Search This Blog

Monday, March 31, 2014

மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்:



மோகனகிருஷ்ணனின் பேச்சிலும் மூச்சிலும் மூலிகை வாசம் தூக்கலாக வீசுகிறது. பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் தனது 17 ஏக்கர் வயல் முழுக்க, இயற்கை முறையில் மூலிகைகளைப் பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார். வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் ஒரு குழந்தை போலக் குதூகலமாகிவிடும் இவருடைய கவலை, தன் காலத்துக்குப் பின் இந்த மூலிகைப் பொக்கிஷங்கள் என்னாகும் என்பதுதான்.
"எழுபதுக்கு மேல வயசை எண்ணலைங்க…" என்றபடி முதல் அறிமுகத்திலேயே வெள்ளந்தியாய் நம்முடன் ஒட்டிக்கொள்கிறார். நம் கையைப் பற்றி உற்சாகத்துடன் வயலைச் சுற்றிக் காட்டுகிறார். "பொழக்கிறவனுக்கு புழக்கடையில மருந்தும்பாங்க. நான் புழக்கடைக்குப் பதிலா மூலிகைகளைக் காடாவே வளர்த்துப் புழங்கிட்டிருக்கேன். இந்த ஆதண்டை தலைவலிக்கு மாமருந்து.
கருஊமத்தை வெறிநாய் கடிக்கு, வெண்கொழுஞ்சி வயிற்று வலிக்கு, நறுவிலி சளிக்கு, நரிமிரட்டி மாட்டு நோய்களுக்குப் பக்கவிளைவில்லாத மூலிகை, காட்டுக் காணம் மாட்டின் கறவையைத் தூண்டும், தவசி முருங்கை ரத்தக்கட்டுக்கு குணமளிக்கும், தகரை தேமலுக்கு, வெள்ளைநாவல் சர்க்கரை நோய் தீர்க்கும்..." இப்படி வயல் முழுக்க வகைவகையாய் மூலிகை வகைகளைத் தன் கண் போல் பார்த்து வளர்க்கிறார் மோகனகிருஷ்ணன். அவ்வளவு பெரிய காட்டில் அவரை அடியொற்றி வலம் வருவதே சுகானுபவமாக இருக்கிறது.
மூலிகைக் கனவு
"எங்க தாத்தாவுக்கு என்னை மாதிரியே மூலிகை மேல ஆர்வம் உண்டாம். அந்தக் காலத்துச் சித்த வைத்தியம் கைவைத்தியத்துல பிரபலமானவரு. அப்பாவுக்கு இதுல ஆர்வமில்லை. நான் ஓல்டு எஸ்.எஸ்.எல்.சி. எலெக்ட்ரிகல் வேலையும் தெரியும், ஒப்பந்தப் பணியாளரா இருந்திருக்கேன். அப்பாவுக்கு அப்புறம் காடு, என் கைக்கு வந்ததும் வேலையை விட்டேன். அதுவரை சேமிச்சதை வச்சு கூடுதலா 7 ஏக்கர் வாங்கினேன். இப்படித்தான் என் மூலிகைக் கனவை இங்க விதைக்க ஆரம்பிச்சேன்" என்கிறார்.
மோகனகிருஷ்ணனைப்பொறுத்தவரை எல்லாத் தாவரமுமே ஒரு வகையில் மூலிகைதான். காரணம் இல்லாமல் இயற்கையில் எதுவும் படைக்கப்படுவதில்லை என்பது இவரது அனுபவப் பாடம். மரம், செடிகொடி, புல் என்று எந்த வடிவத்தில் மூலிகைகள் இருந்தாலும் இவரது வயலில் அவற்றைத் தரிசிக்கலாம். சுற்றுவட்டாரப் பாரம்பரிய மற்றும் அரசு சித்த மருத்துவர்களின் ஆபத்பாந்தவன் இவர். வித்தியாசமான மூலிகை வளர்ப்புக்காக விவசாயத் தொழில்நுட்பக் கல்லூரிகள், அரசு மூலிகைக் கண்காட்சிகளில் பரிசுகளை வாரி குவித்திருக்கிறார்.
தண்ணீர் பஞ்சம்
ஒருங்கிணைந்த பண்ணைய முயற்சியில், தன் காட்டுக்குள் குட்டை வெட்டி வைத்திருக்கிறார். சில வருடங்களாக மழையில்லாது அவை வறண்டிருக்கின்றன. பால் மரங்கள் மட்டுமல்ல, பற்றி எரிந்தது போலப் பனைகூடக் காய்ந்திருக்கிறது. ஆனாலும் மோகனகிருஷ்ணன் நம்பிக்கையைக் கைவிடவில்லை. சின்ன பானையில் நீரை வாரி, புதிதாய் வைத்த மூலிகைக் கன்றுகளுக்கு ஓடிஓடி ஊற்றுகிறார்.
இரண்டாவது விவசாய மின் இணைப்பு இருந்தால், பரந்த வயல் செழிக்கும் என்ற நம்பிக்கையில் மின் வாரியத்தில் விண்ணப்பித்து 22 ஆண்டுகளாகிவிட்டது என்று அலுத்துக்கொள்கிறார். "என்னைப் பத்தி கேள்விப்பட்டு இரண்டு கலெக்டருங்க வயலைச் சுத்திப் பார்த்திருக்காங்க. அவங்க கையால மரக்கன்னுகூட நட்டுப் போயிருக்காங்க. அதுக்குத் தண்ணீ ஊத்தவாவது கனெக்சன் கொடுங்கன்னு கேட்டுப் பார்த்திட்டேன். பதிலே இல்லே".
ஊருக்குள் தண்ணீர்ப் பஞ்சம் தலை காட்டியபோது தனது நிலத்தில் ஒரு ஏக்கரை அரசுக்குத் தானம் தந்துவிட்டார். அதில் வெட்டப்பட்ட மூன்று கிணறுகள் ஊர் மக்களின் தாகம் தீர்க்கின்றன. இருந்தும் ஊருக்குள் பிழைக்கத் தெரியாத மனிதராகவே அடையாளம் காணப்படுகிறார். யாராவது கேலி செய்யும்போது, புன்முறுவலுடன் அவர்களைக் கடந்துவிடுகிறார். காட்டில் ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகை வகைகள் என்றால், வீட்டுக்கு அருகில் இருநூறு அரிய வகைத் தாவரக் கன்றுகளைப் பராமரிக்கிறார்.
ஆத்ம திருப்தி
பறவைகளுக்கும் இவரது வயல் புகலிடமாக இருக்கிறது. ஆங்காங்கே பானை வைத்துத் தானியங்களை வைத்திருக்கிறார். மூலிகை வயலுக்கான வேலியைக்கூடக் கருங்கத்தாழை என்ற இயற்கை உயிர் வேலியைத்தான் நட்டிருக்கிறார். தேவையில்லாது தலைகாட்டும் தாவரங்களைப் பறித்து மூடாக்கு போட்டிருக்கிறார். வயலில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி அறவே கிடையாது.
ஆர்வ மிகுதியில் இசைக்கருவி தயாரிக்க உதவும் ஆச்சா மரங்களையும் வளர்த்திருக்கிறார். இதனால் ஆன பயன் என்ன என்பதில், ஆத்மதிருப்தியைத் தவிர வேறு எதையும் அவரால் விளக்க முடியவில்லை.
இவரது மகன்கள் இருவருமே விவசாயத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத துறைகளில் இருப்பதும், வயலுக்கு நீர் இல்லாத தவிப்பையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் மோகனகிருஷ்ணனுக்கு கவலை எதுவும் இல்லை. எங்கெங்கிருந்தோ வருகை தரும் இயற்கை விரும்பிகள், நள்ளிரவு வரை அலைபேசியில் சந்தேகம் கேட்கும் இயற்கை விவசாய நண்பர்கள் என மோகனகிருஷ்ணனின் வாழ்க்கை, அவர் வளர்க்கும் மூலிகைகளைப் போலவே எளிமையும் மதிப்பும் நிறைந்து மனநிறைவுடன் கழிகிறது.
via தி இந்து
by V Nadarajan Vnrcud

எனக்கான வெளி

லறீனா அப்துல் ஹக்








என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள் உடன்படவில்லை. போகும் போது மன்றாட்டமாய் அவள் குரல், 'கட்டாயம் வீட்டுக்கு வா. ஓரிரு நாட்கள் தங்கிப்போகவே வா, காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போல அரக்கப்பரக்க வராதே.' 'அண்ணா, உங்களுக்கு நேரமில்லாட்டில் அவளை மட்டுமாவது அனுப்பி வைங்களேன்' - இது என் கணவரிடம். அவர் புன்னகையோடு தலையசைக்கிறார்.
அன்றிரவு ஜன்னலோரம் நின்றபடி அகன்று விரிந்திருந்த வான்வெளியைப் பார்க்கின்றேன். என்வசம் சிறகுகள் இருக்கின்றன. கூடவே முழுமையான சுதந்திரமும். ஆனாலும் பறப்பதற்கான எனது 'வெளி' வரையறுக்கப்பட்டிருப்பதாக உணர்தலை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனக்கான 'வெளி'யை வரையறுத்தது யார்?
விழிகளைத் திருப்பிப் பார்க்கின்றேன். முன்னறையில் மடிக் கணினித் திரையில் கண்களைப் பதித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் என் கணவர். கிட்டத்தட்ட ஒருவகைத் தவநிலையில் அவர். மிக மெலிந்த தோற்றம். அந்தக் கண்களில் தூக்கக் கலக்கத்தை மீறிய கூர்மை. 'கண்மணி, உனக்குப் போகணும் போல இருந்தா போய் ரெண்டுநாள் தங்கிட்டு வாடா. பிள்ளைகளை நான் சமாளிக்கிறேன்' இரவுணவின்போது பரிவோடு ஒலித்த அவர் குரல் மீண்டும் ஒருமுறை என் காதுக்குள் ஒலிப்பதாய் உணர்கிறேன். எனக்குள் மெல்ல ஏதோ புரிவது போல்... எனக்கான வெளியை நானேதான் வரையறுத்துக் கொண்டிருக்கிறேனா? இது... இது... எப்படி சாத்தியமானது? மனசு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது.

அவருக்குப் புத்தளத்தில் வேலை. இங்கிருந்து மூன்று பஸ் மாறிப் போகவேண்டும். அதிகாலை நாலரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினாரென்றால், வீடு திரும்ப எப்படியும் இரவு பத்து மணியாகிவிடும். அங்கே அவருக்குத் தங்குமிட வசதி உண்டுதான். எனினும், அவரால் என்னையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்க முடியவில்லை. எங்களுக்கும்தான். மாலையில் நான் அலுவலகத்திலிருந்து வீடுவரும்வரை வழிபார்த்திருந்து ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்ளும் பிள்ளைகளின் குதூகலம்... இரவில் அலுத்துக் களைத்து வீடுவந்துசேரும் என்னவர் முகத்தில் எங்களைக் கண்டதும் தோன்றும் மலர்ச்சி... இரவுணவின்போது எல்லோருமாய் அமர்ந்து சிரித்துப் பேசியபடி உணவருந்துகையில் ஏற்படும் கலகலப்பு... பிள்ளைகள் உறங்கியபின், என்னதான் களைப்பாக இருப்பினும் நான் கண்ணயரும் வரை என் கூந்தல் கோதிவிடும் என் இனியவரின் கைவிரல்கள் தரும் இதம்... என் மனசின் மெல்லிய பயங்கள், சின்னச் சின்ன கலக்கங்களைத் தட்டுத் தடுமாறி வார்த்தைகளால் வெளிப்படுத்தும் போதெல்லாம் வேலைப் பளுவுக்கு மத்தியிலும் செவிதாழ்த்திக் கேட்டு, என்னைத் தேற்றி 'நிமிர' வைக்கும் அந்தக் கனிவும் காதலும்... சின்னதாய் ஒரு தலைவலி வந்தாலும் துடித்துப் பதறும் அந்த ஆழ்ந்த நேசமும் பரிவும்... இவைதாம் நான் சிறகடித்துப் பறக்கவிழையும் எனக்கான வான்வெளியை நிர்ணயித்தனவா? எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.

'கண்மணி, என்னம்மா கடும் யோசனை?' என்னவரின் பரிவான குரல் மிக மிக அருகில் ஒலிக்கவே, விழிகள் பனிக்க அவரை ஏறிட்டேன். 'உங்களையெல்லாம் விட்டுட்டு எனக்கு மட்டும் அங்கே போகேலாது' –என் குரல் ஏன் இப்படித் தளுதளுக்கிறது?
'சரி, அதுக்கேண்டா இப்படிக் கலங்குறாய்? எனக்கு விளங்குது. என் கண்மணிக்கு அங்கே போகவும் வேணும். போகவும் மனசில்லை, அப்படித்தானே?' என் தலை மட்டும் அசைந்தது. அவர் அப்படியே தன் மார்போடு என்னை அணைத்துக் கொள்கிறார். எவ்வளவு இதமாக இருக்கிறது! இப்படியே... இந்தக் கணமே செத்துப்போய்விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது, எனக்கு. எவ்வளவு காதலும் கனிவும் இவருக்கு என்மீது! அப்படியே வானத்தில் பறப்பதான பெருமித உணர்வு. அடுத்த கணத்தில்... 'யார் இது? ஏன் இப்படி என் தோளைப் பற்றி இவ்வளவு முரட்டுத்தனமாக உலுக்குகிறார்கள்? ஏன், என்ன நடந்துவிட்டது?' நான் அலங்க மலங்க விழிக்கிறேன்.

'ஏய், எழும்பு சீக்கிரம்! சின்னவனுக்கு லூஸ் மோஷனோ என்னவோ! கையோட காலோட பண்ணிக்கிட்டு நிற்கிறான், சீக்கிரமா அவனைக் கழுவி, அந்த இடத்தைக் க்ளீன் பண்ணிடு. ! சொல்ல மறந்துட்டேன், என்னோட அக்காவும் மச்சானும் இன்னைக்கி நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்களாம். ஸ்பெஷலா ஏதாவது பண்ணிவை' அவர் அடுக்கிக்கொண்டே முன்னறைப் பக்கம் நகர்ந்தார். படுக்கையிலிருந்து மெல்ல எழுந்திருக்க முனைந்த போதுதான் மீண்டும் அது! 'சுரீர்' என்று அடிவயிற்றுக்குள்ளிருந்து அந்தப் பாழாய்ப் போன வயிற்று வலி தன் இருப்பை எனக்கு உணர்த்திற்று. '!' என்று கத்தி அழவேண்டும் போல ஒரு வேதனை. நேரே நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. மீண்டும் தலையணையை வயிற்றில் இறுக்கிக்கொண்டு கைகால்களைக் குறுக்கிக்கொண்டு கட்டிலில் குப்புறக் கிடந்தேன். பற்கள் உதட்டை இறுகக் கடித்துக்கொள்ள...கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. இந்தப் பாழும் வயிற்றுவலிக்கு இதுவரை பார்க்காத வைத்தியமில்லை. 'கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளைப் பெற்றால் எல்லாம் தானாகச் சரிவந்துடும்' என்றுதான் வைத்தியர்கள் சொன்னார்கள். இதோ கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் மாதமொருமுறை விடாது வதைக்கும் இந்தக் கொடிய வயிற்றுவலி. மீண்டும் 'சுரீர்!'. விலா என்புகளைக் குடைந்துகொண்டு அடிவயிற்றில் சம்மட்டி அடியாய் அந்த வலி... 'செத்துப் போய்விட்டால் எவ்வளவு நல்லது!'.

'ஏய், என்ன நீ? இன்னும் எழும்பாமல் கட்டிலில் புரண்டுகொண்டு என்ன பண்ணுறாய்? எல்லாம் சம்பாதிக்கிற திமிர்! வேறென்ன? நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன், நீபாட்டுக்கு மகாராணி மாதிரி படுத்திட்டிருந்தா என்ன அர்த்தம், ?' அவர் காட்டுக்கத்தல் கத்தினார்.
'என்னங்க, கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டீங்களா? எனக்கு உடம்புக்கு முடியல்லைன்னு தெரியும்தானே? வயித்துவலி...அம்மோவ்!'
'ஆமாமா, இன்னைக்கு எங்கக்கா வர்றான்னதும் உனக்கு எல்லா வலியும் வரும் என்று எனக்கும் தெரியும்! சும்மா மாய்மாலம் காட்டாமல், எழும்பி சின்னவனைக் கழுவி விட்டுட்டு, சமையலை ஆரம்பி. ஏதோ உலகத்துலயே இவள் ஒருத்திதான் பொம்பிளையாப் பொறந்துட்டாவாம்! மற்றப் பொம்பிளையெல்லாம் இப்படி வயித்துவலின்னு இவளை மாதிரி கூப்பாடு போட்டுட்டா இருக்காங்க? என்னவோ இவளுக்கு மட்டும்தான்...' அவர் தயைதாட்சண்ணியமின்றிச் சொல்லிவிட்டுப் போனார்.
இதற்கு மேலும் எழுந்திருக்காவிட்டால் நிலைமை ரசாபாசமாகிவிடும் என்ற அச்சத்தில் ஒருவாறு பலத்தையெல்லாம் திரட்டி மெல்ல மெல்ல சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்கின்றேன். தலைசுற்றுவது போல் இருந்தது. பக்கத்து மேசை மேலிருந்த தம்ளரில் நீரை வார்த்துக் குடித்தேன். குளிர்ந்த நீர் தொண்டையை நனைத்துக்கொண்டு மெல்ல உள்ளிறங்கியதில் சற்று ஆசுவாசமாய் இருந்தது.

பெண்ணாகப் பிறந்துவிட்டதன் பலனை மாதந்தோறும் நான் அனுபவிக்கின்றேன். கூடவே இருந்து இத்தனை வருடம் வாழ்ந்தவனுக்கு மனைவியுடைய வலியும் கண்ணீரும் கொஞ்சம்கூட உறுத்துவதே இல்லையா? 'ஆண்' என்பதாலேயே இதயம் இப்படி இறுகித்தான் போயிருக்குமா? குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்திய அப்பாவோடு ஒப்பிடுகையில் இவர் ஆயிரம் மடங்கு மேலானவர்தான். ஆனால், அவருக்கு ஒன்றென்றால் துடித்துப்போய் பணிவிடை செய்பவளுக்கு மாதந்தோறும் ஏற்படும் இந்தத் தாளமுடியாத வேதனை நிமிஷங்களின்போது குறைந்தபட்சம் இதமாக நாலு வார்த்தைகள்... ஆறுதலாகவேனும்... ச்சே!
அவன் மெல்ல அவளருகே நெருங்கி வருகின்றான். கண்களில் அவள் இதற்கு முன்பு பார்த்திராத பரிவு. முதுகை மெல்லத் தடவி விடுகின்றான்.

'கண்மணி, என்னம்மா? ரொம்ப வலிக்குதா? மாத்திரை ஏதாவது போட்டுப் பாரேன்...'
அவளுக்கு வலி சற்றே குறைந்தது போலிருந்தது. மெல்லப் புன்னகைக்க முடிகின்றது. ! இந்தக் கனிவும் காதலும்... இன்னும் என்ன சந்தேகம்? எல்லாம் வெறும் கனவு! மனசு முழுக்க நிறைந்துள்ள ஏக்கமும் தவிப்பும் தன்னையறியாமலேயே கனவின் வடிவில்... 'ச்சே! நின்றுகொண்டே கனவு காணத் தொடங்கிவிட்டேனா?' என்னைச் சுதாகரித்துக்கொண்டு குளியலறையை நோக்கித் தள்ளாடியபடி நடக்கின்றேன்.
'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்' என்று பாடினானாமே ஒரு கவிஞன்! அவன் தன் மனைவிக்கு மாதவிடாய் வந்துள்ள நேரத்தில் அவள்படும் பாட்டைக் கண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பானா? எனக்கு வலியையும் மீறிக்கொண்டு சிரிப்பு வந்தது.

என்னதான் படித்திருந்தாலும் நல்லதொரு தொழில் பார்த்துக் கைநிறையச் சம்பாதித்தாலும் இந்த மாதிரியான சமயங்களில்... உயிரைப் பிழிவதான வேதனையில் தவிக்கும் தருணங்களில் இதமான நாலு வார்த்தைக்காய்... கனிவான ஒரு வருடலுக்காய்... கருணையான ஒரு பார்வைக்காய் ஏங்கித் தவிக்கும் ஒரு மனசும், அதில் மெல்லிய உணர்வுகளும் உள்ளனவே! அதை ஏன் என் கணவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை? இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்ற பரஸ்பர வாக்குறுதியில்... நம்பிக்கையில் காதலித்து மணந்த நமக்கிடையில் ஏன் இந்தக் கண்ணுக்குத் தெரியாத இடைவெளி? வலிகளும் வேதனையும் பெண்ணுக்கு வரவே கூடாதா? வந்தாலும் அவள் அவற்றை உணர்ந்து, உணர்த்துவது தப்புத்தானா? அல்லது... என்னதான் வேதனையில் துடித்துத் துவண்டாலும் அவள் அவற்றை வெளிக்காட்டாது தனித்துச் சகித்தபடி தன் அன்றாடப் பணிகளைச் செய்துதான் ஆகவேண்டுமா? கொஞ்சம் கால் வலி வந்துவிட்டால் 'ஆய்...ஊய்...! அந்தத் தைலத்தை எடுத்து என் காலில் தேய்ச்சுவிடு...இதமாய்ப் பிடிச்சுவிடு' என்றெல்லாம் கூப்பாடு போட்டு அவளிடம் பணிவிடையைக் கேட்டுப்பெறும் அவள் கணவனுக்கு, 'வலி' என்பது பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்பதோ, அதனை அவள் வெளிக்காட்டுவது இயல்பு என்பதோ ஏன் புரியவில்லை? மனைவி என்பதற்காக மேலதிகக் கரிசனையெல்லாம் தேவையில்லை. கூடவே உள்ள ஓர் 'உயிரி' என்றாவது... குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அன்பாக ஒரு வார்த்தைகூறித் தேற்றவேண்டும் என்றுகூடத் தோன்றாத அவனது மனசு... இவ்வளவுக்கும் அவன் நாய்க்குட்டிக்குக் காலில் சற்று அடிபட்டபோது துடித்துப் போனவன்... ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'உம்' என்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தவன்... அவனைப் பொறுத்தவரை 'அவளின் வலி' அந்த நாய்க்குட்டியின் காயத்தின் அளவுக்குக்கூட பெறுமானமற்றுப் போய்விட்டதா என்ன?
'பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பார்- கண்மணியே!
பேய்கள் இரங்கிடினும் மண்ணுலகில் பெண்மணந்த
புருஷன் இரங்குவனோ? நீ வலியில் துடித்திருக்க
பரிவுடன் தேற்றுவனோ? இன்சொல்லால் ஆற்றுவனோ?...'
எப்போதோ வளாகத்தில் இடம்பெற்ற வில்லுப்பாட்டில் கேட்ட வரிகள் காதோரம் ஒலிப்பதான பிரமை. தலையைச் சிலுப்பி தறிகெட்ட குதிரை போல் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளை உதறியெறிய முயற்சிக்கின்றேன். சின்ன மகனைக் கழுவி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினேன். சமையலறைக்கு விரைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கோழிப் பார்சலை எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டேன். மீண்டும் அடிவயிற்றில் 'சுரீர்!' என்று அதே வலி 'நான் இன்னும் உனக்குள் தான் இருக்கிறேன்' என்பதை எனக்கு நினைவூட்டியதுபழைய சுடிதாரின் துப்பட்டா ஒன்றை எடுத்து வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டேன். கைகள் பரபரவென்று இயங்கத் தொடங்கின. பிரியாணி செய்தாயிற்று. வந்தவர்கள் ஒருகை பார்த்தனர்.

'ஆனாலும் மதினியின் கைப் பக்குவமே தனிதான்டா!' அவனின் அக்கா ஐஸ்வைத்தாள்.
'ஐயோ, மதினி உங்களுக்கு 'பீரியட்' வருத்தமா? தெரிந்திருந்தால் நானே உங்களுக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வந்திருப்பேனே!'
'அதெல்லாம் என்ன பெரிய விஷயம்! நீ சும்மா கவலைப்படாதேக்கா. கண்மணிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எவ்வளவு காலத்துக்குப் பிறகு நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்கே? உனக்கும் மச்சானுக்கும் ஒரு நல்ல சாப்பாடு தராம நான் அனுப்பிடுவேனா, என்ன?' என்றவாறு கோழிக்காலை சுவைக்கிறான்.

எனது தொண்டைக்குள் ஏதோ ஒன்று வந்து அடைப்பதான உணர்வு. மனசின் மூலைக்குள் எழுந்த வலி உயிரின் வேர்வரை பரவுவதுபோல்... கண்களின் அணைகள் எந்தக் கணத்திலும் உடைந்து விடலாம். பிறகு இன்னும் அசிங்கமாய்ப் போய்விடும்.

'என்ன மதினி, எழும்பிப் போறீங்க? நீங்க சாப்பிடல்லையா? வாங்களேன்!'
'இல்லை... அவளுக்கு வாந்திக் குணமாயிருக்கும். இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு வாந்தி எடுத்துவச்சிட்டா, நாங்க ஒருத்தரும் நிம்மதியா சாப்பிடேலாமப் போயிடும். அதுதான் அவ போறா. அதெல்லாம் அவ பின்னாடி மெல்ல சாப்பிட்டுக்குவா. மச்சான் இன்னும் கொஞ்சம்...' அவன் வந்தவர்களை உற்சாகமாக உபசரிக்கலானான்.

நான் எழுந்துபோய் ஜன்னலருகில் நின்றபடி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானம் அகன்று பரந்திருந்தது எப்போதும் போல! அந்த மேகக்கூட்டத்தின் இடையே என்னுடைய குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற முகங்கள் பளிச்சிடுகின்றன. போதையிலேயே ஈரல் கருகி அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்துவிட்ட அப்பா. அவரது கொடுமைகளால் நைந்து நொடிந்து போனாலும் மகளை நிம்மதியாகக் 'கரைசேர்த்து' விட்ட ஆசுவாசத்துடன் அம்மா. இன்னும்... மேகக்கூட்டம் கலைந்து நகர்ந்துசென்றுவிட்டது. நிர்மலமான வான்வெளி கம்பீரமாய் விரிந்து வியாபித்து... சிறகுகளை நான் இன்னும் இழந்துவிடவில்லைதான். ஆனால்... எனக்கான 'வெளி' மட்டும் கண்ணுக்குத் தெரியாத நூல்வேலிகளால் வரையறுக்கப்பட்டு... யாரால்? விடை எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.

'அம்மா, தம்பி என் கையைக் கடிச்சிவச்சிட்டான்... அம்...ம்...மா.. ...' அழுதுகொண்டுவந்த மகளை இழுத்து அணைத்துக் கொள்கின்றேன். நாளை பருவம் மலர்ந்தபின் இவளுக்கும் எனக்குப் போலவே அந்த வலி...? அவளுடைய வான் வெளியும்  வரையறைகளுடன்...?
'அம்மா நீங்க ஏன் அழுறீங்க?' மகள் என் கண்ணீரைத் தன் பிஞ்சுக் கரங்களால் துடைக்க முயல்கிறாள். ஆனால்... என் கண்ணீர் மட்டும் கட்டுடைத்த வெள்ளமாய்... கரைபுரண்டு....

Saturday, March 29, 2014

ஜூலியஸ் சீசர்

உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது.
 
வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது.


அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை ‘மகாகவி’ ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின் கதாநாயகனும், நம்பிக்கை துரோகத்திற்க்குப் பலியானவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பவரும், காலண்டர் சீர்சிருத்தம் செய்து நாம் இன்று பயன்படுத்தும் நவீன நாட்காட்டி முறையை உலகுக்குத் தந்தவருமான ‘ஜூலியஸ் சீசர்’. கி.மு நூறாம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி ரோமில் பிறந்தார் ஜூலியஸ் சீசர்.
அவர் பிறந்த காலகட்டம் ரோமில் அரசியல் கொந்தளிப்பு நிறைந்த ஒரு காலகட்டம். கிமு இரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பியூனிக் போரில் வெற்றி பெற்ற ரோமானியர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தத் தொடங்கினர். தங்கள் படைப்பலத்தைக் கொண்டு பல பகுதிகளை கைப்பற்றியதால் ரோமில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது. ஆனால் ரோமானிய ஆட்சிப்பேரவையால் மிகப்பெரிய ரோமானிய சாம்ராஜ்யத்தை முறையாக ஆள முடியவில்லை.அரசியலில் ஊழல் தலை விரித்தாடியது. அரசியல்வாதிகளும், கிளர்ச்சித்தலைவர்களும், அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடினர். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ரோமில் மக்காளாட்சி செழிக்க முடியாது என்று கருதிய மிக முக்கியமான அரசியல் தலைவர்தான் ஜூலியஸ் சீசர். சிறுவயதில் சிறந்த கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்ற சீசர் மிக இளம்வயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டார். பல்வேறு பதவிகளை வகித்த பிறகு கிமு 58 ஆம் ஆண்டில் அவருக்கு 42 வயதானபோது ரோமின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மூன்று அந்நிய மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த மாநிலங்கள் Cisalpine Gaul என்று அழைக்கப்பட்ட வடக்கு இத்தாலி, Illyricum என்று அழைக்கப்பட்ட யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி, மற்றும் Transalpine Gaul என்று அழைக்கப்பட்ட தெற்கு பிரான்ஸ் ஆகியவை அந்த மூன்று மாநிலங்களையும் ஆளும் பொறுப்பேற்றுக் கொண்ட சீசரிடம் இருபதாயிரம் வீரர்கள் கொண்ட இராணுவப்படை இருந்தது.அந்தப்படையைக் கொண்டு அடுத்த ஏழு ஆண்டுகளில் ‘Gaul’ என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முழுவதையும், ஒவ்வொன்றாக கைப்பற்றி ரோமின் ஆளுமைக்குக் கீழ் கொண்டு வந்தார் சீசர். அப்போதிய ‘Gaul’ பகுதி என்பவை தற்போதைய பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகியவை அடங்கிய பகுதிகளாகும்.
இருபதாயிரம் வீரர்கள் என்பது மிகக்குறைவு என்றாலும் வீரத்தோடும், விவேகத்தோடும் தனது படைகளை சிறப்பாக வழிநடத்தி அவ்வுளவு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றினார் சீசர். Gaul பகுதியைக் கைப்பற்றியதால் சீசரின் புகழ் ரோம் முழுவதும் பரவத் தொடங்கியது. அவரை மிகப்பெரிய கதாநாயகர்களாகப் பார்க்கத் தொடங்கினர் ரோமானியர்கள். ஆனால் அவரது பலத்தையும், பிரபலத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாத ரோம் ஆட்சிப் பேரவை ஒரு விசித்திரமான கட்டளையைப் பிறப்பித்தது. படைவீரர்களை அப்படியே விட்டுவிட்டு ஒரு சாதாரண குடிமகனாக சீசர் ரோமுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டது.

தனது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத அரசியல் எதிரிகள் தன்னை அழிப்பதற்காகத்தான் அவ்வாறு வரச்சொல்கின்றனர் என்று நம்பிய சீசர் ஆட்சிப்பேரவையின் ஆணையை தைரியமாக எதிர்த்து கி.மு 49 ஆம் ஆண்டு ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் தனது ஒட்டுமொத்த படையுடன் ரோம் திரும்பினார். அதனை சட்டவிரோதமான செயல் என்று சீறியது ஆட்சிப்பேரவை, சீசரோ அடிபணிவதாக இல்லை. எனவே ஆட்சிப்பேரவை படைகளுக்கும், சீசரின் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போர் மூண்டது. நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வெற்றிப் பெற்று ரோமின் சர்வாதிகாரியானார் சீசர். அவர் போரில் வெற்றி பெற்ற தினம் கிமு 43 ஆம் ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது. ஆனால் ரோமின் சக்ரவர்த்தியாக அவரால் ஓர் ஆண்டுதான் நீடிக்க முடிந்தது.

தன் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நம்பிய உறுப்பினர்களுடன் ஆட்சிப்பேரவை கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தார் சீசர். அந்த தினம் கிமு 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி. அந்த நாளை ‘Ides of March’ என்று ஷேக்ஸ்பியர் குறிப்பிடுகிறார். மனத்தில் சதியையும், கைகளில் கத்திகளையும் மறைத்து அந்தக்கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் சீசர் அரங்கத்தில் நுழைந்தபோது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அந்தத் தாக்குதலை சற்றும் எதிர்பாராத சீசர் நிலைதடுமாறி தன் உயிர் நண்பன் புரூட்டஸை நோக்கி நகர்ந்தார்.

நண்பன் தன்னைக் காப்பாற்றுவான் என்று நம்பிய சீசரை தன் பங்குக்கு கத்தியால் குத்தினான் புரூட்டஸ். அப்போதுதான் “Et tu, Brutes?” (“You too, Brutus?”) அதாவது நீயுமா புரூட்டஸ்? என்று தனது கடைசி வார்த்தையை உதிர்த்து தரையில் சரிந்து உயிர் நீத்தார் சீசர். குறைந்தது 23 தடவை அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. இது வெறும் கதையல்ல… வரலாற்று உண்மை!.

‘ஜூலியஸ் சீசர்’ என்ற தனது நாடக இலக்கியத்தில் இந்தச் சம்பவத்தை மிகவும் அழுத்தமாக விவரித்திருக்கிறார் ஷேக்ஸ்பியர். நம்பிக்கைத் துரோகச் செயலுக்கு இந்த வரலாற்று சம்பவம் இன்றும் எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. ரோமை ஆண்ட அந்த ஓர் ஆண்டில் சீசர் பல சீர்திருத்தங்களுக்கு திட்டமிட்டார் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களையும், ஏழைகளையும் ஒழுங்காக குடி அமர்த்துவது, பல்வேறு தரப்பினருக்கு ரோம் குடியுரிமை வழங்குவது, எல்லா இத்தாலிய நகரங்களுக்கும் ஒரே மாதிரியான முனிசிபல் அரசாங்க முறையை அறிமுகப்படுத்துவது, புதிய கட்டடங்களை கட்டுவது, ரோமின் சட்டதிட்டங்களை முறைப்படுத்தி எழுதி வைப்பது என பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.

ஓராண்டிலேயே அவர் கொலை செய்யப்பட்டதால் அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் போயின. ஆனால் அவர் செய்த ஒரு சீர்திருத்தத்தின் பலனை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் காலண்டர் எனப்படும் நாட்காட்டி சீர்திருத்தம்.

ரோமின் சர்வாதிகாரியாக பதவியேற்ற அதே ஆண்டில் அதாவது கி.மு 45 ஆம் ஆண்டில் காலண்டர் முறையை மாற்றி அமைத்தார் சீசர். ஓர் ஆண்டுக்கு 365 நாட்கள் என்றும், நான்கு ஆண்டுக்கு ஒருமுறை பிப்வரி மாதத்தில் ஒரு நாளை கூடுதலாக சேர்த்து அதனை ‘லீப்’ ஆண்டு என்றும் அவர்தான் நிர்ணயம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய சீர்திருத்தம் என்பதால்தான் அது அவரது பெயராலேயே ‘ஜூலியன் காலண்டர்’ என்று அழைக்கப்படுகிறது. சீசர் ஒரு தலைசிறந்த அரசியல்வாதி, துணிச்சலான படைத்தளபதி, மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், ‘Gaul’ பகுதிகளை தான் கைப்பற்றிய அனுபவங்களை “De Bello Gallico” என்ற தலைப்பில் புத்தமாக எழுதினார். அது மிகச்சிறந்த லத்தீன் இலக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் “I came, I saw, I Conquered” என்ற புகழ்பெற்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது ஜூலியஸ் சீசர் உதிர்த்த வசனம்தான். ஆசியா பகுதியை மிகத் துரிதமாக கைப்பற்றிய பிறகு அவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள் அது.

சீசர் போரின்போது ஈவு இரக்கமில்லாமல் செயல்பட்டாலும், தன்னிடம் தோற்ற படைகளை மிகக் கெளரவமாக நடத்தினார் என்றுதான் வரலாறு கூறுகிறது. சீசர் என்ற பெயர் வரலாற்றில் மிக மரியாதைக்குரிய ஒன்று என்பதற்கு தற்காலச் சான்றுகள் இரண்டு உண்டு. ஜெர்மானிய அரச பட்டம் ‘கைசர்’ என்றும் ரஷ்ய அரச பட்டம் ‘ஷா’ என்றும் அழைக்கப்படுகிறது. கைசர், ஷா இரண்டுமே ‘சீசர்’ என்ற சொல்லில் இருந்து உருவான பட்டங்கள்தான். ஜூலியஸ் சீசரைப் பற்றி பேசாமல் ரோம சாம்ராஜ்யத்தைப்பற்றி பேசிவிட முடியாது. அந்த அளவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சீசர்.

சீசரின் அப்பா மற்றும் இவர் இருவருக்கும் ஒரே பெயர் . இவர் பிறந்த காலத்தில் ரோமில் செல்வ வளம் மிகுந்த மக்களுக்கான ஆதரவானவர்கள் செனட்டிலும் ஒரு புறம் ,எளிய மக்களுக்கு ஆதரவான பொதுச்சபையிலும் இருந்தனர் . சுல்லா முதல் கூட்டத்துக்கும், மரியஸ் என்பவர் இரண்டாவது கூட்டத்துக்கும் தலைவர். உள்நாட்டுப்போராக வெடித்த அந்த மோதலில் சுல்லா வென்றார் ; மரியசின் உறவினரான சீசரை நாடு கடத்தாமல் பிறரின் பரிந்துரை காப்பாற்றியது .
சீசர் ராணுவத்தில் சேர்ந்து ஆசியா மைனரில் சில பகுதிகளில் சிறப்பாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தார். பிற்காலத்தில் அங்கே போரிடுகிற பொழுது தான் ,”கண்டேன் ,வென்றேன் !” என்கிற வரிகளை உதிர்த்தார் . சுல்லாவின் மறைவுக்கு பின், நாடு திரும்பி வழக்குரைஞர் தொழில் செய்தார், பேச்சுக்கலையில் சிறந்துவிளங்க ரோட்ஸ் தீவில் கற்கப்போய் கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டார்; பணம் கொடுத்து தப்பி வந்து அவர்களை சிலுவையில் அறைந்து கொன்றார் . நாடு திரும்பிய சீசர் அரசியலில் ஈடுபட்டார். பல்வேறு பதவிகளை வகித்தார். அய்பீரியாவின் ( (ஸ்பெயின், போர்ச்சுகல்).) ஆளுநர் ஆனார்.
ரோம் திரும்பிய சீசர் கான்சல் எனும் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்-பட்டார், எண்ணற்ற நில சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் அதை மக்களின் பார்வைக்கு வைத்தார் . பதவிக்காலம் முடிந்ததும் பிரான்ஸ் பெல்ஜியம் பகுதிகளை உள்ளடக்கிய கால் பகுதிக்கு ஆளுநர் ஆகி அதை பல்வேறு போர்களுக்கு பின் முழுவதும் வென்றார். ராணுவத் தளபதியாகப் புகழ் பெற்றிருந்த பாம்பே, பெரும் செல்வந்தரான கிராசஸ், மற்றும் ஜுலியஸ் சீசர் ஆகியோர், தங்களிடையே உடன்படிக்கை செய்து கொண்டு மூவராட்சி ஏற்படுத்தி ரோம் சாம்ராஜ்யத்தை ஆண்டனர்.
போர்க்களம் ஒன்றில் சிராசஸ் கொல்லப்பட, நீயா நானா போட்டி சீசர் மற்றும் பாம்பே இடையே வந்தது .சீசரின் படைகள் கலைக்கப்பட வேண்டும் ,அது சர்வாதிகாரத்துக்கு வழி விடும் என்றார் பாம்பே … போர் மூண்டது ;பலகால இழுபறிக்கு பின் பர்சாசலஸ் என்ற இடத்தில் நடந்த போரில், பாம்பேயைச் சீசர் தோற்கடித்தார். அங்கிருந்து எகிப்துக்கு பாம்பே சென்றார். ஆனால் அங்கு சீசரை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஆசை கொண்ட
எகிப்திய மன்னன் தாலமி அவரை கொன்றான்
அந்நாட்டு மன்னர் டாலமிக்கும் சீசருக்கும் நடந்த போரில் டாலமி இறந்தார். அவரின் மனைவி கிளியோபட்ராவை பார்த்து காதல் கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் மனிதர் .நாட்டின் இணையற்ற வெற்றி வீரனாக நின்ற அவர் சென்ற பக்கமெல்லாம் வென்று சாதித்தார் சர்வாதிகாரி ஆகிவிடுவார் மனிதர் என கருதிய செனட் அவரின் படைகளை விட்டுவிட்டு சாதாரண குடிமகனாக நாட்டுக்கு வர சொன்னது. செனட்டின் முடிவை மீறி நாட்டுக்கு படைகளோடு வந்து செனட் படைகளோடு மோதினார் நான்கு ஆண்டுகள் நீடித்த அந்தப்போரில் முழுமையாக வென்று ரோமின் வாழ்நாள் சர்வாதிகாரியானார் சீசர்.
குடியாட்சி போனதே என அவர் மகன் போல பாவித்த ப்ரூட்டஸ் முதலியவர்கள் கொதித்தார்கள்; அவரை கொல்ல திட்டமிட்டார்கள் .செனட் அரங்கிற்கு வந்த பொழுது பலர் சேர்ந்து தாக்கி அவரை கொல்ல முயன்ற பொழுது அவர்களை எதிர்த்து கொண்டிருந்த சீசர் ப்ருட்டசும் கத்தியை உயர்த்துவதை பார்த்ததும் ,”நீயுமா குழந்தையே ?” என சிலர் சொன்னதாக ஒரு வரலாற்றாசிரியர் குறிக்கிறார் .ஆனால் தான் எதையும் கேட்கவில்லை என்றே அங்கே இருந்த பிளினி முதலியோர் குறித்து உள்ளனர் .
எனினும் ”யூ டூ ப்ரூட்டஸ் ?”என கேட்டுவிட்டு அவர் எதிரிகளின் தாக்குதலை தடுக்காமல் இறந்து போனார் என்பது மக்களின் மத்தியில் பரவிப்போனது .அதையே ஷேக்ஸ்பியரும் தன் நாடகத்தில் வடித்தார் .நல்ல எழுத்தாளரும் ஆன சீசரின் புகழ் பெற்ற வாசகம் “சாவுக்கு அஞ்சி வாழ்வதைவிட, போராடி வீரனாக சாவதேமேல் “.சர்வாதிகாரத்தை விதைக்க முயன்ற அவர் நாயகனாக கொண்டாடப்படுவது வரலாற்றின் வினோதம் தான்.

How is this