Search This Blog

Tuesday, April 10, 2012

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்




முனைவர் சி. சேதுராமன்



16. கொள்ளி

‘கொள்ளி’, ‘கொல்லி’ என்ற இருவேறு சொற்கள் பலகாலமாக மக்களிடையே வழக்கில் வழங்கி வருகின்றன. எரிதல், எரிவது, என்ற பொருளில் ‘கொள்ளி’ என்ற சொல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கொல்லி என்பது அழித்தல், அழிதல் என்ற பொருளில் வழங்கப்பட்டு வருகின்றது. ‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ எனற திருக்குறளில் கொல்லி என்பது அழித்தல் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.

ஒரு கோலில்(குச்சி) அல்லது தீப்பந்தத்தில் தீப்பற்றிக் கொள்ளுவதைக் கொள்ளி என்று குறிப்பிடுகின்றனர். விறகுகள் அடுப்பில் எரிகின்றபோது அதனைக் ‘கொள்ளி’ என்று கூறுவர். எரிகின்ற விறகினைக் கொள்ளிக்கட்டை என்பர். இவ்வாறு வழங்கப்படும் இக்கொள்ளி என்ற சொல்லைப் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் பல்வேறு விதமான பண்பாட்டு நெறிகளை விளக்கியுள்ளனர்.

எரியும் கொள்ளி

மனிதர்கள் அனைவரும் நல்லவர் அல்லர்.அவர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்களாக இருந்தாலும் சமுதாயச் சூழலால் தீயவர்களாக மாறுகின்றனர். இவ்வாறு தீயவர்களாக மாறுபவர்கள் மிகவும் கொடியவர்களாக எந்தக் கொடுமை செய்வதற்கும் அஞ்சாதவர்களாக இருப்பர். மகாபாரதத்தில் வரும் சகுனியும், ராமாயணத்தில் வரும் கொடுமனக் கூனியும் கொடுமையில் சிறந்தவர்களாக விளங்குகின்றனர். இவர்களுள் யார் சிறந்தவர் என்று கூறுவது இயலாது. இருவருமே கொடுமையின் உச்சத்திற்குச் சென்றவர்கள். பாரதியார் சகுனியை, மாயச் சகுனி, கள்ளச் சகுனி என்று தமது பாஞ்சாலி சபதத்தில் குறிப்பிடுவது இதனைத் தெற்றென விளக்கும்.

ஹிட்லர், இடிஅமீன், முசோலினி உள்ளிட்டோர் உலகக் கொங்கோலர்கள் ஆவர். இவர்களில் யார் நல்லவர் என்று கூற முடியும்? யாரையும் கூற இயலாது. அதுபோன்றே சமுதாயத்தில் மக்களுக்குத் தீங்கு செய்பவர்களைக் குறிக்க

‘‘எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி
எல்லாம் ஒன்றுதான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.


ஊருக்கு நிழல் தரும் ஆலமரம் ஒன்று இருந்தது. அதில் ஒரு காகம் கூடு கட்டி வாழந்து வந்தது. ஆனால் அந்தக் காகம் அம்மரத்தினடியில் வந்து தங்குவோரின் மீது எச்சமிட்டு அவர்களை வெறுப்பேற்றியது. மக்கள் அனைவரும் அந்தக் காகத்தை வெறுத்துப் பேசியபடி சென்றனர். இதனைக் கவனித்த மற்றொரு காகம் ஏன் இவ்வாறு செய்கிறாய்? மற்றவர்கள் மீது இவ்வாறு எச்சமிடுவது கீழ்த்தரமான செயல் இல்லையா? இதனை விட்டுவிடு என்று அறிவுரை கூறியது. ஆனால் அக்காகம் உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ என்று கூறி அம்மர நிழலில் தங்குபவர்களின் மேல் எச்சம் இட்டுக் கொண்டே இருந்தது. வயதாகியதால் அக்காகம் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்போது அருகிலிருந்த தனது மகனான காகத்திடம் நீ என்னைப் போல் இராதே! நீயாவது நல்லவனாக இரு என்று கூறிவிட்டு இறந்து விட்டது.

ஆனால் மகனான காகமோ தன் தந்தை கூறியதைப் பின்பற்றாது அதைவிட வித்தியாசமாக என்ன செய்யலாம் என யோசித்துச் செய்ய ஆரம்பித்தது. ஆலமரத்தடியில் ஆள்கள் வந்தவுடன் அக்காகம் அந்த ஆளின் தலைக்கு நேராக வந்து தங்கும். பின்னர் வந்த ஆள் மேல் நோக்கிப் பார்க்கும்போது அவனது முகத்தில் எச்சமிடும். இவ்வாறு செய்துவிட்டு உயராமான கிளையில் சென்று அமர்ந்து கொள்ளும். இதனால் அனைவரும் அக்காகத்தின் மீது மிகுந்த அருவருப்பு கொண்டனர்.

‘‘…ச்சே அந்தக் காகமும் இந்தக் காகமும் மிகவும் மோசமானவை. இரண்டும் ஒன்றை ஒன்றில் குறைந்தது கிடையாது. கீழ்த்தரமானவை என்று புலம்பி விட்டுச் சென்றனர். பின்னர் அம்மரத்தடியை விட்டுவிட்டு அருகிலுள்ள வேறு மரத்தடியில் தங்க ஆரம்பித்தனர். மேற்குறித்த பழமொழியை இக்கதை நன்கு விளக்குவதாக உள்ளது. இப்பழமொழியைப் போன்றே,

‘‘கழுதை விட்டையில முன்விட்டை (சாணம்) வேற பின்விட்டை வேறயா?’’

என்ற பழமொழி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தீயதைப் பயன்படுத்துதல்

சிலர் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் பண்புடையவர் ஆவர். அத்தகையவர்களை, ‘அதமர்கள்’, ‘பாவி’ என்று வழக்கில் மக்கள் வழங்குகின்றனர். அத்தகைய தீயவர்களுடன் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் சிலர் வேறு வழியின்றி தீயவர்கள் என்று அறிந்த பின்னரும் அவர்களுடன் தொடர்பு கொள்வர். இதனால் பெரும் துன்பம் அவருக்கு வந்து சேரும்.

சகுனி தீயவன் என்று அனைவருக்கும் தெரியும். இதனைத் துரியோதனனுக்குப் பலரும் எடுத்துக் கூறினர். துரியோதனனும் சகுனியைப் பற்றி அறிவான். இருப்பினும் துரியோதனன் சகுனியுடன் நட்புக் கொண்டு அவன் கூறியபடி நடந்தான். அதனால் அழிந்தான். இத்துரியோதனன் போன்றே இன்று பலர் தீயவர்களுடன் நட்புக்கொண்டு அழிகின்றனர் என்பதனை,

'‘எரிகிற கொள்ளிக் கட்டையை எடுத்துத்
தலையைச் சொரிஞ்சுகிட்ட கதைதான்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

முடி மென்மையானது. விரைவில் தீப்பற்றும் தன்மை கொண்டது. ஒருவன் எரிகின்ற விறகினைப் பயன்படுத்தி தலை அரிக்கின்றது என சொரிந்து கொண்டால் தீப்பற்றி எரிந்து சாம்பாலாகி விடுவான். அதுபோன்று தீயவர்களுடன் சேர்ந்திருப்பவன் அழிவான் என நட்புக் கொள்ளும் தன்மை குறித்து இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. மேலும் இப்பழமொழியானது,

‘‘கொள்ளிக்கட்டையால் முதுகைச் சொரிஞ்சு கிட்ட கதைதான்’’

என்றும் மக்களிடையே வழங்கப்படுகின்றது. முதுகில் சொறிந்து கொண்டாலும் அந்த இடம் புண்ணாகித் துன்பத்தைக் கொடுக்கும். தீய நட்புக் கொள்ளாது நல்லோருடன் நட்புக் கொண்டு வாழ வேண்டும் என்று இப்பழமொழி வழி நமது முன்னோர்கள் பண்பாட்டு நெறியை எடுத்தியம்புகின்றனர்.



பிள்ளையும் – கொள்ளியும்

மனிதன் பெறக் கூடிய பேறுகளில் (செல்வங்களில்) குழந்தைச் செல்வம் முக்கியமானதாகும். குழந்தை இல்லை எனில் வாழ்வு முழுமை பெறாது. அதிலும் ஆண் குழந்தை இல்லாவிடில் பேரிழப்பு என்று கருதக் கூடிய மனநிலை மக்களிடையே காணப்படுகின்றது. பெண் குழந்தை இருந்தாலும் ஆண் குழந்தை பெறுகின்ற போதுதான் வாழ்வு நிறைவுடையதாக இருக்கும் என்று மக்கள் கருதுகின்றனர்.

ஒருவர் இறந்து விட்டால் அவருக்குப் பெண் குழந்தைகளிருப்பின் அக்குழுந்தை கொள்ளி வைக்க முடியாது. ஆண் குழந்தை மட்டுமே கொள்ளி வைக்க உரிமை உண்டு. இது சமுதாயத்தில் எழுதப்படாத சட்டமாக விளங்குகின்றது. ஆண் குழந்தை இருந்து கொள்ளி வைத்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று மக்கள் நம்புவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

பெண் குழந்தை குடம் உடைக்கும் சடங்கினைச் செய்ய ஆண் குழந்தை கொள்ளி வைப்பான். இதனை,

‘‘கொடமுடைக்கப் பிள்ளை இல்லாட்டியும்
(பெண்குழந்தை) கொள்ளி வைக்கப் பிள்ளை வேணும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

ஆண் குழந்தைகளுக்குரிய சமுதாய மதிப்பினை இப்பழமொழி எடுத்துரைப்பதுடன் பெண் குழந்தைக்கு உள்ள உரிமை மறுப்பினையும் எடுத்துரைக்கின்றது. பெண் குழந்தைக்குக் கொள்ளி வைக்கும் உரிமை கிடையாது. ஆண் குழந்தைக்கு மட்டுமே உண்டு. சமுதாயத்தில் காணப்படும் ஆண், பெண் ஏற்றத் தாழ்வினையும், பாலின வேறுபாட்டையும் உள்ளீடாகக் கொண்டு இப்பழமொழி அமைந்துள்ளது.



வெள்ளி - கொள்ளி

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. வெள்ளிக்கிழமை இறைவழிபாட்டிற்குரிய நாள். இருப்பினும் இந்தக் கிழமையில் குழந்தை பிறத்தலை மக்கள் விரும்புவதில்லை. வெள்ளிக்கிழமையில் பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ பிறந்தால் அக்குழந்தை மிகுந்த துன்பங்களைச் சந்திக்கும். வாழ்வில் போராடும் என்று மக்கள் நம்புகின்றனர். அதிலும் குறிப்பாக ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் தந்தை இறந்து விடுவான். அக்குழந்தையும் வாழ்வில் பல்வேறு விதமான துன்பங்களை அனுபவிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. இத்தகைய மக்கள் நம்பிக்கையை,

‘‘வெள்ளிக்கு உடையவன்
கொள்ளிக்கு உடையவன்’’

என்ற பழமொழி புலப்படுத்துகிறது.

வெள்ளிக் கிழமையில் ஆண் குழந்தை பிறந்தால் எந்தவிதமாக துன்பமும் ஏற்படாது. என்றபோது மக்களிடையே இப்படியொரு நம்பிக்கை வழங்கப்பட்டு வருவது வியப்பிற்குரியதாக உள்ளது. இத்தகைய மூட நம்பிக்கைகளுக்கு மக்கள முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்ற சிந்தனையை இப்பழமெழி உள்ளீடாகக் கொண்டுள்ளது நோக்கத்தக்கது.

கொள்ளியும் எண்ணெயும்

துன்புறுவோருக்குத் துன்பத்திலிருந்து விடுபடக் கூடிய வழியினைக் கூயி உதவ வேண்டும். அதுவே மனிதத்தன்மை ஆகும். அவ்வாறு உதவ இயலவில்லையெனில் போசாது ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இதனையே,

‘‘நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்’’

என்ற புறநானூற்று வரிகளும் எடுத்தியம்புகின்றது. இன்று மனிதர்கள் நல்லது செய்யா விட்டாலும் தீயது செய்யாது இருக்கின்றார்களா? இல்லையே. மேலும் மேலும் துன்பத்தை மிகுதிப்படுத்தும் செயல்களிலேயே மனிதர்கள் ஈடுபடுகின்றனர். மனிதர்களின் இவ்விழி பண்பினை,

‘‘எரியிற கொள்ளியில எண்ணெய ஊத்துவது போல’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

எரிந்து கொண்டிருக்கும் விறகில் எண்ணெய் ஊற்றினால் மேலும் மேலும் தீ எரியுமே தவிர அதன் வேகம் குறையாது. துன்பத்தினைக் குறைப்பதற்கு வழி கூறாது மிகுதிப்படுத்துவது போல் நடந்தால் அது எரிவதில் மேலும் எண்ணெய் ஊற்றித் தீயை மிகுதிப்படுத்துவதைப் போன்று அமையும். மனிதர்கள் இங்ஙனம் நடந்து கொள்ளக் கூடாது. மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி உணர்த்துவதாக உள்ளது.

இப்பழமெழி உவமைத் தெடடர்போன்று அமைந்திருப்பதால் வழக்குத் தொடரோ என்ற எண்ணம் ஏற்பட்டாலும் அது பழமொழியே ஆகும். உவமை போன்று அமைந்த பழமொழி என்று இதனைக் குறிப்பிடலாம்.

இவ்வாறு கொள்ளி என்பது மக்களின் பழக்க வழக்கங்களையும், பண்பினையும் எடுத்துரைக்கின்றதுடன் நல்ல பண்பாட்டு நெறிகளையும் இச்சொல்லமைந்த பழமொழிகள் தெளிவுறுத்துகின்றன. மூடப் பழக்கவழக்கங்களை விடுத்து முழுமையான பண்பாட்டு வழியில் வாங்குடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment