Search This Blog

Wednesday, August 15, 2012

பயங்கரவாதத் தடைச் சட்டமும் அவசரகாலச் சட்டமும்



பயங்கரவாதத் தடைச்சட்டம் தோன்றிய கதை
1977ம் ஆண்டுக்குப் பின்பு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த சமயம். பாராளுமன்றத்தில் அக்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 8 ஆசனங்கள் மட்டுமே வெற்றி கொண்டதனால் அதற்கு எதிர்க்கட்சித் தலைமையாகவேனும் இயங்க முடியவில்லை. தமிழீழக் கோரிக்கையுடன் தேர்தலில் இறங்கி 18 ஆசனங்களை வென்றெடுத்த தமிழர் கூட்டணியின் தலைவர் திரு அமிர்தலிங்கம்தான் இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். இந்த நிலைமையில் ஆளுங்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் தனக்கிருந்த பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு எந்தச் சட்டத்தையும் இயற்றக்கூடியதாக இருந்தது. இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுதான் அந்த அரசாங்கம் 1978ம் ஆண்டு இலங்கைக்குரிய புதிய அரசியல் யாப்பினையும் சட்டமாக்கியது. இந்த அரசியல் யாப்புதான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைக் கொண்டு வந்தது. மேலும் இந்த யாப்பில் இலங்கைப் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டு வரும் எந்தச் சட்டமும், அது அரசியல் யாப்புடன் ஒத்துப்போகின்றதோ இல்லையோ, அது செயற்படுத்தப்படும் என்கின்ற அதிகாரமும் பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதே வேளை 1976ம் ஆண்டுக்குப் பின்பு வட-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் சிறிது சிறிதாக அதிகரிக்கலாயின. 1976ம் ஆண்டு அவ்வியக்கம் அப்போதைய யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்தும் வேறு பல வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது. எனவேதான் 1978ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பையும் அது போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தவிர எங்கள் நாட்டில் 1947ம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் அவசரகாலச் சட்டமும் இருந்தது.  ஆனால் இவையெல்லாம் போதாதென்று கருதிய அரசாங்கம்  1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டுவர பரிந்துரைத்தது.
முதலிலிருந்தே ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்தனா அவர்கள், இந்;தச் சட்டத்தை தான் தனது பாராளுமன்றப் பெரும்பான்மையுடன் அமுலுக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்து விட்டார். இதனால், இச்சட்டம் எங்கள் அரசியல் யாப்பின் கொள்கைகளுக்கு மாறாக இருக்கின்றதா இல்லையா என்பதை எமது உயர் நீதிமன்றம் பரிசீலிப்பதற்கே தேவையில்லாமல் போய்விட்டது. ஏனெனில் என்ன சொன்னாலும் சரி செய்தே தீருவதென்று ஜனாதிபதி முடிவெடுத்து விட்டாரே. இதன் காரணமாக, உயர் நீதிமன்ற நீதியரசர்களும் முன்மொழியப்பட்ட இந்தச் சட்டத்தில் பாரதூரமான பிழைகள் ஏதும் இருக்கின்றனவா என்பதை மட்டும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, யாப்பின் மனித உரிமைகள் பிரிவினைப் பார்க்காமல் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் தங்கள் ஒரு பக்க அறிக்கையில் 'இது எமது அரசியல் யாப்புக்கு முரணாகவில்லை' என்று சொல்லி இந்தச் சட்ட மசோதாவை பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கான பச்சை விளக்கைக் காட்டி விட்டார்கள்.
1979ம் ஆண்டு ஜுலை மாதம் 19ந் திகதி சட்ட மசோதா பாராளுமன்றத்துக்கு வந்தது. இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் முன்மொழிந்தவர் யார் தெரியுமா? மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி உறுப்பினர் கே டபிள்யூ தேவநாயகம் அவர்களே. இந்த விவாதத்தின்போது இந்தச் சட்டத்தை எதிர்த்தவர் யார் தெரியுமா? நீங்கள் நினைக்கின்ற மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் இல்லை. இது 'பெடியன்களை'ச் சமாளிப்பதற்காக ஒரு கொஞ்ச நாளைக்குத்தான் அமுலில் இருக்கும். நீங்கள் அவ்வளவாக இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்று ஜேஆர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அவர் மௌனமாகிவிட்டார். அவருக்கும் 'பெடியன்களை'ச் சமாளிக்கின்ற தேவை இருந்தது போலும்.  இரு தமிழ் அரசியல் தலைவர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இன்றுவரை எத்தனை ஆயிரம் தமிழ் உயிர்களையும், அவர்கள் வாழ்க்கையையும் அவர்கள் உடைமைகளையும் அழித்தொழிக்கப் பாவிக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா? இங்கு மவையகத் தமிழ் மக்கள்கூட விட்டுவைக்கப்படவில்லை. நினைத்தே பார்க்க முடியாத சித்திரவதைகள், கொடுமைகள். இதிலிருந்து, என்னதான் ஒரு சந்தர்ப்பத்துக்குத் தன்னும் செய்யப்படுகின்ற எந்த நடவடிக்கையும், அடிப்படை மனித உரிமைகளை மீறா வண்ணம் நாம் கண்காணித்தக் கொண்டேயிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
அன்று பாராளுமன்றத்தில் இதற்கெதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால செனநாயகதான் எதிர்த்து வாதிட்டவர். விடுதலைப்புலிகள் அமைப்பின் தடைச்சட்டம் இருக்கின்றதே, அவசரகாலச் சட்டம் இருக்கின்றதே, அது கூடப் போதவில்லையா என்று, தனக்கு வாக்களித்த மக்களுக்கெதிராகவே இச்சட்டம் அவசர அவசரமாக பாஸ் பண்ணப்படுகின்றது என்ற அரசாங்கத்தின் உள் நோக்கத்தை அவர் சாடினார். ஆனால், என்ன பேசி என்ன செய்ய, ஒரே நாளிலேயே இச்சட்டம் கடகடவென அங்கீகரிக்கப்பட்டு விட்டது. தற்காலிகமானது என்று சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தும் இன்று 2010ம் ஆண்டில் இது 30 வருடங்களையும் தாண்டிவிட்டது!!
இச்சட்டம் பின்பு 1982ம் ஆண்டும் பின்பு 1988ம் ஆண்டும் திருத்தப்படடது. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஷரத்துக்கள் போதாதென்று 2006ம் ஆண்டு மஹிந்த அரசாங்கம் இன்னுமொரு பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தது. இது முதலாவதாக, பயங்கரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை வரையறுத்தது. அது, பிரிவினைக்கு ஆதரவாகப் பேசுதல் ,எழுதுதல், நடவடிக்கைகளைச் செய்தல், அப்படிச் செய்பவர்களுக்கு ஏதேனும் முறைகளில் உதவுதல், என்பனவாகும். ஐந்து பேருக்கு அதிகமாகக் கூட்டம் கூடினாலும் அது குற்றமாகக் கணிக்கப்படுகிறது. இதன் கீழ், கைதாகின்றவருக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள்கூட குற்றவாளிகளாகக் காணப்படலாம்!! புலிகளின் ஆதரவாளர்களின் ஆதரவாளர்களும் கைது செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்களின் சொத்துக்கள் கூட அரசாங்க உடைமையாக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டமும் எமது அரசியல் யாப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளும்
இலங்கையின் 1978ம் ஆண்டின் அரசியல் யாப்பானது, பேச்சு சுதந்திரம், கூட்டம் கூடி இயங்கும் சுதந்திரம், சட்டத்தின் முன்பு சமத்துவமான பாதுகாப்பு, எழுந்தமானமான கைதுகளுக்கும் தடுத்து வைக்கப்படுதற்கும் எதிரான பாதுகாப்பு, சித்திரவதையினின்றும் விடுதலை, நீதியாக நடத்தப்படும் வழக்குகளுக்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மக்களாகிய எங்களுக்கு வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழோ,
1. அமைச்சரின் ஆணையின் பேரில், அவர் அதிகாரம் வழங்குகின்ற அலுவலர்களினால் அவர் சந்தேகிக்கின்ற எவரும் கைதாக்கப்படலாம். கைது செய்யப்படும்போது கைது செய்யப்படுபவருக்கு காரணம் ஏதும் சொல்லத் தேவையில்லை. அவருடைய வீட்டுக்குள் அனுமதியில்லாமல் புகுந்து தேடலாம். எந்தப் பொருளையும் எடுக்கலாம்.
2. அமைச்சர் தீர்மானித்த முறையிலும் அவர் தீர்மானிக்கின்ற இடத்திலும் கைதானவர் தடுத்து வைக்கப்படலாம். முதல் 72 மணித்தியாலங்களுக்கு அவர் வெளியுலகத் தொடர்புகளின்றி, முக்கியமாக, ஒரு சட்டத்தரணியின் உதவியின்றி (எங்கள் பொதுச் சட்டம் கைதான எவருக்கும் உடனடியாகவே சட்டத்தை நாட உரிமை இருக்கின்றது என்று கூறுகிறது) தடுத்து வைக்கப்படலாம். இவ்வாறு தடுத்து வைக்கப்படும்போது அவர் கொடுக்கின்ற வாக்கு மூலங்கள் நீதிமன்றில் செல்லுபடியாகும் (எங்கள் பொதுச் சட்டத்தின் கீழ், தடுத்து வைக்கப்படும்போது சித்திரவதைகளுக்கு இடமிருக்கின்றது என்பதனால், அப்போது கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள் செல்லுபடியாகா).  
3. கைது செய்யப்பட்டு இருப்பவரை பொலிஸ் விசாரணைக்காக எப்பொழுதும் எங்கும் கொண்டு செல்லலாம். எனவே, ஒரு நீதிமன்றின் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எந்தக் கைதியும் பொலிஸாரினால் வேறெந்த இடத்துக்கும் கொண்டு செல்லப்படலாம்.
4. சந்தேக நபர் 18 மாதங்களுக்கு ஒருவித குற்றச்சாட்டுமின்றித் தடுத்து வைக்கப்படலாம். அப்படி அவர் விடுவிக்கப்பட்டாலும்கூட, இந்தக் காலத்துக்கு அவருடைய நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மட்டுப்படுத்தலாம். அவர் எங்கே குடியிருக்கலாம், எங்கே வேலை செய்யலாம், எங்கே பயணஞ் செய்யலாம், எந்தவொரு அமைப்புக்களை செயற்படுத்துவதற்கும் தடை போன்றவையே இந்த மட்டுப்படுத்தலாகும்.
5. பயங்கரவாத அமைப்புக்களை ஆதரிப்பது, அதற்கு ஆதரவாக பிரசுரங்களை வெளிக்கொணர்வது, வன்முறைகளில் ஈடுபடுவது இவையெல்லாவற்றுக்கும் 5வருடம் தொடங்கி 20 வருடம் வரையிலான கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு. 2008ம் ஆண்டில் கைதான ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அவர்களுக்கு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இரண்டு கட்டுரைகள் எழுதினார் என்ற பேரில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை எங்களது நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டது.
6. எவரேனும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரிந்த தகவல்களை பொலிஸாரிடம் தெரிவிக்காமல் விட்டால் அதற்கு ஏழு வருடங்கள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு.
இந்தச் சட்டத்தில் தில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியஅ ம்சங்கள் நிறையவே இருக்கின்றன. ஒரு அரசியல்வாதி (அமைச்சர் என்றால் வேறு யார்?) எங்களை கைது செய்வது பற்றித் தீர்மானிக்கலாம் (உண்மையில் நீதித்துறையே அதற்கான அதிகாரம் கொண்டது)ளூ பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி இல்லாமல் பண்ணலாம்ளூ நீதிமன்றின் அனுமதியில்லாமலேயே அதன் பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு நபரை எங்கும் (உத்தியோகபூர்வ பாதுகாப்பு இல்லாத எந்த இடமும் ) அழைத்துச் செல்லலாம்ளூ அவரை என்னவும் செய்யலாம் (ஏனெனில் எப்படிச் செய்தாலும் அவருடைய வாக்குமூலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுமல்லவா?).  வழமையாக எமது சட்டங்கள், செய்யப்படும் நடவடிக்கைகளுக்கான தண்டனைதான் தரும். செய்யாத நடவடிக்கைகக்காக தண்டனை தருவது கிடையாது. எமது பயங்கரவாதத் தடைச்சட்டத்திலேயோ, ஒருவர் படையினருக்கு தமக்குத் தெரிந்த தகவலை தெரிவிக்காத குற்றத்துக்காகத் தண்டிக்கப்படலாம். இதன்மூலம் எங்கள் நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஒரு வேவு பார்க்கும் சமூகமாக இந்தச் சட்டம் மாற்றியது. இந்தக் காரணத்தினால் கொழும்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலில் வாழ்ந்த எத்தனை தமிழர்கள் தங்கள் சிங்கள அயலவர்களினால் பொலிஸாரிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார்கள். இப்படி ஒரு பேனா வீச்சிலேயே இந்நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடையே இருந்த ஒற்றுமையை இது குலைத்தது.
இதைவிட முக்கியமாக, எமது நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள், ஒருவித சாட்சியங்களுமின்றி கைது செய்யப்பட்டவர் தடுப்புக் காவலில் இருந்தபோது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மட்டும் தீர்ப்பாகின. தடுப்புக்காவலில் நடத்தப்படும் சித்திரவதைகளின் அளவும் தன்மையும் முன்னெப்போதும் கண்டிராதவகையில் பெருகின. அந்த சித்திரவதைகளை இங்கு விவரிக்கவே அங்கம் கூசும்.
அவசரகாலச் சட்டம்
எங்கள் நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தோடு அவசரகாலச் சட்டமும் அமுலில் இருந்து வந்திருக்கின்றது. எனவே இதைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும்.
அவசரகாலச் சட்டமானது, 1947ம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டம், மற்றும் எங்கள் அரசியல் யாப்பின் 76, 155 ஆகிய பிரிவுகள், ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுத்தப்படுகின்றது. எமது ஜனாதிபதி அரசாங்கத்தின் வர்த்தமானியில் (அரசாங்கத்தின் கொள்கைகளையும் சட்டங்களையும் வெளியிடும் பிரசுரம்) பிரகடனம் செய்த அந்தக் கணமே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. இந்தச் சட்டம் யாப்பில் காணப்படுகின்ற சட்டங்களைத் தவிர வேறெந்தச் சட்டங்களையும் மீற வல்லது. ஆயினும் எங்களது அரசியல் யாப்பு, தானே தனது எந்தெந்நதச் சட்டங்களை ஒரு அவசரகாலச் சட்டம் மீறலாம் என்று குறித்திருக்கின்றபடியால், அவசரகாலச் சட்டம் எங்கள் அரசியல் யாப்பின் அந்தச் சட்டங்களையெல்லாம் மீறுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது (இது அனேகமாக எங்கள் அடிப்படை உரிமைகளைக் குறித்துத்தான் இருக்கும் என்பதை நீங்கள் நாம் சொல்லாமலேயே அனுமானித்துக் கொள்ளலாம்).
பிரகடனத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி, அதனை உடனடியாகவே பாராளுமன்றத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இப்பிரகடனம் ஒரு மாதத்துக்குத்தான் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு பாராளுமன்றம் அதனை அங்கீகரித்தால்தான் அடுத்த மாதத்துக்கு அதனை நீட்டலாம். இப்படி மாதாமாதம் பாராளுமன்றம் கூடி அவசரகாலச் சட்டத்தினை அங்கீகரித்ததனால்தான் 1971ம் ஆண்டு தொடக்கம் (முதலாவது ஜேவிபி கிளர்ச்சி) இன்று வரை ஒரு சில மாதங்களைத் தவிர இச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்து வருகின்றது. இதைக் கொண்டு எங்கள் ஜனாதிபதி தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவது தொடங்கி பாராளுமன்றத்தைக் கலைப்பது வரை எதையும் செய்யலாம்.
அவசரகாலச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எவரையும் கைது செய்து காலவரையறையின்றி, அதாவது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையும்,  தடுத்து வைக்க ஆணையிடலாம். ஆனால் எங்கள் நாட்டிலோ தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த தன்மையினால் யதார்த்தமாகப் பார்க்கப்போனால் ஒருவர் தனது வாழ்நாள் முழுக்கவே விசாரணையின்றி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகிறது. மேலும், கைதாகி 15 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் தருவிக்கப்படவேண்டும் ஆயினும், அவர் நீதிபதியினால் விடுவிக்கப்பட முடியாது. அவரை மிண்டும் ரிமாண்டில் போடுவதுதான் ஒரு நீதிபதி செய்யக்கூடிய உதவியாகும். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் நீதியமைச்சின் நிரந்தர செயலாளரின் அனுமதி பெற வேண்டும். சுருங்கக்கூறில், ஒருவரை நிரந்தரமாகக் கைதியாக வைத்திருக்கும் யுக்தியே நமது அவசரகாலச் சட்டம் என்றால் மிகையாகாது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் நாம் முன்பு கூறிய பயங்கரவாதத்துக்கு எதிரான 2006ம் ஆண்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த நரக துன்பம்தான் எஞ்சும். பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 72 மணித்தியாலங்களில் சட்டத்தின் முன் கொண்டுவரப்படவேண்டும் என்பதனால், 72 மணித்தியாலங்களில் அவர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏதோவொரு குற்றச்சாட்டை எழுதிப் போட்டுவிடுவார்கள். இங்கு 15 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படவேண்டும் என்பதனால் உடனே திரும்பப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றச் சாட்டைப் போட்டு 18 மாதங்கள் சிறை வைத்து விடுவார்கள். இப்படியே போக வேண்டியதுதான். இன்னும் இந்தச் சட்டங்கள் எங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றன. இவற்றுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் ஒருங்கே ஒருசேர அமுலில் இருந்தால் என்ன நடக்கும்? 2007ம 2008ம் 2009ம் ஆண்டுகள் நாம் அனுபவித்த பயங்கரங்கள்தான் கூடும்.
இவை இன்னமும் அமுலில் இருக்கின்ற சட்டங்கள். இவற்றை இல்லாதொழிப்பதற்கு பல மனிதஉரிமைகள் அமைப்புக்கள் பணி புரிகின்றன. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மனித உரிமைகள் இல்லம் போன்றவை அவையாகும். ஆனால் நாங்கள் மக்கள் உறுதியுடன் அவர்களுக்குப் பின்னால் நிற்காவிட்டால் சிறிய நிறுவனங்களாகிய அவை ஒன்றும் செய்ய முடியாது. இச்சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வுகளை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி இந்த நாடே சூழ்ந்து இந்த அநீதிகளை ஒழிக்கப் பாடுபடச் செய்ய வேண்டும்.

கலந்துரையாடலுக்கான  வழிகாட்டல்:

1. நீங்களேனும் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் கைது செய்யப்பட்ட அனுபவங்கள் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் விரும்பினால் மட்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தன?
2. அநீதிகள் எங்கள் வாழ்க்கையில் நடக்கும்போது அவற்றை நினைவு கூருவதும் அவற்றைப் பற்றிப் பேசுவதும் அவசியமானது என்று நினைக்கிறீர்களா, இல்லையா? ஏன் என்று கூறுக.
3. 'இந்தச் சட்டமெல்லாம் நமக்கப்பாற்பட்ட விசயங்கள். பேசாமல் இருந்து கொண்டு ஏதாவது ஆட்சி மாற்றங்கள் வந்தால் அதால இது மாறும் வரைக்கும் காத்திருக்கலாம்..' இப்படி உங்கள் நண்பர் சொல்லுகிறார். நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்லுவீர்கள்?
4. பயங்கரவாதத் தடைச்சட்டம் ஒழிக்கப்படுவதற்கு நீங்கள் உங்கள் ஊரில் இருந்து கொண்டு செய்யக்கூடிய நடவடிக்கைகள் என்ன? அவை என்னென்ன பயன்களைத் தரும்?

 Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்



இலங்கையின் அரசியல் யாப்பு (அரசியலமைப்புச் சட்டம்) 1978




அறிமுகம்
நீங்கள் ஒரு அமைப்பின் அங்கத்தவராக இருப்பின், யாப்பு என்கின்ற சொல்லின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்திருக்கும். யாப்பு என்பது, ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் இயங்குவதற்கான விதிகளும் கொள்கைகளுமாகும். அதே போலவேதான், அரசியல் யாப்பு என்பது ஒரு நாடு இயங்குவதற்கான விதிமுறைகளும் கொள்கைகளுமாகும். இது உண்மையில் தம்மைத் தாமே ஆளுவதற்காக மக்கள் இடும் ஆணையாகும். அது நாட்டுக்கு நாடு முற்றிலும் வேறுபடும். ஒவ்வொரு அரசியல் யாப்பும் அந்தந்த நாட்டின் கட்டமைப்புக்கள் வளர்ந்து வந்த வரலாற்றையும் அனுபவத்தையும் பொறுத்தும், அத்துடன் அதை எழுதியவர்களின் நோக்கங்களைப் பொறுத்தும், அது தயாரிக்கப்பட்ட முறைவழி பொறுத்தும் இப்படி வேறுபடுகின்றது. தற்போது செயற்பாட்டில் இருக்கும் எங்களுடைய யாப்பு, 1978ம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழேயே எழுதப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

உங்கள் கிராம மாதர் அபிவிருத்திச் சங்கமாக இருந்தால் என்ன, அல்லது ஒரு அரசுசாரா நிறுவனமாக இருந்தால் என்ன, உங்கள் அமைப்பின் யாப்பில் இரண்டு அங்கங்கள் இருக்க வேண்டும். முதலாவது அங்கமானது தெரிவு செய்யப்படும் உறுப்பினரது தன்மைகளும் கடமைகளும் எவை என்பதை விவரிக்கும். அடுத்த அங்கமானது நிர்வாக நடைமுறைகளைப் பற்றிக் கூறும், இல்லையா? இங்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் தீர்மானம் எடுக்கும் அங்கத்தினர்களாக இரப்பார்கள். நிர்வாகத்தினர், பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்தின்படி பணி புரியும் ஊழியர்களாக இருப்பார்கள்.

அதே போலவே, ஒரு அரசியல் யாப்பானது நாட்டின் ஆட்சியின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் (தீர்மானம் எடுப்போர்) இயங்க வேண்டிய முறை பற்றியும், நிர்வாக (ஊழியர்கள்)  நடைமுறைகள் பற்றியும் விளக்குகின்றது. இவை தவிர, இந்த இரண்டு அங்கங்களும் மிதமிஞ்சிய அதிகாரங்களோடு தம் இஷ்டத்துக்கு இயங்காத வண்ணம் பார்த்துக்கொள்வதற்கு மூன்றாம் அங்கமாகிய நீதித் துறையானது ஒவ்வொரு அரசின் யாப்பினுள்ளும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதன்படி, ஒரு அரசியல் யாப்பின் மூன்று முக்கிய அங்கங்களாக சட்டவாக்க அங்கம், நிறைவேற்று அங்கம், நீதித்துறை அங்கம் என்பனவற்றைக் கூறலாம்.

•       சட்டவாக்க அங்கமானது தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டது. இது நாட்டின் சகல கொடுக்கல் வாங்கல் பற்றியும் சகல அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றியுமான சட்டங்களை இயற்றும். அப்படி இயற்றுகின்ற இந்த மக்கள் பிரதிநிதிகள் சபையைப் பாராளுமன்றம் என்று சொல்லுவோம்.
•       பாராளுமன்றம் இயற்றும் சட்ட விதிகளை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்றுத் துறை இருக்கின்றது. அமைச்சுக்கள், அதன் கீழான திணைக்களங்கள், அவற்றின் அலுவலகங்கள் ஆகியன இவை. மக்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கான சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், அவர்களின் அபிவிருத்தியை முன்னேற்றுதல், மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளைப் பேணுதல் போன்றவையே நிறைவேற்று அங்கங்களின் நோக்கமாகும்.
•       சட்டவாக்க அங்கமும் நிறைவேற்று அங்கமும் அரசியல் யாப்பு விதிகளுக்கமையவும் நாட்டின் சட்டங்களுக்கு அமையவும் தங்கள் கடமைகளை சரிவரச் செய்கின்றனவா என்பதைக் கண்காணிக்கவே நீதித்துறை இருக்கின்றது. நீதித்துறைக்கு எவரும் முறைப்பாடு செய்யலாம். அவருடைய வழக்கை அது எடுக்கும்.  

பாராளுமன்றம், நிறைவேற்று அங்கம், நீதித்துறை ஆகியன எப்படி கட்டமைக்கப்படவேண்டும் என்றும், அவற்றுக்கான பிரதிநிதிகளும் உத்தியோகத்தர்களும் எப்படி நியமிக்கப்படவேண்டும் என்றும், என்னென்ன விதிகளுக்குக் கீழ் அவை இயங்க வேண்டுமென்றும் எங்களுடைய அரசியல் யாப்பு தெரிவிக்கின்றது. சட்டவாக்க அங்கமாகிய பாராளுமன்றம், தானே இன்னுமொரு சட்டவாக்க அங்கமாகிய உள்ளுராட்சி மன்றங்களைத் தாபிக்கலாம். இதன் மூலம், தனது சட்டவாக்க அதிகாரங்களை வேறு பிராந்திய சட்டவாக்க கட்டமைப்புக்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதுவும் ஒரு அரசியல் யாப்பினுள் உள்ளடக்கப்படுகின்றது. இதனை அரசியல் அதிகாரப் பகிர்வு என்று கூறுவோம்.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பானது, அந்நாட்டின் பல சந்ததிகளுக்கு, பல நூறு வருடங்களுக்காவது தொடர்ந்து வழக்கிலிருக்க வேண்டிய பொதுச் சொத்தாகும். எனவே, சகல மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு தூர தரிசனத்துடன் அது இயற்றப்படவேண்டும். அத்துடன், அது மக்கள் ஆணையாகக் கருதப்படுகின்றது. அவர்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றது.
மக்கள் எங்களுடைய ஆணை என்பதனால் அதன் ஆக்கத்தில் நாங்கள் எல்லோரும் ஈடுபட்டிருக்க வேண்டியது அவசியமாகும். ஒரு அரசியல் யாப்பு எளிய மொழி நடையில் பொது மக்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக, தென்னாபிரிக்கா நாட்டில் ஒரு மூன்று வருடங்களுக்கூடாக, மக்கள் சமூகங்கள் பங்கு பற்றி எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து எழுதிய அரசியல் யாப்பினைத்தான் 1996ல் அதன் பாராளுமன்றம் அங்கீகரித்தது. அந்த யாப்பினை வாசித்தப் பார்த்தால் மிக எளிய நடையில் எல்லோருக்கும் புரிகின்ற விதத்தில் அது எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஒரு அரசியல் யாப்பினைப் பற்றி நாம் இவ்வளவு தெரிந்து கொண்டோம். இனி எங்கள் நாட்டின் அரசியல் யாப்பின் விசேட அம்சங்களைப் பார்ப்போம்.


இலங்கையின் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பின். . . . . .

1)   நோக்கம்

ஒரு சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைச் சார்ந்த தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையை நிலை நிறுத்தத் தேவையான அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதுதான் 1978ம் ஆண்டு உருவாக்கப்பட்ட எங்கள் அரசியல் யாப்பின் முக்கிய நோக்கமாகும். இத்தகைய சுரண்டல் தாராளவாத பொருளாதாரக் கொள்கையானது, தங்கள் உரிமைகளைக் கோர பலமில்லாத தொழிலாளர் வர்க்கத்தினர் இருக்கும்போதும், வெளிநாட்டு மூலதனங்களுக்கான சுதந்திரமான செயற்பாடு வழங்கப்படும்போதும்தான் செயற்படுத்தப்பட முடியும்.  இப்படியானதொரு பொருளாதாரக் கொள்கையை நிலைநிறுத்த வேண்டுமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும்ளூ வெளிநாட்டு மூலதனங்களை இந்நாட்டுக்குத் தருவிப்பதற்கு அதற்கு முன்னெப்போதும் இல்லாத வரிச்சலுகைகளையும் வேறு ஊக்குவிப்புக்களையும் வழங்க வேண்டும்ளூ இக்கொள்கையை முழுதாக நிறைவேற்றுவதற்கு ஒரு அரசாங்கம் பல ஆட்சிக்காலங்கள் நீடித்திருக்க வேண்டும். இவ்வளவும் செய்ய வேண்டுமாயின் ஒரு சர்வாதிகார ஆட்சியே பொருத்தமானது. எனவேதான் இச்சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்துமுகமாக சகல அதிகாரங்களும் பொருந்திய நிறைவேற்று ஜனாதிபதி முறையை இந்த யாப்பு அறிமுகப்படுத்திற்று.
இது அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நாளில் அதைச் செய்த ஜே ஆர் ஜெயவர்தனா அவர்கள் 'ஆணைப் பெண்ணாகவும் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற முடியாதே தவிர மற்றெல்லாவற்றையும் இந்தப் பதவி செய்ய முடியும்' என்று தனது நிறைவேற்று ஜனாதிபதிப் பதவியைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறியிருக்கின்றார். அந்த அளவுக்கு அமைச்சரவையை அமைக்கவும், எந்த அமைச்சினையும், அவை எத்தனை அமைச்சுக்கள் ஆனாலும், தனது நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரவும், வரவு செலவுத் திட்டத்தின் இடைக்காலத்தில் எந்த அமைச்சினதும் நிதி வளங்களைத் தனது அமைச்சின் கீழ் கொண்டு வரவும், அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்;படுத்தவும், ஒரு வருடத்தின் பின்பு பாராளுமன்றத்தினைக் கலைக்கவும் தேர்தல்களைக் கூட்டவும், எந்தத் தவறிழைத்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாதிருக்கவும்  எங்கள் ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் உண்டு.  

அடுத்து தமிழ் மக்களின் தேசியப் போராட்டத்தை ஒடுக்குவது இந்த யாப்பின் முக்கிய அம்சமாகிற்று. இதற்காக பௌத்தத்தை அரச மதமாக விசேட அந்தஸ்;து கொடுத்தது. பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரங்களை வேறெந்த அமைப்புக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாதென்ற அம்சத்தினை இணைத்ததன் மூலம் தமிழ் மக்களுடனான அதிகாரப் பகிர்வுக்கு இடமே இல்லாமல் செய்யப்பட்டது. எனவே இது ஒரு ஒற்றையாட்சி அரசாக (ருnவையசல ளுவயவந) இயற்றப்பட்டது.

மக்கள் பங்குபற்றி எழுதும் யாப்பு தயாரிப்பது இதன் நோக்கமாக இருக்கவில்லையாதலால், இந்த யாப்பு முற்று முழுதாக ஒரு சட்டத்தரணியின் மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் எங்கள் அரசியல் யாப்பை எடுத்து வாசித்துப் பாருங்கள். அதனை விளங்கிக் கொள்ளுவது மிகக் கடினமாக இருக்கும். இப்படியென்றால் எப்படி நாம் பொது மக்கள் அதனை அனுசரித்து நடக்க முடியும்?.... யாப்பின் விதிகள் ஆளும் தரப்பினரால் மீறப்படும்பொழுது தட்டிக் கேட்க முடியும்?

  2) உள்ளடக்கம்

 அத்தியாயம் 1 - இது மக்கள் அரசு இறைமை போன்றவற்றை விளக்குகின்றது. இலங்கை ஒரு ஒற்றையாட்சி முறையெனவும், அதன் கொடி சிங்கக் கொடியெனவும், அதன் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

அத்தியாயம் 2 - இலங்கை அரசு பௌத்த சமயத்திற்கான முதன்மை இடம் கொடுக்க வேண்டுமெனவும், பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் கடப்பாடு கொண்டதெனவும், அதே சமயம் பிற மதங்களைப் பின்பற்றுவதற்கான சகல உரிமைகளையும் ஏனைய மதப் பிரிவினருக்கு அளித்திருக்கின்றதெனவும் இந்த அத்தியாயம் கூறுகிறது.

அத்தியாயம் 3 - இதன் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளுக்குமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. சிந்திப்பதற்கும், மனச்சாட்சிப்படி நடப்பதற்கும், விரும்பிய மதத்தைப் பின்பற்றுவதற்குமான உரிமைகள்ளூ சித்திரவதை செய்யப்படுவதிலிருந்து உரிமைளூ சமத்துவத்திற்கான உரிமைளூ எழுந்தமானமாக கைது செய்யப்படுவதிலிருந்தும் தடுத்து வைக்கப்படுவதிலிருந்தும் தண்டனை கொடுக்கப்படுவதிலிருந்தும் விடுதலைளூ நடவடிக்கை செய்யப்பட்ட காலத்திலிருந்து பிந்திய காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களின் பேரில் தண்டனையாவதற்கெதிரான பாதுகாப்பு, போன்றவை இந்த அத்தியாயத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 4 - இது மொழியுரிமைகளைப் பற்றி விளக்குகின்றது. சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகள் என்றும் ஆங்கிலம் தொடர்பு மொழி என்றும் இங்கு கூறப்படுகின்றது. அதேபோல் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகள் எனக் கூறுகிறது. அத்துடன் பாராளுமன்றத்திலும் உள்ளுராட்சி மன்றங்களிலும் வழங்க வேண்டிய மொழிகள் பற்றியும் கல்வி கற்க வேண்டிய மொழி பற்றியும் நிர்வாக மொழிகள் பற்றியும் சட்டங்கள் ஆக்கப்படவேண்டிய மொழி பற்றியும் இது கூறுகின்றது.

அத்தியாயம் 5 - இது பிரஜாவுரிமை பற்றிய அத்தியாயமாகும். இலங்கையின் பிரஜையாக இருக்கத் தகுதிகள் என்ன என்று இங்கு ஆராயப்பட்டுள்ளது.

அத்தியாயம் 6 - இந்த அத்தியாயம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் சட்டங்களை ஆக்குவதற்கான வழிகாட்டல் கொள்கைகளை விளக்குகின்றது.

அத்தியாயம் 7 - இது ஜனாதிபதியின் பதவி பற்றிய சகல நிபந்தனைகளையும் எடுத்துக் கூறுகின்றது. இவற்றில், அவர் பதவி வகிக்ககின்ற காலம், அவர் தெரிவு செய்யப்படும் முறை அவருடைய அதிகாரங்கள், அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமுடியாத விதத்தில் அவர் பாதுகாக்கப்பட்டிருக்கும் முறைகள், யாவையும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 8 - இந்த அத்தியாயம் அமைச்சரவையைப் பற்றியது. மேலே கூறியதுபோல அமைச்சரவையை கூட்டும் நடைமுறைகள், அதன் அதிகாரங்கள் போன்றன இதில் விளக்கப்படுகின்றன.

அத்தியாயம் 9 - இது அரச உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுவது, மாற்றலாக்கப்படுவது, தண்டிக்கப்படுவது, பற்றி விளக்கும் அத்தியாயமாகும்.

அத்தியாயம் 10 11 12 - இவை பாராளுமன்றத்தின் கட்டமைப்பைப் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் அரசியல் யாப்பு மாற்றம் வேண்டினால் அதை நிறைவேற்றும் முறை பற்றியும் எடுத்துக் கூறுகின்றன.

அத்தியாயம் 13 - இந்த அத்தியாயம் மக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் கருத்துக் கணிப்புத் தேர்தல்களைப் பற்றியதாகும். இவை எந்த சந்தர்ப்பங்களில் எப்படி நடத்தப்படலாம் என்று கூறுகின்றது.

அத்தியாயம் 14 - தேர்தல்கள் நடத்தப்படவேண்டிய முறைகளை விபரிக்கின்றது.

அத்தியாயம் 15 - நீதித்துறையின் சகல கட்டமைப்புக்களையும் விபரிக்கின்றது.

அத்தியாயம் 16 - மேல் நீதிமன்றங்கள் நடத்தப்படவேண்டிய முறைகளை விளக்குகின்றது. வழக்குகள் கேட்கப்படும் முறை, அவை பதியப்படும் முறை, எல்லாமே இங்கு எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன.

அத்தியாயம் 17 - அரச நிதிகள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படவேண்டும் என்று இது கூறுகின்றது.

அத்தியாயம் 18 - பொதுப் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கு யார் பொறுப்பாவார் என்பது பற்றியும் இது கூறுகின்றது.

மேலே கூறியவற்றைத் தவிர சர்வதேச ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் முறைகள், பொதுவான விடயங்கள் போன்றவற்றை அடுத்து வரும் இரண்டு அத்தியாயங்கள் விளக்குகின்றன.

3) யாப்புச் சட்டத் திருத்தங்கள்

நமது நாட்டின் அரசியல் யாப்பு 1978ம் ஆண்டு முதல் இன்றுவரை 17 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் இருக்கின்றது. 30 வருடங்களுக்குள் இவ்வளவு அதிகமான திருத்தங்களுக்குள்ளாகியது அதன் குறுகிய கால நோக்கங்களையே சுட்டிக் காட்டுகிறது என்று சொல்லலாம். ஒரு தூரதரிசனத்தோடு மக்கள் எல்லோருடைய நல்வாழ்வுக்காக இது செய்யப்பட்டிருப்பின் இவ்வளவு திருத்தங்கள் இவ்வளவு வேகமாக ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்திருக்காதல்லவா? தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில், இச்சட்டத் திருத்தங்களில் முக்கியமானவை மூன்று எனக் கூறலாம். அவையாவன, 6ம் திருத்தச் சட்டம், 13வது திருத்தச் சட்டம,; 17வது திருத்தச்சட்டம் என்பனவாகும்.

6ம் திருத்தச் சட்டம் 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கெதிரான மிகமோசமான கலவரங்கள் நடந்ததற்குப் பின்னர் கொண்டுவரப்பட்ட திருத்தமாகும். பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்பதே இதுவாகும். இதன்படி சகல கட்சிகளும் பாராளுமன்றத்தில் அமரும்போது தாம் நாட்டைப் பிரிக்க முயலமாட்டோமென சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளக் கேட்கப்படுவர்.

13வது திருத்தச் சட்டமானது 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தமாகும். இதன்கீழ் மேலதிக சட்டவாக்க அமைப்புக்களாக பிராந்திய கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டனளூ அவை முறையே மாகாணசபைகளும் அவற்றின்கீழ் உள்ளுராட்சி மன்றங்களும் ஆகும். அவற்றின் கட்டமைப்புக்களும் நடைமுறைகளும் எமது அரசியல் யாப்பில் அத்தியாயம் 17 (அ) பிரிவில் எழுதப்பட்டிருக்கின்றன. (வாசிப்பு இல 9இனைப் பார்க்க)

17வது திருத்தச் சட்டம் 2002ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றமாகும். இதன்கீழ் அரசியல் தலையீடு இல்லாமல் அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை ஆற்றும் வகையில் சுயாதீனமான ஆணைக்குழுக்களின் கீழ் அவர்கள் நிர்வகிக்கப்படுவதைப் பற்றிக் கூறுகின்றது. இதன்படி தேர்தல் ஆணைக்குழு, நீதித்துறை ஆணைக்குழு, பொலிஸ் சேவைகள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஆகியன நியமிக்கப்படவேண்டும் என இச்சட்டம் விதிக்கின்றது. (வாசிப்பு இல. 3இனைப் பார்க்க)

அரசியல் யாப்பு மாற்றத்திற்கான இயக்கம்

எங்களது 1978ம் ஆண்டு அரசியல் யாப்பு எந்த நிலைமைகளின் கீழ் எந்தெந்த நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்டது எனக் கண்டோம். பிரதானமாக நாம் சிந்திக்க வேண்டியது என்னவெனில், நிறைவேற்று ஜனாதிபதி முறையினாலே இந்த நாட்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. 1978ம் ஆண்டுக்குப் பிற்பாடு வந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் தனக்கு முந்தைய ஜனாதிபதியிலும்விட ஊழல் மிக்கவராக, தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே ஆட்சி நடத்துபவராகத்தான் இருந்திருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவானவர் எமது அரசியல் யாப்புச் சட்டங்களையே மீறுபவராக மாறிவிட்டார். அரசியல் யாப்புச் சட்டத்தின்படி  ஜனாதிபதி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதென்பதனால் உயர் நீதிமன்றமே ஒன்றும் சொல்லாமல் இருக்கின்றது.

அடுத்து, கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக புரையோடிப் போயுள்ள பிரச்சினை தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கென அதிகாரப் பரவலாக்கலைக் கோரும் இனப்பிரச்சினையாகும். எமது யாப்பின் ஒற்றையாட்சித் தன்மையை முற்றாக மாற்றாவிடில் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்ட முடியாது.

மூன்றாவதாக, எங்கள் தேர்தல் முறைமைகள் மாறவேண்டும். இன்று விகிதாசாரப் பிரதிநிதித்துவம் என்கின்ற அடிப்படையிலேயே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதன்படி, எந்தவொரு குழுவும் மாவட்ட அடிப்படையில் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தத் தேவையினால் சிறிய கட்சிகளுக்கும் தனிநபர்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் போய் விட்டது. பெரிய இரு பிரதான கட்சிகள் மட்டும்தான் நாட்டில் செல்வாக்கு செலுத்தலாம் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. இது ஜனநாயகத்துக்கு பங்கம் விளைவிக்கும் நிலையாகும்.

எனவே எமது அரசியல் யாப்பினை மாற்றுவதற்காக பல சமூக செயலாளிகள் இப்பொழுது முயன்று வருகின்றனர். யாரும் இலேசில் தமது அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்தானே. நிறைவேற்று ஜனாதிபதி முறை இலேசில் விட்டுக் கொடுக்க முடியாத அவ்வகையான அதிகாரமாகும். அத்துடன், அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவையாகும். தற்போதைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகத்துக்குரிய விடயமாகும். ஆப்படியானால் யாப்பு மாற்றம் நிகழுமா என்பதே பெரிய கேள்வியாகும்.

இங்குதான் மக்களின் பங்கு வெளிவருகின்றது. மக்கள் ஒன்றிணைந்து திரண்டு எழுந்து வந்தால் நடைபெற முடியாதது ஒன்றுமே இல்லை எனலாம். நாங்கள் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை எழுதியும் நேரில் சந்தித்து விண்ணப்பித்தும் வரவேண்டும். ஜனாதிபதிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும். பத்திரிகைகளுக்கு உங்கள் கருத்துக்களை எழுதவேண்டும். உங்கள் உங்கள் ஊர்களில் பொதுக்கூட்டங்கள்  போட்டு இதற்கு பரந்துபட்ட மக்கள் ஆதரவினைத் திரட்ட வேண்டும். தொடர்ந்தும் தொடர்ந்தும் நாங்கள் தேய்த்துத் தேய்த்துக்கொண்டுவர கல்லுத் தானே கரைய ஆரம்பிக்குமல்லவா?

கலந்துரையாடலுக்கான வழிகாட்டிகள்:

எமது அரசியல் யாப்பினை மேலும் விளங்கிக் கொள்வதற்கு நீங்கள் வேறென்ன மேலதிக நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என்று கூறுக.


Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம் 

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டம் 1987



13ம் திருத்தச் சட்டம் தோன்றிய வரலாறு

1978ம் ஆண்டு திரு ஜேஆர் ஜெயவர்தனா அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், தாராள பொருளாதாரக் கொள்கையை செயற்படுத்தி அதற்குத் தகுந்தாற்போல் ஒரு அமெரிக்க சார்புள்ள அரசியல் கொள்கையை முன்னெடுத்தார். இந்து சமுத்திரப் பிராந்தியம் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று முனைந்து நின்ற இந்தியாவுக்கு இது பிடிக்கவில்லை. இதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்குள் தலையிட்டு அதன் மூலம் கொழும்பு அரசாங்கத்தை நிலை தடுமாற வைக்க எத்தனித்தது. இந்தியாவின் தலையீடு பெரும்பாலும் தமிழ் பிரிவினைவாத இயக்கங்களை ஆதரித்து அவற்றை வளர்ப்பதாயும், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்கும்படி கொழும்பு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாயும் அமைந்தது. அது பூடானின் திம்பு நகரிலும், பின்பு புதுடில்லியிலும் தனது மத்தியஸ்தத்துக்கு கீழ் ஸ்ரீலங்கா அரசுக்கும் தமிழ் இயக்கங்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆயினும் இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு ஸ்ரீலங்கா இராணுவம் யாழ் மாவட்ட வடமராட்சியில் இராணுவ நடவடிக்கைகளை முடுக்கி விட்டபோது இந்திய அரசாங்கம் தனது விமானங்களை ஏவி வடமராட்சியில் பருப்பு மற்றும் உணவுப் பொதிகளை எறிந்ததன்மூலம் தான் இராணுவ ரீதியாகவும் இலங்கையில் தலையிடத் தயாராக இருப்பதை சூசகமாக உணர்த்திற்று. இந்தியாவுடன் போரிட வலுவில்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கா அரசு உடனடியாகப் பணிந்து போய் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யத் தயாரானது. இந்த ஒப்பந்தத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சம்மதமும் வெகு பிரயாசையுடன் பெறப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தமிழ் மக்களுக்கு மிக அதிகமாக அரசியல் அதிகாரங்கள் கொடுக்கப்படுகின்றன என்கின்ற அடிப்படையில் சிங்களவர்களும், தமிழீழம் குறித்து போராடுகின்ற தமிழ் மக்களுக்கு இந்த ஒப்பந்தம் போதுமானளவு அதிகாரங்களைப் பகிரவில்லை என்ற அடிப்படையில் விடுதலைப் புலிகளும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்தனர். ஆயினும் இந்திய அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின்பேரில் இருவரும் வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தமே 13ம் திருத்தச் சட்டமாக இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றது. இதனை செயற்படுத்துவதை மேற்பார்வை செய்யவென இந்திய அரசாங்கம் தனது அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.  

ஆரம்பத்திலிருந்து பலவகையான எதிர்ப்புக்கள் இச்சட்டத்துக்கு எதிராகக் கிளம்பின. இந்திய மேலாதிக்கம் என்கின்ற கோஷத்துடன் இலங்கையின் தென்பகுதியில் ஜேவிபி இயக்கம் தனது பயங்கரவாதத் தலையை நீட்டியது இப்போதுதான். அந்தக் காலத்தில் மைசூர் பருப்பு விற்ற பாவத்துக்காகவே கொலையுண்ட சிங்கள கடைக்காரர்கள் எத்தனைபேர். வுடக்கிலோ, ஒப்பந்தம் சரியாக அமுலாக்கப்படவில்லை என அவசரப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதமே இந்திய இராணுவத்துடன் மோதலாயிற்று. தெற்கில் ஜேவிபி கிளர்ச்சியும் வடக்கில் இந்திய இராணுவம் - விடுதலைப்புலிகள் போரும் நமது நாட்டை மூன்று வருடங்களுக்கு துண்டாடின.

இந்த நிலைமைகள் எல்லாமே சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்த விடவில்லை. அன்று தொடக்கம் இன்றுவரை சிங்கள அரசியல் தலைமைத்துவங்களின் மெத்தனத்தினால் மாகாணசபைகளுக்கு சேரவேண்டிய அதிகாரங்கள் பகிரப்படவில்லை.  
குறிப்பாக எந்த மக்களுக்காக அது விசேடமாக கொண்டுவரப்பட்டதோ அந்த வட கிழக்கு மக்களுக்கு அது உதவவில்லை. 1988ல் தெரிவு செய்யப்பட்ட முதல் வடகிழக்கு மாகாணசபை 1990ம் ஆண்டிலேயே கொழும்பு அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டது. இது நடந்து 17 ஆண்டுகளின்பின்னர் 2007ம் ஆண்டில் வடகிழக்கு இணைப்பும் துண்டிக்கப்பட்டது. அதன் பின் முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு கிழக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.

2009ல் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் 13ம் திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்தும்படி பல தரப்பினரிடமிருந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வர ஆரம்பித்துள்ளன. 13ம் திருத்தச் சட்டத்தைப் பற்றிய விவாதங்களைப் புரிந்து கொள்வதற்கு அச்சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பதை அறிவது முக்கியமாகும். இதை அறிந்து கொள்ள முன்னர், இச்சட்டம் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அதிகாரப்பரவலாக்கலுக்காக விடுத்த கோரிக்கைகயினைப் பூர்த்தி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டதனால் முதலில் அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்ன என்பதையும் அது ஏன் கோரப்பட்டது என்பதையும் பார்க்கலாம்.

அதிகாரப் பரவலாக்கல் என்றால் என்ன?

குடிகளாக வாழ்ந்த காலத்திலிருந்து கூட்டுச் சமூகங்களாகவும் நாடுகளாகவும் வாழும் இக்காலம் வரை மனிதர்கள் தங்கள் மத்தியில் ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கான வாழ்வைப் பேணுவதற்காக பலவிதமான ஆட்சி முறைகளைக் கைக்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த ஆட்சிகள் செய்யப்படும் சாதனமாக அரசு தோன்றியது. உலகத்தில் பலவிதமான உருவங்களில் அரசு தோன்றியிருந்தாலும் எங்களெல்லாருக்கும் மிகப் பரிச்சயமான அரசு ராசா ஆளும் அரசுதானே. அதுவும் சகலவித அதிகாரங்களுடனும் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கட்டளையிடும் ராசாதான் எங்களுக்குத் தெரியும்.
ஒரு ராசா அதியுயர் அதிகாரங்களுடன் இருப்பது போலத் தோற்றினாலும், ஆழமாகப் பார்த்தால் ராசாவின் அதிகாரங்களின் வரையறைகள் விளங்க ஆரம்பிக்கும். அந்தக் காலத்தில் போக்குவரத்து செய்யக்கூடிய பெருந்தெருக்கள், தொலைபேசிகள் தொடர்பு சாதனங்கள் ஒன்றுமேயில்லை. ஒரு நாட்டை நிர்வகிக்க இவையெல்லாம் தேவையென்று உங்களுக்குத் தெரியும். எனவே, அனேகமான ராசா ஆட்சிகளில் தலைநகரம் மட்டுந்தான் அந்த ராசாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. நாட்டின் ஏனைய பகுதிகளெல்லாம் வெறுமனே வரி வசூலிக்கப்படும் இடங்களாகவே இருந்தன. இந்த இடங்களில் வரி வசூலிக்கவென ஒரு ஜமீன்தார் போன்றவர் ராசாவினால் நியமிக்கப்பட்டார். அவ்வளவுதான். மக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கு மக்கள் சபைகள் அல்லது பஞ்சாயத்துக்கள் இருந்தன. இவற்றின் ஆட்சியில் ராசா அனேகமாகத் தலையிடவே மாட்டார். இவ்வாறு பிரதேசத்துக்குப் பிரதேசம் மக்கள் தமது பாரம்பரியங்களைப் பின்பற்றித் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொண்டு வந்தனர்.    

காலப்போக்கில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படவும், தொடர்புகள் அதிகரிக்கவும், அரசு தனது அதிகாரத்தை விஸ்தரிக்கத்தொடங்கியது 19ம் நூற்றாண்டிலேயாகும். இதன்பிறகு மக்கள் தாங்கள் சட்டங்கள் உருவாக்குவதை விட்டு தங்கள் மத்திய அரசு உருவாக்கி நிர்வகிக்கும் சட்டங்களுக்குப் பணியவேண்டிய நிலை உருவாகிற்று. அரசு சர்வ வியாபகமான சக்தி வாய்ந்த அமைப்பாக மாறியது இந்தக் காலத்தில்தானேயொழிய ராசா காலத்தில் அல்ல. நாங்கள் பிரஜைகளாக இருக்கும் முறைகள் தொடங்கி நாங்கள் வாழும் முறைகள், எமது தொழில், எமது கல்வி, எமது குடும்ப வாழ்வு, எமது பண்பாடு எல்லாமே நவீன அரசு இயற்றும் சட்டங்களால் ஆளப்படத் தொடங்கின. அப்படிப் பார்த்தால் ஒரு இனக்குழுமத்தின் பாரம்பரிய கலாசார அடையாளங்கள் வாழ்கின்றனவா அல்லது அழிந்தொழிந்து போகின்றனவா என்பதெல்லாம் ஒரு அரசின் கையிலேயே தங்கியுள்ளது என்பதைக் காணலாம்.

ஒரு நாட்டில் எத்தனை இனங்கள், எத்தனை குடிகள், எத்தனை மொழிகள் இருக்கும்? இவையெல்லாவற்றினதும் வித்தியாசமான தேவைகளை அனுசரித்து சட்டங்களும் கொள்கை நடைமுறைகளும் இயற்றப்படவேண்டுமென்றால், அரசு இந்த மக்கள் எல்லோரினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகவும் அவர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும்  இருக்க வேண்டுமல்லவா? ஆனால் நாமறிந்த நவீன அரசோ, ஒரு நாட்டின் பெரும்பான்மைசமூகத்தினால் அமைக்கப்பட்டதாகவும், அவற்றின் நலன்களைப் பிரதிபலிப்பதாகவுமே இருந்தது. ஏனெனில் நவீன ஜனநாயகம் என்பதே பெரும்பான்மை மக்களின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் இயங்கும் அரசாங்கம் என்பதன் பொருளல்லவா?

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் அரசு ஏனைய சமூகங்களுக்கு என்ன செய்யும் என்பதைக் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் நாம் காண்கூடாகக் கண்டிருக்கின்றோம். தமிழ் மக்கள் எவ்வளவு எதிர்ப்பைக் காட்டியும் பயனின்றி தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களப் பிரதேசங்களுக்கே முதலீடுகளும் அபிவிருத்தித் திட்டங்களும்; பெருவாரியாக கொண்டு செல்லப்பட்டன. சிங்கள வர்த்தகர்களுக்கு சாதகமாகக் கொள்கைகள் செயற்படுத்தப்பட்டன. தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்கில் பாரம்பரியமாகத் தமிழர் வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிராக அவர்களை அழிக்கும்பொருட்டு அரசின் அனுசரணையோடு இன வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. இப்படிப் பல உதாரணங்களை எங்கள் வரலாற்றில் காட்டலாம்.

இது எங்களுடைய நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கும் விஷயமாகும். மத்திய அரசுகளின் நடவடிக்கைகளினால் பல சமூகங்களின் இருப்பு அச்சுறுத்தப்படுகின்றது. இதனால்தான், ஒரு நாட்டில் வாழும் சகல சமூகத்தினரும் தமக்குத் தேவையான முறையில் தமது ஆட்சியையும் அபிவிருத்தியையும் கொண்டு செல்வதற்கு அதைச் செய்வதற்குரிய அதிகாரங்கள் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டியதாக இருக்கின்றது. இந்த அதிகாரங்களை ஒவ்வொரு இனக்குழுமத்திற்கும் வழங்கும் ஏற்பாடுகளை நாம் அதிகாரப் பரவலாக்கல் என்கின்றோம். அதாவது, மத்திய அரசாங்கத்தின் சில அதிகாரங்களை நாட்டின் வௌ;வேறு பிரதேச மக்கள் அல்லது இனக்குழுமங்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்வது என்று இதற்குப் பொருளாகும். இது உலகில் காணக்கூடிய ஒவ்வொரு சமூகத்தினதும் தம்மைத் தாமே தக்க வைத்துக் கொள்வதற்கான உரிமையாகும். இதனை சுயநிர்ணய உரிமை என்போம்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஏதோவொரு முறையில் அதிகாரப் பரவலாக்கல் நிகழ்ந்திருக்கின்றது,  நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனால்தான் அதிகாரப்பரவலாக்கல் வேண்டும் என்கின்ற கோரிக்கையைத் தமிழ் மக்கள் முன்வைத்தனர். ஒரு இனக்குழுமம் சுயாதீனமாக இயங்குவதற்கும், அது ஒரு குறிப்பிட்ட பூகோளப் பரப்பில் இருக்கின்ற ஏனைய இனக்குழுமங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும் இடையே இருக்கின்ற முறுகுநிலை (அது எப்பொழுதும் இருக்கும்) சமநிலையாகப் பேணப்படும்பொழுது ஒரு ஆரோக்கியமான அரசு இயங்குகின்றது என்பது அர்த்தமாகும். இந்தக் கருத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.  

இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரதான அம்சங்கள்

இதன் நோக்கம் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பரவலாக்கலாகும். ஆனால் தமிழ் மக்களுக்கென தனித்துவமாக ஏதேனும் வழங்கியதாக இருக்கக்கூடாது என்று ஜேஆர் ஜெயவர்தனா கருதியதால், நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரே மாதிரி அதிகாரப்பரவல் வழங்கப்பட்டது. ஆனால் வேறொரு மாகாண மக்களும் தமக்கு அதிகாரப்பரவலாக்கல் தேவை என்று கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேட்காமலே அவர்களுக்கு அது கொடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு வடகிழ்க்கு மாகாணமாகியது மட்டும் ஒரு விசேட அம்சமாகும். இனி, 13ம் திருத்தச் சட்டத்தின் நோக்கத்திற்குப் பொருத்தமாக அதன் உள்ளடக்கம் இருக்கின்றதா என்று பார்ப்போம்.

 அ) உள்ளடக்கம்

உள்ளடக்கத்தின் முக்கிய பகுதிகளாவன,

1. சிங்களத்துடன் சேர்ந்து 'தமிழும் ஒரு உத்தியோகபூர்வ மொழியாகும்'
தமிழும் சிங்களமும் உத்தியோகபூர்வ மொழிகள் என்று நேரடியாக சொல்லப்படவில்லை என்பதைக் கவனித்துக் கொள்ளவும்.

2. வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு செயற்பட்டாலும், அந்த இணைப்பு ஒரு நாடளாவிய கருத்துக்கணிப்பின் முடிவிலேயே நிரந்தரமாக்கப்பட முடியும்
நாடு முழுவதும் சிங்கள மக்கள் 74வீதம் இருக்கும்போது அவர்கள் மத்தியில் கருத்துக் கணிப்பு நடத்தினால் என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள்? இதனால், .ணையப்போகிறார்களா பிரிந்திருக்கப் போகிறார்களா என்கின்ற கருத்துக் கணிப்பு வடகிழக்கிலுள்ள மக்களுக்கே விடப்படவேண்டும் என்கின்ற வாதம் பலப்படலாயிற்று.

3. ஒவ்வொரு மாகாணத்தினதும் ஆட்சியலகுகளாக மாகாண சபைகள் இருக்கும், இவை ஒவ்வொரு 5 வருடங்களும் தெரிவு செய்யப்படும்
மாகாணசபையில் பெரும்பான்மை வகிக்கின்ற கட்சி அல்லது குழுவின் தலைவரே முதலமைச்சராக நியமனம் பெறுவார். அவருக்குக் கீழ் ஒரு அமைச்சரவை செயற்படும். மாகாணசபைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து சட்டங்களை இயற்ற அவற்றுக்கு முடியும்.

4. மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்குமிடையேயுள்ள அதிகாரப் பகிர்வுகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. அவை மாகாணசபைக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்திற்கென ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள், இரண்டிற்கும் பொதுவான அதிகாரங்கள் என்பனவாகும். பொதுவான அதிகாரங்கள் குறித்து இரு சாராரும் பேரம் பேசிச் செயற்படவேண்டுமென்பதும் முடிவாயிற்று.
மாகாணசபைக்கிருக்கும் அதிகாரங்களாவன,
மாகாணப்பொருளாதாரக்கொள்கைகளைத் திட்டமிடல், கல்வியும் கல்விச்சேவைகளும், உள்ளுராட்சி, மாகாண வீடமைப்பு நிர்மாணம், மாகாணத் தெருக்கள், புனர்வாழ்வும் சமூகசேவைகளும், விவசாயமும் விவசாய சேவைகளும், கிராம அபிவிருத்தி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கால்நடைவளர்ப்பு, சூழல் பாதுகாப்பு என்பனவாகும்.
மத்திய அரசாங்கததுக்கென்று வேறு அதிகாரங்கள் ஒதுக்கப்பட்டன. அவையாவன,
எல்லா விடயங்களைக் குறித்த தேசியக் கொள்கை வகுத்தல், வெளிநாட்டுறவுகள், தபாற்தந்தி, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, நீதித்துறை நீதிமன்றக்கட்டமைப்பு, தேசிய வரிவிதிப்பு, வெளிநாட்டுதவி, சுங்கம், துறைமுகங்கள், விமான விமானத்தளங்கள், தேசிய போக்குவரத்து, கப்பற்போக்குவரத்து, கனிப்பொருட்கள், பிரஜாவுரிமை, நாட்டை விட்டு வெளியேறல் உட்புகல், பிரதேச மாகாண தேசிய தேர்தல்கள், புள்ளிவிபரக் கணக்கெடுப்பு, தொல்பொருளாய்வு போன்றன.
இரண்டிற்கும் பொதுவான அதிகாரங்களாவன,
திட்டமிடல், உயர் கல்வி, தேசிய வீடமைப்பும் நிர்மாணமும், காணிச் சுவீகரிப்பு, சமூக சேவைகளும் புனர்வாழ்வும், விவசாயம், சுகாதாரம், பிறப்பு இறப்பு பதிவுகள், ஊர்களுக்குப் பெயரிடுதல், குலுக்கல்போட்டிகள்,  விழாக்கள், கண்காட்சிகள், கூட்டுறவு அமைப்புக்கள், கூட்டுறவு வங்கிகள், நீர்ப்பாசனம், உணவு சேகரிப்பு வங்கிகள, ;சமூகக் காடு வளர்ப்பு, காட்டு மிருகங்களின் பாதுகாப்பு, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, தொழில்வாய்ப்பு, உல்லாசப் பயணத்துறை, வர்த்தகம், அச்சு ஊடகங்கள், தர்ம ஸ்தாபனங்கள், விலைக்கட்டுப்பாடு, இந்த நிரல் தொடர்பான குற்றச் செயல்கள், கலப்பட சரக்குகள், மருந்துகள், நஞ்சுகள், சூழல்பாதுகாப்பு, தொல்பொருள் ஆய்வுக்களங்கள், தொற்றுக்களின் தடுப்புகள், தல யாத்திரைகள் போன்றனவாகும்.

5. ஒவ்வொரு மாகாணத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆளுனர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். அவரை விலத்தும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உண்டு.
ஆளுனர் மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் குறித்து நிறைவேற்று அதிகாரம் பொருந்தியவர். இதனை நேரடியாகவோ மாகாணத்தின் அமைச்சரவை மூலமோ அல்லது மாகாண அரச அலுவலர்கள் மூலமோ அவர் பிரயோகிக்கலாம். இந்த அலுவலர்களின் மாற்றல்கள் அவர்களை வேலைக்கமர்த்தும் ஒப்பந்தங்கள், ஒழுக்காற்று நடவடிக்கைகள் எல்லாமே ஆளுனரின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆளுனர் ஆட்சி செய்வதற்கு ஆலோசனை தந்து உதவுவதே முதலமைச்சரினதும் அமைச்சரவையினதும் பிரதான கடமைகளாகும். ஆனால் இத்தகைய ஆலோசனைகளைப் புறக்கணிப்பதற்கு ஆளுனருக்கு உரிமையுண்டு. எந்த விடயங்களில் ஆலோசனை பெறப்படவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் ஆளுனரே. இதில் ஏதும் முரண்பாடுகள் ஏற்பட்டால் நீதிமன்றிற்கும் செல்ல மாகாணசபைக்கு உரிமை கிடையாது.
அமைச்சர்களுக்கிடையே வேலைகளைப் பகிர்ந்தளிப்பதும் அவர்களை அழைத்து கட்டளைகள் பிறப்பிப்பதும் ஆளுனரே. அமைச்சரவையின் தீர்மானங்கள் சகலவற்றையும்  ஆளுனருக்குத் தெரிவிப்பது முதலமைச்சராகும். இ.தன்படி ஆளுனர் தமது தீர்மானங்களை எடுப்பார். இவருடைய கட்டளைகளை மாகாணசபை மீறி நடக்குமாயின், சபையின் அதிகாரங்களை பாராளுமன்றம் வலிந்தெடுப்பதற்கும், அமைச்சரவையின் அதிகாரங்களை ஜனாதிபதி வலிந்தெடுப்பதற்கும் முடியும்.

6. மாகாண மேல் நீதிமன்றங்கள் நிறுவப்படவேண்டும்.
.மாகாண மேல் நீதிமன்றிற்கான கடமைகள் ஆற்றுவதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் ஒரு நீதிபதியை முதலமைச்சர் தெரிவு செய்ய முடியும். ஆயினும் அவரை நியமிப்பது ஜனாதிபதியின் அதிகாரமாகும்.

7. மாகாணசபைகளின் கட்டமைப்புக்களுக்குக் கீழே பிரதேச சபைகள், நகர சபைகள் மாநகரசபைகள் ஆகியன கொண்டுவரப்பட்டிருக்கின்றன

8. மாகாணங்களுக்குரிய நிதி ஒதுக்கீடுகள் ஜனாதிபதியால் தீர்மானிக்கப்படும்.
ஜனாதிபதியானவர், மத்திய வங்கியின் ஆளுனர், நிதியமைச்சின் செயலாளர், மேலும் ஒவ்வொரு இனத்தின் பிரதிநிதிகளான மூவர் இவர்களடங்கிய ஒரு ஆணைக்குழுவினை நியமிப்பார். இந்த ஆணைக்குழு பரிசீலனை செய்து ஒவ்வொரு மாகாணசபைக்கும் ஒதக்க வேண்டிய நிதிகள் பற்றி ஆலோசனை கூறும். இதை வைத்துக்கொண்டு ஜனாதிபதி ஒதுக்கடுPகளைத் தீர்மானிப்பார். ஆளுனரின் அனுமதியின்றி மாகாணசபைகள்  வரி விதிப்பதோ, வரிகளை மாற்றியமைப்பதோ, வரி விலக்கு அளிப்பதோ முடியாது. மத்திய அரசாங்கம் ஒதுக்கிய நிதியாகத்தன்னும் இருந்தால்கூட, மாகாண ஒதுக்கீட்டிலிருந்து எந்தச் செலவையும் ஆளுனரின் அனுமதியின்றி மாகாண சபை செய்ய முடியாது. மாகாணசபை மாகாணத்திலுள்ள நிதி நிறுவனங்களிலிருந்தோ, வெளியிலுள்ள நிதி நிறுவனங்களிலிருந்தோ கடன் எடுக்க முடியாது. பிணை நிற்க முடியாது. நேரடியாக எந்த வர்த்தகத்திலும் அதை ஒழுங்குபடுத்தவோ அதில் ஈடுபடவோ முடியாது.  

மாகாண சபைகளின் கணக்கறிக்கைகளை கணக்காய்வு செய்யும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கணக்காய்வு நாயகத்திடமே உண்டு.

9. பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின்  கீழ் மாகாணசபைகளைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இயலும். இந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றுமே எடுக்க முடியாது.

ஆ. 13ம் திருத்தச் சட்டத்திலுள்ள பிரச்சினைகள்

மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் நிரல்களின் பெருப்பத்தை வாசித்தவுடனேயே உங்களுக்குப் பிரச்சினைகள் என்னவென்று புரிய ஆரம்பித்திருக்கும். அதுவும், இரண்டிற்கும் பொதுவான அதிகாரங்களின் நிரல்களைப் பார்த்தால் மாகாண சபைகளுக்கு என்னதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவென்பதே புரியாத புதிராகும். இதுதான் இதன் முக்கிய பிரச்சினையாகும். மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையே உள்ள அதிகாரப் பிரிவுகள் தெளிவாக வரையறுக்கப்படவேயில்லை. உண்மையில் மாகாணசபையின் தனித்துவமான அதிகாரத்தின்கீழ் உள்ளது எனக்கூறக்கூடிய வகையில் எந்த அதிகாரமுமேயில்லை.
அத்துடன்கூட, மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் தொடர்பாக அது சட்டம் இயற்றலாம் என்று கொண்டாலும்கூட, தேசியக் கொள்கை வகுத்தல் என்கின்ற தலைப்பிற்குக் கீழே இந்த ஒவ்வொரு விடயத்தைப் பற்றி பாராளுமன்றம் தானும் சட்டம் இயற்றலாம். இந்தக் காரணத்தினால்தான் இதுவரை மாகாணசபைகள் பெரிதாக சட்டம் இயற்றும் பணிகளில் ஈடுபடவில்லை எனலாம்.
அடுத்து ஆளுனருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பாருங்கள். உண்மையில் ஆளுனர்தாம் ஆளுகின்றாரென்பது புரியும். அவர் பதில் சொல்லவேண்டியது அந்த மாகாணத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கின்ற முதலமைச்சருக்கல்ல, மாறாக மத்திய அரசாங்கத்தின் தலைவரான ஜனாதிபதிக்கே. மாகாண சபையின் அங்கீகாரம் இல்லாமல் மத்திய அரசாங்கமும் பாராளுமன்றமும் எதனையும் செய்யலாம்.

முக்கியமாக, எந்த நடவடிக்கையையும் அது செய்யக்கூடிய ஆளுமையையும் தீர்மானிப்பது நிதி அல்லவா? அந்த நிதி முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் கையிலேயே இருப்பதைக் காணலாம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைக்கு ஒரு அதிகாரமும் இல்லை, ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுனருக்கு சகல அதிகாரங்களும் உண்டு. இது சகல ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் முரணான செயற்பாடாகும்.
பொலிஸ் சேவை ஒரு சமூகத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவர்களின் பாதுகாப்பிற்குமான முக்கிய சேவையாகும். ஆனாலும் பொலிஸ் சேவைகள் மாகாண சபையின் அதிகாரத்தி;ன் கீழ் வழங்கப்படவேயில்லை. ஐஜிபி என்னும் பொலிஸ் இன்ஸ்பெக்கடர் ஜெனரலானவர் (இவர் நேரடியாக ஜனாதிபதிக்குக் கீழே வருபவர்) சகல மாகாண பொலிஸ் படைகளுக்கும் அதிபதியாவார். இவருடைய உதவியாளரான டிஐஜியை ஐஜிபியே முதலமைச்சரின் ஆலோசனையுடன் நியமிப்பார். ஆனால் .இதில் ஏதும் கருத்து முரண்பாடுகள் ஏற்படுமிடத்து ஜனாதிபதி அந்த நியமனத்தைச் செய்வார். அதாவது, முதலமைச்சரானவர் எதிலும் எதிர்க்கருத்து சொல்லுவதில் பயனேயில்லை என்று பேசாமல் இருக்கச் செய்யும் சட்டம் இது என்றும் கூறலாம். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகள்,  அத்தியாவசிய சேவைகளைச் செயற்படுத்தும் அதிகாரங்கள் இவையொன்றும் மாகாண பொலிஸ் படைகளுக்குக் கிடையாது.
அதே போன்று ஒரு சமூகத்தின் அபிவிருத்தி அது தனது நிலத்தின் மீது கொண்டுள்ள அதிகாரம், கட்டுப்பாடு ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. எந்த அபிவிருத்திக்கும், அது விவசாயமாக இருந்தால் என்ன, கைத்தொழிலாக இருந்தால் என்ன, நிலமும் அதன் வளங்களும் தேவையல்லவா. ஆனால் காணி சம்பந்தமான விடயங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழேயே இருப்பதைக் காணலாம்.
சகல காணி விடயங்களும் ஜனாதிபதியின் அதிகாரத்திற்குட்பட்டவையாகும். மாகாணசபை மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்க முடியாது. இதனால் மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் அனுமதியின்றியே அங்குள்ள காணிகள் வெளி மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அளிக்கப்படலாம். இதன் மூலம்தான் தமிழ் பேசும் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்க ஏதுவாகியிருக்கின்றன.

முடிவு
அதிகாரப் பரவலாக்கல் என்பதுதான் இலக்காக இருந்ததெனில் 13வது திருத்தச் சட்டம் ஒரு பகிடி (தமாஷ்) ஆகும். இதனைக்கூட, அதாவது இதன்கீழ் மாகாண சபைகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைக்கூட இத்தனை வருடங்கள் ஆகியும் மத்திய அரசு நிறைவேற்ற இடம் விடவில்லை. இதனால்தான் 2005ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சிலர் அமைச்சர் டிலான் பெரேரா தலைமையில் '13வது திருத்தச் சட்டத்தை அமுலாக்கும் இயக்கம்' என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. யோசித்துப் பாருங்கள். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கும் உறுப்புரை ஒன்றினையே எங்கள் அரசாங்கம் அமுல் படுத்தாததைக் குறித்து அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சில அமைச்சர்களே இயக்கம் உருவாக்கிய சரித்திரம் உலகெங்கும் காண முடியாத அதிசயம் அல்லவா? அந்த அதிசயம் எங்களது நாட்டில்தான் நடக்க முடியும்.

கலந்துரையாடலுக்கான வழிகாட்டிகள்:

1. சுயநிர்ணய உரிமை என்னும் கோட்பாடு முக்கியமானது என்று கருதுகிறீரா? ஏன்?
2. இனத்தின் அடையாளம் பேணப்படவேண்டிய காரணத்தினால் சுயநிர்ணய உரிமை முக்கியம் என்று நீர் கருதினால் பின்வரும் கேள்வியைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள்.
இனத்தின் அடையாளங்கள், அதன் மொழியின் பாதுகாப்பு இவையெல்லாம் முக்கியமில்லை. பொதுவாக எல்லா மக்களும் அபிவிருத்தி அடைவதுதான் முக்கியம் என்ற அர்த்தத்தில்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால்தான் இனப்பிரச்சினை என்ற ஒன்றே கிடையாது, அரசியல் தீர்வு தேவையில்லை அபிவிருத்தியே வேண்டும் என்றிருக்கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
3. 'மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' என்று திரு டக்ளஸ் தேவானந்தா கூறி வந்திருக்கின்றார். இதன் கருத்து என்ன என்று நினைக்கின்றீர்? 13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி வாசிக்கும்போது இவருடைய கோரிக்கை சாத்தியமானது என்று நினைக்கின்றீரா?
4. நீர் 13வது திருத்தச் சட்டத்தைப் பற்றி இப்பொழுது சில விளக்கங்கள் பெற்றிருப்பீர். இதைக் கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று நினைக்கின்றீர்? உமது நடவடிக்கைகளை ஒன்றொன்றாக விளக்குக.

Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்