Search This Blog

Saturday, April 4, 2020

ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962)

காமத்தையும் காரத்தையும் ஒப்பிட்ட ஃப்ரெஞ்ச் தத்துவ அறிஞர் ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille 1897 - 1962).
சமூகவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம் போன்ற பல துறைகளில் அறிஞராக விளங்கிய ஜார்ஜ் பத்தாயின் (1897 - 1962) முக்கியத்துவம் என்னவென்றால், அவரது சிந்தனை அவரது காலத்தை விட ஒரு நூற்றாண்டு முன்னால் இருந்தது. அதாவது, 2030இல் சொல்ல வேண்டியதை 1930-லேயே சொன்னார் பத்தாய். அதனால்தான் அவரை யாருக்கும் புரியாமல் போய் விட்டது. கருத்துச் சுதந்திரத்தை அதி தீவிரமாகப் பாராட்டக்கூடிய ஃப்ரான்ஸிலேயே ஜார்ஜ் பத்தாய் யாருக்குமே தெரியாத ரகசியப் பெயரில் எழுத வேண்டியிருந்தது. காரணம், அவர் புதினங்கள் ஒழுக்கக் கேடானவையாக (immoral) இருந்தன. 1940களில் எழுதப்பட்ட அவரது புத்தகங்கள் 1990களில்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆனால் பத்தாயை தெரிதா, ஃபூக்கோ, ஜூலியா க்றிஸ்தவா, சூஸன் சொண்டாக் ஆகியோரின் துணை கொண்டு வாசித்தால்... இல்லை, அதெல்லாம் கூட வேண்டாம்; பத்தாயின் புனைகதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவருடைய கட்டுரைகளேதான் திறவுகோல். இவர் காலத்தில் வாழ்ந்த சக ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களையெல்லாம் விட ஏராளமாக எழுதினார் என்றாலும் உயிரோடு இருந்த போது யாரும் இவரை அங்கீகரிக்கவில்லை; சரியாக விவாதிக்கவும் இல்லை.  இவ்வளவுக்கும் உலகிலேயே அதிக அளவில் எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் ஃப்ரான்ஸ்.  ஒரு பாப் பாடகரைப் போல் உலகம் முழுவதும் அறியப்பட்ட எக்ஸிஸ்டென்ஷியலிச சூப்பர் ஸ்டாரான ஜான் பால் சார்த்தர் கூட ஜார்ஜ் பத்தாயை மட்டமாகவும் கிண்டலாகவும்தான் குறிப்பிட்டார்.  ”பத்தாய் ஒரு தத்துவவாதி அல்ல; அவர் ஒரு mystic.  இலக்கியம் என்பது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்”  என்பது சார்த்தரின் நிலைப்பாடு.  இது கிட்டத்தட்ட மார்க்சீயவாதிகளின் நிலையை ஒத்தது.  ஆனால் பத்தாய் இதை ஸ்தாபன ரீதியான சித்தாந்தம் (Status quo) என்று ஒதுக்கித் தள்ளினார்.   சார்த்தருக்கும் பத்தாய்க்கும் நடந்த விவாதங்கள் Excremental Vs Existential என்று பேசப்பட்டது.

எல்லாவற்றையும் விட ஆச்சரியம், பத்தாயுமே தன்னை ஒரு ‘மிஸ்டிக்’ என்றே சொல்லிக் கொண்டார். அவர் எழுத்துகளில் அடிக்கடி ‘உள்ளார்ந்த அனுபவம்’ என்ற வார்த்தை தென்படுகிறது. பாலியல் அனுபவம் அப்படிப்பட்டதுதான் என்பது பத்தாயின் கருத்து. உதாரணமாக, பத்தாயின் மதாம் எத்வார்தா சிறுகதையை எடுத்துக் கொள்வோம். (இதையும் பத்தாய் யாருமே அறியாத ரகசியப் பெயரில்தான் எழுதினார்.) தெரிதா போன்றவர்களின் சிந்தனையில் பெரும் பாதிப்பை நிகழ்த்திய மற்றொரு ஃப்ரெஞ்ச் தத்துவவாதியும், இலக்கியக் கோட்பாட்டாளருமான Maurice Blanchot இந்தக் கதையைப் பற்றி, ’the most beautiful narrative of our time' என்று குறிப்பிடுகிறார். அதில் உள்ளார்ந்த அனுபவமும் பாலியல் அனுபவமும் ஒன்றாக இணையும் ஒரு காட்சியைப் பார்ப்போம்:
She was seated, she held one long leg stuck up in the air, to open her crack yet wider she used her fingers to draw the folds of skin apart . .. 'Why', I stammered in a subdued tone, 'why are you doing that?' 'You can see for yourself ', she said, 'I'm GOD'.

ஜார்ஜ் பத்தாய் அவருடைய காலத்தில் அங்கீகரிக்கப்படாமல் போனதற்குக் காரணம், அவருடைய சிந்தனை, எழுத்து எல்லாமே அப்போது முற்றிலும் புதிதாக இருந்தது. உதாரணமாகச் சொன்னால், அவர் பச்சையான போர்னோ மொழியில் கதைகளை எழுதினார்.  அதற்கு அப்போது போர்னோ எழுத்து என்பதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கொடுக்கப்படவில்லை.  1928-இல் அவருடைய ”கண்ணின் கதை” என்ற நாவல் Lord Auch என்ற பெயரில் வெளிவந்தது.  பல ஆண்டுகளுக்கு அந்தப் பெயரில் எழுதியது யார் என்றே தெரியாமல் இருந்தது.  Auch என்ற வார்த்தை aux chiottes  என்ற பேச்சு வழக்கின் சுருக்கம்.  கிட்டத்தட்ட அதன் பொருள், நீ கக்கூஸுக்குத்தான் லாயக்கு.  ஆக, Lord Auch என்பதை கக்கூஸ் நாயகன் என்று மொழிபெயர்க்கலாம்.  போர்னோ மொழியில் எழுதப்பட்ட ”கண்ணின் கதை” ஒரு போர்னோ நாவலாகவே கருதப்பட்ட நிலையில் அந்த நாவலைப் பற்றி 1962-இல் ரொலான் பார்த் Metaphor of the Eye என்ற கட்டுரையை பத்தாயின் பத்திரிகையான Critique-இலேயே எழுதினார்.  அந்தக் கட்டுரைதான் முதல் முதலாக ”கண்ணின் கதை” என்பது போர்னோ நாவல் அல்ல; தத்துவார்த்தமாக விரியும் பல அர்த்தத் தளங்களைக் கொண்ட நாவல் என்பதை நிலைநாட்டியது.  அந்தக் கட்டுரையை ரொலான் பார்த் எழுதிய போது ஜார்ஜ் பத்தாய் உயிரோடு இல்லை என்ற முக்கியமான தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  அது மட்டும் அல்ல; பத்தாயின் மற்றொரு நாவலான My Mother  அவரது மரணத்துக்குப் பிறகே பிரசுரமாயிற்று.  ஈடிபஸ் காம்ப்ளக்ஸை அடிப்படையாகக் கொண்ட, வெளிப்படையான மொழியில் எழுதப்பட்ட நாவல் அது.  பத்தாய் 1935-இல் எழுதி முடித்த Blue Moon என்ற நாவலும் 1957-இல் தான் பிரசுரமாயிற்று.  இந்த நாவல் எப்படி இருக்கும் என்பதை இங்கே நான் விவரிப்பது கூட சாத்தியம் இல்லை.  ஆனால் பத்தாய் ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லப்படுவது எப்படியென்றால், 1935-இல் அவர் எழுதியதெல்லாம் 1939-இலிருந்து ஐரோப்பிய நகரங்களில் நிகழத் துவங்கியது.  பாலியலும் மரணமும் ஒன்றுக்குள் ஒன்று சிக்கிக் கொள்ளும் தத்துவார்த்த முரண் பற்றிய நாவல் அது. 
1936-இல் பத்தாய் Acephale என்ற ரகசிய வாசகர் வட்டத்தைத் துவக்கினார்.  வட்டத்தின் சார்பில் அதே பெயரில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது.  ஆஸிஃபால் என்ற கிரேக்க வார்த்தைக்கு  ”தலையற்ற” என்று பொருள்.   இதன் உறுப்பினர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வட்டம் பற்றிய செய்திகளை வெளியே சொல்லக் கூடாது என்பது முக்கியமான விதி.  ஆஸிஃபால் வாசகர் வட்டம் இரண்டாம் உலகப் போர் (1939)  துவங்கிய போது முடிவுக்கு வந்தது.  1936-39 நான்கு ஆண்டுகளில் ஐந்து இதழ்கள் வெளிவந்தன.  முதல் இதழ் எட்டு பக்கங்களைக் கொண்டிருந்தது.  இந்த வட்டத்தில் பல ரகசியமான விதிகள் கடைப்பிடிக்கப் பட்டன. உதாரணமாக, வட்ட உறுப்பினர்கள் யூத எதிர்ப்பாளர்களோடு பழகக் கூடாது; சந்தித்தால் கூட கை குலுக்கக் கூடாது.  தலையை வெட்டி தண்டனை கொடுப்பது சரியே.  ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது 16-ஆம் லூயியின் தலை வெட்டப்பட்டதை வட்டம் ஆதரித்தது.  அதேபோல் வட்டத்தில் தியான வகுப்புகளும் மற்ற தாந்த்ரீக செயல்முறைகளும் நடத்தப்பட்டன.  
பத்தாயை, அவருடைய பாலியல் எழுத்தை எப்படி மிஸ்டிஸிஸத்துக்குள் அடக்குவது? இரு உடல்களின் சேர்க்கையை அவர் ”ஒருமை” என்கிறார். ஈருடல், ஓருயிர் என்று சொல்வோம் அல்லவா, அதுதான் அவர் சொல்லும் மிஸ்டிக் அனுபவம். இதை அவர் மரணத்தோடு இணைக்கிறார். ஏனென்றால், மரணம்தான் சிருஷ்டியின் விதை. இலக்கியத்தைக் கூட பத்தாய் அப்படித்தான் வரையறுக்கிறார். 
Literature (fiction) took the place of what had formerly been the spiritual life; poetry (the disorder of words) that of real states of trance.
”ஆன்மிகம் இருந்த இடத்தை இலக்கியம் பிடித்துக் கொண்டது; கவிதை என்பது தியானத்தின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.”
பத்தாயின் எழுத்தில் இருவித மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று, பாத்திரங்களின் மரணம். இரண்டாவது, எழுத்தாளனின் மரணம். ஆம், பத்தாய் தன் ஒவ்வோர் எழுத்திலும் தன்னையே மறுதலித்துக் கொண்டு செல்கிறார். தன்னுடைய கதையாடலைத் தானே கலைத்துப் போடுகிறார். (நான் எழுதுவது புத்தகம் அல்ல; வாசகருக்கு அது ஒரு சவால்: பத்தாய்). தானே தன்னுடைய பிரதியில் இல்லாமல் போகிறார். அர்த்தத்துக்கு எதிரான எழுத்தை உருவாக்குகிறார். இப்படியாக எழுத்தின் அதிகாரத்தை நொறுக்கி விடுகிறார். இது பத்தாய் பற்றிய தெரிதாவின் ஒரு வாசிப்பு.


https://minnambalam.com/
சாரு நிவேதிதா



விரல்களும் முத்திரை மருத்துவமும்

 


1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.




4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும். .

9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.
10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும். 

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
http://maruththuvam.blogspot.com/


புரிந்து கொள்ளலுக்காக தயாராதல்


கணவன், மனைவி, குழந்தைகள் என அனைவரும் ஒரு சேர வீட்டிலிருந்து என்பது சிம்ம சொப்பனமாகதொரு விஷயம். இதனை அழகான, அர்த்தபூர்வமான முறையில் பயன்படுத்துவோம்.
1. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் நிலை நிறுத்தி திறந்த மனதுடன் செயல்படுவோம்.
2. வீட்டில் உள்ள வேலைகளை அனைவரும் சேர்ந்து பகிர்ந்து செய்வோம்.
3. ஒன்றாக அமர்ந்து உணவை உட்கொள்வோம், இவ்வேளையில் உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் நடைமுறையையும் தினமும் சிறிதளவேனும் நடைமுறைப்படுத்துவோம்.
( பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு உரிய ஆலோசனைகள் தொடரும் பதிவுகளில்)
4. செய்திகளைப் பார்ப்பதாயினும் ஏன் திரைப்படம் பார்ப்பதாயினும் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பாருங்கள். இதனால் தேவையற்ற விடயங்கள் தவிர்க்கப்படும் அனைவரின் ரசனைகளும் உணரப்படும்
5. தாய், தந்தையர் இருவரும் சேர்ந்து குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அவர்களுடன் பேசி உரிய வழிகாட்டல்கைளயும் ஆலோசனைகளின் அவர்களின் ஆசிரியர்களை அணுகி திட்டமிடுங்கள்.
(ஆசிரியர்கள் இதற்கு உதவிட முடியும்)
வளமான எதிர்காலத்திற்கான ஒவ்வொருவரின் வகிபாகம் பற்றி வரையறுத்துக் கொள்ள முடியும்
6. அனைவரும் ஒன்றாக இறை வழிபாடு, ஓதல்களை மேற் கொள்ள முடியும் இதனால் அனைவரின் வணக்கங்களும் ஒழுங்கமைக்கப்படும்.
7.வீட்டில் உள்ள அனைவருக்கும் ஓய்வு நேரமொன்று கிடைக்கும் அனைவரும் இணைந்து செயல்படுவதால், மனம் விட்டு பேசுங்கள், பிடித்த, பிடிக்காத விடயங்கள், சங்கடங்கள், ஆசைகள், கனவுகள், இயலுமைகள், இயலாமைகள் பற்றி.
இதனால் தனியாள் திறமைகளை கண்டு கொள்ள முடியும். அதற்கு உதவிட முடியும். அனைவரும் ஓர் பொழுது போக்கை அடையாளப்படுத்தலாம். தொலைக்காட்சி, தொலைபேசியை விடுத்து, புத்தகம் வாசித்து, அதனைப் பகிர்ந்து கொள்ளல், எழுதுதல், சித்திரம் வரைதல், புகைப்படம் எடுத்தல், தையல், கைவினை, தோட்டம் செய்தல், போன்றவை.
8. குழந்தைகளின் கற்றல் விடயங்களை ஒழுங்கமைக்கலாம், அவர்களின் சிறப்புத் தேர்ச்சி, குறைபாடுகள் பற்றி கலந்துரையாடி நிவர்த்தி செய்ய உதவி செய்ய முடியும்.
மேலும் கற்பதற்கானதொரு சரியான இடம் / அறையினை அவர்களின் விருப்பப் படி அமைத்துக் கொடுக்கலாம்.
9.பின்னர் அனைவரும் ஒன்றாய் உறங்க செல்வதன் மூலம் வீண் தொடர்பாடல், நேர வீண் விரயம் போன்றவற்றை தடுக்கலாம்.
இது சரியான சந்தர்ப்பம், அனைவரும் வீட்டில் ஓய்வாக இருக்கின்ற பொழுதை தன்னிறைவான குடும்பத்தினுடாக நாட்டைக் கட்டியெழுப்புவோம் பற்றி சிந்திப்போம்.
பொறுமையாகவும் நிதானமாகவும் செயற்படுவோம்
Mrs.Rifka Rafeek SLAS


Friday, April 3, 2020

பாலியலும் தமிழ்ப்புனைவும்: பிராய்டில் இருந்து கலகம் வரை

பாலியலை காத்திரமாக நேரடியாக பேச பொதுவெளியில் தடை உள்ளது. அதனால் வெகுஜன இதழ் கதைகளில் பாலியல் வேறுவிதமாக எழுதப்பட்டது. மிகையாக குற்றவுணர்வு தோன்ற சற்று வக்கிரமான சித்திரங்களுடன். ஆனால் சிற்றிதழ்களில் பாலியல் எழுத அபாரமான சுதந்திரம் இருந்தது. பாலியல் கதைகள் எழுதினவர்கள் உடனடியாக கவனிக்கப்பட்டார்கள்
அவை பொதுவாக மூன்று வகை. 
கிளர்ச்சி பாலியல் எழுத்து. 
உளவியல் பாலியல். 
அரசியல் பாலியல். 
இந்த மூன்று வகையுமே முக்கியம் தான்.
கிளர்ச்சி பாலியல் எழுத்தின் சமகால உதாரணம் வா.மு.கோமு, ஜே.பி சாணக்யா ஆகியோர். இருவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. கோமுவின் சித்தரிப்புகள் பெண் காமம் பற்றின ஆணின் பகற்கனவுகள். ஏற்கனவே பாலகுமாரன், புஷ்பா தங்கதுரை போன்றவர்கள் ஒரு ஒழுக்கமனதுக்குள் இருந்து எழுதியவற்றை அநேகமாய் அதே மொழியில் ஆனால் ஒழுக்க நெருக்கடி இன்றி அரை சிட்டிகை எதார்த்தமும் சேர்த்து எழுதுவது கோமுவின் பாணி. அவரை தீவிர இலக்கிய-வணிக இலக்கியத்துக்கு இடையேயான பாலியல் பாலம் எனலாம். ஜே.பி சாணக்யா ஒருவகையில் கோணங்கி, எஸ்.ராவின் மரபின் தொடர்ச்சி. குறியீட்டு/உருவக மொழியில் பாலியல் உறவுகள் பற்றி பேசுபவர். ஆனால் நமது பாலியல் கதை மரபை உடைத்து காமப் பிறழ்வை சுவாரஸ்யமான நடையில் எழுதியவர் சாரு நிவேதிதா. ஒருபால் உறவு, சுயமைதுனம், taboo காமம் ஆகியவை அவரது களம். பரவசமான நடையில் எழுதப்பட்ட உன்னத சங்கீதம் தமிழின் கிளர்ச்சியான பாலியல் எழுத்தின் சிறந்த உதாரணம். சாருவை நாம் தி.ஜானகிராமனுடன் ஒப்பிடலாம்.
தி.ஜானகிராமன் இரண்டாவது வகை பாலியல் எழுத்தாளர். Taboo தான் அவரது முக்கிய களம். ஆனாலும் நிகழாமல் அடக்கி வைக்கப்பட்ட காமம். இதனால் மிக கற்பனை சாத்தியம் கொண்டதாக தி.ஜாவின் புனைவுகள் விளங்குகின்றன. 
வயதில் மூத்த யமுனாவை பாபு மோகிக்கும் கதை மோகமுள். 
மகன் அம்மாவை காமுறும் கதை அம்மா வந்தாள். தி.ஜா சாரு, கோமு, சாணக்யா அளவுக்கு சர்ர்சைகளை உருவாக்கவில்லை. அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவர் ஒரு இலக்கிய காமத்தை எழுதினார். நிஜ வாழ்வில் இருந்து சற்றே விலகிய நாடகீயமான காமம் ஆ.மாதவனும் இந்த ராஜபாட்டையில் தான் சென்றார். உதாரணமாய் “முலைகளை வெறித்தான் என்பதை “கழுத்துக்கு கீழ் மேடிட்ட பகுதியில் பார்வையை ஓட்டினான் என எழுதுவது. இரண்டாவது சொற்றொடர் தான் அதிக கிளர்ச்சி தருவது என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அது நம்மை அதிர்ச்சியுற வைக்காது. தி.ஜாவும் ஆ.மாதவனும் பிராய்டின் உளப்பகுப்பிவியலால் கவரப்பட்டவர்கள். வெளிப்படாமல் மனதுக்குள் தேங்கிய காமமே மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் செலுத்துகிறது என்றார் பிராயிட். ஆக “அம்மா வந்தாளில் அம்மா தன் பாலியல் குற்றவுணர்வில் இருந்து விடுபட மகனை வேதபாடசாலையில் பயிற்றுவிக்க அனுப்புகிறாள். மகனுக்கு அம்மா மீது உள்ள மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்  அதற்கு அவன் வேதம் படிக்காமல் அம்மாவுக்கு நிகரான மற்றொரு பெண்ணை அணுகி காதலிக்கிறான்.
ஆனால் ஆ.மாதவனை விட தி.ஜாவில் வாசிப்பு சுதந்திரம் அதிகம். சமீபமாக வெளிவந்த பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி மற்றொரு குறிப்புணர்த்தும் taboo கதை. சாரு “மோகமுள்ளுக்கான ஒரு எதிர்வினைக்கதை எழுதி உள்ளார். “முள் என்றொரு சிறுகதை. அதில் கதைசொல்லி தன் அத்தை உடனான காமத்தை வெளிப்படையான லகுவான மொழியில் பேசுகிறான். தி.ஜாவில் இருந்து சாரு மற்றும் கோமுவரை உள்ள தூரம் வாசலுக்கும் படுக்கைக்கும் இடையே இருப்பது தான். இன்றுள்ள “மலர்மஞ்சத்தை அடைய நமக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்துள்ளன. அதே வேளையில் நிகழ்ந்து முடியும் காமத்திற்கு இலக்கியமதிப்பு குறைவு என்ற நகைமுரணையும் சொல்லியாக வேண்டும்.
இன்றைய பாலியலுக்கும் நேற்றைய பாலியலுக்கும் மற்றொரு முக்கிய வித்தியாசம் உள்ளது. அது அரசியல்.
காமமும் வன்முறையும் நமக்குள் உறைந்துள்ள பண்புகள். அவை நம் தீமையை வெளிப்படுத்துகின்றன என்று இருபதாம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்கள் நம்பினார்கள். உதாரணமாக புதுமைப்பித்தனின் “காஞ்சனையில் காமம் ஒரு மோகினிப் பேயின் வடிவில் வெளிப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜெயமோகன் தம்புரானும் தம்புராட்டிகளும் தோன்றும் காமப் பேய்க் கதைகள் (நிழல்வெளிக் கதைகள்) எழுதினார். தீமை கொடியது என்பதால் இந்த வகை கதைகளில் காமத்துடனான மனப்போராட்டம் பிரதானமாகிறது. ஜெயமோகன் காமத்தை தூயமிருக நிலையாக (ஊமைச்செந்நாய்), உளவியல் சிடுக்கின் விடுபலாக (பின்தொடரும் நிழலின் குரல்) சித்தரிப்பவர். அவரது பாத்திரங்கள் காமத்தின் உச்சத்தை எட்டியதும் ஏமாற்றமும் வெறுப்பும் அடைகின்றனர் (நாகம், காடு)
ஜி.நாகராஜன் விபச்சாரிகளை முன்வைத்து பல கதைகள் எழுதினார். ஆனால் அவரது விபச்சாரிகள் அபலைகள். ஒரு ஆண் தோன்றி தன்னை காப்பாற்றக் கூடும் என்று ஏங்கும் காமக் கைதிகள். இவர்கள் ஆணின் பார்வையில் படைக்கப்பட்ட கற்பனாவாத பாத்திரங்கள் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. ஜி.நாகராஜன் பாலியலை கையாண்ட விதம் பிரத்யேகமானது.
அவரது பாத்திரங்களுக்கு கட்டற்ற காமம் லட்சியம். ஏன்? ஜி.நாவுக்கு காமம் என்பது காமம் அல்ல. மரபில் இருந்து விடுதலை. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எந்திரமயமாக்கம், உலகப்போர், அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் மரபான விழுமியங்கள் மீது மனிதன் நம்பிக்கை இழந்தான். பரஸ்பர அன்பும் காதலும் அப்படியான ஒரு விழுமியம். ஜி.நாவின் நாயகன் காதலை மறுத்து காமத்தை மட்டும் ஏற்கிறான். அதன் எதிர்விளைவுகளை சந்திக்கிறான். இந்த மரபு vs காமம் மோதலை லா.ச.ரா தனது “அன்புள்ள ஸ்நேகிதனுக்கு கதையில் சித்தரித்திருக்கிறார்.
ஆனால் கலாச்சார அரசியல், அதிகார அரசியல், பெண்ணியம் போன்ற சமகால கருத்தாக்கங்கள் காமத்தை ஒரு அரசியல்/தத்துவப் பிரச்சனையாக்கின. சுருக்கமாக காமம் ஒரு கலகம் ஆகியது. சமூகம் காமத்தைக் கொண்டு மனிதனின் மீது அதிகாரம் செலுத்துகிறது. காமத்தை நேரடியாக எழுத்தில் சந்திப்பது இந்த அதிகாரத்துக்கு எதிரான ஒரு கலகம். ஆக இன்றைய எழுத்தில் ஒருவன் சுயமைதுனம் அல்லது ஆசனப்புணர்ச்சியில் ஈடுபட்டால் அது பீறிடும் காமத்தால் மட்டுமல்ல, சமூக அடக்குமுறையை எதிர்க்க; பொதுப்போக்கோடு உடன்படாத தனது அடையாளத்தை வலியுறுத்த. இவர்களுக்கான முன்னோடிக் கதைகளை எண்பதுகளில் எழுதியவர்கள் ராஜேந்திர சோழன், ஜெயகாந்தன் போன்றோர். பிராயிடிய காமத்துக்கும் இன்றைய அரசியல் காமத்துக்கும் இடையில் உள்ள புள்ளி இவர்கள்.
குழந்தைகள் மீதான காமம்? சுஜாதாவின் சங்கிலிகதையில் ஜெஞ்சுலட்சுமி என்ற லட்சணமான சின்ன குழந்தை ரயிலில் வருகிறது. பிரயாணிகள் அதை வாங்கி ஆளாளுக்கு ‘பச்சக் பச்சக் என்று முத்துகிறார்கள். சுஜாதா எழுதுகிறார் “பேருக்கு பேர் கொடுத்த எல்லா முத்தங்களிலும் களங்கமில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை
கவிதையில் கடந்த பத்துவருடங்களில் எழுத வந்த பெண் கவிஞர்கள் அனைவருமே அநேகமாக பாலியல் அரசியல் கவிதைகள் எழுதினார்கள். பெண்மொழி என்ற சொல்லாடல் பிரபலமாகியது. சரி “ஆண்மொழி என்றால் என்ன? “திமிறிப் புடைத்து எழுந்தது காமம் என்ற சாதாரண வாக்கியத்தில் உள்ளது ஒரு ஆண்குறி விரைப்பு பற்றின உருவகம் தான் அது. இப்படி தமிழ் முழுக்க கறைப்பட்டுள்ளதால் அதனை பெண்மொழியாக்கி சலவை செய்வது இவர்களின் நோக்கம் சுகிர்தராணி குறிப்பிடத்தக்கவர். சுவாரஸ்யமாக, பிரமிளை தவிர நமது ஆண்கவிஞர்கள் மிக அரிதாகவே பாலியல் தொனிக்கும் வரிகளை (ஆடையின் இரவினுள் உதயத்தை தேடும் பருவ இருள்) எழுதினர். பெண்ணிய கவிஞர்கள் தங்களது லட்சியம் “இரவினுள் உதயத்தை (லிங்கத்தை) தேடுவது அல்ல என்று உறுதியாக மறுக்கிறார்கள். 1960இல் இருந்து இன்று நாம் பாலியல் கவிதையில் வந்துள்ள புள்ளியை பிரமிள் vs பெண்ணியம் என்று சுருக்கலாம்.

http://thiruttusavi.blogspot.com/2011/12/blog-post_8695.html 

'காதல்' - தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்


தி.ஜானகிராமனின் 'குளிர்' சிறுகதை எந்த இதழில் பிரசுரமானது தெரியுமா? 'காதல்' பத்திரிகையில்! யெஸ், பத்திரிகையின் பெயரே 'காதல்'தான். மட்டுமல்ல கு.அழகிரிசாமி, ஆர்.சூடாமணி, மு.வரதராசனார், டாக்டர் மா.ராசமாணிக்கனார், வல்லிக்கண்ணன், அகிலன், மாயாவி... என பல பிரபலங்கள் இந்த மாத இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்கள்.
ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இப்படியொரு பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்த இந்த 2020லும் யோசிக்கிறோம். அப்படியிருக்க 1947ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தப் பத்திரிகை பிறந்திருக்கிறது - அதுவும் தமிழில் - என்றால் எப்படி வியக்காமல் இருக்க முடியும்?
முதல் இதழில் 'காதல்' பத்திரிகையின் அவசியம் குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை பாருங்கள்:
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. இதுவரை சுதந்திரம் ஒன்றுதான் நமது ஒரே இலட்சியமாக இருந்து வந்தது. இனி, நம்முடைய லட்சியங்கள் பல.
முதலில் சென்ற நூற்றைம்பது வருஷங்களாக அல்ல, சென்ற ஆயிரம் வருஷங்களாக நம் சமூகத்தில் குவிந்து வந்த குப்பைகளை வாரிக் கொட்ட வேண்டும். மக்கள் வாழ்க்கைத் துயர்களிலிருந்து விடுபட்ட வாழ்க்கை வாழ வகை செய்ய வேண்டும். இப்பெரு நோக்கத்தோடு பல துறைகளில் பல பத்திரிகைகள் உண்டு.
அரசியல் சூதாட்டத்தைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், குடும்ப அரசியலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
பொருளாதாரச் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை உண்டு. ஆனால், கணவன் மனைவியரிடையே எழும் சிக்கலைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டும் பாதி வயிறு நிறையாத தொழிலாளிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், வாழத் தெரியாமல் தவிக்கும் இளம் தம்பதிகளின் துயர்களைப் பற்றி எழுத பத்திரிகை இல்லை.
நாட்டின் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் உண்டு. ஆனால், ஆண், பெண் எல்லைகளைப் பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை.
பாலர்களுக்கென்றும், பக்தர்களுக்கென்றும், ஜோசியத்திற்கென்றும், சினிமாவுக்கென்றும் பத்திரிகை உண்டு. போட்டிப் புதிர்களை விடுவிப்பதற்கென்றும் பத்திரிகை உண்டு. ஆனால், காதலர்களிடையே ஏற்படும் புதிர்களை விடுவிக்க பத்திரிகை இல்லை. ஆண், பெண் தூய்மையாக, மனமொத்து வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன் வந்திருக்கிறோம்...//
இந்த குறிப்புத்தான் முதல் இதழில் இடம்பெற்றிருக்கிறது. சொன்னபடியேதான் இதழையும் ஆசிரியர் நடத்தியிருக்கிறார்.
'காதல்' இதழ் முழுக்கவே காதல் பற்றித்தான் நிரம்பி வழிகிறது. பக்கத்துக்குப் பக்கம் காதல் ரசம் சொட்டுகிறது. திகட்டத் திகட்ட இருந்தாலும் திகட்டும்படி இல்லை.
'காதல் கதை எழுதுவது எப்படி', 'காதலும் கல்யாணமும்' போன்ற தொடர்களுடன், உலகிலுள்ள பல நாட்டு அறிஞர்களும் காதல் பற்றி உயர்வாக எழுதியிருப்பவை எல்லாம் பொன்மொழியாக தொகுக்கப்பட்டு 'முத்துக் குவியல்' என்ற பெயரில் மாதம்தோறும் வெளியாகியிருக்கிறது. சிறுகதைகளும், கவிதைகளும் கூட காதலை மையமாகக் கொண்டதுதான். உள்ளூர் ஆட்களின் கதைகள் தவிர 'வெளிநாட்டு காதல் கதைகள்' என்ற தலைப்பின் கீழ் மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் வெளியிட்டிருக்கிறார்.
'சாட் ரூம்', 'அனு அக்கா ஆன்ட்டி' ஸ்டைலில் - அதாவது இதற்கெல்லாம் முன்னோடியாக - 'குடும்பத்தில் நடப்பவை' என்னும் தலைப்பின் கீழ் கணவனும் மனைவியும் உரையாடுவது போல் ஒரு பகுதி இறுதி இதழ் வரை வந்துள்ளது. அந்தரங்கமான விஷயங்கள் அனைத்தும் இதில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
இன்று பெரும்பாலான பத்திரிகைகளில் இடம் பிடித்திருக்கும் 'அந்தரங்க கேள்வி - பதில்' பகுதியை முதன்முதலில் தமிழ்கூறும் நல்லுலகுக்கு கொடுத்தது 'காதல்'தான்.
இது போக உறவுச்சிக்கல் குறித்து உளவியல் - உடற்கூறு மருத்துவர்களின் கட்டுரைகள் மாதந்தோறும் பக்கங்களை அலங்கரித்திருக்கின்றன.
முக்கியமான விஷயம் 'காதல்' முதல் இதழ் முதல் இறுதி இதழ் வரை அதன் அட்டைப் படத்தில் இடம்பெற்றவர்கள் காதலர்கள்தான். வேறு யாரையும் அந்த இதழ் பிரசுரித்ததில்லை. விதிவிலக்கு 1948 அக்டோபர் இதழ். அந்த ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்டதாலோ என்னவோ, இந்த இதழின் அட்டைப் படத்தை மட்டும் காந்தியடிகளும் கஸ்தூரிபாயும் அலங்கரிக்கிறார்கள். என்றாலும் இந்த இதழின் உள்ளே காந்திக்கும் கஸ்தூரிபாய்க்கும் இருந்த காதல்தான் தனிக் கட்டுரையாக வெளியாகியிருக்கிறது.
இப்படி துணிச்சலுடன் இந்த 'காதல்' பத்திரிகையை நடத்தியவர் அரு.ராமநாதன். வெளியீட்டாளரும், ஆசிரியரும் இவர்தான்.
1980களின் இறுதியில் 'வயல்' மோகன் என்கிற சி.மோகன்தான் Mohan Chellaswamy முதன் முதலில் அரு.ராமநாதன் என்னும் பெயரை எனக்கு அறிமுகப்படுத்தினார். 'பிரேமா பிரசுரம்' சார்பில் வெளியான 'சிந்தனையாளர் வரிசை' நூல்களை அவசியம் நான் படிக்க வேண்டும் என்று சொன்னதுடன் அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் தனது பரிசாக அவற்றை வாங்கியும் கொடுத்தார்.
''அரு.ராமநாதன் முக்கியமான ஒரு நபர். ஆனால், தமிழ்ச் சூழல் அவரை மறந்துவிட்டது. சொல்லப்போனால் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார்...'' என்று அடிக்கடி சி.மோகன் நேர் பேச்சில் குறிப்பிடுவார். 1990களில் 'புதிய பார்வை' இதழில் அவர் 'நடைவழிக் குறிப்புகள்' தொடரை எழுதிய போது ஓர் அத்தியாயத்தையே அரு.ராமநாதனுக்காக ஒதுக்கியிருக்கிறார்.
''இவரைப் போன்ற ஓர் ஆளுமையாளரை காலம் மறக்க முற்படும்பொழுது, நாம் நினைவு கூர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அது நம் பயணத்தின் தொடர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதற்கான அவசியமாகவும் இருக்கிறது...'' என சி.மோகன் அந்தக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வார்த்தைகள்.
இதன் பிறகு அரு.ராமநாதன் எழுதிய 'வீரபாண்டியன் மனைவி' நாவலை தேடிப் பிடித்து வாசித்தேன். மூன்று பாகங்கள் அடங்கிய இந்த நாவல் ஏறக்குறைய 1700 பக்கங்கள் கொண்டது. 1953ம் ஆண்டு ஜனவரி மாத 'காதல்' இதழில் தொடங்கிய இந்தத் தொடர் 1959ம் ஆண்டு மார்ச் இதழில் முடிவடைந்திருக்கிறது.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளியான இந்த சரித்திர நாவல், தமிழ் வரலாற்று நாவல்களிலேயே முதன்மையானது. சிறப்பானது.
அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' மாபெரும் வெற்றியடைந்த போது, 'அது அல்ல சரித்திர நாவல். அலெக்சான்டர் டூமாஸின் நாவல்களை காப்பி அடித்து கல்கி எழுதியிருக்கிறார். உண்மையில் வரலாற்று நாவல் என்றால் இப்படியிருக்க வேண்டும்...' என நண்பர்களிடம் சூளுரைத்துவிட்டு அரு.ராமநாதன் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததாக சொல்வார்கள்.
இந்த நாவலில் பல புதுமைகளை இவர் செய்திருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் கம்ப ராமாயணப் பாடலை கொண்டிருக்கும். நாவலின் நிலைக்களன் மதுரை என்பதால் ஒவ்வொரு அத்தியாயமும் 'ம' என்ற எழுத்துடனேயே தொடங்கும். கம்ப ராமாயணம் பால காண்டத்தில் தொடங்கி யுத்த காண்டத்தில் முடிகிறது என்றால் 'வீரபாண்டியன் மனைவி'யின் முதல் பாகம் யுத்த காண்டம்; இரண்டாவது பாகம் சுந்தர காண்டம்; மூன்றாவது பாகம் பால காண்டம்... என தலைகீழாக இருக்கும்.
இந்த 'வீரபாண்டியன் மனைவி'யின் தலைசிறந்த கதாபாத்திரம் என ஜனநாதனை சொல்லலாம். இந்த கதாபாத்திரத்துக்கு சமமாக படைக்கப்பட்ட பிற கேரக்டர்களை தமிழ்ப் புனைக்கதை உலகில் தேடினால் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் கிடைக்கும். அந்தளவுக்கு பவர்ஃபுல்லான ஸ்கெட்ச். ஜனநாயகம், அரசாட்சி தொடர்பாக ஜனநாதன் பேசும் ஒவ்வொரு வாக்கியமும் பட்டாசு. இன்றும் பொருந்தக் கூடிய நக்கல், நையாண்டி. குறிப்பாக மந்திராலோசனை அரங்கில் ஆசனங்கள் ஏன் படி வாரியாக போடப்பட்டிருக்கின்றன என்பதற்கு அந்தப் பாத்திரம் அளிக்கும் விளக்கம் இருக்கிறதே... தெள்சன்ட் வாலா.
''நான் முட்டாள்களை ஏமாற்ற முட்டாள்களுக்கு வழிகாட்டுவேனே தவிர நானே முட்டாள்களோடு ஒரு முட்டாளாக கலந்து கொள்வதில்லை!''
இன்னொரு இடம் -
''ஏகாதிபத்தியம் என்பது அடிமைப் பிரஜைகளைத்தான் உற்பத்தி செய்து என்றாவது ஒரு நாள் அன்னிய ஆதிக்கத்தின் வருகைக்கு அழிவுப்பாதை போடும். அதுதான் பல்லாண்டுகளாக பாரத தேசத்தின் சரித்திரமாக இருந்து வந்திருக்கிறது. கிராம சுயாட்சியின் மூலம் ஜனங்களின் உரிமைகளும் தனி மனிதனின் சுதந்திரமும், நல்வாழ்வும் பெருக வேண்டுமானால் ஏகாதிபத்ய முறை அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்...''
சுவாரஸ்யமான தகவல் - 'வீரபாண்டியன் மனைவி'; சாண்டில்யனின் 'கன்னி மாடம்'; விஷ்வக்சேனனின் 'பாண்டியன் மகள்' ஆகிய நாவல்கள் அனைத்தும் ஒரே வரலாற்றுக் காலகட்டத்தை சேர்ந்தவைதான். ஆனால், மூன்று நாவல்களின் டிரீட்மெண்ட்டும் வேறு வேறாக இருக்கும். சரித்திர நாவல் பிரியர்கள் ஒரே நேரத்தில் இந்த மூன்று புதினங்களையும் வாசித்துப் பார்க்கலாம்.
எனக்கு அறிமுகமாகும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த நாவலை படிக்கும்படி பரிந்துரைப்பேன். குறிப்பாக வெகுஜன பத்திரிகைகளில் புதிதாக எழுத வருகிறவர்கள் அவசியம் ஒருமுறையாவது 'வீரபாண்டியன் மனைவி'யை வாசிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கூடவே இ.பாலகிருஷ்ண நாயுடு எழுதிய 'டணாய்க்கன் கோட்டை' நாவலையும் வாசிப்பது நல்லது. கோவையில் இருந்து வெளியான நாளிதழில் தொடராக வந்த சரித்திரப் புதினம் இது. நீண்ட வருடங்களாக விற்பனைக்கு கிடைக்காத இந்த நாவலை சமீபத்தில்தான் 'அம்ருதா பதிப்பகம்' தேடிப் பிடித்து அச்சிட்டிருக்கிறது. ஃபிக்‌ஷனுக்கும், நான் ஃபிக்‌ஷனுக்கும் இடைப்பட்ட அந்த எழுத்து நடையும், திப்பு சுல்தான் குறித்த சரித்திர விவரங்களும் சிலிர்க்க வைக்கும்.
ஆனால், முகநூலிலும் இணையதளத்திலும் எழுதி வரும் நண்பர்கள் 'டணாய்க்கன் கோட்ட்டை'யை படிக்காமல் இருப்பதே உத்தமம். ஏனெனில் அந்தக் கால புறச்சூழல் பிறப்பித்த நடையில் எழுதப்பட்ட அந்தப் புதினம் இணைய நண்பர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
இந்தப் பிரச்னை 'வீரபாண்டியன் மனைவி'யில் கிடையாது. அட்டகாசமான வெகுஜன நாவல். ஆனால், எந்த விமர்சகரும் இதுவரை இந்த நாவல் பற்றி பேசியதும் இல்லை. எழுதியதுமில்லை.
நாவலுக்கு மட்டுமல்ல 'காதல்' இதழுக்கும் இதுதான் கதி.
இத்தனைக்கும் 1947 நவம்பர் மாதம் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது அரு.ராமநாதனுக்கு வயது 23. அதன் பிறகு, தான் காலமாகும் வரை - அதாவது 18.10.1974 வரை தொடர்ந்து காதலுடன் 'காதலை' நடத்தியிருக்கிறார். இதனை அடுத்து இவரது சந்ததியினர் இப்பத்திரிகையை விடாமல் கொண்டு வந்திருக்கிறார்கள். கடைசி இதழ் 1980ல் வெளிவந்திருக்கிறது.
ஏறக்குறைய 33 ஆண்டுகள் வெற்றிகரமாக, அதுவும் ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையான 'காதல்' இதழ் எவரது நினைவின் அடுக்கிலும் இப்போது இல்லை என்பது மிகப்பெரிய சோகம்.
அவ்வளவு ஏன்... இந்த இதழ் வெளிவந்துக் கொண்டிருந்த நாளிலேயே தமிழகம் 'காதல்' பற்றி பேச மறுத்திருக்கிறது. இதற்கு உதாரணம் 'கல்கி' இதழ்.
1963ம் ஆண்டு ஆகஸ்டில் 'குண்டு மல்லிகை' என்ற சமூக நாவலை 'கல்கி' வார இதழில் அரு.ராமநாதன் தொடராக எழுதியிருக்கிறார்.
இதற்கான அறிவிப்பில் ''தமிழ் மக்களின் இதயங்களில் நிலையான இடம் பெற்றுவிட்ட 'இராஜராஜ சோழன்' நாடகத்தை அளித்த திரு. அரு.ராமநாதன் எழுதிய சமூகத் தொடர் 'கல்கி' இதழில் விரைவில் ஆரம்பமாகிறது...'' என்றுத்தான் குறிப்பிட்டது.
அப்போது 'காதல்' இதழ் 16வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்தது. ஆனாலும் 'காதல்' ஆசிரியர் என்று சொல்ல 'கல்கி' தயங்கியது.
இந்த நிலை என் அப்பாவுக்கும் இருந்தது. நிச்சயம் என் அப்பா, தன் இளமைக் காலத்தில் 'காதல்' பத்திரிகையை படித்திருப்பார். ஆனாலும் என்னிடம் அது குறித்து பேசியதேயில்லை. பதிலாக வெவ்வேறு இதழ்கள், தொடர்கதைகள் குறித்து பல இரவுகள் விடிய விடிய என் தலையை கோதியபடி பேசியிருக்கிறார். வியர்வை மணம் வீசும் அவர் தொப்பையில் தலைசாய்த்தபடி அவற்றை எல்லாம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. 'குண்டு மல்லிகை' நாவல் கூட அப்பா பைண்டு செய்து வைத்திருந்த அடுக்கில் இருந்து எடுத்துத்தான் படித்தேன். அப்போது 'காதல்' குறித்து நான் கேள்விப்படாத நேரம்.
'வயல்' மோகனை சந்தித்த பிறகுதான் 'காதல்' குறித்து அறிந்தேன். அப்பாவிடம் கேட்டபோது புன்னகையே பதிலாக கிடைத்தது.
ஏறக்குறைய இதே குணத்துடன்தான் 1947 - 1980 காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். வெகுஜன வாசகர்களாக இருந்த அவர்கள் அனைவரும் 'காதல்' பத்திரிகையையும் அறிந்திருக்கிறார்கள், தொடர்ச்சியாக படித்திருக்கிறார்கள்.
ஆனால் -
அதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் முறைகேடான உறவுகள் சார்ந்த காதலை 'காதல்' பத்திரிகை பிரசுரித்ததேயில்லை. கணவன் - மனைவி; காதலன் - காதலி ஆகியோருக்கு இடையில் இருக்க வேண்டிய இணக்கத்தைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது.
என்றாலும் இதழ் குறித்து விவாதிக்கும் துணிச்சல் ஒருவரிடமும் இல்லை. 1960களின் பிற்பகுதிக்கு பிறகு 'காதல்' இதழில் கவர்ச்சிகரமான படங்கள் இடம்பெற ஆரம்பித்திருக்கின்றன. அதற்காக 'சரோஜாதேவி', 'பருவகாலம்', 'விருந்து' அளவுக்கெல்லாம் இறங்கவில்லை.
அப்படியிருக்க ஏன் தமிழ்ச் சமூகம் 'காதல்' என்ற பெயரில் ஓரு வெகுஜன இதழ் 33 ஆண்டுகள் வெளிவந்தது என்பதையே பதிவு செய்ய மறுக்கிறது என்று புரியவில்லை. அத்துடன் பழைய புத்தகக் கடையிலோ, கரையான் அரிப்பதற்காகவே உயிர் வாழும் வாடகை நூலகத்திலோ கூட ஏன் ஒரு 'காதல்' பிரதி ஒன்று கூட காணக்கிடைக்கவில்லை என்பதற்கும் பதில் கிடைக்கவில்லை.
சமீபத்தில் ரோஜா முத்தையா நூலகத்தில் 'காதல்' இதழ்களை பார்க்க நேர்ந்தது. ஆச்சர்யம் கலந்த வியப்புத்தான் ஏற்பட்டது. இதோ இந்த நிமிடம் வரை அந்த உணர்வு நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
என்ன மாதிரியான உள்ளடக்கத்தை எல்லாம் சர்வசாதாரணமாக அரு.ராமநாதன் கொடுத்திருக்கிறார்... அவற்றை எல்லாம் அந்தக் கால 'குமுதமும்', 'ஆனந்த விகடனும்' எப்படியெல்லாம் உருமாற்றி பயன்படுத்திக் கொண்டன என்பதை நினைக்கும்போது -
ஒன்றுத்தான் தோன்றியது.
இந்த ஜானர் ஏன் இப்போது இல்லாமல் போய்விட்டது? திருமணமாகாத 23 வயது இளைஞனுக்கு இப்படியொரு பத்திரிகையை திருச்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று எப்படி தோன்றியது?
விடை தெரியா கேள்விகள். 1950 வாக்கில் சென்னை வந்த அரு.ராமநாதன் 'கலைமணி' என்னும் சினிமா மாத இதழை 1949 ஏப்ரல் முதல் நடத்தியிருக்கிறார். சில ஆண்டுகள் மட்டுமே வெளியான இந்த இதழில் உதவி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கியவர்தான் பிற்காலத்தில் 'வாண்டு மாமா' என்று புகழப்பட்ட கிருஷ்ண மூர்த்தி.
அதே போல் 1954ம் ஆண்டு சிரஞ்சீவியை ஆசிரியராக கொண்டு 'மர்மக் கதை' என்னும் மாத நாவலையும் (பாக்கெட் நாவல், க்ரைம் நாவலுக்கு எல்லாம் முன்னோடி) வெளியிட்டிருக்கிறார்.
'கலைமணி'யும் சரி, 'மர்மக் கதை'யும் சரி அதிக ஆண்டுகள் தாக்குப் பிடிக்கவில்லை. 'காதல்' மட்டும்தான் இறுதி வரை கம்பீரமாக வந்திருக்கிறது.
என்றாலும் 'காதலை'ப் பற்றி பேசத்தான் ஆளில்லை. அன்றும் இன்றும் நிஜ வாழ்வில் அதுதானே நிலமை?
பின் குறிப்பு:
1. 'தங்கப் பதுமை', 'பூலோக ரம்பை', 'ஆரவல்லி' போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் அரு.ராமநாதன்தான்.
2. டி.கே.எஸ். நாடகக் குழு நடத்திய போட்டிக்காக இவர் எழுதியதுதான் 'இராஜராஜ சோழன்' நாடகம்.
3. இதுவரை 350க்கும் மேற்பட்ட நூல்களை 'பிரேமா பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது.
4. 'அசோகன் காதலி' இவர் எழுதிய முதல் சரித்திர நாவல். குறுநாவல் என்றும் சொல்லலாம்.
5. தன் இறுதிக் காலத்தில் இவர் எழுதிய 'வெற்றிவேல் வீரத்தேவன்' சரித்திர நாவலை வாசிக்காமல் இருப்பதே இவருக்கு நான் செய்யும் மரியாதை. 'வீரபாண்டியன் மனைவி'யை எழுதியவரா இந்த நாவலையும் படைத்திருக்கிறார் என்ற அதிர்ச்சியில் மாரடைப்பே வந்துவிடும்.
6. தன் கனவுப் படைப்பாக 'ரசியா பேகம்' சரித்திர நாவலை நினைத்திருந்தார். அதற்காக குறிப்புகளையும் சேகரித்திருந்தார். ஆனால், எழுத ஆரம்பிப்பதற்குள் தன் 50வது வயதில் காலமாகிவிட்டார்.
கே. என். சிவராமன்

பேராசிரியர் கைலாசபதி

பேராசிரியர் கைலாசபதி மாதம்


செ.பொ.கோபிநாத் அவர்களின் இணயப் பக்கத்திலிருந்து
பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. 
தனக்கேற்றதுறை எது எனக் கண்டு கொள்வதில் தான் ஒவ்வொரு கலைஞனதும் வெற்றியும் நிலைபேற்றுத் தன்மையும் தங்கியுள்ளது. அந்த வகையில் கைலாசபதி தனக்குள் பல் திறமை கொண்ட மிகச் சிறந்த படைப்பாளியாக இருபதாம்; நூற்றாண்டுகளில் திகழ்ந்த போதிலும் தனக்கேற்றதுறை திறனாய்வே எனத் தெரிந்து திறனாய்வு என்றாலே கைலாசபதி என்று தமிழுலகில் அழியாப் புகழடைந்தார். சிறந்த பேச்சாளர், ஒலிபரப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூலாசிரியர், போதனாசிரியர், நாடக நடிகர், நவீன இலக்கியகர்த்தா (நாவல், சிறுகதை. கவிதை, நாடகம் எழுத்தாளர்), திறனாய்வாளர், ஒப்பியலறிஞர் போன்ற பல்திறன் கொண்ட இலக்கியவாதி கைலாசபதி. 

தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை, முன்வைத்தவர். ஒப்பியல் நோக்கையும், சமூகவியற் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர். ‘கலை கலைக்காக’ என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர். இலக்கியத்திற்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர். சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்.
 தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றுநெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர். கலை இலக்கியச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லத் தீவிர முயற்சியில் ஈடுபட்டவர். ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகச் செயல்பட்டவர். சிறந்த கல்வியாளராக விளங்கியவர். கல்விக் கோயிலான யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர். இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இத்தனை பெருமைக்கும் உரியவர். ‘ஈழம் தந்த கொடை’! கலாநிதி க.கைலாசபதி.
பேராசிரியர்.க. கைலாசபதியின் 27ஆவது நினைவுநாள் இன்று (06-12-2009) அனுஷ்டிக்கப்படுகின்றது. பழைமை பேசிகளின் ஆதிக்கத்தில் இருந்த தமிழ் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்கு வகுத்தவர் க.கைலாசபதி. சர்வதேச அரங்கில் இவரின் ஆய்வுமுறையின் செல்வாக்கு பரவலானது. சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழி இலக்கியங்கள் எனவும், சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும் இவர் ஆய்வுகளின் ஊடாக வெளிப்படுத்தினார். இலக்கியத் துறை, இதழியல் துறை மற்றும் கல்வித் துறையில் இவருடைய பங்கு அளப்பரியதாகும். கைலாசபதி அவர்கள் மறைந்து 28வருடங்கள் ஆகிவிட்டன. அவரைப் பற்றியும், அவரது எழுத்துப் பணி பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள் பல்வேறு மட்டங்களிலும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இருப்பினும், கைலாபதி பற்றியதான வாழ்க்கை வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்கின்றேன்.
"இது காலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்தியது கிறித்துவிற்கு முன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத் தோமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீரயுகமாகும். அதற்கடுத்தப்படியாகக் கிரேகத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வட இந்தியாவில் இதிகாசங்கள் குறிக்கும் வீரயுகத்தையும் தவிர்த்தால், காலவரிசையில் அடுத்தப்படியாக அமைவது பழந்தமிழரது வீரயுகம் ஆகும். இது கிறித்துவிற்கு எழுநூறு ஆண்டுகள் முன்தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு ஆறாம் நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக்கருதுவது பொருத்தமாகும். உலகின் பிறபகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச்சேர்ந்த பாடல்களும் கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் கழிந்தே தோன்றின.அந்த வகையில், கால ஒழுங்கின்படி, தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஓருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம். (1968- 70,71)"
க. கைலாசபதி
(பேராசிரியர் வீ. அரசு மேற்கோளாக குறித்தவை)
ப.23. சங்க இலக்கியம் பன்முக வாசிப்பு
பேராசிரியர் கைலாசபதியின் தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். க.கைலாசபதி மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 அன்று பிறந்தார். இவரின் தாயின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. தமது ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்த அவர், இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை வந்தார்.
கைலாசபதி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் தமது உயர்கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையில் தமிழைச் சிறப்பு பாடமாக கற்று B.A (Hons) முதல் தர மாணவனாகச் சித்தியெய்தினார் (1957).
பல்கைலக்கழகக் கல்வியின் பின்னர் இலங்கையின் அரச பத்திரிகையான தினகரனில் உதவி ஆசிரியராக1957 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார் (1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான் நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில் தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரை பணிபுரிந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகவும்(1978-82) பணிபுரிந்தார்.
பல்கலைக்கழகப் பணிகளில் மாத்திரமின்றி இலங்கை அரசின் கல்வி சார்ந்த குழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப் பணிபுரிந்துள்ளார். யுனெஸ்கோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்துள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றியவர். பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும் கைலாசபதி நடித்துள்ளார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.
கைலாசபதி அவர்கள் ஜனமகன், உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி, அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்..
மாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய லெனினிய கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கினார். சீன அரசின் அழைப்பில் இவர் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம் சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார்.

பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில் ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழு அமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால் க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். 
கைலாசபதியின் நூல்கள் 60, 70 களில் இளந் தலைமுறையினர் மட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தின. தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968), ஒப்பியல் இலக்கியம் (1969) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. இன்று மேற்குறித்த நூல்களுக்கான மீள் பதிப்புகள் 1999 இல் வெளி வந்துள்ளன. இந் நூல்கள் மீளவும் மின் பதிப்புப் பெறுவதனால் தமிழியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு இது மகிழ்ச்சிக்குரிய விடயமே. இந் நூற்றாண்டின் முடிவுறும் தருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இந்த நூற்றாண்டின் தமிழியல் ஆய்வு வரலாறு, வளர்ச்சி பற்றி உரத்துச் சிந்திக்கும் பொழுது கைலாசபதியைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. மேற்குறித்த நூல்களின் வருகை எமக்குப் புதிய பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பக் கூடும். பல்வேறு உரையாடல்களை எம்மிடையே ஏற்படுத்தும். இதுகாறுமான எமது வரலாற்றுக்குள் கொண்டு வரப்படாத புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும் உண்டு என்பதை இன்றைய எமது வாசிப்பு ஆய்வு எமக்கு உணர்த்தியுள்ளன. ஆக இதுவரையிலான ஆய்வுப் போக்குகள் குறித்த அக்கறை, தேடல் அவசியம். இவற்றுள் கைலாசபதியின் நூல்கள் மீளப் பதிப்பித்தல் எனும் செயற்பாடு ஆய்வியல் செயற்பாட்டின் ஓர் இணையாகவே பார்க்கப் பட வேண்டும். புரிந்து கொள்ளப் பட வேண்டும். 'தமிழியல் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி' எனும் நூலைக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதி 1999 ல் வெளியிட்டுள்ளார். இது தமிழியல் ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் கைலாசபதியின் விகிபாகம் பற்றிய சிரத்தையை ஆய்வு நிலை நோக்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந் நூல் அமைந்துள்ளது. ஆக, கைலாசபதியின் மூன்று நூல்களின் மீள் பதிப்பு, கைலாசபதி பற்றிய சுப்பிரமணியத்தின் நூல் ஆகியவற்றின் வருகை கலாநிதி கைலாசபதி பற்றிய பார்வைக்கும் தெளிவுக்கும் உதவுபவையாக உள்ளன. தமிழியலாளர்கள் −வற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழியல் ஆய்வு மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள்

01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
02.தமிழ் நாவல் இலக்கியம்,1968
03.Tamil Heroic Poetry-Oxford,1968
04.ஒப்பியல் இலக்கியம்,1969
05.அடியும் முடியும்,1970
06.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி,1971
07.இலக்கியமும் திறனாய்வும்,1976
08.கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
09.சமூகவியலும் இலக்கியமும்,1979
10.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
11.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
13.திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
14.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980
15.இலக்கியச் சிந்தனைகள்,1983
16.பாரதி ஆய்வுகள்,1984
17.The Relation of Tamil and Western Literatures
18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
19.On Art and Literature,1986
20.இரு மகாகவிகள்,1987
21.On Bharathi-1987
22.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
23.Tamil (mimeo)(co-author A.Shanmugadas)
தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டு 06.12.1982 இல் இயற்கை எய்தினார். முப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதி அவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார்.
கைலாசபதி பற்றிய சிவசேகரத்தின் மதிப்பீடுகள்!
கைலாசபதி தவறுகட்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவரும் அல்லர். அவருடன் கடுமையான கருத்து முரண்பாடுடையோர் பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளை கூற முன் வந்தனர். இதற்கான காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை. கைலாசபதியின் சமுதாயப் பங்களிப்பு பல்துறை சார்ந்தது. அவர் தன்னை ஓரு அரசியல்வாதியாகவோ, பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவுமோ காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது பல்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும், அவரது அரசியல் நிலைப்பாட்டின் முத்திரை தெளிவாகவே பதிந்திருந்தது. சர்வதேச விவகாரங்களிலும், உள்நாட்டு அரசியலிலும்; அவர் ஓடுக்கப்பட்ட மக்களினதும் அவர்களது போராட்டங்களினதும் தரப்பிலேயே நின்றார்.
சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் பின் ஏற்பட்ட விவாதத்திலும் இவரது நிலைப்பாடு தெளிவாக மார்க்சிய லெனினியவாதிகளின் பக்கத்திலேயே இருந்தது. கைலாசபதி பற்றிய கடுமையான விமர்சனங்கள் பெரும்பாலும் வலதுசாரி அரசியற் சார்புடையோரிடமிருந்தே வந்தன. சில சமயங்களில் தம்மை மார்க்சிசவாதிகளென்று கூறிக்கொள்வோரும் கைலாசபதியுடன் முரண்பட்டதுண்டு. மார்க்சியம் என்பது விவாதங்கட்கும் அபிப்பிராய வேறுபாடுகட்கும் அப்பாற்பட்ட திட்டவட்டமான நிலைப்பாடுகளின் கோவை அல்ல. எனவே ஒரு நிலைமையை ஒருவர் அறிந்துள்ள தன்மைக்கேற்ப அது பற்றிய மதிப்பீடுகளும் அவர் முன்வைக்கும் தீர்வுகளும் வேறுபடலாம். கைலாசபதியுடன் முரண்பட்ட பல வலதுசாரிகள், அவரது அடிப்படையான நிலைப்பாட்டுடன் முரண்பட்டனர். கைலாசபதியின் சமுகச் சார்புடைய இலக்கிய விமர்சனப் பார்வையை நேரடியாக எதிர்த்து முறியடிக்க முடியாத காரணத்தாற் தனிப்பட்ட அவதூறுகளில் இறங்கினோரும் உள்ளனர்.
கைலாசபதியின் பங்களிப்புக்களில் ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த ஊக்கமும், கல்வித் துறையில் அவர் ஆற்றிய பணியும் பற்றி அதிகம் கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாக அறியப்படாததால் அவரது அரசியல் நிலைப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. கைலாசபதி என்கின்ற திறனாய்வாளர் தான் அதிகளவிற் சர்ச்சைக்குரிய மனிதரானார். இலக்கியம் பற்றி அவர் வெளிப்படுத்திய கருத்துக்கள் பல்வேறு சூழ்நிலைகள் தொடர்பாகவும், பல்வேறு கோணங்களினின்றும் வழங்கப்பட்டவை. அவற்றைத் தனித் தனியாக எடுத்துப் பார்த்து அவற்றின் குறைபாடுகளை அவரது பார்வையினது குறைபாடன்றோ, அதை விட ஒருபடி அப்பாற் சென்று மார்க்சிய அணுகு முறையின் குறைபாடன்றோ வாதிப்பது “குருடனுக்கு பால் காட்டிய” கதையின் பாங்கிலேயே அமையும்.
இவ்வாறு கைலாசபதியின் திறனாய்வு பற்றி குறை கூறுவோர் ஒருவருக்கு ஒருவர் முரணான முறையிலேயே அவருக்கெதிரான வாதங்களை முன் வைக்கவும் நேருகின்றது. ஆறுமுகநாவலரின் பங்களிப்பை அவர் மதிப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதைக் கண்டிப்பவர்கள், இலக்கியத்தின் வர்க்கத்தன்மை பற்றிய அவரது நிலைப்பாட்டை மறுப்பவர்களுடன் வேறுபடுகின்றனர். சில சமயம் இரண்டு விதமான தாக்குதல்களும் ஒரே தளத்திலிருந்து வந்துள்ளன. இதற்கான காரணங்களுட் கைலாசபதி பற்றிய விமர்சனங்கள், கைலாசபதி பற்றியும் மார்க்சிய அணுகு முறைகள் பற்றியும் விமர்சகர்கள் கொண்டிருக்கும் விறைப்பான பார்வையும் அடங்கும்.
ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பார்வையும் வர்க்க அடிப்படையுங் கொண்ட ஆக்க இலக்கியப் படைப்பை உருவாக்குபவர், ஒரு போதனாசிரியரின் பாங்கில் இன்ன வகையில் இப்படி எழுதினாற் தான் தனது நிலைப்பாட்டை வலியுறுத்த முடியும் என்று திட்டமிட்டு எழுதுகிறார் என்பது; மார்க்சியத் திறனாய்விற்குரிய கருத்தல்ல.
ஒரு படைப்பாளியின் ஆக்கங்கள் அவரது அனுபவத்திற்கும்–அறிவிற்கும் ஏற்றவாறே அமைகின்றன. ஒருவரது அறிவும் அனுபவமும் அவரது சமுதாய சூழலிற் தங்கியுள்ளன. வர்க்க சமுதாயத்திற் தனி மனித சிந்தனை ஒருவரது வர்க்கப் பின்னணிக்கும், சமுதாயப் பார்வைக்கும் ஏற்றவாறு அவரது அனுபவங்களும் விருத்தியடைகின்றது. எனவே சரி–பிழை–நீதி–அநீதி–நெறி–நெறியல்லாதது போன்ற மதிப்பீடுகளும், மனிதாபிமானம, அழகியல் என்பன தொடர்பான கொள்கைகளும், ஒரு புறம் மனித இனம் என்ற அடிப்படையில் சில பொதுவான தன்மைகளைக் காட்டினாலும், மனித இருப்பின் வேறுபாடுகளையும் கொண்டிருப்பன. இலக்கியமோ பிற கலை வடிவங்களோ, அழகியலோ மனிதரது இருப்புக்கு அப்பாற்பட்டலையல்ல. மனித இருப்பிற்கும் அதனைத் தீர்மானிக்கும் சமுதாய இயல்பிற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான முரண்பாடுகளை கலைகளிலும் இலக்கியங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. மனித உறவுகளை நிர்ணயிக்கும் சமுதாய முரண்பாடுகள் இலக்கியத்திற் தெரிவது மட்டுமன்றி, அம் முரண்பாடுகளின் தீர்வுக்கான போராட்டமும் இலக்கியத்தினூடு நடைபெறுகின்றது. மனிதனது சமுதாய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் சமுதாயத்தின் வர்க்கத் தன்மையாலும், வாக்கப் போராட்டத்தாலும் நிர்ணயிக்கப்படுமாயின், இலக்கியமும் பிற கலை வடிவங்களும் அதற்கு விலக்காக அமைய முடியாது. இந்த வாதத்தை ஒருவர் வரட்டுத்தனமாக ஆதரிக்க முடியும். வரட்டுத்தனமாகவே இன்னொருவர் அதை எதிர்க்கவும் முடியும்.
கைலாசபதி கலை இலக்கியங்களில் அழகியலை வலியுறுத்தியவர். அதே வேளை அழகியல் ஆக்கங்களின் உள்ளடக்கத்தினின்று வேறுபடுத்தப்பட்டு, உள்ளடக்கத்திலும் மேலான ஒன்றாகக் காட்டப்படுவதை வன்மையாக எதிர்த்தவர். அழகியற் கோட்பாடுகளை மிகையாக வலியுறுத்தி “கலை கலைக்காகவே” என்ற கோஷத்திற்கு புத்துயிர் ஊட்டியவர்கள், இக் காரணத்துக்காகவே கைலாசபதியை கடுமையாகத் தாக்கினர். மார்க்சியக் கலை இலக்கிய நோக்கைத், தமிழன் பழைய இலக்கியங்கட்கும் பிரயோகித்து, தமிழர் வரலாறு பற்றிய தெளிவான பிரமைகளைக் களையவும், அவற்றினூடு தமிழர் வரலாறு பற்றிய தெளிவான ஓரு பார்வையையும் பெறவுங் கைலாசபதி பெரும் பங்களித்தார். கைலாசாதி பற்றி செய்யப்படும் மதிப்பீடுகள் கைலாசபதியின் ஒட்டுமொத்தமான பங்களிப்பை முதன்மைப்படுத்துவது நியாயமானது. கைலாசபதியின் விமர்சனங்களில் உள்ள குறைபாடுகள் அவை செய்யப்பட்ட சூழலின் அடிப்படையிற் கருதப்படுவது அவசியம்.
மு. தளையசிங்கம் பற்றிய விமர்சனத்தில், கைலாசபதியின் வாதங்கள் சில அவரது முக்கியமான கருத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன். அக் குறைபாடுகள் தளையசிங்கம் பற்றிய அவரது மதிப்பீட்டைப் பொய்ப்பிக்கவில்லை. கனமான வாதங்கட்கு அருகருகாகக் கனங் குறைந்த வாதங்களை வைத்தமை கைலாசபதியின் விமர்சனத்தை அவரது அரசியல் எதிரிகள் தாக்குவதற்கு வசதி ஏற்படுத்திற்று. அதே வேளை கைலாசபதிமீது அவர்கள் தொடுத்த தாக்குதல்களின் கீழ்த்தரமான தன்மை அவர்களது தரப்பில் எவ்வளவு நியாயம் இருந்தது என்பதன் அளவுகோலாகவே எனக்குத் தெரிந்தது. சிந்தனைக்கும், தளையசிங்கத்தின் மார்க்கிய விரோதத்தின் வறுமையைக் கைலாசபதி கணிசமான சகிப்புத் தன்மையுடனேயே விமர்சித்திருந்தார்.
கைலாசபதியின் முக்கியமான ஒரு தவறு, மஹாகவி பற்றிய அவரது மதிப்பீடு தொடர்பானது. மஹாகவியின் சமுக அரசியற் பார்வையின் போதாமையை 1960-களின் அரசியல் சூழல் மிகைப்படுத்தியதன் விளைவாகவே, கைலாசாதி மஹாகவியின் முக்கியத்துவத்தைத் தவற விட்டு விட்டார் என நினைக்கின்றேன். இத் தவறு பற்றிக் கைலாசபதியை இன்று விமர்சிப்போர் சிலர், கைலாசாதி இருந்த காலத்தில் அதைத் திருத்து விக்க வாய்ப்பிருந்தும் ஏன் முனையவில்லையோ தெரியாது.
ஈழத்து இலக்கிய விமர்சன நடைமுறையின் இடர்பாடுகள் சகல விமர்சனங்களையும் வெவ்வேறு அளவுகளிற் பாதித்துள்ளது. கைலாசபதியின் தவறுகள் அலட்சியம் செய்ய வேண்டியவையல்ல. அவை நேர்ந்த சூழலின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியன. நமது இலக்கியத் துறையின் விஞ்ஞான ரீதியான பார்வையும், சமுதாயச் சார்பும், சமுதாய மாற்றத்திற்கான முனைப்பும், கைலாசபதியிடமிருந்து பெற்றவற்றைக் கருத்திற் கொண்டாற் கைலாசபதியின் குறைபாடுகள் மிக அற்பமானவையே.
இந்த இடத்தில் சாள்ஸ் டார்வின் முன்வைத்த பரிணாமக் கோட்பாடு அவர் முன் வைத்த அதே வடிவில் இன்று ஏற்கப்படுவதில்லை என்பது நினைவூட்டத்தக்கது. குறிப்பான பல அம்சங்களில் டார்வின் விளக்கங்களிற் குறைபாடுகளும் தவறுகளும் காணப்படுகின்றன. ஆயினும் அவர் எடுத்துக் காட்டிய பரிணாமவாத அடிப்படை (உயிரினங்கள் எளிய ஜிவராசிகளின்று தோன்றிச் சூழலுக்கமைய மாற்றமடைந்து உயரிய வடிவங்காக விருத்தி பெற்றன என்ற கருத்து) அதாவது, டார்வினது வாதத்தின் முழுமை இன்னமும் மறுக்கவியலாததாகவே உள்ளது. டார்வின் சொன்னவை பல தவறானவை. எனவே பரிணாமக் கொள்கையும் செல்லுபடியாகாது என்ற வாதம் சிலரால் இன்னதும் முன் வைக்கப்படுகிறது. இவர்களது வாதம், கைலாசபதியின் விமர்சனத் தவறுகளை ஆதாரமாக்கி அவரது இயங்கியல் பொருள் முதல்வாத அடிப்படையிலான இலக்கியக் கொள்கையை நிராகரிப்பவர்களது வாதத்தினின்று, மூடத்தனத்தின் அளவில் வேறுபட்டதல்ல.