Search This Blog

Sunday, October 29, 2017

சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் , ' தமிழ்முழக்கம் ' வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டி

வானொலி: அடுத்ததாக, உங்களிடம் ஒரு அரசியல் கேள்வி, பிற்கால இந்தியா எப்படி இருக்கும்?
நாகேஷ்: அது ஒரு டைப்பாத்தான் இருக்கும். இப்ப உங்க ஆஸ்த்திரேலியா இருக்கே, அங்க வந்து கிரிக்கெட், விஞ்ஞானம், கங்காரு, புல்வெளிகள், பால், விவசாயம், இதெல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. அங்கிருக்கும் தமிழர்கள்....நீங்க தயவு செய்து எனக்காக இல்லை மைக்கு....ஒண்ணு கண்டுபிடியுங்க. அந்த மைக் முன்னால் நின்னு யாராவது பேசுறாங்கன்னா....அவங்க பேசும் போது ஒரு சின்னப் பொய் சொன்னாக் கூட அந்த மைக் டைம் பாம் மாதிரி... வெடிச்சு பேசுறவனுடைய தலை சுக்கு நூறாலகி....செத்துடணும்...on the spot.
ஏன்னு கேட்டா.....இவன் எடுக்கும் போதே....அன்பார்ந்த சகோதரிகளே, தாய்மார்களேன்னுதான் ஆரம்பிக்கிறான். இதில அன்பு இருக்கா? சகோதரி மாதிரிப் பார்க்கிறானா? அப்படின்னு ஆரம்பிக்கும் போதே....டமால் அப்படின்னு வெடி வெடிக்கும். இவன் இருக்க மாட்டான். அனேகமாக மைக் முன்னால பேசுறதுக்கு எவனுமே வரமாட்டான்.
மைக் முன்னால பேசுறத நிறுத்த முடிஞ்சா, சத்தியமா எந்த நாடும் முன்னுக்கு வரும் சார்.
- சிட்னியிலிருந்து ஒலிபரப்பப்படும் , ' தமிழ்முழக்கம் '
வானொலி நிகழ்ச்சிக்கு நாகேஷ் அளித்த பேட்டியிலிருந்து ! ( மீள் பதிவு )

Saturday, October 28, 2017

ஜாதிக்காய் பிஞ்செனக் காமம்



மயிலின் முன்கழுத்தென நீலமேறி
வளைந்து ஓடும் ஓடையென வெட்கம்
முத்தம் விலக்க மறுகுகிறது
நீரின் நிழல் அருந்தும்
தவளைக்குஞ்சின்
வயிற்றில் கண்ணாடி வளையல்
சுழல்வதென உடலுக்குள் ஆசை
சூல் கொள்கிறது
காட்டுப்புறாவின் மேனியில்
விளையும்
கந்தகப் பொன்பச்சை நிறத்தை
உருகுமென் கண்கள் அணிகின்றன
காலின் பெருவிரல்
அருகில் இருக்கும் சிறுவிரலை
உரசிக் கொளுத்தும் தீ
மூளையில் மேகமென விரைகிறது
நீ அருகில் வருகையில்
காந்த மலையின்
சுனையின் சுற்றுச் சூழலில்
காற்றின் கலவரம்
என்னைத் தொலைக்கிறது
ஜாதிக்காய் பிஞ்சென காமம் காய்க்கையில்
நாற்பது விரல்களில்
நாயனச் சூத்திரமும்
காந்தள் இதழ் சுவைக்க
கசியும் நன்னீர் ஊற்றும் நம்மை
கற்பகக் காடாய்ப் படைக்கிறது
உனது
கற்கடகக் கைகளில்
வெளிமானெனத் துள்ளும்
உடலுக்குள் உருகும் மனதில்
முத்த நரம்புகள் பூக்கத் துவங்குவதை ரசிக்கிறாய்
ஊறும் உன் அணுக்கள்
நெத்திலிகளாய் நீச்சலடிப்பதையும்
உனது உதடுகள் பறக்கும் அணிலென
எனது ஸ்தனங்களில் இடறத் துடிப்பதையும்
பொன்துகள்களாய் செவிப்பறையில் பூசுகிறாய்
புருவ மத்தியில் இழந்த
புத்தியின் கொடியில்
பூனைக்காலிப் பூக்கள்
பூத்துக் கறுக்கத் துவங்கிவிட்டன
கால்கள் சர்ப்பங்களாகையில்
காமம் களவென விளைந்த கனவுகளை வெல்கின்றன
வெள்ளி நிலவின் உட்கருவில்
பனி ஊறுகையில்
தாகத்தின் நிறம் வெள்ளை எனவும்
தாமரையில் சுடரும் ஒளி
உயிரின் தண்டில் ஊடுருவுவதையும்
உன்னிடம் எப்படிச் சொல்வேன்
Composed by - Thenmozhi Das
10.5.2016
Thanks to - Mega Aruna Chalam

சீசரின் சத்திரசிகிச்சை மட்டக்களப்பு_தனியார் வைத்திய கொட்டகைகளும் சில்லறை மற்றும் மொத்த வியாபார வைத்தியர்களும்

1. சீசரின் சத்திரசிகிச்சை என்பது தாய் மற்றும் சேய் இரு உயிர்கள் சம்பந்தப்பட்ட மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டிய ஆபரேஷன் ஆகும். இது செய்யப்படும் வைத்தியசாலையில் ஆபரேஷன் சிக்கலானால் தாயையும் சேயையும் பராமரிப்பதற்கு தேவையான தீவிர கவனிப்பு பிரிவு (ICU ) மற்றும் neonatal resuscitation unit அதை தொடர்ந்து குழந்தையை பராமரிக்கும் வசதிகள் காணப்பட வேண்டும். இத்தகைய வசதிகள் மட்டக்களப்பு தனியார் வைத்தியசாலைகளில் காணப்படாத நிலையில் சீசரின் சத்திரசிகிச்சை செய்வது மகப்பேற்று நிபுணர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும் உயிரிழப்பு ஆபத்தை ஏற்படுத்தும். உயிரிழப்பு ஏற்படுத்தும் காரணிகள் குறிப்பாக சேய்க்கு சில நிமிடங்களிலேயே உயிராபத்து ஏற்படலாம் என்பதால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சிறிது நேரத்தில் எடுத்துச் செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
குறிப்பிட்ட தனியார் வைத்தியசாலையில் தீவிர கவனிப்பு பிரிவு காணப்படவில்லையென்றால் இந்த வைத்தியசாலையின் நிர்வாகி தனது பொறுப்பின்மை காரணமாக ஒரு தாயைக் கொலை செய்திருக்கிறார் என்று கருதப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும். அதே நேரத்தில் இத்தகைய வசதியற்ற இடத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சீசரின் சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணரும் அவரது குழுவினரும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய நட்டஈடை செலுத்த வேண்டும்.
2. பிராந்தியத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகள் உரிய வசதிகள் இன்றி சத்திரசிகிச்சை மேற்கொள்வதை தடுக்கும் அதிகாரம் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சுக்கும் உள்ளது. எனவே இது தொடர்பான முறைப்பாடுகள் உரிய அதிகாரிகளிடம் செய்யப்படவேண்டும்
3. காலையில் அரசாங்க வைத்தியசாலையில் 1 மணி நேரம் கடமை அதன்பின் 10 மணிக்கு ஓட்டமாவடி 12 மணிக்கு ஏறாவூர் சுற்றிவந்து 5 மணிக்கு மறுபடியும் மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலை இப்படியாக சுழன்றுகொண்டு தினந்தோறும் மேலதிக கடமை 4 மணி நேரம் என்று எழுதி மாதம் 75000 சம்பாதிக்கும் காசுப்பிசாசுகள் பெரிய மனிதர்கள் போல உலா வருவதை தடுப்பதற்கு உரிய முறைப்பாடுகள் வைத்தியசாலை அத்தியட்சகர் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் திடீர் முற்றுகைப் பிரிவிடம் மேற்கொள்ளப்படவேண்டும். flying squad division தொலைபேசி இலக்கம் 011-2693610 மற்றும் 0773572891
4. இத்தகைய ஒருசிலரின் பொறுப்பற்ற செயலினால் ஏற்படும் இறப்புகள் ஒட்டுமொத்த மருத்துவர்களையும் பாதிக்கும் என்பதால் மட்டக்களப்பு மருத்துவச் சங்கம் மற்றும் வடிசாலை நலன்காக்கும் மட்டக்களப்பு தொழில்சார் வல்லுநர் மன்ற உறுப்பினர்களும் இதை வெளிப்படையாக கண்டிப்பதற்கும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக தங்களுடைய திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மேலும் மருத்துவச் சங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிப்பவர்கள் மற்றும் வகிக்க துடிப்பவர்கள் ஏனைய வைத்தியர்களுக்கு முன்மாதிரியாக 8-4 மணி வரை தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளை பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். தவிர்த்துக் கொள்வார்களா ?
(எனது கருத்துக்களை பிரதி செய்து முகநூலிலும் ஏனைய ஊடகங்களிலும் வெளியிடுவதற்கு இத்தால் அனைவருக்கும் அனுமதி அளிக்கிறேன்.
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்