Search This Blog

Thursday, May 31, 2012

கேள்வரகு – ராகி களி




தேவையானப் பொருட்கள் :

இரண்டு பேருக்கு

4 டம்ளர்* தண்ணீர்
2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு

* 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்).

செய்முறை:

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.)

பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும்.மாவு அடியில் ஒட்டாது கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு கட்டி கட்டியிருந்தால் உடைத்துவிட்டு கிளறவும்.மாவு கலவை இறுகி களி போல வந்ததும் இறக்கி பரிமாறலாம்.களி சூடாக உண்டால் ருசி அதிகம்.

சாப்பிடும் முறை:

களியை சிறு உருண்டையாக உருட்டி தொட்டுக் கொள்ள இருப்பதை தொட்டு அப்படியே விழுங்க வேண்டும் – மென்று சாப்பிட்டால் ருசி இருக்காது.களியில் ஒட்டியிருக்கும் காய் / கறியை வாயில் தனியே பிரித்து மென்று சாப்பிடுதல் தனி சாமர்த்தியம்.

ஆறிய களியில் தயிர் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.சிறு உருண்டையாக பியத்து போட்டு தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கூழ் போல பிசைந்து சாப்பிடுங்கள்.

சாப்பிட்டாச்சா?! என்னது களி கிண்டிய பாத்திரத்தை கழுவ போறீங்களா?! இருங்க பாத்திரத்தில இன்னும் களி ஒட்டி இருக்கு பாருங்க , அதுக்கு என்னவா?! அகா என்ன இப்படி கேட்டுடீங்க.அதுல தண்ணீர் ஊற்றி வைங்க காலைல தயிர் ஊற்றி கூழ் செயது சின்ன வெங்காயம் கடிச்சு குடிச்சு பாருங்க.அதன் ருசியே தனி.

தொட்டுக் கொள்ள :

கீரை கடைசல் , பாசி பயிறு கடைசல் , கோழி / ஆட்டுக் கறி / மீன் குழம்பு என எல்லாமே – எதுவுமே களிக்கு நல்ல கூட்டணிதான்.

குறிப்பு :

1.) பாத்திரம் – குண்டா(வாய் சிறிதான பாத்திரம்) வகையாக இருந்தால் கிளறுதல் எளிது

2.) களி கிண்ட தட்டையான நீளமான மர கரண்டி கடையில் கிடைக்கும் இல்லாவிட்டால் தோசை திருப்பியை உபயோகிக்கலாம்.

3.) உருண்டை / மொத்தை பிடக்க தனி உபகரணம் உண்டு ஆனால் சென்னையில் கிடைக்கவில்லை.கரண்டியில் எடுத்து பறிமாறலாம்.

4.) கேள்வரகு – ராகிக்கு பதில் கம்பு / சோள / கோதுமை மாவு சேர்த்தும் களி கிண்டலாம்.

5.) மாவு கட்டி கட்டாமல் கிளற தெரியாதென்றால் , மாவு போட்டு கிளறும் முன் கொஞ்சம் பழைய சாதம் அல்லது சம்பா ரவையை சேர்த்துக் கொள்ளலாம் – மாவு கட்டி கட்டாமல் கிளற இது உதவும்.(மாவு அளவை ஏற்றாட்போல் குறைத்துக் கொள்ளவும்.)

6.) சர்க்கரை உள்ளவர்களுக்கு நல்ல உணவு.

முட்டை கருவாடு மிளகு குழம்பு செய்யும் முறை




தேவையான பொருட்கள்

வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு

முட்டை : 3

மிளகு சீரகம் : 25 கிராம்

நாட்டு பூண்டு : 30 பல்

நல்லெண்ணை : 50 கிராம்

புளி : எலுமிச்சம்பழம் அளவு

உப்பு : தேவையான அளவு

செய்முறை:

மிளகு சீரகத்தை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தை போட்டு நன்றாக வதக்கி கருவாடையும் போட்டு பொரிந்தவுடன் புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது நேரம் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.

குறிப்பு : இந்த குழம்பிற்கு நல்லெண்ணை தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.

கணமேனும் அவனை மறக்கிலேன்!



என் மனவெளியில் விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான் வாழ்விருப்பின் அடையாளம் அர்த்தப்படுத்தப்பட்டது. அவ்வலியின் உச்சமே என்னுள் மலைசுமக்கும் மறத்தையும் தந்தது. என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும் தங்குமடங்களிலேயே நிறைவுற்றுப் போயினவெனினும்… மாற்றீடாய் தங்குமடங்களைத் தரிசனத்துக்கான தலங்களாய் ஆக்கும் திறனைத் தந்ததும் அவ்வலிகளே. வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்… பீறிட்டுக் கொண்டிருந்தன. இருந்தும் என் மனவாழம் அறியாமலவை தோற்றே போயின. குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும் துரியோதனன் எனக்கு உயிர்ப்பிச்சை தந்துள்ளான். அர்ச்சுணன் கையில் நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன் பல தலைகளையும் கொய்திருக்கும். காக்கப்பட்டவன் எவனெனினும் ‘காத்தவன்’ கடவுளல்லவா கணமேனும் அவனை மறக்கிலேன்!