் நோக்கிய அவன் முகத்தில் நிலவொளி வீசியது. மூர்த்தி திரும்பிப் படிகளை இரண்டு எட்டில் கடந்து வெளியே ஒடினான். அவள் நின்ற இடத்தில் அவளைக்காணவில்லை! பிரமையோ என....

'மூர்த்தி?' மெல்ல இழைபோல் அவள் குரல் இருளிலிருந்து எழுந்தது.

'உண்மையாக நீயா சுசீ? எப்படி வந்தாய்? உன்னைத் தேடமாட்டார்களா?'

'இல்லை மூர்த்தி, தலையிடி என்று சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டேன். எலலோரும் தூங்கிவிட்டார்கள். அறைக்கதவைப் பூட்டிச் சாவியை எடுத்து வந்தேன். விடியுமட்டும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்கள் எழுந்திருக்குமுன் திரும்பிவிடுவேன்.'

'சரி, இங்கே நிற்கவேண்டாம். உள்ளே வா சுசீ, வீட்டில் என்னைத் தவிர ஒருவரும் இல்லை. அப்பா, அம்மா வெளியூர் போய்விட்டார்கள். வா!' அறையினுள் மூர்த்தி விளக்கை ஏற்றினான். சுசீலா கண்களைக் கூசிக்கொண்டு அவனுக்கெதிரே சுவரில் சாய்ந்துகொண்டாள்.

'நாளைக்கு எனக்குத் திருமணம்...' பாதி தனக்குள்ளும் பாதி உரத்துமாய் முணுமுணுத்த சுசீலா மூர்த்தியை நிமிர்ந்து நோக்கினாள்:

'மூர்த்தி, நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றதும் ஆச்சரிப்பட்டீர்களா? என் தாயின் திருப்திக்காக, இந்த சமூகத்தில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்காகத் திருமணம் செய்துகொள்ள உடன்பட்டேன். மூர்த்தி, என் உள்ளத்தையும் உணர்வையும் உங்கள் ஒருவரால்தான் தொடமுடியும், ஆனால்.... ஆனால்.... இன்று என் உடலைக் கூட இன்னொருவன் தொடநேரும் என்ற நினைப்பையே என்னால் தாங்க முடியவில்லை. மூர்த்தி, நான் உங்களுக்குரியவள், என் உள்ளமும் உணர்வும் உடலும் உங்களுக்குரியவை. என் வாழ்வு உங்களோடு ஆரம்பித்து உங்களோடு முடிவதொன்று. உங்களுக்குள்ளே அது என்றென்றைக்குமாய் ஒன்றிவிடட்டும். மூர்த்தி, ஆண்டவனுக்கு அர்ப்பணமாகி விட்ட மலர் பொன் தட்டில் இருந்தாலும் புழுதியில் வீழ்ந்தாலும் புனிதம் குறையாது. உங்களோடு ஒன்றுவதால் என் புனிதம் குறையாது மூர்த்தி!' அவள் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

'நீ என்ன.... சொல்கிறாய் சுசீ?' அவன் குரல் நடுங்கியது.

'உங்களுக்குப் புரியவில்லையா மூர்த்தி? இல்லை. உங்களுக்கு நன்றாகப் புரிகிறது. மூர்த்தி காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில், இந்த என் முடிவு கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானதல்ல மூர்த்தி....'

'உண்மையாகவா சுசீ?' கற்பனைக்கெட்டாத சுகம் என்று ஒன்று இருந்தால் மூர்த்தி அதை அக்கணம் உணர்ந்தான். சுசீலா ஓடிவந்து அவனருகே மண்டியிட்டாள்.

'மூர்த்தி, நேர்மையே உருவான உங்கள் சுசீலா ஒழுக்கம் தவறிப் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, என் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்ததால்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் உரிமையை இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம். கோடி இன்பங்களையும் ஒரு கணத்தினுள் குவித்துக்கொள்வோம், நாளை சுசீலா நடைப்பிணமாகிவிடுவாள்.....'

சட்டதிட்டத்தைச், சாதிவரம்புகளை மதித்தவர்கள் மனித இதயங்களை மதிக்கவில்லை. அதனால் சுசீலா இன்று பண்பிழந்தவளா? ஒழுக்கங்கெட்டவளா? வழுக்கி விழுந்தவளா? அன்றி இதுதான் வாழும் வீரமா?

சுசீலா துடிக்கும் உதடுகளைப் பல்லால் அழுத்திப் பிடித்தாள்.

'மூர்த்தி.... மூர்த்தி மானசீகமாய் மட்டுமின்றி என்னால் என்றுமே உங்களோடு வாழமுடியாது. ஆனால்... இந்தக் கணம் உங்களோடு வாழ்கிறேன். இதை அறிந்தால் உலகம் என்னைக் கேவலமாய்க் கருதும்: பகிஷ;கரித்துவிடும். ஆனால்.... ஆனால் கடவுள் மன்னிப்பார் இல்லையா?'.

'சுசீ!' மூர்த்தி அவளை இறுக அணைத்துக் கொண்டான். 'நிச்சயமாக நம்மை மன்னிப்பார்.!'.