Search This Blog

Tuesday, May 3, 2011

எது வேண்டும் சொல் மனமே - 90/10 கொள்கை

நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .
அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?
உங்களது வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் 10% இயற்கையாக நடப்பவை. மீதி 90% உங்களால் நிச்சயிக்கப்படுபவை.
எப்படி?
மேற்கொண்டு படியுங்கள் .

உண்மையாகவே நமக்கு நடக்கும் சம்பவங்களில் 10% நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. உதாரணமாக:
ஓடிக்கொண்டிருக்கும் நம் வாகனம் திடீரெனப் பழுதாகி நின்றுவிடாமலிருக்க நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
தாமதமாகச் சென்றடையும் விமானத்தாலும், ரயிலாலும், பேருந்தாலும் நம் பயணத்திட்டங்கள் அனைத்துமே சில நேரங்களில் தாறுமாறாகக் குழம்பி விடுகின்றன. அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா ?
நாம் ஓட்டிச் செல்லும் வாகனத்தைச் சட்டத்தை மீறி முந்திச் செல்லுகிறார் மற்றொரு ஓட்டுனர். அதற்கு நம்மால் ஏதாவது செய்ய முடியுமா?
இந்த 10% இல் நமக்கு எந்த ஆளுமையும் கிடையாது . இதை மாற்ற நம்மால் எதுவும் செய்ய முடியாது . இது நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
மீதியிருக்கும் 90% முற்றிலும் மாறுபட்டது . அந்த 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம்.

எப்படி?
நடக்கும் சம்பவத்தை நாம் எதிர்கொள்ளும் விதத்தில், அந்த மீதி 90% ஐ நாம்தான் தீர்மானிக்கிறோம் .
டிராபிக் சிக்னலின் சிவப்பு விளக்கை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதனை எதிர் கொள்ளும் விதத்தை நம்மால் மாற்றியமைக்க இயலும்.
இதன் மூலம் நீங்கள் மற்றவர்களால் முட்டாளாக்கப்படுவதைத் தவிர்த்து விடவும் முடியும்.
சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தை நம்மால் தீர்மானிக்க முடியும்; கட்டுப்படுத்த முடியும்.

இதோ ஓர் உதாரணம்:
காலைச் சிற்றுண்டியைக் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அருமை மகள் தேனீர்க் கோப்பையைத் தவறுதலாகத் தட்டிவிட, அதிலிருந்த தேனீர் உங்கள் மீது கொட்ட, அலுவலகம் செல்ல அணிந்திருந்த உங்களது சட்டை பாழ். நடந்த இந்தச் சம்பவத்தின் மீது உங்களுக்கு எந்த ஆளுமையும் இல்லை. இப்படி நடக்காமலிருக்க உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. ஆனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பதனைத் தீர்மானிக்கப் போவது, இதனை எதிர் கொள்ள நீங்கள் எடுக்கப் போகும் முடிவுதான்.
நீங்கள் சபிப்பீர்கள். தேனீர் கோப்பையைத் தட்டிவிட்டதற்காக அருமை மகளைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பீர்கள்/ கண்டிப்பீர்கள்...
மகள் அழத் தொடங்குவாள்....அடுத்ததாக, தேனீக் கோப்பையை மேஜையின் ஓரத்தில் வைத்ததற்காக உங்கள் கோபம் மனைவி மீது திரும்பும் .
அதனைத் தொடர்ந்து மனவியுடன் ஒரு சிறிய வாய்ச் சண்டை. கோபத்தோடு மாடிக்குச் சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள்.

மாடியிலிருந்து கீழே வந்ததும் நீங்கள் காணும் காட்சி:
உங்கள் அருமை மகள் அழுது கொண்டே சிற்றுண்டியை முடித்து, பள்ளி செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறாள். சற்று முன்னர் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட தாமதம் காரணமாகப் பள்ளிப் பேருந்தைத் தவறவிட்டு விடுகிறாள் உங்கள் மகள் . மனைவியும் உடனடியாக அவருடைய அலுவலகத்திற்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இன்று மகளைப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உங்கள் தலையில். காரில் மகளை ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள். மகளைப் பள்ளியில் கொண்டு சேர்த்த பின்னர்தான் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குச் செல்ல முடியும் .
அலுவலகத்திற்குத் தாமதமாகி விட்டதால் சாலையின் வேக விதியை மீறி விரைவாகச் செல்கிறீர்கள்.
பதினைந்து நிமிட தாமதம்; அதற்கும் மேல் சாலையின் வேக விதியை மீறியதற்காக ரூபாய் 300 அபராதம் .
அப்பாடா என்று மகளைப் பள்ளியில் இறக்கிவிட, " போய் வருகிறேன்" என்று கூடச் சொல்லாமல் அவள் பள்ளி வளாகத்திற்குள் ஓடிவிட்டாள் . அதிலொரு சிறிய மனச்சஞ்சலம் உங்களுக்கு .

இருபது நிமிட தாமதத்திற்குப் பின் அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கும் போதுதான் நினைவு வருகிறது, " ஆகா! அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீஃப்கேஸை அவசரத்தில் எடுத்து வர மறந்து விட்டோமே " என்று. உங்களின் அன்றைய தினத்தின் தொடக்கமே சற்றுக் கடுமையானதாகிவிட்டது. மேலும் அது அவ்வாறே தொடர்கிறது. எப்போது வீடு சென்றடைவோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது .
மாலையில் வீடு வந்தடைந்தவுடன் மனைவி, மகளின் நெருக்கத்தில் சற்று விரிசலை உணர்கிறீர்கள்.

ஏன்?

காரணம், காலையில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான்.
இந்த நாள் இப்படி இனிமையில்லாத நாளானதன் காரணம்தான் என்ன?
அ) அந்த ஒரு கோப்பைத் தேனீரா ?
ஆ) தங்களின் அருமை மகளா?
இ) அபராதம் விதித்த அந்தப் போக்குவரத்துக் காவலரா?
ஈ) நீங்கள்தான் காரணமா ?

சரியான விடை: " ஈ". ஆமாம் நீங்களேதான் ஐயா !

அந்தத் தேனீர் சிந்தியதற்கு நீங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாளி அல்ல. அது உங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேனீர் சிந்திய அடுத்த ஐந்து வினாடிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம்தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம் . நீங்கள் எப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் ?
இதோ இப்படி:
தேனீர் உங்கள் மீது கொட்டுகிறது.
அருமை மகள் அழப் போகிறாள்.
நீங்கள் மிக அன்பான குரலில், " பரவாயில்லை, அடுத்த முறை கவனமாக நடந்துகொள் அருமை மகளே !" என்று அவளைச் சமாதானப் படுத்துகிறீர்கள். உங்கள் மேல் சிந்திய தேனீரை முகம் கோணாமல் புன்முறுவலுடன் ஒரு டவலால் துடைத்தபடி மாடிக்கு விரைகிறீர்கள். மாடியிலிருந்து புதிய சட்டையையும் அலுவலகக் கோப்புகள் அடங்கிய பிரீப்கேஸையும் எடுத்துக் கொண்டு நிதானமாக இறங்கி வரும்போது ஜன்னல் வழியாகப் பார்க்கிறீர்கள் அங்கே, உங்களை நோக்கிக் கையசைத்து விடை பெற்றவாறே அருமை மகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதைக் கண்டு மகிழ்கிறீர்கள் !

வழக்கத்தை விட ஐந்து நிமிடம் முன்னதாகவே அலுவலகம் வந்தடைந்து அலுவலக நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் முகமன்களைப் பரிமாறி அன்றைய வேலைகளைத் திட்டமிடுகிறீர்கள் . நீங்கள் மகிழ்ச்சியுடன் பணிபுரிவதைக் கண்டு மேலதிகாரி பாராட்டுகிறார். மேலதிகாரியின் பாராட்டு கிடைத்த சந்தோஷத்தோடு மாலை வீடு வருகின்றீர்கள். மனைவியும் மகளும் வாசலில் மகிழ்ச்சியுடன் உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பதைக் காண்கின்றீர்கள் . உங்கள் மனதில் மேலும் சந்தோஷம் களைகட்டுகின்றது!

வித்தியாசங்களைப் பார்த்தீர்களா?

இரண்டு விதமான தொடர் நிகழ்ச்சிகள்! இரண்டும் ஒரே மாதிரித் தொடங்கின. வெவ்வேறு விதமாக முடிந்தன .

ஏன்?

காரணம், நிகழ்வுகளை நீங்கள் எதிர்கொண்ட விதம்தான்.
நடந்து முடிந்த சம்பவத்தின் முதல் 10% நிகழ்வினைக் கட்டுப்படுத்தவோ, மாற்றியமைக்கவோ உங்களால் முடியாது .
ஆனால் அதனைத் தொடர்ந்த மீதி 90% நிகழ்வினைத் தீர்மானித்தது , நீங்கள்தான். அதாவது, நீங்கள் அந்த முதல் 10% சம்பவத்தை எதிர் கொண்ட விதம்தான். இந்த 90/10 கொள்கையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்கு இதோ சில வழிமுறைகள்:

யாராவது உங்களைத் தாழ்வாகப் பேசினால் ஈரத்தை முழுதும் உள்வாங்கும் பஞ்சுபோல ஆகி விடாதீர்கள் .
அவர்களின் வார்த்தைகள் கண்ணாடியின் மீது விழும் தண்ணீர் போல வழிந்து ஓடட்டும். உங்களுக்கு எதிரான எந்த வார்த்தையும் உங்களைப் பாதிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியானபடி அதனை எதிர் கொண்டால் உங்களின் நாள் இனிய நாளாக அமையும்.
தவறான எதிர்கொள்ளலால் நீங்கள், நல்ல ஒரு நண்பரை இழக்கலாம் ; உங்களின் வேலையை இழக்கலாம் ; மன அழுத்தத்திற்கும் ஆளாகலாம்.

உங்கள் வாகனத்தை ஒருவர், சாலை விதிகளை மீறி தவறான ரீதியில் முந்திச் சென்றால் நீங்கள் எவ்வாறு எதிர் கொள்வீர்கள்?
பொறுமையை இழந்து கடுகடுப்பாகி விடுவீர்களா?
உங்கள் வாகனத்தின் ஸ்டீரிங்கை கோபத்தால் குத்துவீர்களா? ( ஒரு நண்பர் குத்தியதில் ஸ்டீரிங் கழன்று விட்டது!) திட்டித் தீர்ப்பீர்களா ?
உங்களின் ரத்த அழுத்தம் எகிறுகிறதா?
முந்திச் சென்றவரின் வாகனத்தின் மீது மோத முயல்வீர்களா?
பத்து வினாடி தாமதமாகச் சென்று சேர்ந்தால் யாராவது உங்களைக் குற்றம் கூறப் போகிறார்களா?
உங்களின் நிதானமான வாகன ஓட்டத்தை மற்றவர்கள் கெடுக்க ஏன் அனுமதிக்க வேண்டும்?.

90/10 கொள்கையை நினை விற் கொண்டு, அது பற்றிய சஞ்சலத்திலிருந்து விடுபடுங்கள்

உங்களை வேலையிலிருந்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் தங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அதனால் ஏன் சஞ்சலமடைய வேண்டும்? ஏன் தூக்கத்தை இழக்க வேண்டும்?.
மன வேதனைக்காகச் செலவிடும் சக்தியை வேலை தேடுவதற்காகச் செலவிடுங்கள் . கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் .

விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது .
அதன் காரணமாக அன்றைக்குச் செயல்படுத்த வகுத்திருந்த உங்கள் திட்டங்களெல்லாம் பாழாகப் போய் விடுகின்றன.
அதற்காக விமானப் பணிப்பெண் மீது ஏன் எரிந்து விழ வேண்டும்?. விமானம் புறப்படுவதற்கும் பணிப்பெண்ணுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அந்தத் தாமத நேரத்தைப் புத்தகம் படிப்பதிலோ, அருகிலிருக்கும் பயணியுடன் நல்ல கருத்துகளைப் பரிமாறுவதிலோ செலவிடுங்கள்.
நாமே ஏன் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும்.

90/10 கொள்கை பற்றி இப்போது தெளிவாகப் புரிந்திருக்குமே!
இந்தக் கொள்கைக்குச் செயல் வடிவம் கொடுத்துப் பாருங்கள்.
அதன் பின் விளைவுகள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு வியப்பாக இருக்கும்!
இதனைப் பயன்படுத்துவதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
90/10 கொள்கையின் விளைவுகள் வியப்பானவை !

மிகச் சிலர்தான் இக்கொள்கை பற்றி அறிந்து, அதனை உபயோகித்துப் பார்க்கிறார்கள்.
கோடிக்கணக்கானோர் தேவையில்லாத மன அழுத்தத்தாலும், சோதனைகளாலும், பிரச்சனைகளாலும், மனவேதனைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் .
நாம் அனைவரும் 90/10 கொள்கையைப் புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டும் .
அது உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும்.
நம் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ்வோமாக!

ஆங்கில மூலம்: ஸ்டீபன் கோவே.
தமிழாக்கம் யார் என்று தெரியவில்லை,
 தமிழ் தாயகத்திற்காக
ஜெ. ஸ்டாலின் 

Creative Quotations from William Shakespeare for Apr 23

The Shakespeare Enigma

RSC : Biography of William Shakespeare

Shakespeare sketch - A Small Rewrite

Shakespeare's Romeo and Juliet (1954) part 13 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 12 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 10 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 9 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 8 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 7 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 6 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 5 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 4 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 3 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 2 of 13

Shakespeare's Romeo and Juliet (1954) part 1 of 13

பொன்மொழிகள்.

வருங்காலத்தில் பெரிய மனிதனாக...
ஏற்ற குறிக்கோள் எது?
ஒவ்வொருவனும் தான் பெரிய கல்விமானாகவும், பெரும் புகழ் பெற்ற சீமானாகவும் விளங்க வேண்டுமென்று விரும்புவது இயற்கை. ஆனால், அவ்விதம் விரும்புகிறானே தவிர, அதற்கு வேண்டிய வழிகளைத் தேடப் பாடுபடுவதே கிடையாது. அவ்வாறு விரும்புகின்றவன் வாழ்க்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்க, எவரும் அறியத்தக்கனவும், மேற்கொள்ளத்தக்கனவுமாகிய கொள்கைகள் சில உள்ளன என்பதையும் உணர வேண்டும். தன் அறிவு, ஆற்றல்களுக்கும் ஏற்ற ஒரு குறிக்கோளை ஒவ்வொருவனும் ஆராய்ந்து எடுத்தல் வேண்டும்.
-ராக்பெல்லர்.
செயலாகும் எண்ணங்கள்
ஒரு செயலை உன்னால் செய்ய முடியுமென்று நீ திட்டமாய் எண்ணுவாயானால் அது எவ்வளவு துன்பம் நிரம்பியதாயிருப்பினும் அதை நீ செய்தே முடிப்பாய். ஆனால் அதற்கு மாறாக இவ்வுலகத்தில் மிக எளியதாயிருக்கக் கூடிய செயலையும் உன்னால் செய்ய முடியாது என்று எண்ணுவாயின் அதை உன்னால் ஒருக்காலும் செய்ய முடியாது. சிறு குப்பை மேடுகள் கூட உனக்குக் கடக்க முடியாத பெரும் மலைகளாகத் தோற்றாமளிக்கும்.
-எமலிகோ.
இல்லாத சக்தி
கடற்கரையில் உடைந்து கிடக்கும் மரக்கலங்கள் போன்று காலமென்னும் அலைகளால் சிதறடிக்கப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சிறந்த திறமைசாலிகளாகத்தாம் இருந்தார்கள். ஆயினும் துணிவும், தன்னம்பிக்கையும் ஒரு முடிவுக்கு வரும் சக்தியும் இல்லாததனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
-பாஸ்டர்.
திடமான நம்பிக்கை
வருங்காலத்தில் பெரிய மனிதனாகக் கூடிய இன்றையச் சிறியவன், தன் மனதில் இப்பொழுதிலிருந்தே ஆயிரக்கணக்கான் இன்னல்கள் ஏற்படினும் அவ்ற்றை எதிர்த்து நிற்பதோடு மட்டுமில்லாது ஆயிரக்கணக்கான தோல்விகள் ஏற்படினும் வென்றே தீருவது என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.
-தியோடர் ரூஸ்வெல்ட்.
தைரியத்தைக் கைவிடாதே
ஒரு போதும் எடுத்த காரியத்தைக் கைவிடாதே! எத்தனையோ சந்தர்ப்பங்களும் மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுக்கின்றான். ஆனால் நீங்கள் மட்டும் மனம் தளராதீர்கள்! ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! ஏனெனில் துன்பமும் இன்பமும் சேர்ந்து வருவதே உலக இயல்பு என்பதை உணர்ந்து எவன், தைரியத்தை இழக்காதிருக்கிறானோ அவனே பெரும் அறிவாளியாவான். எல்லா முதுமொழிகளிலும் மிகவும் முக்கியமானது எதுவென்றால் ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதே எனும் எச்சரிக்கைதான்.
-கவிஞர் ஹோம்ஸ்.
 தொகுப்பு: தாமரைச்செல்வி.

நபிகள் நாயகம் (ஸல்) பொன்மொழிகள்


  • சோதனைகளும் துன்பங்களும் எந்த அளவுக்குக் கடினமாக இருக்கின்றனவோ அதற்குப் பரிகாரமாக அந்த அளவுக்கு வெகுமதி கிடைக்கிறது. மேலும் எந்த அளவுக்கு சோதனைகள் நடக்கின்றனவோ அந்த அளவுக்கு இறைவனுடைய கருணையும் ஏற்படும்.
  • உதவி தேடுபவர்களும் பல்வீனர்களே! உதவி தேடப்படுபவர்களும் பலவீனர்களே!
  • அல்லாவின் கரம் நிரம்பியுள்ளது. வாரி வழங்குவதால் அது வற்றிப்போய் விடுவதில்லை. இரவும் பகலும் மழை மேகத்தைப் போல் அது தன் அருள் மழையைப் பொழிந்து கொண்டே இருக்கிறது. வானங்களையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் வழங்கியவை அவனது கரத்தில் உள்ள செல்வத்தை வற்றச் செய்து விடவில்லை என்பதைப் பார்த்தீர்களா?
  • பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர எந்தச் செயலாலும் ஆயுளை நீடிக்கச் செய்ய முடியாது.
  • இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
  • மனிதனை இறைவன் சோதிக்கும் போது அவனுக்கு நன்மையை வழங்கினால் நல்லவன் என்கிறான். அவனது வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் இறைவன் தன்னை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறுகிறான்.
  • உங்கள் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள் யார் தவ்று செய்திருந்தாலும் நீதியின்பால் நில்லுங்கள். அவர்களுக்காகப் பிறரையும் நீதியிலிருந்து நழுவும்படி வலியுறுத்தாதீர்கள்.
  • உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்ளுங்கள். பிற மனிதர்கள் உங்களிடம் பேச வந்தால் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்.

எம்.ஜி.ஆர். சொன்ன பொன்மொழிகள்


  • நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது. 
  • எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை. அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
  • மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள்தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
  • சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
  • சாதி, மத, இன,  மொழி முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
  • ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
  • எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கலகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
  • ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும், பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
  • உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் தத்துதவத்தை நிலைநாட்டுவீர்.
  • நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக் கூடாது. மற்றவர்களிடம் சொல்லலாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.
  • விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப் போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்து விடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
  • வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
  • முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்கவழி, அறவழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.
  • இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது. ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
  • சரித்திரத்தில் திருப்பு முனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம்? வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.

பொன்மொழிகள்

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்
  • ஜாதிகள் இருந்தாக வேண்டும் என்று எண்ணுபவர்கள் எவ்வழி உலகம் செல்கிறது என்பதை அறியாத ஏமாளிகள். காலத்தின் தாக்குதலைக் கயவரின் தாக்குதல் என்றும் பகுத்தறிவின் வேகத்தைப் பாப காரியம் என்றும் தவறாகக் கருதிடும் பக்குவமற்றவர்கள்.
  • அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற முன் வருபவர்களை நாடு வரவேற்பதில்லை. நையாண்டி செய்கிறது. மதிப்பளிப்பதில்லை. தொல்லை தருகிறது. எனினும் அந்த ஒரு சிலரால்தான் நாடு முன்னேறுகிறது.
  • புரட்சி என்பது வாலிபத்தின் கூறு; பகுத்தறிவாளர் ஆயுதம். பழைமை விரும்பிகள் - புரட்டர்கள் - எதேச்சதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. மக்களின் மகத்தான சக்தி. அதைப் பொசுக்கிவிட எவராலும் முடியாது.
  • ஏழைகளை வஞ்சிக்க ஓர் ஏற்பாடு. அதற்குப் பெயர் மதம். உழைக்கிறவனை ஒடுக்குவதற்கு ஓர் இயந்திரம் - அதற்குப் பெயர் ஜாதி. பகற் கொள்ளை அடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குப் பெயர் பூசை, சடங்கு, தட்சணை.
  • சமத்துவம், சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம். சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை - முழுப்பயனைக்கூட அல்ல - சாயலைப் பெறுவதற்கே பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடந்திருக்கின்றன. நினைவிருக்கட்டும்.
  • மனித சமுதாயத்தின் அல்லலை, விஞ்ஞானம் எந்த அளவு குறைத்திருக்கிறது என்பது பற்றி எண்ணினால் மக்கள் வீழ்ந்து வணங்கவும் செய்வார்கள் விஞ்ஞானத்தின் முன்பு. மனித சமுதாயத்தின் வேதனையை விஞ்ஞானம் அந்த அளவுக்குக் குறைத்திருக்கிறது.
  • ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.
  • ஆலமரத்துப் பிள்ளையாருக்குக் கர்ப்பூரம் வாங்கிக் கொளுத்துவதைவிட ஆரஞ்சுப் பழத்தையே கண்டிராத உன் அருமைக் குழந்தைக்கு ஓர் ஆரஞ்சு வாங்கிக் கொடுப்பது மேல் என்று கூறுகிறது திராவிட இயக்கம். கூறக்கூடாதா? கூறுவது குற்றமா?
  • ஜாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத்திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

பொன்மொழிகள்

வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால்...
  • ஜாதீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி இருக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்.
- அரிஸ்டாட்டில்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே.
- மாத்யூஸ்.
  • நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
 -நியேட்சே.
  • வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.
- பிராய்டு.
  • அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
- புத்தர்.
  • கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
- முகம்மது நபி.
  • சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.
- ஸ்டீலி.
  •  மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்.
  • இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.
- பிரேண்டர்ஜான்சன்.
  • ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.
- சாமுவேல் பட்லர்.
  • வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தில் விடை கிடையாது.
- கீர்கே கார்ட்.
  • நோய் வருவரை உண்பவன், உடல் நலமாகும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்ள வேண்டிவரும்.
- தாமஸ் புல்லர்.
  • தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்கிற எண்ணம்தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.
- டிரெட்ஸி.
  • இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.
- மகாகவி பாரதியார்.
  • அரைகுறையாக எதையும் செய்யாதீர். நல்லவை என்றால் துணிந்து நிறைவேற்றுங்கள். கெட்டது என்றால் அதைச் செய்யாமல் அறவே தவிர்த்து விடுங்கள்.
- கில்ப்பின்.
  • நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.
  • எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து.
- ஆபிரஹாம் லிங்கன்.
  • கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்
  • ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.
- பெர்னாட்ஷா.
  • அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.
- சர்ச்சில்.
  • தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.
  • நமது அறிவு என்பது எறும்பு என்றால் வாழ்க்கையும் இந்த உலகமும் யானையைப் போன்றது.
- சுவாமி சுகபோதானந்தா.
  • பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும்.
 -வைரமுத்து.

பொன்மொழிகள் (வெற்றி வேண்டுமா?)

வெற்றி வேண்டுமா?
  • எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே, வெற்றியாக வளர்கிறது. -வால்டேர்
  • வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. -வால்டேர்
  • நல்ல செயலின் துணிவு உடையவர், நாள்தோறும் வெற்றியே காண்பர். -புரூக்
  • நல்ல செயல்களில் துணிவுடையவர் நாள்தோறும் வெற்றி காண்பர் - புரூம்
  • வெற்றி பெறும் ஒவ்வொரு செயலும் ஒரு குறிக்கோளாக ஆகிவிடுகிறது. -ஹாப்பர்
  • தன்னைத்தானே அடக்கி வெற்றி கொண்டவனே உயர்தரமான வெற்றியாளன் -புத்தர்
  • நம்பிக்கையை விடாதே அதுதான் வெற்றியின் முதல்படிக்கட்டு - அண்ணாத்துரை
  • தெளிவான குறிக்கோளே வெற்றியின் முதல் ஆரம்பம் -வீல்
  • வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் உங்கள் மீது திணிக்கப்படுவதில்லை. -எல்மர்
  • மாணவனை மதிப்பதில்தான் கல்வியின் வெற்றி அடங்கியுள்ளது. -எமர்சன்
  • யாருக்கும் தோல்வியில்லாத வெற்றிக்குப் பெயர்தான் சமாதானம். -நேரு
  • தியாகத் தழும்பு பெறாமல் நீ வெற்றி பெற முடியாது. -புசிடன்
  • ஒருவன் தனக்கு அளவற்ற உற்சாகம் இருக்கும் எந்தத் தொழிலிலும் வெற்றிபெற முடியும்.
-எமர்சன்.
  • வெற்றி பெற்றே தீருவேன் என்று உன்னுடைய மனதில் நீ மேற்கொள்கிற திட சங்கல்பம்தான் வெற்றிக்கு அடிப்படை.
-லிங்கன்
  • நீ உச்சி சென்று வெற்றி காண விரும்பினால் மெல்ல மெல்ல கீழ்மட்டத்திலிருந்து துவங்கு
-சைரஸ்
  • வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன் இரண்டாம்முறை வென்ற மனிதனாவான்.
- லத்தீன் பழமொழி
  • தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும். ஆனால் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
-விவேகானந்தர்
  • ஒரு நல்ல யோசனை தோன்றும் போது அதை உடனடியாகச் செய்து முடித்தால் வெற்றியை நோக்கித் திரும்பிவிட்டீர்கள் என்று அர்த்தம்.
-கிளமெண்ட்
  • இரவு பகல் பாராமல் ஓயாது உழைத்தால்தான் வெற்றியை நழுவாமல் காக்க முடியும்
-ஸ்வேர்டு.
  • பிரச்சனைகள்தான் மிகப்பெரிய சாதனைகளையும், மிக உறுதியான வெற்றிகளையும் உருவாக்குகின்றன.
-கென்னடி
தொகுப்பு: தேனி.எஸ்.மாரியப்பன்.

ஜப்பானியப் பழமொழிகள்

ஜப்பானியப் பழமொழிகள்
  • என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
  • மூன்று செயல்கள் மகிழ்வான வாழ்வுக்குரியது அவை சென்றதை மறப்பது, நிகழ் காலத்தை நேர் வழியில் செலுத்துவது, வருங்காலத்தைப் பற்றி சிந்திப்பது.
  • மனிதன் பணத்தைக் கூட்டுகிறான், கடவுள் மனிதனின் ஆயுளைக் குறைக்கிறான்.
  • நோய் வந்தபோது ஒருவன் - தன் உயிரைப்பற்றி நினைக்கிறான். சுகமான போது பணத்தை பற்றி நினைக்கிறான்.
  • தன்னுடைய அறியாமையை ஒத்துக் கொள்கிறவன் அதை ஒரு முறை காட்டுகிறான். அறியாமையை மறைக்கிறவன் அதை பலமுறை காட்டுகிறான்.
  • கல்யாணமான பின்பு சம்பாதிக்க ஆரம்பிப்பவன் இறந்த பிறகுதான் பணக்காரனாவான்.
  • புகழ் என்பது நீர் மட்டம் போன்றது அது ஒரு கட்டத்தில் பெரிதாகி பின் மறைந்து விடுகிறது.
  • அடக்கி வைத்திருப்பதை விட திறந்து விடுவது மேலானது.
  • சத்தியம், நிதர்சனம், சகிப்புத்தன்மை மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
  • குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும் தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை அறியாது.
  • செல்வம் இருப்பதைவிட ஒரு தொழில் இருப்பது மேலானது.
  • மாமியாருக்கு மரியாதை காட்டினால், தினமும் மூன்று முறை வந்து சலிப்படைய செய்வாள்.
  • உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால் அது அவனுக்கு அவமானம், இரண்டாவது தடவை ஏமாற்றினால் அது உனக்கு அவமானம்.
  • இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
  • பறவைக்கு பயந்து விதைக்காமல் இருக்காதே.
  • அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள், முட்டாள்கள் அதைப் பெற்று விட்டதாக நினைக்கிறார்கள்.
  • அதிர்ஷ்டத்திற்காக காத்திருப்பது மரணத்திற்காகக் காத்திருப்பதுதான்.
  • ஒழுகும் கூரை, புகையடையும் கூண்டு, ஓயாமல் சண்டையிடும் மனைவி இவை மூன்றும் ஒருவனை வீட்டை விட்டுக் கிளப்பிவிடும்.
  • உச்சியில் இருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும் தள்ளி விடுவான்.
  • ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது.
    தொகுப்பு: தாமரைச்செல்வி.

முதன் முதலில்...!


  • முதன்முதலில் கழுதையின் படத்தை அஞ்சல் தலையில் இடம் பெறச் செய்த நாடு கென்யா
  • முதன்முதலில் தோன்றிய பாலூட்டி இனம் மனிதக் குரங்கு
  • முதன்முதலில் நினைவுத் தபால்தலை வெளியிட்ட நாடு அமெரிக்கா (1893)
  • முதன்முதலில் தன் உருவத்தை நாணயத்தில் பொறித்த அரசர் மகா அலெக்சாண்டர்.
  • முதன்முதலில் சிகரெட் பிடிக்கத் தொடங்கியவர்கள் துருக்கியர்கள்
  • முதன்முதலில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்
  • முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து
  • முதன்முதலில் சோதிடம் பார்க்கும் வழக்கம் தோன்றிய நாடு பாபிலோனியா
  • முதன்முதலில் ஒலிம்பிக்கில் பெண்கள் பங்கு கொண்ட ஆண்டு 1912
  • முதன்முதலில் தீக்குச்சிகள் உற்பத்தி செய்த நாடு சுவீடன் (1844)
  • முதன்முதலில் வாழ்த்து அட்டை ஜெர்மனியில்தான் வெளியிடப்பட்டது (1889)
  • முதன்முதலில் அரசுப்பணிக்காக தேர்வு நடத்திய நாடு சீனா (கி.மு.இரண்டாம் ஆண்டு)
  • முதன்முதலில் பரிசுச்சீட்டு இங்கிலாந்தில் அறிமுகமானது (1612)
  • முதன்முதலில் ரிக்சாவைக் கண்டுபிடித்தவர்கள் ஜப்பானியர்கள்
  • முதன்முதலில் தமிழில் சிறுகதை எழுதியவர் வ.வே.சு.அய்யர் (சிறுகதை- குளக்கரை)
  • முதன்முதலில் கண்மையை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள்
  • முதன்முதலில் அதிகக் கதாபாத்திரங்களைக் கோண்டு எழுதப்பட்ட நாவல் டால்ஸ்டாய் எழுதிய போரும் அமைதியும். (ஐநூறு கதாபாத்திரங்கள்)
  • முதன்முதலில் வெளியான அகராதியை வெளியிட்டவர் அப்பிரோகி யோகலிப்னோ (இத்தாலி-1502)
  • முதன்முதலில் ஆம்புலன்சை அறிமுகப்படுத்தியவர் சாரன்ஜிலாரி (பிரான்ஸ்)
  • முதன்முதலில் கலைக்களஞ்சியம் வெளியிட்ட நாடு பிரான்சு
  • முதன்முதலில் வெற்றிலையைப் பயிரிட்ட நாடு மலேசியா.
  • முதன்முதலில் ஓரினச் சேர்க்கைத் திருமணத்தை அனுமதித்த நாடு டென்மார்க்
  • முதன்முதலில் தோன்றிய வேதம் ரிக் வேதம்
  • முதன்முதலில் வண்ணத்துப்பூச்சிகளுக்கு சரணாலயம் அமைத்த நாடு மெக்சிகோ
-தேனி.எஸ்.மாரியப்பன்.

அபூர்வத் தகவல்கள்


லைரே பறவ
லைரே பறவை
லைரே பறவை (Lyre birds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம். லைரே பறவை மிகவும் பிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் பல குரலில் (மிமிகிரி) செய்யும் ஆற்றல் படைத்தது. இந்தப் பறவையினம் ஸ்திரெலியாவின் கிழக்கு பகுதியில் காணப்படுகின்றது.  இந்தப் பறவைகள் மயிலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்தப் பறவை வெப்பப் பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்கின்ற. இந்தப் பறவை முக்கிய உணவாக உக்கிய மரப் பாகங்களில் காணப்படும் புழுக்கள் மற்றும் பூச்சிகளை உண்கின்றது. இந்தப் பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளது. இது தனது பெண் இனத்தினைக் கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்கிறது. இந்தப் பறவைக்கு வைத்திருக்கும் பெயரான லைரே (Lyre) என்பது ஒரு பழமையான இசைக்கருவி.
டைட்டன் ஆரம் மலர்
டைட்டன் ஆரம்
இந்தோனேசியாவின் சுமத்திரா காட்டுப் பகுதியில் உள்ள டைட்டன் ஆரம் (Titan Arum) தாவரம் உலகில் மிகப்பெரிய மலர்களை கொண்டுள்ளது. இந்த டைட்டன் ஆரம் தாவரம் தனி ஒரு மலரை மட்டுமே கொண்டிருக்கும். இதனை தாவரவியலில் Talipot palm  எனும் இன வகையில் சேர்த்துள்ளனர். இம்மலர் சராசரியாக 10 அடி (3 மீட்டர்) உயரம்,  மூன்று முதல் நான்கு அடி சுற்றளவு உடையதாக உள்ளது. இதன் வாசனை அழுகிய மீன் மணத்தை ஒத்ததாக இருக்கும். இந்தத் தாவரம் உலகிலுள்ள பல தாவரவியல் பூங்காக்களிலும் முக்கியம் கருதி வளர்க்கப்படுகின்றது. இந்த மலர் இராட்சத அளவில் உள்ள போதிலும் மற்றய சிறிய மலர்களில் நிகழக்கூடிய சிறிய பூச்சியினம் மூலமான மகரந்தச் சேர்க்கை மூலமாக மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறுகின்றது.
நீலதாமரை மலர்
நீலதாமரை
நீலதாமரை (Udumbara) மலர்கள் 3,000 வருடத்திற்கு ஒரு தடவை மலர்கின்றதாம். இந்து மதம், பெளத்த மதம் இரண்டும் இதனைப் புனித மலர்களாகப் போற்றி வருகின்றன.  மிக மிகச் சிறிய அளவுடைய இந்த மலர்கள் சந்தன வகையை ஒத்த நறுமணம் உடையவை. வெண் நிறம் கொண்ட இந்த நீலதாமரை மலர்கள் 1997 ம் வருடம் ஜூலை மாதத்தில் கொரிய நாட்டில் மலர்ந்திருக்க காணப்பட்டது. நீலதாமரை புத்தபிரான் அவதரித்து 3,024 வருடங்களுக்குப் பின்பு மலர்ந்திருப்பது நல்லசகுனம் என்று பெளத்த மதத்தினர் நம்புகின்றனர்.
சீஹொயா மரம்
பூமியில் இருக்கக்கூடிய தாவரங்களில் உயரத்திலும் பருமனிலும் மிகவும் பெரியது  சீஹொயா (Sequoia) எனும் மரம்தான். இத்தாவரத்தின் இனத்தினை ஒத்த ரெட்வூட் (Red Wood) எனும் மர வகையும் உலகின் மிக உயரமானதும் மிகவும் பிரமாண்டமானதுமாகக் காணப்படுகின்றன. இந்த மரங்கள் டைனஸோர் எனும் இராட்சத விலங்குகள் வாழ்ந்த காலத்திலிருந்து (200 மில்லியன் வருடங்கள் முன்பு) பூமியில் வாழும் தாவரமாக இருந்திருக்கின்றன என்பது ய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் முதல் தாவரவியல் ஆராய்ச்சியாளர் என அனைவரிடத்திலும் பல வினாக்களையும் ஆச்சரியங்களையும் உருவாக்கி இருக்கும் இம்மரம் குறித்த மேலும் சில தகவல்கள்:
சீஹொயா மரம்
  • சீஹொயா (Sequoia) மரங்கள் 180 மில்லியன் வருட காலமாக பூமியில் காணப்படுகின்றன.
  • இந்த மரம் அதிகபட்சமாக 310 அடி உயரம் வரை வளர்கின்றன.
  • இம்மரத்தின் அடிப்பகுதி விட்டம் 45 அட ிவரை காணப்படுகின்றது. இதனால் இம் மரத்தினைக் குடைந்து போக்குவரத்துக்கான பாதைகளை குகை போல் சில இடங்களில் உருவாக்கியுள்ளனர். பண்டைய காலத்தில் இம்மரத்தின் உட்பகுதியில் மனிதன் குடியிருப்பாகப் பயன்படுத்தியிருப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இம்மரம் விதை மூலமாகத் தனது இனவிருத்தியைச் செய்கின்றது. இந்த இராட்சத மரத்தின் இலைகளும் விதைகளும் கால் (1/4) அங்குலத்திலும் மிக சிறியதாக உள்ளது.
  • இம்மரத்தின் வயது 3,200 வருடங்களுக்கும் அதிகமாக உள்ளது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • நல்ல முதிர்ச்சியான ஹொயாவின் வேர்கள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகின்றது.
  • முற்றிய மரத்தின் வெளிப்பட்டை மட்டும் இரண்டு அடியிலும் மேலான தடிப்புடையது.
  • இந்த மரங்கள் தற்போது வடக்கு அமெரிக்காவில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த மரங்கள் ஐரோப்பாவிலும் வடக்கு அமெரிக்காவிலும் 135 மில்லியன் வருடம் முன்பு அதிக அளவில் காணப்பட்ட போதிலும் இன்று வடக்கு அமெரிக்காவில் மட்டுமே அதிகமாக ள்ளன.
-கணேஷ் அரவிந்த்.

அறிஞர் அண்ணாவின் படைப்புகள்

அறிஞர் அண்ணாவின் படைப்புகள்
அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் சி.என்.அண்ணாத்துரை தனது பெயரில் மட்டுமில்லாது சௌமியன், பரதன், நக்கீரன், வீரன், குறும்போன், துரை, வீனஸ், சமதர்மன், ஒற்றன், நீலன், ஆணி, சம்மட்டி, காலன், பேகன், வழிப்போக்கன், சிறைபுகுந்தோன், குறிப்போன், கொழு, குயில், கீரதர் என்கிற பல புனைப் பெயர்களிலும் பல இலக்கியங்களைப் படைத்துள்ளார். அவருடைய படைப்புகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது.

புதினங்கள்
1. என் வாழ்வு (அ) வீங்கிய உதடு - 1940
2. கலிங்கராணி - 1942
3. ரங்கோன் ராதா - 1943
4. பார்வதி B.A - 1944
5. தசாவதாரம் 1945

நாடகங்கள்

1.சந்திரோதயம் - 1943
2. சிவாஜி கண்ட இந்து இராச்சியம் - 1945
3. வேலைக்காரி - 1946
4. ஓர் இரவு - 1946
5. நீதிதேவன் மயக்கம் - 1947
6. நல்லதம்பி - 1949
7. காதல்ஜோதி - 1953
8. சொர்க்கவாசல் - 1954
9. பாவையின் பயணம் - 1956
10. கண்ணாயிரத்தின் உலகம் - 1966
11. ரொட்டித்துண்டு - 1967
12. இன்ப ஒளி - 1968

குறும்புதினங்கள்

1. கபோதிபுரத்துக் காதல் - 1939
2. கோமளத்தின் கோபம் - 1939
3. சிங்களச் சீமாட்டி - 1939
4. குமாஸ்தாவின் பெண்தான் - 1942
5. குமரிக்கோட்டம் - 1946
6. பிடிசாம்பல் - 1947
7. மக்கள் தீர்ப்பு - 1950
8 திருமலை கண்ட திவ்யஜோதி - 1952
9. தஞ்சை வீழ்ச்சி - 1953
10. பவழ பஸ்பம் - 1954
11. சந்திரோதயம் - 1955
12. அரசாண்ட ஆண்டி - 1955
13. மக்கள்கரமும் மன்னன்சிரமும் - 1955
14. எட்டு நாட்கள் - 1955
15. புதிய பொலிவு - 1956
16. ஒளியூரில் ஓமகுண்டம் - 1956
17. கடைசிக் களவு - 1957
18. இதயம் இரும்பானால் - 1960
19. இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள் - 1963
20. தழும்புகள் - 1965
21. வண்டிக்காரன் மகன் - 1966
22. இரும்பு முள்வேலி - 1966
23. அப்போதே சொன்னேன் - 1968

சிறுகதைகள்

1. கொக்கரக்கோ - 11.02.1934
2. பாமா விஜயம் - 18.06.1939
3. தங்கத்தின் காதலன் - 09.07.1939
4. வாலிப விருந்து - 10.09.1939
5. புரோகிதர் புலம்பல் - 10.09.1939
6. பிரார்த்தனை - 14.03.1943
7. வள்ளித் திருமணம் - 28.03.1943
8. கைக்கு எட்டியது - 04.04.1943
9. நாக்கிழந்தார் - 18.04.1943
10. சரோஜா ஆறணா - 25.04.1943
11. இவர்கள் குற்றவாளிகளா - 24.07.1943
12. சொல்லாதது - 21.10.1943
13. உண்ணாவிரதம் ஓர் தண்டனை - 21.10.1943
14. பள்ளியறையின் பரமசிவன் - 16.04.1944
15. ஜஸ்டிஸ் ஜானகி - 17.09.1944
16. கிருஷ்ணலீலா - 12.11.1944
17. 1938-40 ஓர் வசீகர வரலாறு - 14.01.1945
18. சிக்கலான பிரச்சினை - 21.01.1945
19. காமக் குரங்கு - 28.01.1945
20. -பிரசங்க பூனம் - 04.02.1945
21. மதுரைக்கு டிக்கட் இல்லை - 04.03.1945
22. தனபால செட்டியார் கம்பெனி - 03.06.1945
23. அன்ன தானம் - 10.06.1945
24. அவள் முடிவு - 04.11.1945
25. பொய் லாப நஷ்டம் - 18.11.1945
26. இரு பரம்பரைகள் - 06.01.1946
27. புலிநகம் - 20.01.1946
28. சுடுமூஞ்சி - 03.02.1946
29. வேலை போச்சு - 17.02.1946
30. சொல்வதை எழுதேண்டா - 29.02.1946
31. தேடியது வக்கீலை - 03.03.1946
32. ஜெபமாலை - 12.05.1946
33. பூபதியின் ஒரு நாள் அலுவல் - 07.07.1946
34. முகம் வெளுத்தது - 08.09.1946
35. நான் மனிதனானேன் - 17.11.1946
36. நெற்றியில் நெஞ்சில் - 17.11.1946
37. நாடோடி - 17.11.1946
38. ஆறுமுகம் - 17.11.1946
39. கைதிகள் - 12.01.1947
40. சூதாடி - 12.01.1947
41. தீட்டுத் துணி - 12.01.1947
42. கலி தீர்ந்த பெருமாள் - 12.01.1947
43. குற்றவாளி யார் - 02.03.1947
44. மாடி வீடு - 16.03.1947
45. பேய் ஓடிப் போச்சு - 31.08.1947
46. சோணாசலம் - 21.09.1947
47. கதிரவன் கண்ணீர் - 09.11.1947
48. சாது - 16.11.1947
49. இம்சைக்கு ஆளான இலட்சியவாதி (அ) கள்ளன் - 23.02.1947
50. பலாபலன் - 23.01.1948
51. ராஜபார்ட் ரங்கதுரை - 06.06.1948
52. இரும்பாரம் - 13.06.1948
53. மரத்துண்டு - 13.06.1948
54. இரு சாட்சிகள் -17.10.1948
-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்

திரையிசைப் பாடலில் இலக்கணம்.

திரையிசைப் பாடலில் இலக்கணம்.

திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...
  • அடுக்குத்தொடர்:  ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.
  • இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.
  • சினைப்பெயர்:  பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.
  • பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல
  • இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி!
  • காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!
  • குணம் அல்லது பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!
  • தொழில் பெயர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!
  • இறந்த காலப் பெயரெச்சம்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!
  • எதிர்காலப் பெயரெச்சம்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?
  • இடவாகுபெயர்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி
  • எதிர்மறைப் பெயரெச்சம்: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
  • குறிப்புப் பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!
  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.
  • வன்றொடர்க் குற்றியலுகரம்: முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!
  • நெடிற்றொடர்க் குற்றியலுகரம்: நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு
  • உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்
  • இரண்டாம் வேற்றுமை உருபு: நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.
  • மூன்றாம் வேற்றுமை உருபு: உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
  • பெயர்ப் பயனிலை: காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்.
-முனைவர் மா. தியாகராஜன், சிங்கப்பூர்.

கண்பார்வை இல்லாத கவிஞர்

கண்பார்வை இல்லாத கவிஞர்
  • இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அரசமரத்தின் இலை சமாதானத்தின் சின்னமாகப் போற்றப்படுகிறது.
  • உலகில் அதிக நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ள நாடு ஆஸ்திரேலியாதான். இங்கு 27, 948 கிலோ மீட்டர் நீளம் கடற்கரையுள்ளது.
  • திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம், லட்டு கிடையாது.
  • சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியை வந்தடைய 6,30,04,000 மைல்கள் பயணிக்கின்றன.
  • ஆங்கிலக் கவிஞர் மில்டன் கண் பார்வையற்றவர்.
  • உலகில் அதிக அளவில் முட்டையிடும் உயிரினம் கரையான்.
  • பாகிஸ்தான் முதல் இசுலாமியக் குடியரசு நாடு.
  • வாத்து அதிகாலையில்தான் முட்டையிடும்.
  • சைமன் பொலிவியர் என்பவர் 1928 ஆம் ஆண்டில் பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியா என மூன்று நாடுகளுக்கு குடியரசுத் தலைவராக இருந்தார்.
  • உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 இருக்கின்றன.
  • ஒரு மனிதனுக்கு அவனுடைய வாழ்நாளில் சராசரியாக 60, 000 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்குத் தேவையாக இருக்கிறது.
  • இந்தியாவில் முதலில் தமிழில் தான் “பைபிள்”  மொழிபெயர்க்கப்பட்டது.
  • உலகில் 2792 மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
  • சென்னை மாநிலத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தவர் தியாகி சங்கரலிங்கம்.
  • ஆப்கானிஸ்தானில் ரயில் போக்குவரத்து இல்லை.
  • தபால்தலையில் நாட்டின் பெயரை வெளியிடாத நாடு இங்கிலாந்து.
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு உலகின் 17 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன.
  • நத்தையில் ஆண், பெண் பிரிவுகள் கிடையாது. இதற்குக் கொம்பில்தான் கண்கள் இருக்கின்றன.
  • பீர்பால், தான்சேன், தோடர்பால், மான்சிங், ஃபைஜி, அப்துல்ஃபாசல், ரஹீம்கானி-கானன், பகவான்தாஸ், மிர்சா அஜிஸ்கோகோ ஆகிய ஒன்பது பேர் அக்பர் அவையின் நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டனர்.
  • திபெத்தில் மீனை தெய்வமாக கருதுவதால் மீனைச் சாப்பிடமாட்டார்கள்.
  • பிரேசில் நாட்டில் கிடைக்கும் தேன் கசக்கும்.
  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இல்லாததால் அவரை அவருடைய பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராகவேக் கருதினார்கள்.
  • உலகிலேயே அதிகமான மசூதிகள் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில்தான்  இருக்கின்றன. இங்கு மொத்தம் 444 மசூதிகள் இருக்கின்றன.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

இந்தியாவை ஆண்ட முதல் முசுலீம் பெண்.General Knowledge

  • பரிசுச்சீட்டுக் குலுக்கல் முதன் முதலாக சீனாவில்தான் நடைபெற்றது.
  • கராத்தே பயிற்சிக்கான பள்ளி முதன் முதலாக ஜப்பானில் தோன்றியது.
  • டக்டக் என்றால் டேனிஷ் மொழியில் நன்றி என்று அர்த்தம்.
  • உலகில் அதிகமானவர்களை வாட்டும் நோய் பல்வலி.
  • புத்தமதக் கொள்கைகளைப் போதிக்கப் பயன்படுத்தப்பட்ட மொழி பாலி.
  • திருக்குறளில் 14,000 வார்த்தைகள் இருக்கின்றன.
  • சானாமோரினோ நாடு இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு.
  • முதன்முதலில் நினைவு அஞ்சல்தலை வெளியிட்ட நாடு பெரு.
  • பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.
  • பைபிள் முதன் முதலில் ஹூப்ரு மொழியில்தான் எழுதப்பட்டது.
  • இந்தியாவை முதலில் ஆண்ட முசுலீம் பெண் ரசியா பேகம் (1236-1240)
  • ஒரு மின்னலின் சராசரி நீளம் 6 கிலோமீட்டர்.
  • உலகில் பெண் வீராங்காணைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு நியூசிலாந்து.
  • ஸ்நூக்கர் எனும் விளையாட்டில் 22 பந்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஒவ்வொரு யானைக்கும் தினசரி 200 லிட்டர் தண்ணீர் குடிப்பதற்காகத் தேவைப்படுகிறது.
  • பூமியில் கடல்பகுதி 74.34 சதவிகிதமும், தரைப்பகுதி 25.63 சதவிகிதமும் உள்ளது.
  • பாம்பு முட்டைகள் இடப்பட்ட பின்னர் பெரிதாகும் தன்மையுடையது.
  • மெசபடோமியர்கள்தான் கண்ணாடிப் பாத்திரங்களை முதலில் செய்தவர்கள்.
  • உலகின் மிகப்பெரிய வளைகுடா மெக்சிகோ வளைகுடாதான். இதன் பரப்பு 580,000 சதுர மைல்கள்
  • பால்கன் எனும் பறவை மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய பறவையாகும்.
  • ஆஸ்ட்ரிச் எனும் பறவை ஒரே கூட்டில் 100 க்கும் அதிகமான முட்டைகளை இடும்.
  • உலகின் மிகப் பழமையான தேசியக் கொடி டென்மார்க் நாட்டின் தேசியக் கொடிதான்.
  • சிங்கப்பூரை சர் தாமஸ் ஸ்டான்ஃபோர்ட் ராஃப்ட்லஸ் என்பவர் 1819ல் நிறுவினார்.
  • புலி தாக்கப் பயப்படும் விலங்கு காட்டெருமை.
  • கழுத்தைத் திருப்பாமல் கண்ணை மட்டும் அசைக்கும் விலங்கு ஒட்டகச்சிவிங்கி.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

குறுந்தொகைக் கதைகள்-3, மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ?

மாறியது உள்ளம்... மாற்றியவர் யாரோ?
-முனைவர். மா. தியாகராஜன்.
சேவல் கூவி எழுப்பியது. செங்கதிரோனும் கிழக்கு வானிலே விழித்து எழுந்தான் - கதிர்களை விரித்து எழுந்தான்.

அந்த வேளையில்
, அந்தச் சிறு கிராமத்தில், ஒவ்வொரு தெருமுனையிலும் மக்கள் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள்.

“என்ன பொன்னா
, நம் திருமாறனுடைய மகள் தேன்மோழி தேனூர்த் தென்னன் மகன் திண்ணனுடன் போய் விட்டாளாமே? தெரியுமா?” என்றார் எழிலன்.

“ஆமாம்! ஆமாம்! தெரியும்! தெரியும்! போனது மட்டுமா? திருமணமும் முடிந்து விட்டதாம்!” என்றார் பொன்னன்.

“அப்படியா எங்கே?” எழிலன் கேட்டார்.

“தேனூரிலேயே - அதாவது பையனுடைய ஊரிலேயே!” இயம்பினார் எழிலன்.

இவ்வாறு எழிலனும் பொன்னனும் பேசிக்கொண்டு நின்றனர். தெருவில். இவர்கள் பேசிக் கொண்டதை ஒட்டி இருந்த வீட்டின் சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தி தீட்டிய காதுகளுடன் கூர்மையாய்க் கேட்டாள்.
ஆம்! அவள் வேறு யாரும் அல்லள். தேன்மொழியின் தோழியே! - பெயர் கனிமொழி என்பதாகும்.

தெருவில் நடந்த உரையாடலைக் கேட்ட கனிமொழி உடல் எல்லாம் பதைபதைத்தாள்
. உள்ளம் எல்லாம் பதறினாள்.

“அம்மா! அம்மா!” என்று கதறிய வாயோடும்; உதறிய கையோடும்; வடிகின்ற வியர்வையோடும்; படபடவெனத் துடிக்கின்ற இதயத்தோடும் ஓடினாள் சமையலறை நோக்கி.

“என்னடி? என்னடி?” என்று கேட்டபடியே கமையலறையில் இருந்து விரைந்து வந்தாள் அவளுடைய தாய்.

ஆம்! அவள்தான் தேன்மொழியின் வளர்ப்புத் தாய் - செவிலித்தாய் - தேன்மொழியைப் பெற்ற தாய்க்கு - நற்றாய்க்கு தோழி ஆவாள் - செல்லம்மாள் என்பது அவள் பெயர்.

ஓடி வந்த தாயும் மகளும் இடையிலே நின்றனர்
. ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டனர்.

“என்னம்மா? என்ன செய்தி? ஏன் இப்படிப் பதறுகிறாய்?” என்று கேட்டாள் செல்லம்மாள்.

“அம்மா! எப்படியம்மா சொல்வேன் அதை? என்று கதறினாள்.

பதறும் மகளைப் பாசத்தோடு தழுவிக் கொண்டாள். சிறிது நேரம் உடலைத்தடவிக் கொடுத்தாள்
, முதுகைத் தட்டிக் கொடுத்தாள்.

ஆறுதல் பெற்ற கனிமொழி தான் கேட்டதை எல்லாம் தன் தாயிடம் கூறி முடித்தாள். கூரிய கண்களிலிருந்து நீர் வடித்தாள்.
மகள் கூறிய செய்தி கேட்ட செல்லம்மாள் மகளைப் போலவே பதறினாள். பதைபதைத்தாள். நெஞ்சு படபடத்தாள். பின்னர் ஆறுதல் அடைந்தாள்.

இந்தச் செய்தியைத் தேன்மோழியின் தாய் நல்லம்மாளிடம் எப்படியும் தெரிவிக்க வேண்டும்! இது நம் கடமை அல்லவா! ஒரு வளர்ப்புத் தாயின் பொறுப்பு அல்லவா? ஐயோ! கடவுளே! எப்படி இதைச் சொல்வது? இதை அந்தத் தாய் தாங்கிக் கொள்வாளா? ஐயய்யோ! கடவுளே! ஏன் என்னைச் சோதிக்கின்றாய் இப்படி?” என்று பலவாறு புலம்பினாள்
. தவித்தாள்.

இறுதியில் இச்செய்தியை நற்றாய்க்கு நல்லம்மாளுக்குத் தெரிவிப்பது தன் கடமை. நற்றாய்க்கு அறத்தோடு நிற்பது தன் பொறுப்பு என்பதை உணர்ந்தாள்
. உடனெ புறப்பட்டாள். தேன்மோழியின் இல்லம் போய்ச் சேர்ந்தாள்.

ஏற்கனவே அதனை அறிந்து கொண்ட நற்றாய் நல்லம்மாள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தாள். செல்லம்மாள் தன் உள்ளத்தில் தோய்ந்திருந்த வருத்தத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நல்லம்மாளுக்கு முன் சென்று நின்றாள்; அமைதியாய் அமர்ந்தாள்
. மெல்ல வாய் திறந்தாள். மெதுவாகப் பேசத் துவங்கினாள்.

“தோழி! நல்லம்மா! நடந்தது நடந்து
விட்டது. வருந்தாதே! எல்லாம் நன்மைக்கே! இப்படி நடந்து விட்டாலும் நம்முடைய பெண் மிக மிகப் புத்திசாலித்தனமாகவே நடந்து கொண்டிருக்கிறாள்.”

“எப்படி?”

“பையன் மிகவும் அறிவுள்ளவன்
, கழல்களிலேயே சிறந்த கழல்களை ஆராய்ந்து பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கால்களிலே அணிந்துள்ளவன். வலிமை வாய்ந்த வேல் ஒன்றைப் பற்றியுள்ள வீரம் செறிந்தவன். எனவே, நல்லவனைத் தான் தன் கணவனாக நம் பெண் தேர்ந்தெடுத்துள்ளாள். எனவே, பையன் எப்படிப்பட்டவனோ? எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்று கவலை கொள்ளத் தேவையில்லை” என்று இயம்பினாள்.

ஐயோ! தோழி! அது எல்லாம் சரிதான்! இப்பொழுது அவள் எங்கு இருக்கின்றாளோ? எப்படி இருக்கின்றாளோ? என்றும் தெரியவில்லையே!”

“நல்லம்மா! வருந்தாதே! நல்லபடியாகவே எல்லாம் முடிந்திருக்கிறது!”

“என்ன சொல்கிறாய் செல்லம்மா?”
“ஆம்! திருமணம் முடிந்து விட்டது! மணப்பறை மங்களமாய் முழங்க, வரிசங்கு ஊதி ஒலிக்க, இரு மனம் கலந்த திருமணம் நடந்து முடிந்து விட்டது. கழல் அணிந்த கால்களை உடைய தலைவன் திண்ணன் என்பவன் வளையல் அணிந்த நம் மகளின் கையைப் பற்றி அழைத்துச் சென்று மணம் முடித்துக் கொண்டான்.

நாலூர் என்றோர் ஊர். அங்கு வாழும் மக்கள் கோசர்கள் ஆவர். அவர்கள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் அடியில் அமைந்திருக்கும் ஊர்ப் பொது மன்றத்தில் கூடுவர். அவர்கள் வாய்ச் சொல் தவற மாட்டார்கள். ஒன்றே சொல்வர். அதுவும் நன்றே சொல்வர். அப்படிச் சொன்னதைச் சொன்னபடி அன்றே செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். அவர்களுடைய வாய்ச் சொல்லைப் போலவே திருமணமும் தவறாமல், நல்லபடியாய் முடிந்துள்ளது. எனவே அவள் வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது. கவலையை நீ விட்டு ஒழி! என்று கூறித் தேற்றினாள். 
“பறைபடப் பணிபலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொண்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழல்
சேயிலை வெள்வேல் விடலையோடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே!”
(குறுந்தொகை: 15 - ஒளவை.)