Search This Blog

Showing posts with label World Literature. Show all posts
Showing posts with label World Literature. Show all posts

Sunday, April 19, 2020

ஜி.நாகராஜன் ஒரு மானுட கலைஞன்




நவீன தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளைப் புதிய திசைகளில் விஸ்தரித்தவர் ஜி. நாகராஜன். அதுவரையான, தமிழ் எழுத்து அறிந்திராத பிரதேசம் அவருடைய உலகம்! வேசிகளும், பொறுக்கிகளும், உதிரிகளும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்குமான  சகல நியாயங்களோடும் கௌரவங்களோடும் வாழும் உலகமது” – 
சி. மோகன்

ஜி.நாகராஜன் மதுரையில் செப்டெம்பர் 1, 1929 ஆம் தேதியில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு. இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி.கே.என். பள்ளியில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
அரசியல் ஈடுபாடு
இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.
அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசிக் காலத்தில் மார்க்ஸிய கோட்பாட்டில் முற்றிலும் நம்பிக்கை இழந்த இவர், மார்க்ஸிய எதிர்ப்பாளராக மாறினார். மார்க்ஸியம் மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார்.
படைப்புகள்
இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில்அணுயுகம்என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாககுறத்திமுடுக்குஎன்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளேஇவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்
நாவல்கள்[தொகு]
•             நாளை மற்றும் ஒரு நாளே,
•             குறத்தி முடுக்கு.
சிறுகதைகள்[தொகு]
•             எங்கள் ஊர்
•             டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
•             யாரோ முட்டாள் சொன்ன கதை
•             தீராக் குறை
•             சம்பாத்தியம்
•             பூர்வாசிரமம்
•             அக்கினிப் பிரவேசம்
•             நான் புரிந்த நற்செயல்கள்
•             கிழவனின் வருகை
•             பூவும் சந்தனமும்
•             ஜீரம்
•             போலியும் அசலும்
•             துக்க விசாரனை
•             மனிதன்
•             இலட்சியம்
•             ஓடிய கால்கள்
•             நிமிஷக் கதைகள்
இறுதி
கம்யூனிசக் கொள்கைகளில் ஏமாற்றம் அடைந்த காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. கடைசியில் நோயுற்று பிப்ரவரி 19, 1981 ஆம் தேதியில் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார்.
ஜி.நாகராஜன்-விளிம்புகளை வரைந்த வாத்தியார்


இன்று எழுத்தாளர் ஜி.நாகராஜன் அவர்களின் பிறந்தநாள். வரலாற்றின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களை அவர்களின் மறைவுக்கு நெடுங்காலத்தின் பின்னே கொண்டாடுவது தமிழ் மரபாகிவிட்டது. அந்த மரபின் படி மறைந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் மறுவாசிப்பு செய்யப்பட்டு அவரின் எழுத்துக்கள் மீது வாசக வெளிச்சம் பட்டது.
இதே நாள், செப் 1 (1929) அன்று பழநியில் வழக்கறிஞர் கணேசனின் மகனாக பிறந்த நாகராஜன் அவருக்கு ஏழாவது பிள்ளை. மதுரையில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கி முதுகலை வரை படித்த நாகராஜன் காரைக்குடி கல்லூரியில் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின் பல்வேறு வேலைகள் செய்த அவர் இறுதியில் டுட்டோரியல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். நாகராஜன் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தால் அப்படியே மனதுக்குள் பதிந்துவிடும் என்ற பெயருண்டு. அந்தக்கால மதுரை மாணவர்களின் ஹீரோவாக இருந்தார்.
ஜி.நாகராஜன் எழுத்திலும் இயல்பிலும் சண்டமாருதனாகத்தான் இருந்தார்.காற்றைக் கட்டிப்போட முடியாது என்கிற அறிவியல் உண்மை தெரிந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர பணியாளராக அவரை நியமித்தார்கள். எழுத்தாளர்கள், எழுத்திலும் கூட தொடத்தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள்,திருடர்கள்  என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.
அவர் 'குறத்தி முடுக்கு' மற்றும் 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய குறு நாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
 அவரின் படைப்புகளில் ரசிக்கப்பெற்ற சில வாசகங்கள்.
"உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்."

"மனிதனைப் பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால்மனிதன் மகத்தான சல்லிப்பயல்என்றுதான் சொல்வேன்." 

"தனது கலைப் படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம்பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச் சொல்லுங்கள்."

"‘மனிதாபிமானஉணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத் துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தைப் படைக்க வல்லது. இல்லையெனில்மேக்பெத்என்ற நாடகமோகலிவரின் யாத்திரைஎன்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது."

"மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்று குறையும்."

" தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்." 

"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன." 

"எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டம் இருந்தே தீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்." 

1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் குறத்தி முடுக்கு நாவலை வெளியிட்ட நாகராஜன் அதன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"நாட்டில் நடப்பைதை சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் "இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது" என்று வேண்டுமானால் கேளுங்கள்; "இவையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?" என்று கேட்டு தப்பித்து கொள்ளப்பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவு சொல்ல முடியவில்லையே என்றுதான் வருத்தம்."
இதுதான் ஜி.நாகராஜன்!
சிதையில் படுத்தால்தான் குளிர் அடங்கும்’ – ஜி. நாகராஜன்
ஜி.நாகராஜன் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது
நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்
’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.
ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.
அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.
உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!
மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.
’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது
அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.
தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.
இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.
Thanks https://www.jeyamohan.in

Ms.Nirmala (முதல்வர் நிர்மலா ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்)


தமிழ் இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, தமிழ் இலக்கிய எல்லைகளைப் புதிய திசையில் விரிவடையச் செய்த படைப்பாளி ஜி.நாகராஜன், 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 52-வது வயதில் மறைந்தார்

ஜி. நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.


அ. ராமசாமி

ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்

=============================


ஜி.நாகராஜனின் எல்லாக்கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதையைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பு இது:
---------------------------------------------------------------------------------
கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும்.
===================================
இந்தக் கதையைக் குறும்படமாகத் தந்துள்ளார் தயாரிப்பாளர்&இயக்குநர் ஸ்ரீராம் . கதையைத் திரைக்கதையாக்கிய செந்தில் ஜெகந்நாதன் கதையிலிருந்து விலகவில்லை. அதில் நிர்மலாவாக நடித்துள்ள பொற்கொடியும் மாணவியாக நடித்துள்ள ஜனனியும் எழுதப்பெற்ற கதாபாத்திரங்களுக்குள் இருந்த உணர்வுகளை நடித்துக்காட்டியுள்ளனர். மறைந்துவிட்ட நண்பர் அருண்மொழியை அப்பாவாகப் பார்க்கமுடிந்தது. ஆனால் அவரது பெருங்குரல் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்தவில்லை.

கதை எழுதப்பெற்ற காலத்தையே படத்திற்கான ‘நிகழும் காலமாக (1980)’ வைத்திருக்கிறார்கள். அக்காலத்தைக் கொண்டுவரச் சினிமாப் பாடல்களும் இளமைத் தோற்றத்தோடிருக்கும் கமல்ஹாசனின் படமும் பயன்பட்டுள்ளது. அதே கவனத்தைக் கொலுசில் காட்டாமல் விட்டுள்ளனர்;புத்தம் புதிதாக இருக்கின்றது. படத்தைப் பாருங்கள். பிறகுகூடக் கதையை வாசிக்கலாம். அதன் பிறகு நான் எழுதிய கட்டுரையையும் வாசிக்கலாம்.


Friday, April 17, 2020

மோகமுள் - நாவல் பிறந்த கதை தி.ஜானகிராமன்



- தி.ஜானகிராமன்

கண்ணாடிப் பாட்டியைப் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு கல்யாணத்தில் பார்க்க நேர்ந்தது. “யார்றப்பா அது, ஜானகியாடா?” என்று கண்ணாடியை இரண்டு விரல்களால் தூக்கி விட்டுக்கொண்டே அருகில் வந்தாள்.
“ஆமாம் பாட்டி. சௌக்கியம்தானே?”
“சௌக்கியமா இருக்கறதுக்குத்தான் வழி பண்ணிக்க வந்திருக்கேன். பேப்பர்லே கதை போட்டுண்டு வறியே. அதுக்கெல்லாம் பணம் தருவாளோ! இல்லே, ராமையா பாகவதரைக் கூப்பிட்டுக் கதை பண்ணச் சொல்றாப்பலே தேங்காய் மூடியோ?…” என்று கூறி நிறுத்தினாள் பாட்டி.
“தேங்காய் விலைதான் ஏறிக்கிடக்கே, இப்போ! பணமாகவே கொடுத்துவிடுகிறார்கள்.”
“அது என்னமோப்பா! பாதிப் பணம் அப்பப்ப எனக்கு வரணுமே, வரலையேன்னு கேட்கிறேன். நான் கேட்கிறது நியாயம்தானே?” என்றாள் பாட்டி.
“எல்லாம் உங்க ஆசீர்வாதம்தானே!”
“அப்படிச் சொல்லிண்டே கிளம்பிப் போயிடலாம்னு பார்க்கறியா? என் பேச்சு, மூனாச்சி கதை, யோகாம்பா கதை, ரங்கு கதை - அவாளுக்குக் கொடுத்தாலும் கொடு. கொடுக்கப்பட்டாலும் போ - எனக்காவது கொடுக்கலாமோல்லியோ நீ?”
பாட்டி கேட்டது வேடிக்கையாகத்தான். சொன்னது அவ்வளவும் உண்மை. எழுதத் தூண்டிய, வழி காட்டிய பல குருமார்களில் கண்ணாடிப் பாட்டிக்கு நான் தனி ஸ்தானம் கொடுத்திருக்கிறேன்.
காவேரி வண்டலில் செழித்தபயிர் கண்ணாடிப் பாட்டி. பேச்சில் அசாதாரணமான நயம், நகைச்சுவை, ‘சுருக்சுருக்’கென்று தைக்கிற கூர்மை, சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்லுகிறாள் என்று இலேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம், சொல்லாமல் சொல்லுகிற தொனி, அதிர்வேட்டு மாதிரியும், சிற்றிலை போலவும் பல தினுசுச் சிரிப்புகளை எழுப்பக் கூடிய ஹாஸ்யவகைகள், எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை - பாட்டி ரொம்பப் பெரியவள்.
“மோக முள்” நாவலில் வருகிற பல பாத்திரங்களும் சம்பவங்களும் கண்ணாடிப்பாட்டியும் நானும் கண்டு ரசித்தவைதான். அவற்றையெல்லாம் ஒரு நாவலாக எனக்கு எழுதத் தோன்றியதே பாட்டியின் பார்வையை இரவல் வாங்கிக் கொண்டதனால்தான்.
பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அவளுக்குத் தெரிந்த கதைகளும், மன விசித்திரங்களும், சொல் ஜாலங்களும் இந்த உலகத்திலேயே சிலருக்குத்தான் கைவரும். பாட்டியின் கலைக்கண்ணில் ஒரு திவலை கூட நமக்கு லபிக்கவில்லையே என்று எனக்குத் தீராத குறை.
“மோக முள்”ளில் சில அத்தியாயங்களைக் கிடைத்தபொழுது வாசிக்கச் சொல்லிக் கேட்டாளாம் பாட்டி. ஓரிரண்டு இடங்களை நன்றாக இருப்பதாக அவள் ஒப்புக்கொண்டு கூடவிட்டாள். ஆகவே மற்ற விமர்சகர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
பள்ளிக்கூடத்தில் படித்த பத்து வருஷங்களில் ஞாபகம் இருக்கக் கூடியதாக ஒன்றுமில்லை. எப்பொழுது இச்சிறையிலிருந்து விடுபடப் போகிறோம் என்று ஆத்திரப்பட்டது ஞாபகம் இருக்கிறது. “உனக்குக் கணக்கு வராது. நீ கதை பண்ணத்தான் லாயக்கு. தொலை” என்று என் முகத்தில் பிரம்பை விட்டெறிந்த நாமமும், அம்மை வடு முகமும் கொண்ட மூன்றாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் ரங்காச்சாரியார், எனக்கு ஆசீர்வாதம் செய்தார். அந்த ஆசீர்வாதம்-
வகுப்புக் கட்டுரைகளில் சொந்தக் கை வரிசையைக் காட்டி அதிகப்பிரசங்கித்தனமாக அசடு வழிந்ததற்கு, சில வாத்தியார்கள் மற்றப் பையன்களுக்கு நடுவில் பரிஹாசம் செய்து மனத்தைக் கிழித்துப் போட்டதில் ஏற்பட்ட புண்கள்-
தஞ்சாவூரில் அப்பொழுதெல்லாம் மூலைக்கு முலை சங்கீதக் கச்சேரிகள் அமர்க்களப்படும். சிவகங்கை அனுமார், வெங்கடேசப்பெருமாள் சன்னிதி அனுமார், மேலவீதி விசுவநாதர், மேலவீதிப்பிள்ளையார், தெற்குவீதிக் காளி அம்மன், வரகப்பையர் சந்தில் தியாகையர் பூஜித்த ராம விக்கிரகங்கள், நாணயக்காரச் செட்டித்தெரு ராமலிங்க மடம், பக்கத்தில் திருவையாறு - இத்தனை தெய்வங்களுக்கும் நடக்கிற உற்சவ சங்கீதக் கச்சேரிகளை ஒன்றுவிடாமல் ஐந்து வயதிலிருந்தே கேட்டுக் கொண்டிருந்த பழக்கம்-
நாலைந்து பேரிடம் சிறுவயதிலிருந்தே சங்கீதம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. கலைஞர்களுக்கு உரிய பேச்சின் அழகில் மயங்கினது -
உமையாள்புரம் சுவாமிநாதய்யரிடம் சில நாட்கள் சங்கீதம் சொல்லிக் கொள்ளப் போய்க்கொண்டிருந்தேன். மற்றவர்களைவிட சங்கீதத்தை உபாசணையாக, தியான மார்க்கமாக, அவர் கையாண்ட ஒரு தனிப்பண்பு, உலகத்தின் ஒலிகளையெல்லாம் நாதக் கடவுளின் பற்பல சைகைகளாகவும் விவகாரங்களாகவும் அவர் கண்ட விந்தையைத் துளியாவது பார்க்கக் கிடைத்த வாய்ப்பு-
கும்பகோணத்தில் கல்லூரியில் படித்த நாலு வருடங்களும் பள்ளி வாழ்க்கைக்கு நேர்மாறாக இருந்தன. அவ்வளவு உற்சாகம். அவ்வளவு அமைதி. இலக்கியங்களைப் பரவலாகப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. பரம ரசிகர்களாக இருந்த இரண்டு மூன்று ஆசிரியர்களின் தோழமை இந்த வாய்ப்பைப் பெருக்கிற்று. அந்தப் பூரிப்பு-
கல்லூரியில் எனக்கு இணைபிரியாத நண்பன் ஒருவன் உண்டு. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தெய்வமாக வணங்குவான். அதை ஒரு தனி மதமாக வளர்த்திருந்தான் அவன். அவனோடு நெருங்கிப் பழகப் பழக என் உள்ளத்தில் சபலத்துக்கும் தூய்மைக்கும் மூண்ட ஓயாத சண்டைகள்-
நான் குடியிருந்த தெருவில் ஒரு கிழவர் ஐம்பத்தைந்து வயதில் ஒரு பதினாறு வயதுக் கட்டழகியை (அழகான பெண்கள் யார் யாருக்கோ போய்ச் சேர்வதைப் பாருங்கள்)க் கலியாணம் செய்து கொண்டு வந்து முப்பத்திரண்டு வயதுப் பிள்ளையை அவன் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு விரட்டி, சரியாக ஒரு வருஷம் புது மனைவியோடு தனிக்குடுத்தனம் செய்துவிட்டு, திடீரென்று ஒருநாள் சிவபதம் அடைந்து விட்டார். அதை ஒரு வருஷம் பார்த்துக் கொண்டிருந்த ஆற்றாமை-
தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். அங்கே ஒரு மிராசுதார் . சிறு பையனாக இருக்கும் பொழுதே முப்பது வேலிநிலத்துக்கு வாரிசாகிவிட்டான். தகப்பனார் இறந்து, நிலம் கைக்கு வந்ததுமே, பண்ணை முறையை உதறி எல்லா நிலங்களையும் குத்தகைக்குவிட்டு விட்டுச் சுகவாசியாக வாழத் தொடங்கினான்.
சுகவாசியென்றால் வேறொன்றுமில்லை. திண்ணையில் பெரிய கலியாண ஜமக்காளத்தை விரித்து, ஊரில் உள்ள சின்னவர் பெரியவர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு சீட்டாட்டம். ஓயாத ஒழியாத சீட்டாட்டம். அரையில் வேட்டி நழுவியதைக் கூட உணராத சீட்டாட்டம். மற்ற நேரங்களில் திண்ணையில் மரச்சாய்வு நாற்காலியைப் போட்டு, சட்டத்தை நீட்டி அதன்மேல் காலைப்போட்டு, எப்பேர்ப்பட்ட பெரியவர்கள் வந்தாலும் (ரெவின்யூ இன்ஸ்பெக்டர், தாசீல்தாரைத் தவிர) அந்தக் காலை மடக்காமல், எழுந்து கொண்டுவிடாமல் படுத்திருப்பான். வம்பளப்பான்.
இந்த மாதிரி எத்தனையோ ஜன்மங்கள் தஞ்சாவூர் ஜில்லாவில் இருக்கின்றன. (மற்ற ஜில்லாக்கள் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லை). இந்த ஜன்மங்கள் ஒன்றிரண்டைப் பார்த்த குழப்பம் -
தஞ்சாவூரில் நான் படிக்கும்பொழுது ஒரு நாள் நாலைந்து வடக்கத்தியர்கள் தம்புராவைத் தூக்கிக் கொண்டு வாசலோடு போனார்கள். என் தகப்பனாரும் நானும் திண்ணையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் வாசலண்டை வந்த அவர்கள் என் தகப்பனாருக்குக் கும்பிடு போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார்கள். ஹாலில் உட்கார்ந்தார்கள்.
தம்புராவை மீட்டினான் ஒருவன். பெரியவர் ஒருவர் பாட ஆரம்பித்துவிட்டார். ஒரு மணி நேரம் உலகப் பிரக்ஞை அழிய அழியப் பாடினார் அவர். அவர் மகனும் சேர்ந்து கொண்டான். அந்தமாதிரி சாரீரங்களை நான் இதுவரையில் கேட்டதில்லை. அவ்வளவு கனம், அவ்வளவு இனிமை, அவ்வளவு சுருதி உணர்வு, விண்ணுக்கும் பாதாளத்துக்கும் அனாயாசமாக ஓடி, ஓடிப் பாய்கிற ஆற்றல்! கட்டி விழுந்த குழந்தையின் முனகல் போன்ற சில கர்நாடக வித்வான்களின் குரல்களும் நினைவில் வந்தன.
பல வருஷங்கள் கழித்து, பிழை பொறுக்காமல் வடக்கத்தியர்களின் குரல்வளத்தைப் பற்றி ஒரு பிரபல கர்நாடக வித்வானுடன் தர்க்கம் செய்ய நேர்ந்தது. ‘குரல் இருந்தால் மட்டும் போதுமா’ என்று ஒரே வார்த்தையில் அலட்சியப் புன்னகையோடு அவ்வளவையும் ‘பைசல்’ செய்துவிட்டார் அவர்! ஒரு கிணற்றில் இத்தனை தவளைகளை எப்படி அடைத்திருக்கிறார் பகவான் என்று அப்போது ஓர் ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த ஆச்சரியம் -
என்னைவிட எட்டு வயது அதிகமான ஒரு பெண். நன்றாகப் படித்தவள். நல்ல வடித்தெடுத்த அழகு. அடிக்கடி அவளோடு பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஆழ்ந்த அமைதியும், புத்திக் கூர்மையும், எதையும் கண்டு வியந்துவிடாத அழுத்தமும் நிறைந்த அவளை மரியாதையாகப் போற்றத் தொடங்கினேன். கடைசியில் அது மோகமாக மாறி, அவள் அதைத் தெரிந்துகொண்டு, என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய், ஒரு வருஷம் கழித்து யாரோ ஒரு மின்சார என்ஜினீயரைக் கலியாணம் பண்ணிக் கொண்ட செய்தியைக் கேட்டது -
இந்த எல்லாமாகச் சேர்ந்து, கொதித்து “மோகமுள்” என்ற நாவலாக ஆகிவிட்டது. முக்கியமானவற்றைச் சொல்லியாயிற்று.
எப்படி அதை எழுதினேன் என்று கேட்டால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே கிடந்தன. ஒருநாள் ஒரு வாரப் பத்திரிகையிலிருந்து மூன்று பேர்கள் வந்து ‘ஒரு தொடர்கதை எழுதுங்களேன்’ என்றார்கள். நாலைந்து தடவை வந்தார்கள். இந்த ஞாபகங்கள், என் ஆசைகள், நப்பாசைகள், நான் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தேனோ, பார்த்த மனிதர்கள் பாத்திரங்களாக எப்படி மாறவேண்டும் என்று விரும்பினேனோ, எல்லாமாகச் சேர்ந்து நாவலாக உருவாயின.

மறுபடியும் எப்படி என்றால் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ உட்கார்கிறோம், எழுதுகிறோம். சில சமயம் தரதரவென்று எழுதமுடிகிறது. சில நாளைக்கு ஒரு வரிகூட எழுதமுடியவில்லை. நாட்கணக்கில் எழுதவே முடிவதில்லை. எழுத வந்தால்தானே! நாலு நாட்கள் வந்து நாட்கள் மண்டையை உடைத்துக் கொண்டு, கடைசியில் அழாத குறையாக, படுத்து விடுகிறது.
காலையில் எழுந்திருக்கும் பொழுது பளிச்சென்று கோவில், சினிமாவுக்குப் போகிற ஸ்திரீகள் ‘குக்’கரில் வைத்துவிட்டுப் போகிற அரிசி மாதிரி, எல்லாச் சிரமங்களும் விடிந்து, தானாக எண்ணங்கள் பக்குவமாகி இருக்கும். வேகமாக, பேனா அதை எழுதிவிடுகிறது. அவ்வளவுதான்.
தொடர்கதை எழுதுவதைப் பற்றி விமர்சகர்கள் நல்ல அபிப்பிராயம் சொல்வதில்லை. எனக்குக்கூட அந்த அபிப்பிராயத்தில் சிறிது சார்பு உண்டு. ஆனால் நான் எழுதின மூன்று நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவைகள்தான். பாத்திரத்தில் பச்சைத் தண்ணீரில் கிடக்கிற காய்கறிகளை வேக வைக்க, தொடர்கதை எழுதச் சொல்லும் பத்திரிகாசிரியரின் தூண்டுதல் நல்ல தீயாக வந்து உதவிச் சமைத்துக் கொடுக்கிறது. நெருப்பை ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவது நம் பொறுப்பு.
என்ன, சமையல் உபமானமாகவே இருக்கிறதே என்று நீங்கள் கேட்கிறீர்களா? முன் ஜன்மத்தில் தவசிப் பிள்ளையாக இருந்தேனே, என்னவோ, யார் கண்டார்கள்?
*
நன்றி:
கல்கி (27.08.1961)
&
சொல்வனம் இணைய இதழ்.